பணவெறியா?

“பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்
அருத்தி வேதியர்க்கு ஆன்குலம் ஈந்து, அவர்
கருத்தின் ஆசை கரையின்மை கண்டுஇறை
சிரித்த தன்மை நினைந்தழும் செய்கையாள்”

அதாவது ராமன் காட்டுக்குச் செல்லுமுன் தனக்கு இருந்ததை எல்லாம் தானம் செய்தானாம் , முதலில் பசுதானமாம்

அப்பொழுது ஒரு அந்தணணிடம் ‘நீங்கள் எவ்வளவு தூரம் கல்லெறிகிறீர்களோ அதற்குள் அடங்கும் பசுக்களெல்லாம் உங்களைச் சேர்ந்தது’ என்று கூற, வேதியரும் கல்லெறிகிறார்.

கிட்டதட்ட ஆயிரம் பசுக்களுக்கு மேல் வரும் தூரத்தில் கல் எறிந்தாலும் அந்த அந்தணன் தலையினை சொறிந்துகொண்டே நின்றானாம்

ஏன் என ராமன் கேட்டால், இதற்குள் ஆயிரம் பசு வரும் ஆனால் அதுபோகவும் மீதி பசு உங்களிடம் உண்டே என இழுத்தானாம், ராமனும் கொடுத்தானாம்

அதாவது வேதம் செய்பவன் கொடுத்தால் கேட்டுகொண்டே இருப்பான் என்கின்றது அக்கால செய்திகள்

இது பிற்காலத்திலும் எல்லா மதத்திலும் இருந்தது, போப்பாண்டவர் சிலுவைபோர் காலத்தில் அதிக காணிக்கை கேட்டுத்தான் மார்ட்டின் லுத்தர் தனி சபை கண்டான்

ரஷ்ய குருமார்கள் அந்த ஜார் மன்னனை இப்படி ஆட்டுவிக்கத்தான் லெனின் எழுந்தான்

இந்து குருமார்களின் இம்மாதிரி கொடுமையில்தான் பெரியார் கிளம்பினார்

இப்பொழுது தமிழக கத்தோலிக்க குருமார்களும் அக்கொடுமையினையே செய்கின்றார்கள்

திருப்பலி நிறைவேற்ற அவர்களுக்கு சம்பளம் உண்டு, கால காலமாக இருந்தது. அவர்களும் அதை சமத்தாக செய்தார்கள்

இப்பொழுது அந்த கத்தோலிக்க பீடத்திற்கு என்னாயிற்றோ தெரியவில்லை, பணம் பணம் என கிளம்பிவிட்டார்கள்

முதலில் தனி திருப்பலிக்கு ஸ்பெஷல் சார்ஜ் என்றார்கள், அதன் பின் திருப்பலியில் உங்கள் குடும்பத்திற்காக ஜெபிக்க எக்ஸ்ட்ரா சார்ஜ் என்கின்றார்கள்

என்னது இது? திருப்பலியே ஜெபத்திற்குத்தானே இதில் என்ன உள்ளே ஒரு கூலி என்றால் இதெல்லாம் திருச்சபை சட்டம் என்கின்றார்கள்

இன்னும் பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே எனும் 3 வார்த்தைக்கும் 300 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தான் கேட்கவில்லை

விரைவில் அதையும் கேட்பார்கள்

சேவையான ஒரு மதம் இப்பொழுது மறையுரை ஆற்றவும் ஜெபிக்கவும் சேவை கட்டணம் விதிக்கும் அளவு தரம் தாழ்ந்தது காலத்தின் கோலம்

கவனித்து பார்த்தால் கார் பைக் பங்களா வேலைக்காரர்கள் என ஒரு ஜமீந்தாரின் வாழ்க்கை அவர்களும் வாழ்வதால் இம்மாதிரி வருமானம் அவர்களுக்கு வேண்டியிருகின்றது

அழியா புகழ்பெற்ற அந்தோணியார் போன்றவர்கள் தானே சமைத்து உண்டு கால்நடை நடந்து சபை வளர்த்தார்களாம், சொந்தமாக ஒரு கோவேரி கழுதை கூட அவர்களுக்கு கிடையாது

ஆனால் இவர்கள் அப்படி அல்ல..

இந்த சந்நியாசிகள் வாழ்வே கிறிஸ்துவுக்கானது என்றபின் இப்படி பேசும் வார்த்தைக்கெல்லாம் பணம் என பெர்னாட்சா போல அலைவது தர்மமுமல்ல‌

மத குருமார்களின் அட்டகாசம் எப்படி இருந்தது? மதத்தின் பெயரால் எப்படி எல்லாம் உறிஞ்சினார்கள் என்பது வரலாற்றின் பல பக்கங்களில் இருக்கின்றது

அது கத்தோலிக்கம், யூதம், மார்ட்டின் லுத்தர், ரஷ்ய திருச்சபை, ஜார் மன்னன் கதை, லெனின் வரலாறு இந்திய பிராமணர், பெரியார், சீன புத்தமதம் , மாவோ என பல இடங்களில் படித்தால் தெரியும்

முதன் முறையாக கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்கு கண்கூடாக தெரிய அருமையான வாய்ப்பு வந்திருக்கின்றது

மார்ட்டின் லுத்தர் எப்படி உருவானான் என்பதையும், இனி அப்படி ஒருவன் தமிழ்நாட்டிலும் உருவாகலாம் என்பதையும் போப்பாண்டவர் புரிந்தால் நல்லது

யார் அவருக்கு சொல்வார்கள்? தமிழக கத்தோலிக்க சபை பற்றி கேட்டால் தங்கபாலு பாணியில்தான் இவர்கள் மொழி பெயர்த்து சொல்வார்கள்

இதுவரை பணவெறியில் எல்லா மதபீடங்களும் எப்படி சரிந்ததோ அதே பாதையில் செல்கின்றது கத்தோலிக்க சபை

அந்த ஏழை இயேசு அந்தரத்தில் அடிபட்டு செத்து தொடங்கிய அந்த சபை, அவரின் சீடர்கள் பாமர ஏழைகளாக இருந்து வளர்த்த அந்த பாட்டாளிகளின் சபை.