வெற்றிகரமாக நாட்டுக்காக பறந்துகொண்டிருக்கின்றது சந்திராயன் II

மிக வெற்றிகரமாக சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணுக்கு செலுத்திவிட்டது இந்தியா.

உலகின் 4ம் விண்வெளி பலத்துடன் அது தன்னை நிலை நிறுத்திகொண்டது, கிட்டதட்ட சீனாவுக்கு சரிநிகரான பலத்துடன் அது விளங்குகின்றது.

ஒரு காலத்தில் அமெரிக்கா கொடுக்க மறுத்த அல்லது இந்தியாவுக்கு கிடைப்பதில் கட்டை போட்ட அந்த கிரையோஜெனிக் நுட்பத்தில் GSLV – Mark 3 ராக்கெட்டுடன் சந்திராயன் கிளம்பி சென்றுவிட்டது

ராக்கெட்டும், சந்திராயனும் நாட்டின் பல பாகங்களில் தயாரிக்கபட்டாலும், அந்த எரிபொருளும் இன்னும் சில முக்கிய விஷயங்களும் நெல்லைமாவட்டத்தின் இஸ்ரோ தளத்தில் தயாரிக்கபட்டவை என்பது நெல்லைக்கு பெருமையான விஷயம்

சில வாரங்களில் 3 லட்சம் கிமீட்டரை கடந்து நிலாவின் தென் பகுதியில் அது தரையிரங்கும், அது தரையிறங்கிய பின் அதில் இருக்கும் கருவிகள் ஆய்வினை மேற்கொள்ளும்

இதுவரை நிலவில் யாரும் இறங்காத தென் துருவபகுதிக்கு சந்திராயன் 2 விண்கலத்தை இந்தியா இலக்கு வைத்து இயக்குகின்றது

இந்த வெற்றிகரமான நொடியில் விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், அப்துல் கலாம் போன்ற மாமேதைகளுக்கு நன்றி தெரிவிப்போம்.

இந்த ராக்கெட்டும் செயற்கை கோளும் சில நூறு கோடிகள் செலவில் செலுத்தபட்டிருக்கின்றன, மற்ற நாடுகளை ஒப்பிட்டால் இதன் செலவு குறைவே

திடீர் குபீர் போராளிகள், சமூக நீதி காவலர்கள் இப்பொழுது வந்து குடிக்க நீர் இல்லா தேசத்தில், கழிவறைக்கு கதவில்லா தேசத்தில் இந்த விண்கலம் தேவையா என்பார்கள்

அவர்கள் அப்படித்தான்

ஆனால் இந்த செலவு தேவையா என்பவர்கள், பலநூறு கோடியில் நடந்த வளர்ப்பு மகன் திருமணம், சில நூறு கோடியில் பிரமாண்டமாய் எடுக்கபடும் திரைபடங்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் பிரமாண்ட மாநாட்டு செலவுகள், ஒவ்வொரு தேர்தலுக்கும் அவை செலவழிக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் பற்றி எல்லாம் வாய் திறக்கவே மாட்டார்கள்

சமூக ஆர்வல போராளிகள் அப்படித்தான், அவர்களை தாண்டி வெற்றிகரமாக நாட்டுக்காக பறந்துகொண்டிருக்கின்றது சந்திராயன் II.