கில்லாடி கிளைவ்
கில்லாடி கிளைவ் 14
டச்சுக்காரர்கள் ஜாவா தீவிலிருந்து வந்து ஹூக்ளி பகுதியினை முற்றுகை இட்டார்கள், கிளைவ் ஆழ்ந்த யோசனையில் இருந்தான்
காரணம் ஐரோப்பாவில் நிலமை வித்தியாசமாயிருந்தது, பிரெஞ்ச்க்காரர்கள் எந்நாளும் அவர்களுக்கு எதிரி, போட்டு சாத்தினால் சிக்கல் இல்லை. ஆனால் டச்சுக்காரர்கள் ஆங்கிலேயருக்கு நண்பர்கள்
கப்பல் போக்குவரத்திலும் சரக்கை அனுப்பவதிலும் டச்சுகாரர்கள் கப்பலையும் அடிக்கடி பயன்படுத்தும் ஒப்பந்தமும் உண்டு
இங்கு கிளைவ் அவர்களை அடித்துவிட்டால் லண்டனில் இருந்து ஆட்சேபனை வரும், சிக்கல் வரும். ஆனால் அதற்காக டச்சுகாரர்களை இங்கு அனுமதிக்கவு முடியாது, பின் எவ்வளவு சிரமபட்டு வங்கத்தைபிடித்தோம்? ஆற்றில் மீன் பிடிக்கவா?
ஆனால் நிச்சயம் மோத வேண்டும், ஆம் யுத்தத்தை நாம் தொடங்கவில்லை டச்சுக்காரர்கள்தான் தொடங்கினார்கள் என சொல்லிவிடலாம்
மீர்ஜாபர் ஒரு தவறு செய்திருந்தான், இங்குதான் டச்சுக்காரர்களை மதித்தார்களே தவிர ஐரோப்பாவில் அவர்களை கண்டு யாருக்கும் பயமுமில்லை பெரும் மரியாதையுமில்லை
ஆனால் மீர்ஜாபரோ அவர்களை பிரிட்டிசாரோடு சரிக்கு சமமாக நினைத்து அழைத்து வந்தான்
இன்றும் பிரிட்டனின் கடற்படை வலுவானது, அன்றும் அப்படித்தான் இருந்தது, எப்படி என்றால் மற்ற ஐரோப்பிய நாடுகளை போல் இல்லாமல் பிரிட்டன் என்பது தனி தீவு, ஜூலியஸ் சீசர் அதனை கைபற்றிய பொழுது ரோமரின் கடற்படையின் வீரம் தெரிந்தது
அதன் பின் பிரிட்டானியர் தங்கள் பாதுகாப்பே கடலில்தான் என இருக்கின்றது என மிக கவனமாயினர், பாதுகாப்பு மட்டுமல்ல, வியாபாரமும் கடல்வழி என்பதால் கடற்படைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர்
குறிப்பாக ஆங்கில கால்வாயில் அவர்கள் நடத்திய போர்கள் அவர்களுக்கு கனத்த அனுபவத்தை கொடுத்தன, இதனால் கடற்போக்குவரத்திலும் படையிலும் வியாபாரத்திலும் அவர்கள் கொம்பன் சுறாவாக இருந்தனர்
பின்னாளில் நெப்போலியன், ஹிட்லர் என பெரும் ஜாம்பவான்களே பிரிட்டிஷ் கடற்படையிடம் மண்டியிட்டனர்
அப்படிபட்ட கடற்பலத்தை அன்றே பெற்றிருந்த பிரிட்டிசார் டச்சுகாரர்களை விடுவார்களா?
நிலத்தில் கிளைவும், கடலில் வாட்சனும் சுற்றிகொள்ள டச்சுபடை திணறியது, இவ்வளவிற்கும் ஆந்திர போர்களுக்கு பெரும் படையினை அனுப்பி இருந்தார் கிளைவ்
டச்சுபடைகளை முற்றுகை இட்டு பிடித்த கிளைவ் பெரும் சேதம் எல்லாம் விளைவிக்கவில்லை, “திசைமாறி வந்துவிட்டீர்கள் சேதாரத்திற்கு பணம் செலுத்திவிட்டு செல்லுங்க, இனி இந்தபக்கம் உங்களை பார்த்தேன் அவ்வளவுதான்” என சொல்ல்விட்டு மீர்ஜாபரை பார்க்க சென்றான்
தந்திரசாலியான மீர்ஜாபரோ அதற்கு முன்பே அலறினான், “அய்யா கிளைவ் அவர்களே, இந்த வங்கநாட்டின் மீது படையெடுத்த டச்சுக்காரரை விரட்டி எங்களை காத்த கடவுள் நீங்கள்..” என ஆரம்பித்துவிட்டான்.
