அதை பார்க்காவிட்டால் எப்படி?
சாலையில் அலங்கார கார்கள் அணிவகுப்பதற்கும் தேர் வருவதற்கும் வித்தியாசம் உண்டு, ரஜினி படம் அந்த தேர்வகை , அதை பார்க்காவிட்டால் எப்படி?
அப்படி தர்பார் படத்துக்கு போயாயிற்று, தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஒரு பெரும் முடிவோடு தமிழகத்தை சுற்றிவருவது தெரிகின்றது. மிகபெரும் கோடீஸ்வரனான அந்த ஈழதமிழன் மீனுக்கு இரை போடும் பொழுது போக்கு போல தமிழ் சினிமாவினை தயாரிக்கின்றார் போல
தர்ப்பார் படத்தில் கதை என்பது முருகதாஸின் பழைய படங்களின் கதை, நாகம் தன் குட்டியினை தானே விழுங்குமாம், அப்படி எங்கும் திருட வழியின்றி தன் பழைய சினிமாவின் காட்சிகளையே திருடி கொண்டார் முருகதாஸ்
முருகதாஸ் படத்தின் ஒன்லைன் மிக எளிதானது, ஹீரோ வில்லன் யார் என தெரியாமல் தேடுவான் அல்லது வில்லன் ஹீரோ யார் என தெரியாமல் தேடுவான். இந்த ஒரே ஒரு வரியினை வைத்துகொண்டுதான் அனைத்து படங்களையும் எடுக்கவேண்டும் என ஊரில் இருந்து கிளம்பும்பொழுதே சத்தியம் செய்திருகின்றார் முருகதாஸ், இப்படத்திலும் அந்த சத்தியம் காக்கபடுகின்றது
ஆனால் முருகதாஸ் தொட்டிருப்பது மிக மிக சரியான விஷயம். ஆம் பெண் கடத்தலும் போதையும் இந்த உலகத்தை ஆட்டி வைக்கும் விஷயங்கள். மது என்பது சீமான் போல என்றால் போதைபொருள் என்பது திமுகவினை ஆட ஆபத்தான விஷயம்
ஒருமுறை சிக்கிவிட்டால் மீள்வது கடினம், மனதை ஒரே போதையில் கிடைக்கா பட்சத்தில் தற்கொலை செய்யும் அளவு கொண்டுசென்றுவிடும், மகா வைராக்கியமாக மீண்டாலும் அதன் பின் உடல் ஒத்துழைக்காது , மரணம் நிச்சயம்
மிகபெரும் உதாரணம் கண்ணதாசனும் பெத்தடின் ஊசியும்.
பெண் கடத்தல் என்பது கண்ணுக்கு தெரியா மாபெரும் அராஜகம் , இன்றைய உலகில் நம்பர் 1 குற்றமும் கடத்தலும் அதுதான். மிகபெரும் சவால் அது, முழுமையாக தடுத்த எந்த நாடும் இல்லை
பசிக்கு உணவு கொடுத்து வியாபாரம் செய்யும் உணவகம், தூங்க இடம் கொடுத்து பணம் வாங்கும் ஹோட்டல் போல, ஆண்களின் ராட்சச அரிப்பை பணமாக்கும் கூட்டம் அந்த பெரும் பணத்துக்காய் அந்த பாதகத்தை செய்கின்றது, அதிலும் அப்பெண்களுக்கான வருமானம் உணவு ஒன்றே
அந்த மாபெரும் சமூக கொடுமையினை, போதையும் பேதையும் இளம் தலைமுறையினை சீரழிக்கும் கொடுமையினை கதையாக தொட்டிருக்கின்றார் முருகதாஸ், அதற்கு நிச்சயம் வாழ்த்தலாம்
ஆனால் படமாக்கிய விதம் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைகின்றது, இயக்குநர் ஹரி போல வேகமாக காட்சிகளை நகர்த்தபோய் மனிதர் குழம்பிவிட்டார்.
