சாவர்க்கர்
அந்த மனிதர் நிச்சயம் நாட்டுபற்றாளர், தேசாபிமானி. இந்த தேசவிடுதலைக்கு ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற வெறியில் வாழ்வினை அர்பணித்தவர் அந்த சாவர்க்கர்.
மிக சிறிவயதிலே அப்படி தொடங்கியவர். இந்நாடு சுதந்திரம் பெறவேண்டுமென்றால் அப்போது இருந்த 30 கோடி மக்களும் ஒன்றுபட வேண்டும். மொழியால் அவர்களை இணைக்க முடியாது, ஆட்சி என்றாலும் 600 சமஸ்தானம் இருந்தது. இம்மக்களை இணைக்க மதம் ஒரு வழி என கண்டார் திலகர்
அப்படி மத கொண்டாட்டத்தில் தேசவிடுதலையினை கலந்து அவர் தொடங்கியதுதான் விநாயக சதுர்த்தி ஊர்வலம், சிவாஜி ஊர்வலம் எல்லாம்.
இதனை எல்லாம் பார்த்து வளர்ந்த சாவர்கருக்கு அதே கொள்கை வந்தது. வானரசேனை என்றொரு அமைப்பினை தன் 11 வயதிலே தொடங்கினார்.
நமது ஊர் வாஞ்சிநாதன் ஸ்டைலில் மகராஷ்டிராவில் வெள்ளையர் கொல்லபட, சில இந்தியர்கள் கொல்லபட்டதெல்லாம் சாவர்க்கர் மனதை வலிக்க செய்தன
நல்ல அறிவாளி, படிப்பு அவருக்கு இயல்பாய் வந்தது. எந்த இந்திய தலைவருக்கும் இல்லா ஒரு வித்தியாசமான குணம் அவருக்கு இருந்தது, அது இந்தியாவினை வரலாற்று பாணியில் நோக்குவது
அலெக்ஸாண்டரை உலகம் மாவீரன் என சொன்ன காலத்தில் அவன் இந்திய எல்லையில் பெற்ற தோல்வியினை நிறுவி சொன்னவர் சாவர்க்கர். இதெல்லாம் ஐரோப்பியரின் கவுரவத்திற்கு வந்த இழுக்காக கருதிய அவர்கள் அன்றே குறி வைத்தனர், இன்னும் ஏராள இந்திய வரலாறுகளை வெளிகொணர்ந்தார் சாவர்க்கார்
1857 சிப்பாய் புரட்சி வெறும் கலவரம் என உலகெல்லாம் பிரிட்டிசார் பூசி மெழுகியபொழுது, அது இந்திய சுதந்திரபோர் என 1907 புத்தகம் எழுதி உலகினை திரும்பி பார்க்க வைத்தவர் சாவர்க்கர் . தன் படை வீரர்கள் எல்லாம் படிக்க வேண்டிய புத்தகம் சாவர்கருடையது என உத்தரவே பின்னாளில் போட்டார் நேதாஜி
லண்டனில் பாரிஸ்டர் படிக்க சென்றாலும் மனிதர் சும்மா இருக்கவில்லை, இந்திய சங்கத்தை உருவாக்கினார். ஆயுதங்களை உருவாக்கி பயிற்சியளித்தார் அதில் பெண்களும் இருந்தனர்
நிச்சயமாக சொல்லலாம் நேதாஜிக்கு இவ்விஷயத்தில் சாவர்க்கரே முன்னோடி. அவரின் வீரர்கள் இந்தியாவில் ஆளும் கொடூர கலெக்டர்கள் லண்டன் வரும்போது அங்கே தீர்த்துகட்டினர், சிங்கத்தின் குகையில் நுழைந்து அதன் பிடறியினை உலுக்கினார் சாவர்க்கர்
