ஆருத்திரா தரிசனம்

ஆருத்திரா தரிசனம் என இந்துக்கள் இந்நாளை அனுசரிக்கின்றார்கள், சைவர்களுக்கு திருவெம்பாவை நோன்பு இத்தோடு முடியும் என்பார்கள்

ஆருத்திரா என்பது வேறு ஒன்றுமல்ல , அந்த வடமொழி வார்த்தை தமிழில் திருவாதிரை என அழைக்கபடும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள்

அக்காலத்தில் வரம்பெற்ற முனிவர்கள் கூடி நாம் யாகம் நடத்தி சிவனாகிவிடுவோம் என யாகம் நடத்தினார்களாம், கர்மம் என்பதே கடவுள். கடவுள் என ஒருவர் இல்லவே இல்லை, ஒழுங்காக கர்மம் ஆற்றும் ஒவ்வொருவனும் கடவுள் எனும் ஆன்மீக பகுத்தறிவில் அகங்காரத்தின் உச்சியில் யாகம் செய்திருக்கின்றார்கள்

இந்த யாகத்தை அறிந்த பரம்பொருள் வழக்கமான பிச்சைகார கோலத்துடன் வந்து நிற்க சில தடங்கல்களை முனிவர்கள் உணர்ந்து அவரை விரட்டினர்

அவரோ செல்லாமல் அங்கே சுற்றி சுற்றி வந்தார், ஆத்திரமடைந்த முனிகள் மதயானை, உடுக்கை, மான் , தீ என எல்லாவற்றையும் ஏவி ஒரு அரக்கனையும் ஏவிவிட்டனர்

சிவனோ யானையினை கொன்றார், உடுக்கையினை கையில் வாங்கினார், மான் தோலை ஏற்றார் அந்த நெருப்பையும் ஏற்றார், அந்த அரக்கனையும் கொன்று அவன் மேல் நின்று ஆடினார்

அதன்பின் உண்மை உணர்ந்த முனிகள் முக்கண்ணணே சரணம் என தங்கள் தோல்வியினை ஒப்புகொண்டு கடவுள் மனிதனாக முடியாது என்பதை உணர்ந்து திருந்தினர்

இதுதான் ஆருத்திர தரிசனம் என்பது, அச்சம்பவம் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் நடந்தது என்கின்றது புராணம் அதை நினைவு கூறி வழிபடுகின்றார்கள்

இச்சம்பவம் கூறும் தத்துவம் என்ன?

விஷயம் பெரிதாக ஒன்றுமில்லை பைபிளும் இந்த சாயல் சம்பவத்தை இரு இடங்களில் சொல்லும். தானும் கடவுளாக ஆசைபட்டு பழத்தை தின்றாள் ஏவாள். இன்னொரு இடத்தில் கோபுரம் கட்டி கடவுளின் இடத்துக்கு செல்ல ஆசைபடுகின்றனர் மக்கள்

இரு இடத்திலும் கடவுள் அவர்களை தடுத்து விரட்டியடிக்கின்றார்

ஆம் அன்றல்ல இன்றுவரை எல்லா மனிதனுக்கும் கடவுளாக உள்ளூர ஆசை இருக்கின்றது, இக்காலத்தில் எல்லோருக்கும் அது இருந்தாலும் அரசியல்வாதிக்கு மகா அதிகமாக இருக்கின்றது.

சிவனின் ஆருத்திரா தரிசனத்தில் அவர் மேல் ஏவபடும் விஷயங்களை பாருங்கள் மத யானை, இது மனதை குறிக்கின்றது, மான் என்பது பார்வைக்கு அழகானது கண்களால் கோரபடும் ஆசைகளை குறிக்கின்றது

நெருப்பு உணர்ச்சிக்கும், உடுக்கை என்பது செவிகளால் பெறும் இன்பத்தினையும் குறிக்கின்றது

அரக்கன் என்பவன் மனதின் அகங்காரத்தை குறிக்கின்றது

ஆம் இந்த மானிடன் மனதுக்கும் உணர்ச்சிக்கும் அடிமையாக கூடியவன். அதனால் மாயை அதிகரிக்கும் அந்த ஆசையே சகல பாவங்களுக்கும் உலக துன்பங்களுக்கும் அடிப்படை

புலன்களை அடக்கு மனதினை ஒடுக்கு இறைவன் தெரிவான்

எல்லா புலன்களையும் அடக்கி, ஆசையினையும் அடக்கி இறைவனிடம் சரண்டைதலே இறைவனை அடையும் வழி, மாறாக ஆசையினை யாகம் போல் வளர்த்தால் அது வளருமே தவிர ஞானம் கிடைக்காது

சிவன் எல்லாவற்றையும் அடக்கி வைத்து அகங்கார அரக்கனை ஒடுக்கி அதன் மேல் ஆடியது போல, சகல புலன்களையும் அடக்கினால் மனிதனும் தெய்வ நிலைக்கு உயர்த்தபடுவான் என்பதே இந்நாளின் தத்துவம்

சிவனின் இந்த கோலம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா விஷேஷம். இன்று அங்கு சிறப்பான நாள்

அத்தொகுதியின் எம்பி திருமா செல்வாரா என்றால் செல்லமாட்டார் மாறாக வோட்டு வாங்க மட்டும் செல்வார்.

இன்று ஒரு களி செய்வார்கள்,

அது அன்றொரு நாளில் வீட்டில் சமையல் பொருள் சரியாக இல்லாததால் ஒரு பக்தன் அரிசிமாவும் வெல்லமுமிட்டு களி செய்து பிச்சைக்காரன் உருவில் வந்த சிவனுக்கு படைத்தானாம், அப்படியே வீட்டு கொல்லையில் இருந்த 7 காய்கறிகளையும் கூட்டாக்கி கொடுத்தாரம்

அதிலிருந்து இந்நாளில் களி செய்யும் வழக்கம் வந்தது என சொன்னாலும், விரதம் முடியும் காலம் அரிசியும் வெல்லமும் கலந்து இனிப்பாக முடிக்க செய்யபட்ட ஏற்பாடு

இறைவன் பக்தியாய் எது கொடுத்தாலும் ஏற்றுகொள்வான் என்பதும் கவனிக்கதக்கது.

இந்துக்களுக்கு இந்நாள் சிறப்பானது, நடராஜ பெருமான் இருக்குமிடமெல்லாம் வழிபாடு உண்டு, அந்த ஆடல் வல்லவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்

ஐம்புலன்களின் ஆசையினை ஒழி, அகங்காரத்தை காலில் போட்டு மிதி, நீயும் தெய்வ நிலையினை அடைவாய் என்பதே திருவாதிரை நாள் சொல்லும் தத்துவம்

Uncategorized