டச்சுகாரர்களை அழைத்துவந்தது இவன் என கிளைவிற்கும் தெரியும், ஆனால் காட்டவில்லை.
யோசித்தான் கிளைவ் “நாம் என்ன மீர்ஜாபரை கொல்ல வந்தோமா? இல்லை ஆள வந்தோமா?
நமக்கு தேவை பணம், வியாபாரம் செய்ய அடிமை தேசம் அது போதும், இந்த இந்தியர்களே இப்படித்தான், இவன் தலையினை சீவிவிட்டு இன்னொரு நவாபினை வைத்தாலும் அவனும் இதைத்தான் செய்வ்வான் எல்லாம் நாற்காலி படுத்தும் பாடு”
ஆம் உண்மையும் அதுதான், அதனால் கிளைவ் சந்தர்பத்தை அழகாக பயன்படுத்தினான். டச்சுகாரர்களை விரட்டிய வகையில் ஏக செலவு, பெரும் தொகையினை கொடுத்துவிடுங்கள்
நன்றி கொல்லுதல், பழிவாங்குதல் எல்லாம் தாண்டியது வியாபாரம் என ராஜதந்திரமாய் நின்றான் கிளைவ், மறுபடியும் கஜானாவினை திறந்துவிட்டான் மீர்ஜாபர்
கொடுத்த மீனில் கிளைவிற்கும் பங்கு சென்றது, ஓரளவு அமைதி திரும்பியதை அடுத்து லண்டன் செல்ல முடிவெடுத்தார் கிளைவ்
லண்டன் அவருக்கு வரலாறு காணா வரவேற்பினை அளித்தது, ஆம் யானை படை வைத்திருப்பவர்கள் இந்திய அரசர்கள், அவர்களின் படைபலம் பிரிட்டிஷ் மக்கள் தொகையினைவிட அதிகம் என சொல்லபட்ட காலங்களில் இந்திய அரசர்களை வென்று பிரிட்டன் ஆதிக்கத்தை தொடங்கி வைத்துவிட்டு வரும் கிளைவிற்கு அப்படி வரவேற்பு இருந்தது
ஏற்கனவே டூப்ளேவினை அடித்துவிட்டு லண்டனுக்கு வந்ததை விட இம்முறை அமோக வரவேற்பு காரணம் ஆற்காடு, ஆந்திரா, வங்கம் என பெரும் பகுதிகளை அதாவாது பிரிட்டனை விட பெரும் பரப்பினை பிடித்து காட்டி இருந்தான் கிளைவ்
லார்டு எனப்படும் மிகபெரும் பட்டம் அவருக்கு கொடுக்கபட்டது, ஐஸ்லாந்து நாட்டு லார்டு பட்டமும் வந்தது
கிளைவினை பெற்றவர்களுக்கும் உடன்பிறந்தோருக்கும் நம்பவே முடியவில்லை, இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர் ஜார்ஜ் வாழ்க, ஜீசஸ் வாழ்க, மாமன்னர் வாழ்க, அப்படியே கிளைவும் வாழக, அவரால் நாங்களும் வாழ்க என சொல்லிகொண்டார்கள்
மாபெரும் உயரத்தை எட்டினான் கிளைவ், அவர்களின் மிகபெரும் தளபதியான மால்பரோ (சிகரெட் கம்பெனி அல்ல, அப்படி ஒரு வீரன் அவர்களுக்கு உண்டு) போன்ற மிகபெரும் வீரனாக அவனை கொண்டாடினார்கள்
இன்னும் சிலர் பிரிட்டனை அச்சுறுத்திய ரஷ்ய தளபதி பிரெடரிக் போன்று நமக்கு கிளைவ் என்றனர், பிரிட்டனின் புகழ்மிக்க தளபதியான உல்ப் என்பவருக்கு அடுத்து கிளைவ் பிரிட்டனின் மிகபெரும் கவுரவம் என அரச மாளிகையில் சொல்லி அரசனே அவரை கொண்டாடினான்
தேனை எடுத்தவன் கையினை நக்க மாட்டானா என்றொரு பழமொழி உண்டு, கிளைவிற்கும் அப்படி புறங்கையில் தேன் சேர்ந்தது அதாவது இந்திய அரசர்கள் அவருக்கு முன்னால் அல்ல , அவரின் குதிரை முன்னால் கொட்டியதே பெரும் தங்கமும் வைரமுமாக இருந்தது
இந்திய அரசர்கள் கொட்டியது கிளைவின் கால் முட்டுவரை தங்கமாக இருந்தது என்கின்றது வரலாறு
இதனால் லண்டனில் மிகபெரும் செல்வந்தர் ஆனார் கிளைவ், பெரும் மாளிகையும் ஆட்களுமாக திடீரென மாபெரும் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
அவர் நீர்குடிக்கும் குடுவை கூட தங்கத்தில் வைரம் பதித்ததாக இருந்த அளவு செல்வத்தில் திளைத்தார்
(சமீபத்தில் அக்குடுவை ஏலத்திற்கு வந்து பெரும் தொகைக்கு சென்றது..)
