ராகுல் ராஜினாமா செய்ய கூடாது

தோல்விக்கு பொறுப்பேற்று மிக உருக்கமான அறிக்கையினை வெளியிட்டிருகின்றார் ராகுல் காந்தி, தலைவர் பதவி ராஜினாமா செய்யும் வரை விஷயம் செல்லலாம் என்கின்றார்கள்

நிச்சயம் ராகுல் ராஜினாமா செய்ய கூடாது, இங்கு சிக்கல் ராகுலிடம் அல்ல, அவரிடம் அல்லவே அல்ல.

இது தேசம், ராகுல் ஒருவரால் இங்கு மாற்றம் வந்திவிடும் என்பது மடத்தனம். அரசியலில் எல்லா நாளும் யாராவது ஆதிக்கம் செலுத்துவார்கள், நிச்சயம் மோடி இல்லை என்றால் இன்னொருவர் வந்திருப்பார்

விஷயம் அது அல்ல, ராகுலை பாஜக எதிர்கொண்டது. அவர் தங்கள் அரசியல் எதிரி என பகிரங்கமாக ஒப்புகொண்டது

ஆனால் காங்கிரஸின் நண்பர்கள் அல்லது மோடிக்காக காங்கிரஸ் பக்கம் நெருங்கியவர்கள் எல்லோருமே அடிப்படையில் காங்கிரஸ் எதிரிகள்

அவர்களுக்கு இந்திய தேசியம் பிடிக்காது, ஒன்றுபட்ட இந்தியா மேல் இந்திரா காலத்திற்கு முன்பிருந்தே கசப்பை உமிழ்ந்தவர்கள். வாய்ப்பு கிடைத்தால் முன்னாள் எஜமான் காங்கிரஸ் தனக்கு பல்லக்கு தூக்கட்டும் என காத்திருந்த கொடியவர்கள்

அவர்களுக்கு நாடு என்ற சிந்தனையுமில்லை மோடி பொது எதிரி என்ற நோக்கமுமில்லை , எல்லாம் சுயநலம்

திமுக மட்டும் அதிலிருந்து வேறுபட்டு கடைசிவரை ஏன் இப்பொழுது வரை காங்கிரஸுடன் நிற்கின்றது

மற்ற கட்சிகள் அப்படி அல்ல, வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என காத்திருந்து மோடிக்கு வலுசேர்த்துவிட்டார்கள்

இதில் ராகுல் வருந்த ஒன்றுமே இல்லை

பாட்டியும் தந்தையும் கொல்லபட்ட சிறிய பால்யத்தில் இருந்து வந்தவர், வெளிநாட்டு வாழ்க்கையினை உதறிவிட்டு இங்கு வந்தவர். நாட்டுக்காக ஏதோ செய்ய துடிப்பவர்

அவருக்கு இன்னும் காலமிருக்கின்றது, நேரமிருக்கின்றது, அரசியல் வாழ்க்கை இருக்கின்றது

இது காங்கிரசுக்கு எதிரான தோல்வி அல்ல, மோடிக்கு எதிராக மற்ற கட்சிகள் அணிதிரளாததால் வந்த தோல்வி

இதற்கு ராகுல் பொறுப்பு எப்படி ஏற்கமுடியும்?

மோடி போலவே அகில இந்திய அடையாளம் ராகுல், சட்டமன்ற தேர்தலில் அவர் வெல்லத்தான் செய்தார், அசாத்திய வெற்றி

இப்பொழுது சூழல் சரியில்லை, அவர் என்ன செய்யமுடியும்?

அகில இந்திய அடையாளமாக , தேசத்தின் மகத்தான நம்பிக்கையான ராகுல் மனம் தளர கூடாது

தொடர்ந்து அவர் காங்கிரஸ் பேரியக்கத்தை நடத்தட்டும்

அவருக்கான காலம் நிச்சயம் ஒருநாளில் வரும், தேசம் நிச்சயம் ஒருநாளில் அவரை தலமை ஏற்க அழைக்கும்

மோடிக்கு மாற்று என தேசம் விரைவில் அவரைத்தான் கைகாட்டும்

கம்பன் சொன்னபடி “நதியின் பிழையன்று நறும்புணலின்மை விதியின் சதியன்றி வேறென்ன?”

ஆம் ஆற்றில் நீர் வரவில்லை என்றால் ஆறு செய்த குற்றமா?

காலம் அப்படி இருக்கின்றது, காலம் மாறும்பொழுது எல்லாம் மாறும்

பாரதியின் வரிகளில் சொல்வதென்றால்

“கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்..”

அதுவரை ராகுல் பொறுமையாய் உழைக்கட்டும், இன்னும் ஏராளமான உள்ளங்களை அவர் வென்று பொறுமையாய் முடிசூடட்டும்

ராகுலுக்கு பலமும் தைரியமும் வரவேண்டுமானால் அந்த பெருமகன் நேரு போராடிய மாபெரும் போராட்டத்தை நினைத்து பார்க்கட்டும்

எவ்வளவு சிறை? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு சிரமம்? அதை தாண்டி அவன் வரலாறாய் நிலைக்கவில்லையா?

அதை படித்தாலே ராகுலுக்கு ஆயிரம் யானை பலம் வரும்

தேசம் உங்களை பின்னாளுக்காக குறித்து வைத்திருகின்றது ராகுல், அதுவரை பொறுமையாய் இருங்கள்.

இளைய இந்தியாவின் கடைசி நம்பிக்கையான ராகுல் எங்கும் சென்றுவிட கூடாது, அவரை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு துரோகம் செய்துவிடலும் கூடாது

அயோத்திவிட்டு வெளியேறி 14 வருடம் ராமனே காட்டில் அலைய கொடும் விதி இருந்தது

அவனை வெளியே தள்ளிய காலம் பின்பு அவனை மன்னனாக ஏற்கவும் செய்தது

தோற்பவன் தோற்றுகொண்டும் வெல்பவன் வென்றுகொண்டும் இருப்பது உலகில் எங்குமே இல்லை

எந்த தோல்வியும் நிரந்தரமல்ல வெற்றியும் நிரந்தரமல்ல‌

தோற்க ஒரு காலம் உண்டாயின் வென்று முடிசூடவும் காலம் வரும்

அக்காலம் வரை மன்னவன் பொறுக்கட்டும், காலங்கள் கூடட்டும்