முதலில் தடுமாறிய ஸ்காட்லான்டு யார்டு பெரும் போராட்டத்திற்கு பின் அவரை கைதுசெய்தது, விசாரணைக்கு கப்பலில் இந்தியா வந்தபொழுது கப்பல் ஓட்டை வழியாக தப்பி சாகசமாக பிரான்ஸை அடைந்தார் சாவர்க்கர்
பின் பிரான்ஸ் பிரிட்டன் அரசுகள் பேசி வழக்கு நடந்து அவருக்கு 50 ஆண்டு சிறை என முடிவானது. நிச்சயம் அவரை சுட்டுகொல்லும் முடிவில்தான் பிரிட்டன் இருந்தது, ஆனால் பிரான்ஸ் விவகாரம் வந்தபின் அதற்கு பல விவகாரங்கள் வந்ததால் தப்பினார் சாவர்க்கர்
இந்திய சுதந்திர போராட்டத்தில் 1911ல் 50 வருடம் சிறை தண்டனை விதிக்கபட்ட ஒரே தலைவர் அவர்தான்
கொடூர அந்தமான் சிறையில் அவரை வைத்தார்கள். செக்கிழுத்தார், மரம் வெட்டினார் இன்னும் 6 மாதம் இருட்டறையில் அடைத்தல், தனிச்சிறை என அவரை உடனே கொல்லமுடியாவிட்டாலும் சித்திரவதை செய்து கொல்ல முடிவு செய்தார்கள்
கல்பாணி எனும் படத்தில் வந்த சித்திரவதைகளை அவரும் அனுபவித்தார் . அப்பொழுதும் எழுத பேனாவும் பேப்பரும் கேட்டாலும் கிடைக்கவில்லை. இந்த வலிகள் பின்னாளில் மறக்கும், கூடாது இது மறக்கவே கூடாது என சுவற்றில் கல்லால் எழுதிவைத்தார் சாவர்க்கர். புகழ்பெற்ற கவிதைகள் அங்குதான் அவரால் எழுதபட்டன
இதுவரை மிக சரியாக சென்ற அவரின் வரலாறு இதற்கு பின் கொஞ்சம் மாறுகின்றது, மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்ததால் 1911ல் அவருக்கு ரத்னகிரி சிறைக்கு மாற்றம் கிடைக்கின்றது , ஏன் மன்னிப்பு கேட்டார் என தெரியாது, பதுங்கி பாயும் தந்திரமாக இருக்கலாம்
1924ல் நன்னநடத்தை என விடுதலையும் செய்யபட்டார்
ஏன் விடுதலை செய்யபட்டார் என்றால், அதுதான் வெள்ளையன் தந்திரம். சாவர்க்கர் பற்றி அவனுக்கு தெரியும், காந்தி பற்றியும் தெரியும் இருவரையும் களத்தில் விட்டால் அவனுக்கு வேலை குறைவு
வெள்ளையனின் தந்திரம் அட்டகாசமாக பலித்தது, 1925ல் சாவர்க்கர் இந்து மகாசபையினை தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ் முதல் இன்றைய பாஜக வரை அதுதான் தாய் இயக்கம்
காந்திக்கும் சாவர்க்கருக்கும் முட்டி கொண்டது. இருவரும் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டாலும் வழி வேறாய் இருந்தது, காந்திய அஹிம்சை பலருக்கு பிடிக்கவில்லை அதில் சாவர்க்கரும் ஒருவர்
இதன் பின் இந்துத்வா பேச தொடங்கினார் சாவர்க்கர், ஆனால் தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு போன்ற சீர்திருத்தங்களை செய்யவும் அவர் தயங்கவில்லை. எல்லா சாதி இந்துக்களும் வணங்க பதித பவன் எனும் ஆலயத்தையும் ஏற்படுத்தினார்