அப்பொழுதே பணமாக இல்லாமல் தங்கமாக லண்டனுக்கு ஏகபட்ட கட்டிகளை கடத்தி இருந்தான் கிளைவ், அவன் வீட்டு செங்கற்களை விட தங்க கட்டிகள் அதிகமாய் இருந்தன
ஒரு கட்டத்தில் அரசனை விட அவர் அதிகம் சம்பளம் கிம்பளம் எல்லாம் பெறுகின்றார் என்ற செய்தியும் வந்தது
19 வயதுவரை ஒன்றுமில்லாமல் இருந்து 32 வயதில் செல்வத்தின் உச்சத்தை எட்டியவர் கிளைவினை போல இன்றுவரை வரலாற்றில் எவருமில்லை
கிளைவின் சகோதரிகள் உடன்பிறவா சகோதரி போல பெரும் மகாராணி ஆயினர், அவரின் சகோதரர்களும் குடும்பத்தாரும் இங்கிலாந்தில் செல்வந்தர் ஆயினர்
கிளைவிற்கு நன்றியும் இருந்தது, அப்பொழுது ஓய்விலிருந்த கமான்டர் லாரன்ஸுக்கு பெரும் தொகை கொடுத்தான், ஆம் சென்னை கோட்டையில் கிளைவினை கைதூக்கிவிட்டவர் அல்லவா? அந்த நன்றி கடனுக்காக
தனக்கு உதவியர்களை தேடி தேடி கொடுத்தான் கிளைவ்
அதன் பின் பெரும் நிலங்களுக்கு சொந்தக்காரன் ஆனான், அவனின் மாபெரும் கனவான லண்டன் பாராளுமன்றத்தின் அங்கத்தினர் ஆகுதல் எனும் கனவினை நோக்கி நடைபோட்டான்
இம்முறை வெற்றிகிட்டியது கிளைவ் லண்டன் பாராளுமன்றத்தின் அங்கத்தினர் ஆனார், பெரும் மதிப்புவாய்ந்த பதவி அது
எந்த லண்டன் தெருக்களில் பொறுக்கி என்றும், ரவிடி என்றும், உருபடாதவன் என தூற்றபட்டானோ அதே தெருக்களில் மக்கள் குனிந்து போற்ற வலம் வந்தான்
எல்லாம் இந்திய அரசர்கள் அவனுக்கு செய்த உதவி
பாராளுமன்றத்தில் அவன் அதிகம் பேசவில்லை எனினும் இந்தியருக்கு ஏதாவது நலதிட்டங்கள் செய்யவேண்டும், அம்மக்களும் லண்டன் மக்கள் போல சகல உரிமை பெற்று வாழவேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று
இந்திய மக்களுக்கு ஏதும் செய்ய அவன் திட்டமிட்டான், ஆனால் லண்டனில் பலர் வேறுமாதிரி கனவு கண்டனர்
பொறுக்கி கிளைவே இன்று ராஜாவாகிவிட்டான், நாமும் ஆகமுடியாதா?
இந்தியா சென்றால் அள்ளிகொண்டுவரலாம் என பலர் கிளம்பினர், கப்பல் கப்பலாய் கிளம்பினர்
இந்நிலையில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆடிட்டர்கள், டைரக்டர்கள் பக்கம் இருந்தும், அரச கணக்கீட்டாளர்கள் பக்கம் இருந்தும் ஒருமுணுமுணுப்பு கேட்டது
என்ன சர்ச்சை அது?
நமது தமிழக பாஷையில் சொல்வதென்றால் கிளைவ் மேல் “வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு” சர்ச்சை அது
அவர்கள் கணக்குபடி கிளைவ் என்பவன் சாதாரண மேனேஜர் அல்லது கமாண்டர், கம்பெனி சொல்வதை செய்ய வேண்டும்
கம்பெனி வருமானத்தை விட கிளைவ் வருமானம் பெருகி இருப்பது எப்படி என நெளிய ஆரம்பித்தார்கள்
அவர்கள் யாரும் இந்தியா வந்தவர்களுமல்ல, இங்குள்ள செல்வம் பற்றி அறிந்தவர்களுமல்ல, கிளைவ் அளவு உயிரை பணயம் வைத்து போர் நடத்தியவர்களுமல்ல
சும்மா நமது ஊர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போல அறிக்கை பிரகாரம் ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள்
கிளைவோ இப்பொழுது லண்டன் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டாலும் இந்தியருக்கு ஏதும் செய்யவேண்டும் என்ற நல்ல யோசனையில்தான் இருந்தான்
(தொடரும்..)
[ October 30, 2018 ]

