உலகம் கொண்டாடும் ஒரு பொருளாதார மேதை, தன் கல்வி தகுதி 17 டாக்டர் பட்டம் என அமைதியாக சொன்ன அறிவாளி
உலகம் தடுமாறிய மந்தநிலை காலங்களில் இந்திய பொருளாதாரத்தை காத்து நின்ற பெரும் நிபுணர்
இன்று இந்தியா காட்டும் பொருளாதார பாய்ச்சலுக்கு அன்றே அஸ்திவாரமிட்ட பெரும் சிந்தனையாளன்
மாற்றுகட்சி ஆயினும் அவர்களும் வந்து ஆலோசனை கேட்கும்பொழுதும் நாட்டுமுன்னேற்றத்திற்காய் நல்ல ஆலோசனைகளை வழங்கும் பெருமகன்
அவர் பதவிவகித்த காலங்களில் அவரை தேடிவந்து பாராட்டியவர்களே அதிகம் தவிர, அவர் தேடிசென்ற நாடுகள் குறைவு. காரணம் நல்ல அறிவும் சிந்தனையும் எங்கிருந்தாலும் தேடி வரும் உலகமிது, அப்படித்தான் வந்தது
இந்நாட்டிற்காய் உழைத்த சீக்கிய மக்களின் மொத்த நாட்டுபற்றும் ஒன்றாய் சேர்ந்த உருவம் அது. ஒரு வார்த்தை அதிர்ந்து பேசாமல் நாட்டை அமைதியாய் வழிநடத்திய கோமான் அவர்.
எமக்கு வருத்தமெல்லாம் ஒன்றே ஒன்றுதான்
இன்று மோடிக்கு கிடைத்திருக்கும் பெரும் பலம்போல அவருக்கும் கிடைத்திருந்தால் இன்னும் பெரு வெற்றிகளை அவர் குவித்திருப்பார், நாடு இன்னும் வளம் பெற்றிருக்கும்
இன்று மோடிக்கு கிடைத்திருக்கும் அடிமை தமிழகமும் அவருக்கு இல்லை
கடும் கூட்டணி குழப்பத்தில் கல்மாடி, அழகிரி, தயாநிதி என ஏக இம்சைகளுக்கு மத்தியில்தான் அவரால் ஆளமுடிந்தது.
அதாவது ஏக சங்கிலிகட்டுகளுடன் தான் அந்த சிங்கம் நடந்தது
பெரும் அதிகாரம் கொண்டு நாட்டை நடத்துவது சிக்கல் இல்லை, ஆனால் ஒவ்வொரு திசையில் நடக்கும் 4 குழப்பவாதிகளை கால கொடுமையால் கொண்டும் வெற்றிபயணம் செய்ததுதான் திறமை.
அப்படி இந்த கூட்டணி இம்சைகளை கொண்டும் இந்த நாட்டினை நடத்தினார் என்பதில்தான் அவர் வெற்றி இருக்கின்றது, மனிதரை அப்படி பாடாய் படுத்தினார்கள்.
கூட்டணி என்ற பெயரில் அவர் காத்த அமைதி முள் இருக்கையின் மீது ரத்தம் கசிய அமர்ந்திருக்கும் வலிக்கு சமம், அப்படித்தான் அவருக்கு நெருக்கடிகள் இருந்தன. அந்த சிங்கம் சில இடங்களில் ஓநாய்கள், நரிகள், கூவைகள் சொல்லுக்கும் கட்டுபடும் காலம் இருந்தது.
(கலைஞருக்கு அஞ்சலி செலுத்த மன்மோகன் ஏன் வரவில்லை என்பார்கள், கலைஞரின் வற்புறுத்தலால் அழகிரியினை தன் அமைச்சரவை அமைச்சராக்கி அவர் சந்தித்த கசப்பான அனுபவங்கள் கொஞ்சமா
மறந்திருப்பாரா? )
மக்களாட்சி, அரசுக்கு ஆதரவு, வெளியிருந்து ஆதரவு, நாற்காலிக்கு கீழ் இருந்து ஆதரவு, மாடியிலிருந்து ஆதரவு என பல இம்சைகளுக்கு மத்தியில்தான் அவர் நிர்வாக தேர் ஓட்டினார்.
