இதெல்லாம் இந்த உலகிற்கு புதிதா?

இலங்கையில் தாக்குதல் நடத்திய இஸ்லாம் வெறியனின் பேச்சினை பார்த்து பலர் பொங்குகின்றார்கள், நிச்சயம் அது மகா கொடுமையான விஷயம், முளையிலே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய விஷயம், எல்லை மீறிவிட்டது அதற்கான விலை கொடுக்கபட்டாயிற்று

ஆனால் இதெல்லாம் இந்த உலகிற்கு புதிதா? என்றால் நிச்சயமாக இல்லை

இந்த உலகின் வரலாற்று சக்கரம் அடிக்கடி சுழன்றுகொண்டே இருக்கின்றது, ஒரு இனம் ஒரு கட்டத்தில் ஆடுவதும் அடுத்த கட்டத்தில் அடிவாங்குவதும் மறுபடி ஆடுவதும் மறுபடி அடிவாங்குவதும் இங்கு சுழற்சியாக நடக்கும் விஷயம்

அலெக்ஸாண்டர் காலத்தில் அவனுக்கு அடங்கி இருந்த துருக்கி, ஆட்டோமன் காலத்தில் அவர்களை அடக்கியது

செங்கிஸ்கான் காலத்தில் மங்கோலியாவிடம் சிக்கிய ரஷ்யாவும் சைனாவும் பின்பு இன்று மங்கோலியாவினை அடக்கி வைத்திருக்கின்றன‌

தாவீது அரசன் காலத்தின் மின்னிய இஸ்ரேல் பின் மிதிபட்டு அடிபட்டு 3000 ஆண்டுக்கு பின் அதை இப்பொழுது மீட்டுகொண்டது

இப்படி ஏராள நாடுகளையும் இனங்களையும் பார்க்க முடியும்

அவை ஆட்டம் போட இரு காலம் உண்டென்றால் அடங்கி ஒடுங்கவும் அடிபட்ட நாடு பாயவும் ஒரு காலம் உண்டு

காலமே எல்லாவற்றையும் நடத்தும், வரலாற்றை சுழற்றும்

உலகெல்லாம் நாடுகளில் மட்டுமல்ல மதங்களிலும் இது பொருந்தும்

ரோமை மதம் கிறிஸ்தவத்தை ஆரம்பத்தில் அழித்தொழித்ததும் கிறிஸ்தவர்களை கொன்றதும் கொஞ்சமல்ல பின்னொரு நாளில் ரோமாபுரியினையே கிறிஸ்தவம் கைபற்றி இன்று ஆட்சியில் இருக்கின்றது

இன்னொரு நாளில் ரோமின் பண்டைய மதமும் எழும்ப கூடும்

இந்தியாவில் சைவமும் வைணவமும் அப்படி மோதின‌

பின்னாளில் புத்தமும் சமணமும் இங்கு ஆட்கொண்டன, ஆனால் இந்து எழுச்சியில் அவை ஓடவிரட்டபட்டன‌

சமணர் கழுவேற்றம் என்பது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காணபடும் ரத்த வரலாறு

அவர் ஞானப்பால் குடித்தவர் என்றாலும், மிகபெரும் பக்திமான் என்றாலும் அந்த திருஞானசம்பந்தரின் பல பாடல்கள் சர்ச்சையானவை இப்படி

“‘மண்ண கத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத்திரு வாலவா யாய்அருள்
பெண்ணக கத்தெழில் சாக்கியப் பேய்அமண்
தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே’

அதாவது இந்து அல்லாத புத்த சமண பெண்களை எல்லாம் கற்பழிக்க வேண்டுமாம், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், மீதிபாடல்கள் எல்லாம் இதே வகை

அவர் காலத்தில் மதுரையில் மட்டும் எட்டாயிரம் சமணர் கொல்லபட்டதாக செய்தி

ஆம் இன்றைய ஐ.எஸ் இயக்க தலைவர் பேச்சைத்தான் அன்றே திருஞானசம்பந்தர் சமணருக்கு எதிராக பேசியிருக்கின்றார்

ஆம் இந்துக்களின் கொடூரமான முகம் அப்பொழுது அப்படி இருந்திருகின்றது, சமணர்கள் அப்படி செத்திருக்கின்றார்கள்

ரோமின் நீரோ மன்னனிடம் கிறிஸ்தவர்கள் பட்ட சித்திரவதைக்கு கொஞ்சமும் குறையாதது இந்துக்களிடம் சமணர் பட்ட கொடுமைகளும் சாவும்

