சமூக பொறுப்பு அந்த மனிதனுக்கு இருந்தது

அந்த ராமசந்திரன் தனிபெரும் பட்டாளத்தை வைத்திருந்தார், அவருக்கென திரண்ட கூட்டமும் அவருக்காக உயிரையும் கொடுக்கும் அளவு அவர்கள் அவரை உயிராய் மதித்ததையும் இன்னொரு நடிகன் பெறமுடியாது

மாபெரும் படை அது, அவர் உத்தரவிட்டால் எதையும் செய்ய தயாராய் இருந்த கூட்டம் அது

ராமசந்திரன் வெறும் நடிகராயினும் அவருக்கு மனசாட்சி இருந்தது, அவரின் மனசாட்சியின் குரலாக அவர் சொன்னது இதுதான்

“எனக்கு ரசிகர்கள் அதிகம், அவங்க அதிகம் படிக்காதவங்க. என்னை கடவுள் அளவுக்கு வச்சிருக்காங்க‌

என்னை பின்பற்றும் அவர்களுக்கு தவறான வழிகாட்டிவிட கூடாது, ஆண்டவன் என்னை அவங்க கவனிக்கிற இடத்துல வச்சிருக்கான், அத தப்பா பயன்படுத்த கூடாது

அவங்க நல்லாயிருக்கணும், நல்லபடியா வளரணும். அதுக்குத்தான் என் படத்துல தாயினை மதிக்க சொல்றேன், குடிக்காதீங்கண்ணு சொல்றேன், பெண்களை மதிக்க சொல்றேன், என்னால முடிஞ்ச அளவு அவங்களுக்கு நல்லது போதிக்கிறேன்”

ஆம், சமூக பொறுப்பு அந்த மனிதனுக்கு இருந்தது, அவன் பெற்ற வெற்றிகளுக்கெல்லாம் அதுதான் காரணம்

அந்த வெற்றிக்கு சாட்சி இப்படம், அந்த மூதாட்டிக்கும் ராமசந்திரனுக்கு என்ன உறவு? என்ன பந்தம்?

அவளுக்கு தெரிந்தவரை ராமசந்திரன் ஒரு காட்சியும் தப்பாக நடித்ததில்லை, நல்லது தவற எதுவும் பேசியதில்லை, தாயினை அப்படி வணங்கினான்

தனக்கொரு மகன் இருந்தால் எப்படி வளர்க்கவேண்டும், அவன் எப்படி உருவாக வேண்டும் என இத்தாய் விரும்பினாளோ அதை அந்த மனிதரில் கண்டாள், இதோ வணங்கிகொண்டிருக்கின்றாள்

அந்த தாயின் முகத்தை பாருங்கள்,

பாரதத்தில் கர்ணனை மடியில் போட்டு அழுத குந்தியின் முகம் இப்படித்தான் இருந்திருக்கும்..