ஆனாலும் சலித்துகொண்டு விட்டு ஓடியவர் அல்ல,
முடிந்தவரை நாட்டினை பாதுகாத்து நின்றார், ஊழல்வாதிகள் பிடிபடும்போது அவர் காட்டிய கனத்த மவுனமே அவரின் கைகள் அன்று கட்டபட்டிருந்ததை அழகாக காட்டின
இப்படிபட்ட மாமேதைகளையும், கலாம் போன்ற பெரும் தியாகிகளையும் திகைக்க வைக்கும் ஒரு கேடு கெட்ட அரசியல் நடக்கும் நாடு இது, நாட்டின் கட்சிகள் அப்படி, குறிப்பாக மாநில கட்சிகளின் அட்டகாசம் அப்படி, கண்ணார பார்த்தோம்
விடுங்கள் எரிச்சல்தான் மிஞ்சும், மன்மோகனும் அப்படித்தான் சிக்கி இருந்தார், இருந்தாலும் அவரின் நிர்வாகத்திற்கு ஒற்றை சாதனை போதும்
அவர் காலத்தில் 120 டாலருக்கு கச்சா எண்ணெய் விலை இருந்தது, அவரோ 63 ரூபாய்க்கு மக்களுக்கு கொடுத்துகொண்டிருந்தார், அது திறமை
இன்றோ 70 டாலருக்கு வாங்கியும் அதே விலையில்தான் கொடுத்துகொண்டிருக்கின்றார்கள் இதுவும் திறமை
இன்றைய ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கு முன்னோடி திட்டமிட்டவரும் அவரே.
இன்றும் மோடியின் பல திட்டங்கள் சொதப்பும்பொழுது மன்மோகன் சிங் உயர்ந்து நிற்கின்றார், அவரின் அருமையினை பாஜகவினர் நன்றாகவே உணர்ந்திருக்கின்றார்கள்.
அவரை கை நீட்டி குற்றம் சொல்ல எந்த பாஜக காரனாலும் முடியவில்லை, அவரை எல்லோரும் மதிக்கின்றார்கள்.
அசுர பலத்தோடு ஆட்சியில் இருந்தாலும், ஒரு மன்மோகன் சிங் இல்லாமல் தடுமாறுகின்றது பாஜக.
வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட அந்த பெருமகனுக்கு டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஆச்சரியமான மனிதர் அவர், 10 வருடம் பிரதமராக இருந்தும் தனக்கொரு கோஷ்டியோ, 4 அல்லக்கைகளோ கொண்டிராமல் மகா அமைதியாக தனியாக இருப்பவர், பாராட்டவேண்டிய ஒன்று.
எல்லோருக்கும் அது சாத்தியமில்லை, வார்டு கவுன்சிலர் பதவியில் இருந்தவனே அதனை எளிதில் விடமாட்டான், பதவியின் சுகம் அப்படி, போதை அப்படி
தமிழகத்து பன்னீரும், தினகரனுமே அதற்கு பெரும் சான்று
ஆனால் பாரத பிரதமராக இருந்தும் கட்சிக்குள் அவர் காட்டும் அமைதிக்கும் பெரும் பண்புக்கும் ஒரு சிகரமாகவே நோக்கபடவேண்டியவர் அவர்.
காங்கிரசில் மன்மோகன் சிங் கோஷ்டி என ஏதாவது உண்டா? அதுதான் பெருந்தன்மை,
தன் பணியினை நாட்டிற்கு கொடுத்துவிட்டு அமைதியாக ஒதுங்கி நிற்கும் பெரிய மனம்,
பதவிக்கும், பகட்டிற்க்கும், 4 வாழ்க கோஷங்களுக்கும் ஒதுங்கி நிற்கும் பெரிய மனம்
அந்த ஒன்றிற்காகவே அவரை வாழ்த்தலாம். நிச்சயம் கலாம் போல பெரிய மனதிற்கு சொந்தக்காரர் அவர்.
தமிழக காங்கிரசார் இவரிடமிருந்து படிக்கவேண்டிய பெரும் பாடம் அது, ஆனால் நிச்சயம் படிக்க மாட்டார்கள்.
இவர்கள் அப்படித்தான்.
தமிழக காங்கிரசாரே அம்மாமனிதனிடமிருந்து கொஞ்சமாகவது கற்றுகொள்ளுங்கள்.
அவரும் காங்கிரஸ்காரர்தான், நீங்களும் காங்கிரசார் என சொல்லிகொள்கின்றீர்கள்.
இதில் எது கட்சி அபிமானம் எனும் கேள்வியினை நீங்களே கேட்டுகொள்ளுங்கள், சத்யமூர்த்திபவனில் இம்மானிதனின் படத்தினையும் வையுங்கள், அவரை மனதினில் வையுங்கள்
உங்கள் கட்சி நிச்சயம் புத்துயிர் பெறும். ஏராளமான முன் உதாரணங்கள் உங்கள் கட்சியிலே இருக்கின்றன.
அந்த மாமனிதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் [ September 26, 2018 ].
இப்படிபட்ட மாமனிதர்கள் இருப்பதால்தான் குஷ்பூவும் காங்கிரசில் இருக்கின்றார் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
மன்மோகன் சிங்கிற்கு தமிழக குஷ்பூ அணி சார்பாக ஸ்பெஷல் வாழ்த்துக்கள்
வாழ்க நீ எம்மான், தன் தலையின் சீக்கியகொண்டைக்குள் முழுக்க பெரும் அறிவு உண்டு என காட்டிய அந்த இந்திய பெருமகனுக்கு வாழ்த்துக்கள்
பெருமகனுக்கு வாழ்த்துக்கள்