ஆனால் அந்த இந்துமதம் பின்பு இஸ்லாமிய மன்னர்களிடம் அடிவாங்கி ஒடுங்கியிருக்கின்றது

எங்கெல்லாம் சமணம் ரத்தம் சிந்தபட்டதோ அங்கெல்லாம் இஸ்லாமிய மன்னர்கள் வந்து இந்துக்களை ஒடுக்கியிருக்கின்றார்கள்

மதுரையில் சமணர் ரத்தம் சிந்திய இடத்தில் மாலிக்காபூர் காலத்தில் இந்துக்களின் ரத்தம் ஓடியிருக்கின்றது

இப்பொழுது இந்துதர்மம் மீண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றது

இந்த தீவிரமான‌ மதவாதிகள் எல்லா காலத்திலும் மிக கடுமையானவர்களாகவே இருந்திருக்கின்றார்கள்

தங்கள் மதமே பெரிது என்றும் அதை பின்பற்றாதோர் சாகவேண்டும் ஒழிக்கபட வேண்டும் என்ற இருமாப்பில் இருந்திருக்கின்றார்கள்

அது கிரேக்கர், ரோமர், சமணர், புத்தர், இந்த திருஞான சம்பந்தர் ஏன் இயேசுநாதரிடம் கூட இருந்திருக்கின்றது

ஆம் இயேசு யூத மக்களை மட்டுமே வாழும் காலத்தில் நேசித்தார், இஸ்ரேலை விட்டு ஒரு அங்குலம் அவர் நகரவில்லை

ஒரு ஏழை புறஜாதி பெண்மணி தன் மகனுக்காக ஏங்கும் பொழுது “பிள்ளைகளின் உணவினை நாய்க்கு போடமாட்டேன்” எனும் கொடூரமான இனவாத வார்த்தை அவரிடம் இருந்தே வந்தது

ஆம் மதவாதிகள் அப்படித்தான் எக்காலத்திலும் வெறியூட்டுவார்கள்

மானிட குலம் இருக்கும் வரை வெறியூட்டுவார்கள்

அதை சிந்தித்து சீர்தூக்கி மானிட நேயத்தில் எல்லோரையும் அணைத்து செல்லும் நல்வழியினை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்

மதவாதிகள் எப்பொழுதுமே வெறியர்கள், அவர்களுக்கு அந்நிய மதத்தவர் ரத்தம் சிந்தபட்டுகொண்டே இருக்க வேண்டும்

அது வரலாற்றில் எல்லா மதத்துகாரனுக்கும் இருந்தது

பண்டைய காலத்தில் பாக்தாத் மன்னன் நெபுகாத் நேச்சரின் மதவாதிகளுக்கு இருந்தது, எகிப்து மதவாதிகளுக்கு இருந்தது

இந்து மதவாதிகளுக்கும் இருந்தது, இந்த மனுதர்மம் அப்பொழுது உருவானது

யூதனுக்கு கேட்கவே வேண்டாம் நிறையவே இருந்தது

ரோமைக்கும், கிரேக்கத்துக்கும் மதவெறியும் பேச்சாளர்களும் இருந்தனர்

திருஞான சம்பந்தர் போன்றவர்களுக்கு இங்கு சமணர் காலத்தில் மிக கடுமையாக இருந்தது

அதன் தொடர்ச்சிதான் இப்பொழுது ஐ.எஸ் என வந்து நிற்கின்றது

மதமும் அது உருவாக்கும் குருமார்களும் அவர்களின் கடும் இறுக்கமான போதனையும் எக்காலத்திலும் உண்டு

அவர்கள் அப்படித்தான் வெறி ஏற்றும் கொடூர பேச்சுக்களையும் காட்டுமிராண்டி தனங்களையும் செய்ய சொல்வார்கள்

ஆனால் மதத்தை பின்பற்றுவோர்தான் மதத்தில் மானிட நேயத்தை கலந்து அம்மதங்களின் உண்மையான நோக்கமான அமைதியான அன்பான உலகத்தை படைக்க முழு முயற்சியும் எடுக்க வேண்டும்

அது எந்த மதமாக இருந்தாலும் சரி, மத குருமார்களை கட்டுக்குள் வைக்காத மதம் கொடூரமான மதமாகவேத்தான் மாறிவிடும்

வரலாறு அதைத்தான் பல இடங்களில் சொல்கின்றது, இப்பொழுது இலங்கையிலும் சொல்கின்றது