அமித்ஷா கலைஞருக்கு அஞ்சலி
அமித்ஷா கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வருவதில் பல வகையான கருத்துக்கள்
நாம் கண்டித்தது Go Back அமித்ஷா என முன்பு முழங்கியவர்களையன்றி வேறு யாரையுமல்ல
தேசிய கட்சிகள் ஒன்றும் எதிர்கட்சிகளோ, எதிர்களோ அல்ல. கொள்கைகள் வேறாயினும் எல்லோர் நோக்கமும் இந்தியா வளம்பெற வேண்டும் என்பது,
தமிழகம் ஒன்றும் இன்னொரு நாடு அல்ல, அதுவும் இந்திய மாநிலமே..
திமுக பல இக்கட்டான நிலைகளை கடந்திருக்கின்றது. இந்திரா காலத்தில் அது அவரோடு மல்லுகட்டிற்று, நடக்க கூடாத விஷயங்கள் நடந்தன
அதில் இந்திரா வலிய தேடிய சிக்கலும் உண்டு, திமுக தொண்டர்கள் அத்துமீறியதும் உண்டு
கலைஞர் நிதானமாக சொன்னார், “தமிழர்களின் உணர்ச்சிகளை இந்திரா புரிந்துகொண்டால் எல்லா சிக்கலும் சரியாகும்”
பின்னாளில் அதுதான் நடந்தது, தமிழகத்து உணர்ச்சிகளை புரிந்த இந்திரா கலைஞரோடே கூட்டணிக்கு வந்தார்
ஏய் கருணாநிதி உனக்கு மானமே இல்லையா? என சொன்னவர்களை பார்த்து அமைதியாய் கேட்டார் கலைஞர்
“ஏய்யா, அந்த அம்மாவும்தான் கூட்டணிக்கு வந்திருக்கின்றது, அவரிடம் ஏன் யாரும் இப்படி கேட்கவே மாட்டேன் என்கின்றீர்கள்?”
இதுதான் அரசியல், விட்டுகொடுப்பு இல்லாமல் அரசியல் என்பது உலகின் எந்த மூலையிலும் இல்லை
நாணல் போல் சில இடங்களில் வளைந்தால்தான் அரசியல் செய்ய முடியும்
அமித்ஷா என்ன? யார் வேண்டுமானாலும் வரட்டும், அஞ்சலி செலுத்தட்டும் , தமிழரின் உணர்வுகளை புரிந்துகொள்ளட்டும்
வளமான தமிழகமும், வலிமையான பாரதமும் அமையட்டும்
இம்மாதிரி நிலைகளுக்கு கலைஞர் அன்றே சொல்லிவிட்டுத்தான் சென்றார்
“உரிமைக்கு குரல் கொடுப்போம் , உறவுக்கு கை கொடுப்போம்” என்பது அது, அவர் அடிக்கடி சொன்ன விஷயம் அது
உறவுக்கு கை கொடுப்பதால் உரிமையினை விட்டுகொடுத்துவிட்டோம் என்றோ, உரிமைக்கு குரல் கொடுத்ததால் உறவு பாராட்டமாட்டோம் என்பதோ சரியாகாது
அதிமுக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக மட்டும் நிலையில், இல்லை அடக்கமே ஆகிவிட்ட நிலையில் திமுக கூட்டத்திற்கு பாஜக தலைவர் வரகூடாது என சொல்ல யாருக்கும் உரிமையும், தகுதியுமில்லை
நாளை மாநிலத்தில் திமுகவும், மத்தியில் பாஜகவும் வந்துவிட்டது என வைத்துகொண்டால் என்னாகும்?
இதே பாஜகவிடம்தான் தமிழக அரசின் பிரதிநிதியாக ஸ்டாலின் சென்று பேசத்தான் வேண்டும்
வெறுப்பு அரசியல் ஒழிக, அப்படியே அதிமுக செய்யும் காமெடி அரசியலும் ஒழிக
புதிய முயற்சிகள் நடக்கும்பொழுது வரவேற்கலாம், இந்நாட்டின் மிகபெரும் கட்சியின் தலைவர் , அசுரபலத்தோடு ஆளும் கட்சியின் தலைவர் கலைஞரின் அஞ்சலிக்கு வருவது பெருமைக்குரிய விஷயம்
வரட்டும், அவர் தமிழரின் உணர்வினை புரிந்து கொள்ளட்டும்
உறவுக்கு கை கொடுக்க திமுக என்றும் தயங்கியதில்லை என்ற அதன் பாரம்பரியம் தொடரட்டும், தொடரத்தான் வேண்டும்