கதை ரெடி

எது நடந்தாலும் அது மிக நன்றாகவே நடந்தது என சினிமா எடுத்து மகிழ்பவர்கள் சினிமாக்காரர்கள்,, இந்த அபினந்தன் கதையினை விடுவார்களா?

ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள், இந்தியில் பலர் பெயர் பதிவு செய்து விட்டார்கள், கோடம்பாக்கத்தார் விடுவார்களா? அதுவும் தமிழன் என்றால் விடுவார்களா?

விடவே மாட்டார்கள், ராமசந்திரனையே அகில உலக விஞ்ஞானியாக காட்டியவர்களுக்கு விஜயகாந்தினை எகுத் ஓல்மார்ட், பெஞ்சமின் நேதன்யாகு அளவிற்கு திரையில் காட்டியவர்களுக்கு இந்த அபினந்தன் கதை பாலில் விழுந்த பழம் அல்லவா?

பொதுவாக ராமசந்திரனுக்கும் ஜெய்சங்கரும் அந்நிய நாட்டு சாகசங்களில் எக்ஸ்பெர்ட்டுகள் அவர்கள் ராஜினாமா செய்தபின் விஜயகாந்தும் அர்ஜூனும் பொறுப்பெடுத்தார்கள் இப்பொழுது அவர்களுக்கும் ரிட்டையர்மென்ட்

இதனால் பொறுப்பினை முழுக்க சுமப்பவர் விஜய், அவருக்கு சுமையினை தூக்கி வைப்பவர் ஏ.ஆர் முருகதாஸ்

அஜித்திற்கும் அந்த பொறுப்பு உண்டு, அவருக்கு சுமை கொடுப்பர்கள் விஷ்ணுவர்தனும் சிவாவும்

அபினந்தன் கதை இப்பொழுதே சூட்டிங்கில் இருக்குமே என சந்தேகபட்டு , இது பற்றி கோடம்பாக்க பட்சிகளிடம் விசாரிக்கலாம் என அழைத்தால் அவர் விஜய் அபிமானி போலிருக்கின்றது, காத்திருந்தவர் போல கொட்ட தொடங்கிவிட்டார்

“சார் விஜய் பாகிஸ்தானில் சிக்கி வாகா எல்லைக்கு வருவதில் கதை தொடங்கும், அதன்பின் ராணுவ அனுமதி இல்லாமலே ஒரு ஹெலிகாப்டரில் 10 தேசபக்தர்களுடன் பாகிஸ்தானில் குதிப்பார் விஜய்

அவரா உடனேயா? சில நடனம் ஆடிவிட்டு டூயட் எல்லாம் பாடிவிட்டுத்தானே செல்வார்?

அது இல்லாமலா கண்டிப்பாக காதலுக்கு பின்புதான் கடமை வரும்

அப்புறம்

உடனே கண்ணை கட்ட சொல்வார், அபிநந்தனை அப்பத்தானே அழைத்து சென்றார்கள் அதுபோல முன்பு விஜய் கைது செய்யபடும் பொழுதும் அப்படியே செய்வார்கள், சத்தத்தை வைத்து வழி சொல்வார் விஜய்

டேய் இதெல்லாம் ரஜினியின் பிரியா படத்திலே பார்த்தாகிவிட்டது, வேறு ஏதாவது சொல்

அப்படியா? ம்ம்ம்ம் இப்படி செய்யலாம், கண்ணை திறந்துவிட்டு காதை கட்டிவிட்டால் எப்படி? புதிதாக பார்க்கும் இடத்தில் இன்னொருவன் திணறமாட்டானா, ஆனால் விஜய் கண்ணை திறந்தே வைத்து காதில் கவனம் செலுத்தி இலக்கை அடைவார்

ம்ம் அப்புறம்

அப்புறம் கொஞ்ச நேரம் டயலாக் இம்ரான் கானிடம் சவால் விடுவார் விஜய் , தேசபக்தியாக பேசுவார் சவால் எல்லாம் விடுவார்

எப்ப்படி?

ராணுவ மோதல்னா ராணுவம்? கிரிக்கெட் மோதல்ல்னா கிரிக்கெட், கபடி போட்டின்னா கபடி எது வேணும் உன்க்கு?

ஓஹோ

அதுவும் கபடி போட்டின்னு சொன்னதும் தியேட்டர் அலறும்

ஓஹோ அப்புறம்

அப்புறம் பெரிய சண்டை, கிளைமேக்ஸில் ஒரு கையில் மசூத் அசாரின் தாடியினை பிடித்துகொண்டு இன்னொரு கையில் தாவுத் இப்ராஹிமின் கழுத்தை பிடித்து கொண்டு வாகா எல்லையினை கடக்கின்றார் விஜய்

அத்தோடு முடியுமா?

அட இன்னும் உண்டு, ராணுவமும் இந்திய பிரதமரும் விஜயிடம் யாரை கேட்டுகொண்டு போனாய், இதன் விளைவு என்ன தெரியுமா? என கத்தும் பொழுது அமைதியாக டிவி பக்கம் கைகாட்டுவார் விஜய்

அங்கே பாகிஸ்தானில் மாபெரும் குண்டுவெடிப்பு இம்ரான்கான் பலி, பாகிஸ்தான் ராணுவம் அணுகுண்டோடு வெடித்து அழிந்தது என செய்தி வரும்

ஓஓ சரி

இன்னும் உண்டு, அதன் பின் மோடி அமித்ஷா கெட்டப்பில் இருக்கும் சிலரை வாய்க்கு வந்தபடி திட்டுவார் விஜய்

ஏன்?

அப்பொழுதுதான் தமிழகத்தில் தமிழிசை எல்லாம் பப்ளிசிட்டி கொடுக்கும் இது எங்கள் தந்திரம்

அட‌

இப்படி பெரும் சூப்பர் ஹிட் படம் வரும் சீக்க்கிரம் பாருங்கள், பட்டையினை கிளப்பலாம்

அப்புறம்?

மிக உன்னிப்பாக எல்லையினை கவனிக்கின்றோம் ஏதும் நடந்தால் அடுத்த கதை விஜய்க்காக ரெடி பண்ணுவோம்

இதெல்லாம் பொழப்பு

அய்யோ சார் இது மட்டும்தான் பொழப்பு..

படத்தின்பெயர் என்ன?

இன்னும் முடிவு செய்யலசார், அனேகமா ‘புல்லா வாம்மா” இல்ல மிக்கி 21ன்னு இருக்கும் சார்

சரி நல்ல பொழச்சிங்கோங்க..

கண்டிப்ப்பா சார்”

// எமது யூகம் சரியாக இருக்குமென்றால் விஷ்ணுவர்த்தனும் சிவாவும் “விக்டரி” என படத்திற்கு கதை சொல்ல அஜித்தின் தலையில் ஏறி இருந்து காதை திருகலாம்

இந்த அபிநந்தன் மீசை சிங்கம் பட மீசை தானே. நாமும் ஏதாவது சிங்கம் 4 எடுத்தால் என்ன என ஹரியின் சிந்தனை காஷ்மீரில் சுற்றலாம்//