சீனா விவகாரம்
சீனா விவகாரத்தில் ராகுல் மோடியினை சீண்ட, மோடி கும்பல் ராகுலை இழுத்து வைத்து கேள்வி கேட்கின்றது
என்ன கேட்கின்றார்கள், “சீனாவிற்கு ஐநா சபையில் அந்தஸ்து வாங்கி கொடுத்ததே நேருதானே, அவர்தான் சிக்கலுக்கு முழு காரணம்” என பொங்க தொடங்கிவிட்டார்கள்
எல்லா சிக்கலுக்கும் அந்த காலகட்டத்தை பார்க்க வேண்டும், கோரி முகமது காலத்தில் ஏன் மிராஜ் விமானங்கள் பாவிக்கபடவில்லை என்றால் அது அர்த்தமற்றது
அக்காலம் கொடுமையானது, இந்தியா சுதந்திரமடைந்த புதிது, வறுமையும் இன்னும் ஏராளமான சவால்களும் இங்கு இருந்தன
உலகமோ இரு துருவமாக இருந்தது அமெரிக்க முகாமும் சோவியத் முகாமும் உலகெல்லாம் மோதிகொண்டிருந்தன
நேரு அமைதிவழி கண்டார், அணிசேரா நாடுகள் என ஒன்றை ஏற்படுத்தி புதுவழிகாட்டினார்
ஐநா சபையில் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கமே இருந்தது, ஆசியாவில் ஐரோப்பாவுக்கு சவால்விடும் ஒரே நாடான ஜப்பான் வலுவாக இல்லை
இந்தியாவுக்கு நிரந்தர அந்தஸ்து கொடுக்க பிரிட்டன் தயாராக இல்லை, தன் அடிமை நாடு தனக்கு சரிக்கு சரி அமருவதை பிரிட்டன் ரசிக்கவில்லை
அன்று ஆசியாவில் சீனா ஒன்றே தேர்வாக இருந்தது, ஐநாவில் ஆசிய குரல் ஒலிக்கவேண்டும் என்ற ஒரேநோக்கிலே நேரு சீனாவுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கபட வேண்டும் என கோரினார்
மாவோ உருவாக்கிய சீனா மேல் , அந்த சமதர்ம பூமி மேல் நேருவுக்கு நம்பிக்கை இருந்தது
ஆசியாவின் இருபெரும் சக்திகளான இருநாடுகளும் ஒற்றுமையாக இருந்தால் உலக அரசியலில் பல அனுகூலங்களை ஆசியா பெறும் என கணக்கிட்டார்
நேருவின் அந்த கணக்கில் உண்மையும் இருந்தது, சீனா இடம்பெறாவிட்டால் ஐநா சபை ஐரோப்பிய நாடுகளின் ஏக போக கூடாரமாக மாறியிருக்க்கும்
இந்திய சீன சிக்கல் திபெத்தை சீனா பிடித்ததில் இருந்து தொடங்கிற்று
அவர்கள் சொன்னதிலும் நியாயம் இருந்தது, திபெத் சீன மன்னனுக்கு கட்டுபட்ட நாடாகவே இருந்தது, அந்நாளில் அவர்களை தனிநாடு என சொல்லி சீனாவுக்கு எதிராக திரட்டிவிட்டவர்கள் பிரிட்டிசார்
நோஞ்சான சீனா அதை பொறுத்துகொண்டது, மாவோவின் சீனா அது எங்கள் பகுதி என மல்லுக்கு நின்றது
அப்படித்தான் அது திபெத்தை விழுங்க , ஒரு மனிதாபிமான உதவியினை இந்தியா தலாய்லாமாவிற்கு செய்ய போக எழுந்த சிக்கல் உண்டானது
தலாய்லாமா வருகையும் அவரை ஒப்படைக்காத இந்திய நிலைப்பாடும் மாவோவுக்கு வெறுப்பை கொடுத்தன
திபெத்தில் தன் கட்டுபாட்டில் இருக்கும் புத்தமதம், அருணாச்ல் பிரதேசத்தில் கட்டுபாடின்றி வளரும் அது தன் கம்யூனிச அரசுக்கு ஆபத்து என கணக்கிட்டார் மாவோ