உண்மையில் அன்று சாவர்க்கருக்கு ஆதரவு கூடிற்று, எங்கிருந்தோ வந்தார் ஜின்னா, பாகிஸ்தான் வேண்டுமென்றார். இந்தியா ரத்தத்தில் மிதக்கும் நாள் நெருங்கிற்று. உண்மையில் இந்தியாவிற்கு சுதந்திரம் தரும் திட்டமெல்லாம் அவனுக்கு இல்லை. ஹிட்லர் அடித்த அடியில் பொறி கங்ங்கி இருந்தது, வேறு வழியே இல்லையா என சர்ச்சில் போன்றவர்கள் கேட்டபொழுது இனியும் இந்தியாவினை துப்பாக்கி முனையில் ஆள்வது சாத்தியமில்லை என லண்டன் பாரளுமன்றம் சொன்ன பின்பே சுதந்திரம் வந்தது
ஆனால் தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் மிக நுட்பமாக பழிவாங்க பாகிஸ்தானை பிரித்துகொடுத்தான் வெள்ளையன், காந்தியின் உண்ணாவிரதம் எல்லாம் ஜின்னாவிடம்ம் எடுபடவில்லை. டம்மி ஆக்கியிருக்க வேண்டிய ஜின்னாவினை காந்தி வெல்லவிட்டது தவறு
இதன் பின் காங்கிரசுக்கும், சாவர்கருக்கும் பெரும் அபிப்ராய பேதம் வந்தது. சர்ச்சைகள் வெடித்தன . காந்தி கொலைக்கு பின் சாவர்க்கர் தேசவிரோதி ஆக்கபட்டார்
உண்மையில் காந்தியினை கொல்ல சாவர்க்கருக்கு எந்த அவசியமுமில்லை , கொல்லவேண்டும் என்றால் 1947க்கு முன்பே கொன்றிருக்கலாம். அதன் பின் காந்தி இருந்தாலோ இறந்தாலோ ஆகபோவது ஒன்றுமில்லை எனும்பொழுது ஏன் கொல்லபட வேண்டும்?
வரலாற்றின் சில பக்கங்கள் புரியவில்லை. இத்தேசம் பிரிந்து போக ஒப்புதல் அளித்த தலைவர்களில் பட்டேலும் ஒருவர்
காந்தியாவது உண்ணாவிரதம் இருந்து எதிர்த்தார், பட்டேல் சனியன் தொலைந்தது என சொல்லிகொண்டிருந்தார்
ஆனால் காந்திதான் கொல்லபட்டார், பட்டேலுக்கு ஆபத்தே இல்லை, ஏன் என்றால் புரியவில்லை.
மிகவருத்தமான விஷயம் என்னவென்றால், காங்கிரஸ் அவரை இந்நாட்டின் எதிரிபோலவே நடத்திற்று, வெள்ளையன் பறித்த அவரின் வீட்டை கூட அது திரும்ப கொடுக்கவில்லை
எந்த சலுகையும் அவருக்கு இல்லை, வெள்ளையன் கொடுத்த சில சலுகைகளை கூட கொடுக்கமறுத்தது காங்கிரஸ்
நிச்சயம் இதெல்லாம் மகா தவறான விஷயங்கள். துளியும் சுயநலமின்றி நாட்டிற்காய் உழைத்து , சுதந்திர இந்தியாவில் ஒரு அரசு பதவிக்கும் ஆசைபடாமல், கட்சி நடத்தாமல் , அமைதியாய் நாட்டுக்கு ஆலோசனை சொல்லிகொண்டிருந்த அம்மனிதனை அப்படி நோகடித்திருக்க கூடாது

ஏன் பகைத்தார்கள்?
