கலைஞரே கலைஞரே ஏன் எம்மை கைவிட்டீர்..

எல்லாம் நிறைவேறிற்று.

கலைஞரே கலைஞரே ஏன் எம்மை கைவிட்டீர்..


இதோ அந்த கொடும் நிமிடம் நெருங்குகின்றது

60 ஆண்டுகாலம் தமிழக அரசியலையும் சில நேரம் இந்திய அரசியலையும் நிர்ணயித்த மாபெரும் சக்தி புதைக்கபட இருக்கின்றது

இது திராவிடத்தின் புதைப்பா? இல்லை விதைப்பா? என்பதை காலமே முடிவு செய்யும்

மகாபாரத கண்ணனை நாம் பார்த்ததில்லை, ஆனால் சிரித்துகொண்டே தன்னை நம்பிய கூட்டத்தை மிக நுட்பமாக கரை சேர்த்தவன் அவன்

அந்த மாய கண்ணனை கலைஞர் வடிவில் நாம் கண்டோம், ரசித்தோம், மிகவும் சிலாகித்தோம்

சிரித்தும் மகிழ்வித்துமே தன் கட்சியினரை, தமிழகத்தை பெரும் இக்கட்டுகளை கடக்க வைத்து கைதூக்கிவிட்டவர் அவர்

அந்த கலைஞர் முகம் மறையபோகும் நிமிடங்களை தாங்கும் சக்தி இந்த மனதிற்கு இல்லை

மனம் வேகமாக துடிக்கின்றது, கண்ணீர் கொட்டுகின்றது , மனம் மயங்குகின்றது


அகில இந்திய தலைவர்கள் அஞ்சலி செலுத்துகின்றார்கள், அவர்களில் மிக குறிப்பிடதக்கவர் ராகுல் காந்தி

மனிதர் இரண்டாம்முறை வந்து தன் தமிழக அபிமானத்தை வெளிபடுத்தியிருக்கின்றார்

இந்திரா காலத்தில் தொடங்கிய திமுக உறவின் அடையாளமாக அவர் வந்து அஞ்சலி செலுத்தியது கண்ணீர் காட்சி

ராகுல் கரங்களை வலுபடுத்த வேண்டியது தமிழக கடமை

கலைஞர் குடும்பம் எல்லாம் வந்திருந்தார்கள் முக முத்து எனும் தலை கொள்ளியினை காணாவில்லை

குடும்பத்தார் அனைவரும் வந்து வணங்கி செல்ல, ஒரு உருவம் அவரை சுற்றி வந்து மண்டியிட்டு வணங்கியது

யாரென கண்டால் நித்தியா

அவரை இறுதிகாலங்களில் 24 மணிநேரமும் அருகிருந்து காத்து வந்த அந்த நித்யா எனும் இளைஞர்

முன்பு பழைய கதைகளில் கலைஞர் தான் கருப்பன் என்ற நாயினை பாசமாக வளர்த்ததாகவும் அது இறந்தபின் அசைவம் உண்பதையே நிறுத்தியதாகவும் அடிக்கடி சொல்வார்.

கருப்பன் மேல் அவருக்கு அப்படி ஒரு பாசம்

அந்த நன்றிமிக்க கருப்பன் நித்தியாவாய் பிறந்திருக்கலாம், அப்படி ஒரு விசுவாசம்


கலைஞர் புதைக்கபடுகின்றார்

ஏய் அரசியல்வாதிகளா இவ்வளவுதான் வாழ்க்கை, அரசியல், பதவி எல்லாம்.

இனியாவது இருக்கும் சொற்ப கால பதவியினை புரிந்து மக்களுக்கு நல்லாட்சி கொடுங்கள்


முக ஸ்டாலின் கதறி அழுகின்றார், காண சகிக்கவில்லை

“தலைமகனே கலங்காதே, 
தனிமை கண்டு மயங்காதே
உன் தந்தை தெய்வம் தானடா…”

என்ற வரிகளை தவிர ஆறுதல் அவருக்கில்லை