நேருவோ சோவியத் போன்ற நாட்டை மீறி சீனா வராது என கணக்கிட்டார்
ஆனால் கியூப எல்லையில் ரஷ்யாவும் கென்னடியும் சீறி நிற்க இடம்பார்த்து போர் தொடுத்தான் மாவோ
நேரு அதை எதிர்ப்பார்க்கவில்லை, விவகாரம் இன்றுவரை தொடர்கின்றது
நிச்சயம் நேருவின் கனவு பெரிது அவரின் பெருந்தன்மை மிகபெரிது
சீனாவுக்கோ தலாய்லாமாவினை ஒப்படைக்கா இந்தியா தன் நாட்டு அரசுக்கு எதிரானவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கின்றது என்ற ரீதியில் இந்தியாவினை பகைமையாக கருதிற்று
ஒரு மனிதாபிமான உதவியினை தலாய்லாமாவிற்கு செய்ய போக எழுந்த சிக்கல் இது
இப்பொழுது மசூத் அசார் விவகாரத்தை கையில் எடுத்து தலாய்லாமாவிற்கு இந்தியா அடைக்கலம் கொடுத்த விஷயத்தை கிள்ளிகாட்டுகின்றது சைனா
இது வேறுவகை அரசியல்
ஆனால் வர்த்தக ரீதியாக இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதே ஐரோப்பிய ஏகபோக அரசியலுக்கு அடிகொடுக்க்கும் என்ற ஜாக்கிரதை உணர்வும் சீனாவுக்கு உண்டு
இதெல்லாம் வேறுவகையான கணக்குகள், சீனாவால் இந்தியாவினை முழுக்க பகைக்கவும் முடியாது, திபெத் சிக்கலால் முழுக்க நெருங்கவும் முடியாது
இந்திய இலங்கை உறவு எப்படியோ அப்படியே
ஆயினும் நேரு அக்காலகட்டத்தில் செய்த விஷயம் இந்திய நலனை தாண்டி ஆசிய நலன் அளவில் இருந்தது
இதனால்தான் அவர் ஆசியஜோதி என அறியபட்டார்
ஒருநாளும் அவர் சிறியன சிந்தித்ததே இல்லை, அக்காலகட்டத்திற்கு எது சரியோ அதை செய்தார்
தலாய்லாமாவுக்கு கைகொடுக்க போய் சீன யுத்தம் வந்து அதில் ஆர்.எஸ்.எஸ் நாட்டுபற்றோடு சில விஷயங்களை செய்தது
அதன் பின் நேருவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கை குலுக்கினார்கள்
ஆம் மனம்விட்டு அவர்களை பாராட்டினார் நேரு, ஆம் காந்தி கொலையினை தொடர்ந்து அவர்களை தடை செய்த அதே நேரு
நேருவின் பெருந்தன்மை என்பது இதுதான்
அதனால் உறுதியாக சொல்வோம், நமக்குள் ஆயிரம் அரசியல் இருக்கலாம்
சீனாவினை எல்லோரும் சேர்ந்து எதிப்பதுதான் சரி
இதில் நேரு சரியில்லை, மோடி சரியில்லை என்பது வாதத்திற்கே வராது
ராகுல் இந்த விஷயத்தில் மோடியினை சாடியது தவறு, நிச்சயம் பெரும் தவறு, அப்படி பாஜகவினரும் நேருவினை இழுப்பது சரியல்ல
நேருவின் கணக்கு அந்நாளில் சரி, அவர் பெருந்தன்மையும் அப்படி
அன்று நேரு செய்ததைத்தான் இன்று மோடியும் செய்கின்றார், சீனாவுடன் அதே நிலைப்பாடு .
இரண்டாம் நேருவான ராகுல் இனி கொஞ்சம் நிதானிக்கட்டும், தேசத்திற்கு அதுதான் நல்லது
