ஹலால் உணவா, சைவ உணவா
ஹலால் உணவா, சைவ உணவா என மறுபடியும் சலங்கை கட்டி ஆட தொடங்கிவிட்டனர்
எந்த உணவாய் இருந்தால் என்ன? யாருக்கு எது பிடிக்குமோ அதை மணக்க மணக்க சமைத்து உண்ணுங்கள்
இந்த உலகில் எல்லாமே நிலையற்றது, எதுவும் நிரந்தரமில்லை, அர்த்தமுமில்லை
உண்பதும், உறங்குவதுமே பரிபூரண சுகம், ஏக சுகம். அதை அணு அணுவாக அனுபவிக்க வேண்டும்
கடவுளுக்கு தெரியாதா? ஒட்டகம் போல பல நாட்களுக்கு தாகம் எடுக்காதவாறோ இல்லை மலைபாம்பு போல தின்றால் 3 வாரம் மல்லாக்க கிடப்பது போல ஏன் அவர் மனிதனை படைக்கவில்லை?
அவருக்கு மனிதன் மேல் தனிகருணை இருந்தது, அவனுக்கு நொடிப்பொழுதும் பசிக்க வேண்டும் அவன் தேடி தேடி உண்ண வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இருந்தது
பசியினை படைத்த அவனே பல்லாயிரம் வகை உணவுக்கான மூலத்தையும் இங்கே வைத்து அதை சமைத்து உண்ண ஞானத்தையும் மனிதனுக்குள் வைத்தான்
பசியும் உணவுதேடலும் இல்லை என்றால் இங்குஒரு மாற்றமும் வந்திருக்காது
அதனால் எது பிடிக்குமோ அதை நன்றாக உண்ணுங்கள்
விலங்குகளை கொல்வது பாவமென்றால் விட்டுவிடுங்கள் இன்னொருவன் விட்டுவிடவா போகின்றான், நீங்கள் கொல்லவில்லை என்றால் இன்னொருவன் விழுங்க போகின்றான்
விலங்குக்கு வலிக்கும் என்றால் மயக்க ஊசி போட்டு வெட்டி எடுங்கள், ஹலால் எல்லாம் விஞ்ஞானம் வளரா காலத்து விஷயம்
இந்த சர்ச்சை பற்றி நேற்றிரவு கனவில் வந்த அவ்வையார் சொன்னார்
“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
சைவம் ஒருபுறம் வல்சைவம் மறுபுறம்
பட்டாங்கில் உள்ள படி”
இந்த இரண்டுமேதான் உலகின் சாதி என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
யூதருக்கு அந்நாளில் ஏகபட்ட உணவு கட்டுப்பாடு உண்டு, செதில் இல்லா கடல் உயிரினம் உண்ணாதே, குளம்பு இல்லா மிருகத்தை உண்ணாதே, பன்றியினை உண்ணாதே என ஏககட்டுப்பாடு
கைகால் கழுவாமல் உண்ணவும் கூடாது
ஒருநாள் யாரோ ஒரு யூதன் உண்ண கூடாததை உண்டபொழுது இயேசுவிடம் புகார் வாசித்தார்கள், அவர் சொன்னார்
“வெளியிலிருந்து உள்ளே செல்வது எதுவும் மனிதனை தீட்டுபடுத்தாது, ஆனால் உள்ளே இருந்து வரும் எண்ணங்களே மனிதனை தீட்டுபடுத்தும்”
அட்டகாசமான பதில் அது
அந்த இந்து யாரென தெரியவில்லை, இஸ்லாமியனை கொண்டு வந்த உணவினை அவன் மறுத்தது தவறு
ஆனால் அதே நேரம் கிறிஸ்தவ, இஸ்லாமியர் தரும் உணவினை சந்தோஷமாக வாங்கி உண்ணும் இந்துக்கள் நிரம்ப உண்டு
அதே நேரம் நீவீர் சிலைகளுக்கு படைத்திருப்பீர் என சொல்லி இந்து அன்பர்கள் கொடுக்கும் உணவினை ஏற்கா சில இஸ்லாமியரும், கொடும் கிறிஸ்தவரும் இங்கேதான் உண்டு
அன்பாக கொடுக்கும் உணவினை மறுப்பது நாகரீகம் அன்று, எந்த தெய்வமும் அதை மறுப்பதில்லை
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்
உலகில் நல்லுறவை ஏற்படுத்த உணவினை போல அருமையான விஷயம் இல்லை
எவ்வளவும் நட்பு பாராட்டுங்கள், பேசுங்கள் , பழகுங்கள் ஆனால் உணவினை பகிராமல் வரும் நட்பு நிலைக்காது, வளராது
உணவின் பெரும் சக்தி அது
ஒரு குடும்பம் ஒருநேரமாவது சேர்ந்து உண்ண வேண்டும் என்பார்கள், காரணம் குடும்ப ஒற்றுமை தொடங்கும் புள்ளி அதுதான் என்கின்றது உளவியல்
விருந்துகள் நடத்தபடுவதும், எல்லா மதங்களும் விருந்து பண்டிகைகளையும் பந்திகளையும் நடத்தி பகிர்ந்துண்ண சொல்வது அதனாலே
இந்துமதம் அதை கடவுளுக்கு படைக்க சொல்லி வலியுறுத்தியது, எதற்காக கடவுளுக்கு பசிக்கும் என்றா?
இல்லை, கடவுளுக்கு படைத்ததை பக்தியுடன் மனிதன் பகிர்ந்து உண்பான் அங்கு உறவு வளரும் என்பதற்காக
இயேசு தன் பக்தர்களுக்கெல்லாம் உணவளித்தாரே ஏன்? அங்கு ஒரு பிணைப்பு வரும் என்பதற்காக, சாகும் முன்பும் பந்தி கொடுத்துவிட்டுத்தான் சாக சென்றார்
இஸ்லாம் கேட்கவே வேண்டாம், அவர்களை போல பகிர்ந்து உண்ண யாராலும் முடியாது.
கட்சிகளின் வெற்றி தோல்வியினையே பிரியாணிதான் நிர்ணயிகின்றது என்பது தமிழக விதி
மனிதன் எங்கெல்லாம் கூடுகின்றானோ அங்கு உணவு மட்டுமே அவனை இணைக்கும் சக்தியுள்ள விஷயம்
சமய விழா முதல் குடும்ப விழா வரை உணவின்றி அமையாதது இதனால்தான்
உணவினை போல அன்பும் சகோதரத்துவமும் செழிக்க நல்வழி வேறு இல்லை
அதனால் உணவினை பகிர்ந்து உறவை வளருங்கள், வீணாக சர்ச்சை செய்யாதீர்கள்
உணவே கடவுள், அதை கூடி உண்ணுங்கள் அங்கு தெய்வம் வந்து மகிழும்
எதையும் பொறுக்கும் தெய்வம் உணவினை கொண்டு சர்ச்சை செய்தால் ஏற்கவே ஏற்காது