படத்தின் ஒரே பலம் தேரில் வீற்றிருக்கும் ரஜினி, பாட்ஷா படம் வந்து 25 வருடம் ஆகின்றது இதே தாடி கண்ணாடியுடன் அப்படத்தில் இதேமாதிரிதான் இருந்தார், பாட்சாவுக்கு 10 வருடம் பொல்லாதவன் படம் வந்தது அதிலும் இப்படித்தான் இருந்தார், அதற்கு முன்பான மூன்று முகத்திலும் அப்படியேதான் இருந்தார்
இது ஒரு வரம், பாலகுமாரன் சொன்னது போல “ரஜினிக்கு ஒரு விஷேஷ சக்தி நடிக்கும்பொழுது இறங்கி அவரை ஆட்டுவிக்கின்றது, அது எங்கிருந்தோ வருகின்றது என்பதைத்தான் ரஜினியும் நம்புகின்றார்” என்பது மிக மிக சரியான விஷயம்
மிக உச்ச நடிகராயினும் யோகிபாபு முதல் பல புதுமுகங்களுடன் தயக்கமே இன்றி அவர் நடிப்பது மனிதரை கட்டிபிடித்து கொண்டாட வைக்கும் குணம், நடிகர்களில் இந்த மனநிலையில் கடைசி வரை இருந்தது சிவாஜி கணேசன் ஒருவரே
தொழில்பக்தி என்பது அதுதான்
மற்றபடி சினிமாவில் சொல்லிகொள்ள ஒன்றுமில்லை, ரஜினி அவரின் பணியினை 200% சரியாக செய்திருக்கின்றார்
நயனுக்கும் முருகதாஸுக்கும் கஜினி படத்திலே முட்டியது, இப்படம் தொடங்கும் பொழுது கூட சாடை மாடையாக அதனை சொல்லியிருந்தார் நயன் , இப்பொழுதும் அது உண்மையாயிற்று
நயனுக்கு இது தேவை இல்லா படம், படத்தின் மிகபெரும் பலவீனம் கேமரா கோணம் சுத்தமாக சரியில்லை. சினிமா நடிகை சாதாரண அழகே, ஆனால் கேமரா கோணமே அவளை பேரழகியாக காட்டும், இந்த படத்தின் கேமரா மேனின் கோணங்களில் நயன்மேல் பரிதாபமே வருகின்றது
குமரி ஆனாலும் பெரும் நடிகர்களுக்கு மகளாய் நடிக்க ஒரு வரம் வேண்டும், கமலஹாசனை தொடர்ந்து ரஜினிக்கும் மகளாகிவிட்டார் நிவேதா தாமஸ், அடுத்து அஜீத்துக்கு மகளாக வாழ்த்துக்கள்
படத்தின் பெரும் பலவீனம் வில்லன், இரண்டாம் வில்லன் முதல் வில்லனை விட ஆஜானாபாகுவாய் இருக்கின்றான், மெயின் வில்லன் சுனில் ஷெட்டி பஞ்சுமிட்டாய் வியாபாரி போல வந்து நிற்கின்றார், சிரிப்புத்தான் வருகின்றது
இப்படம் ரஜினி வில்லனாக இருந்து கேங்ஸ்டர் படமாக வந்திருந்தால் இன்னும் மகா சிறப்பாக இருந்திருக்கும் ஆனால் பாட்ஷா சாயலை தடுக்க முடியாது என்பதால் ஓய்.சி பவார் எனும் வரதராஜ முதலியார் காலது எஸ்பி சாயலில் ஆனந்த் அருணாச்சலமாக உலாவ விட்டுவிட்டார்கள்
ரஜினி மிக சிறந்த நடிகன், அவரால் யானை முதல் எலிவரை எல்லா வேடத்திலும் நடிக்க முடியும், ஆனால் சிங்கம் போல் மட்டுமே அவர் உலாவ வேண்டும் என முடிவு செய்து படங்கள் வருகின்றன, இப்படமும் அப்படியே, தமிழக யதார்த்தம் அது
படத்தின் இன்னொரு இம்சை அனிருத், என்ன யழவு இசை என்றே தெரியவில்லை., இந்த படத்தோடு அவரை விரட்டிவிட்டால் ரஜினிக்கு நல்லது
படத்தை ஒருமுறை பார்க்கலாம், அதற்கு மேல் பார்ப்பதற்கு முழுநேர ரஜினி ரசிகனாய் இருந்தாலே சாத்தியம், நாம் டிரெய்லர் பார்த்து சொன்னது போல மனதில் நிற்கும் காட்சி என எதுவுமில்லை
காமெடி என்பது முருகதாஸுக்கு வராது, விஜயகாந்துக்கு சாமியார் வேடம் போட்டது போல அவர் படங்களில் பொருந்தா காமெடி வரும், இங்கு யோகிபாபு ஏதோ முயற்சிக்கின்றார், மனிதர் ஏனோ மெலிந்துவிட்டார்
யானை குண்டாக இருந்தால்தான் அழகு என அவரிடம் சொல்வார் யார்?