காஷ்மீர் விஷயத்தில் ஏற்பட போகும் அபாயத்தை அம்மனிதன் முன்பே சொன்னார். பின்னாளில் காங்கிரஸ் அரசு அதில் சிக்கி சீரழிய முன்பே சொன்னேன் அல்லவா? என அவர் சொன்னபொழுது அவர்களுக்கு சகிக்க முடியவில்லை
ஆச்சரியமாக சீனாவின் நயவஞ்சகம் பற்றியும் எச்சரித்தார் சாவர்கர், ஆனால் அவர் மறைந்த பின்பே சீனபடை எடுப்பு நடந்தது
நாட்டிற்காக போராடிய அம்மனிதன் ஒதுக்கபட்டு மூலையில் எறியபட்டதும், பெரும் தியாகம் ஏதும் செய்யாத ராஜேந்திர பிரசாத் குடியரசு தலைவரானதும் நிச்சயம் இந்நாட்டின் கருப்பு பக்கங்கள்
அதோடு விட்டார்களா? ஒரு கட்டத்தில் மனம்வெறுத்து அம்மனிதன் சாக தீர்மானித்தார். உண்ணாவிரதம் தொடங்கினார், என்னால் செயல்பட முடியா நிலையில் சமூகத்திற்கு பாரமாய் இரேன் என சொல்லி அவர் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். அரசு தடுக்கவில்லை அவர் செத்தும் போனார்
ஆம் இதே பெப்ரவரி 26, 1961
அவர் உடலுக்கு அரசு மரியாதை இல்லை. ஆளும் கட்சியில் ஒரு அமைச்சரோ, எம்.எல்.ஏ கூட வரவில்லை மாறாக அனாதையாக அந்த சுதந்திர போராளியின் தகனம் நடந்தது
அந்தமானில் அவர் தங்கி இருந்த சிறை அருகே அவருக்கு சிலை வெகுநாள் கழித்தே வைக்கபட்டது, அதுவும் பத்தோடு பதினொன்றாக வைக்கபட்டு அவர் இருந்த சிறையும் இன்று இல்லாமல் ஆகிவிட்டது
அந்த அளவு அவரின் அடையாளத்தை மறைக்க விரும்பியிருக்கின்றார்கள் ஏன் என தெரியவில்லை
நெடுநாளைக்கு பின்பே அந்தமான் விமான நிலையம் சாவர்க்கர் நினைவு விமான நிலையமாயிற்று
பாராளுமன்றத்தில் அவர் படமே மிக சர்ச்சைக்கு பின்பே திறக்கபட்டது, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கபட வேண்டும் என்ற கோரிக்கைக்கு இன்று மோடி அரசே செவிமடுக்கவில்லை
இவ்வளவிற்கும் இன்று பாஜக ஆட்சிக்கு வர அன்றே அடிகோலியவர் அவர்தான், ஆனாலும் பாஜக அரசு அஞ்சுகின்றது என்றால் எந்த அளவு சாவர்க்கரை பற்றி இங்கு பெரும் கொடும் பிம்பம் உருவாக்கபட்டிருக்கின்றது என்பது ஒன்றும் புரிந்துகொள்ள சிரமம் அல்ல
இந்நாட்டின் விடுதலைக்காக தன் உயிரை, வாழ்வை எல்லாம் பணயம் வைத்து போராடிய ஒருவரை. அந்தமான் சிறையின் கொடூர வடுக்களின் நேரடி சாட்சியாய் வாழ்ந்த ஒருவரை, மதவாதி என ஒதுக்குவதோ ஏதோ ஹிட்லர் போல பார்ப்பதோ சரியானதல்ல
இந்து மகாசபை என்ற ஒன்றை தொடங்கினாரே அன்றி எங்கும் எதிலும் அடுத்த மதத்தை அவர் வெறுத்தார் என எங்கும் இல்லை. மதத்தின் காரணமாக இந்நாடு பிளக்கபடுவதைத்தான் எதிர்த்தார்
நாட்டுபற்றோடு நோக்கினால் அந்த மனிதன் ஒன்றும் மாபெரும் சர்ச்சைகுரியவன் அல்ல , மாறாக எதற்கோ பயந்து அப்படி சித்தரிக்கபட்டு அந்த சித்தரிப்பு கலைந்து போக கூடாது என பாதுகாத்தும் வரபட்டிருப்பது புரிகின்றது
இனியாவது இத்தேசம் அந்த சுதந்திர போராட்ட தியாகிக்கு செய்ய வேண்டிய மரியாதையினை செய்யட்டும்.
சர்ச்சைகளை கடந்து அந்த சுதந்திர போராளிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.