ஆக தர்பார் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென கிழிந்துவிட்டது, ரஜினியின் அடுத்த தேர்வலம் இயக்குநர் சிவா கையால் இழுக்கபடும்
சூடமேற்றி சத்தியம் செய்யலாம், சிவா ரஜினிக்கு மிக பொருத்தமான டைரக்டர். அஜித்தை ஸ்டைலாக காட்டியே படத்தை நகர்த்தும் அவருக்கு ரஜினி அப்படியே பொருந்துவார்
ஏர் கன் சுட்டவன் கையில் ஏகே 56 கிடைத்தால் எப்படி இருக்கும்? இருந்து பாருங்கள், மிக மிக ஸ்டைலான படமாக அது வரும், ரஜினியின் ரசிகர்களுக்கு விருந்தாகும்
ஆனால் ரஜினி தேர்வரும் பொழுது குஷ்பு எனும் தங்கதேரும் வரும் என்பதால் ரஜினி மங்கலாக தெரிய வாய்ப்பு உண்டு
போதை உலகமும் அதில் இளம் தலைமுறை சிக்கும் அவலமும், ஆணும் பெண்ணும் இருக்கும் காலம் வரை தொடர போகும் பாலியல் தொழிலுக்கு மகா அவலமாய் அப்பெண்கள் கடத்தபடும் விதம் தவிர வேறொன்றும் மனதில் நிற்கவில்லை
படம் ரஷ்பார்த்த பொழுதே ரஜினிக்கு ஏதோ புரிந்திருக்கின்றது, நிச்சயம் எச்.ராசா தன் படத்துக்கு வம்புக்கு வரமாட்டார், தமிழிசையும் ஊரில் இல்லை
திமுகவினை சீண்டலாம், படம் எளிதில் விளம்பரமாகும், அனால் வேண்டாம் பின்பு பார்க்கலாம் காலமிருக்கின்றது, இந்த படம் அவ்வளவுக்கு மோசமில்லை
படத்தில் வேறு மராட்டிய மும்பை வருகின்றது, சும்மாவே சீமான் கோஷ்டி மராட்டிய ரஜினி என சொல்லும் நிலையில், மராட்டியன் நடிக்கும் மராட்டிய கதை அவர்களாலும் சிக்கல் வரலாம்..
என்ன செய்யலாம் என யோசித்த குழு சசிகலா கோஷ்டியினை சீண்டிவிட்டது
ஆம், இதனால் தமிழக அமைச்சர்களுக்கு ரஜினிமேல் இருக்கும் கோபம் குறையும் கூடுதலாக அவர்களே தியேட்டர் பாதுகாப்பு எல்லாம் கொடுப்பார்கள், சசிகலா தரப்பு கத்தும் நமக்கென்ன இலவச விளம்பரம் ரெடி
அட்டகாசமான உத்தி இது, ரஜினியா கொக்கா? ஒரே கல்லில் எத்தனை மாங்காய்.
இதை இப்பொழுதே குறித்து வைத்திருப்பார் விஜயண்ணாவின் கொப்பன், ஆனால் பாஜகவினரும் அதிமுகவினரும் அந்த விஷயத்தில் அவருக்கே அப்பன்…