டி.எம் சவுந்திரராஜனுக்கு இன்று பிறந்த நாள்

அந்த சவுராஷ்ட்ரா இனம் வடக்கே பெருவாழ்வு வாழ்ந்தது, ஆப்கானிய படையெடுப்புக்கு பின் நிலமிழந்து வாழ்விழந்து தென்ன்ககம் வந்தது

அதில் இரு பிரிவு பட்டு நெசவினை செய்தது, மதுரையினை ஆண்ட திருமலை நாயக்கருக்கு பட்டு துணி மீது படுபிரியம், அதனை நெய்து கொடுக்கவே சில‌ சவுராஷ்ட்டிரா குடும்பங்களை கொண்டு வந்து மதுரையில் குடியமர்த்தினார், அன்னை மீனாட்சிக்கும் மன்னனுக்கும் பட்டு நெசவு செய்யும் தொழிலாகளாய் அவர்கள் மதுரையில் குடியேறினர்

அவர்கள் பலுகி பெருகினர், மங்கா பல அடையாளங்கள் அதில் உருவாயினர்

அதில் ஒருவர்தான் டி.எம், சவுநத்ரராஜன்

தன் வெண்கல குரலால் கிட்டதட்ட 40 ஆண்டுகாலம் தமிழகத்தை கட்டி போட்ட பாடகர், தியாகராஜ பாகவதர் எனும் மாபெரும் பாடக பிம்பம் டி.எம். சவுந்தர ராஜன் பாடல்கள் வந்தபின் மங்கி போயிற்று

ராமசந்திரன், சிவாஜி என இரு பெரும் ஜாம்பவான்களுக்கு பாடிய ஒரே பாடகர் அவர்

தமிழ் பாடல் உலகின் அற்புதமான பாடல்கள், கண்ணதாசன் வாலியின் வரிகள் எல்லாம் அவரின் குரலால் சாகா வரம் பெற்றன.

தங்கம் என்றாலும் அழகான பொற்கொல்லன் கையில் கிடைத்தால்தான் அழகுறும், அப்படி கண்ணதாசனின் வரி, வாலியின் வரிகளுக்கு அழகும் உருக்கமும் ஊட்டினார் சவுந்திர ராஜன்

11 மொழிகளில் கிட்டதட்ட 25 ஆயிரம் பாடல்களை பாடினார், அதில் வீரம், காதல், பாசம், சோகம், உருக்கம், அழுகை, கொஞ்சல், கெஞ்சல் என எல்லாமும் இருந்தன‌

2500 பக்தி பாடல்களையும் பாடினார்

பாடகர் என்பதையும் தாண்டி மிகபெரும் முருக பக்தர், அதனால்தான் யாரும் பாடமுடியாத அருணகிரி நாதரின் முத்தைதிரு எனும் அற்புத பாடலை அவரால் மகா சிறப்பாக பாட முடிந்தது

ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும்

சீர்காழி கோவிந்த ராஜன், சவுந்திர ராஜனுக்கு பின்னால் எந்த பாடகர்கள் குரலிலும் ஆண்மை ஓங்கி ஒலிக்கவில்லை

இன்றுள்ள பாடகர்களில் எது ஆண்குரல் எது பெண்குரல் என கண்டுபிடிக்கவே மகா சிரமமாய் போயிற்று

தமிழ் திரையுலகில் அழியா பாடல்களை கொடுத்த, அவனின்றி பாடல் பாட ஆளில்லை என்ற அளவு கோலோச்சிய அந்த டி.எம் சவுந்திரராஜனுக்கு இன்று பிறந்த நாள்

அவர் குரலால் பாடல்களில் புகழ்பெற்ற ராமசந்திரனும், சிவாஜி கணேசனும் அவருக்கு என்ன கைமாறு செய்தார்கள் என்பது நினைவில் இல்லை

அப்படி நடந்ததாகவும் தெரியவில்லை. ராமசந்திரனுக்கு தன்னை விட சிவாஜிக்கு டிஎம்ஸ் சிறப்பாக பாடியது போல் தோன்றிற்று

உண்மையில் சிவாஜியின் அபார நடிப்பிற்கும் கணீர் குரலுக்கும் டிஎம்ஸ் குரல் பொருந்தியதே தவிர வேறு அல்ல,

ஆனால் ராமசந்திரனுக்கு அது பொறுக்கவில்லை, சில சர்ச்சைகள் வந்ததாய் சொல்வார்கள்

மத்திய அரசு அவருக்கு பத்மசிறீ பட்டம் 2010ல் வழங்கியது

உண்மையில் டி.எம்.எஸ் வாழ்ந்த காலத்தில், தமிழகத்தில் அவருக்கு விழா எடுத்த ஒரே நபர் மு.க அழகிரி, அது லீலாவதி போன்ற சவுராஷ்டிர இனத்தவர்கள் கொலை குற்றம் திமுக மேல் விழுந்ததை கழுவ நடந்த பியாசித்தம் என்பார்கள்

ஆனாலும் அவர் ஒருவர்தான் இங்கு தனிபட்ட முறையில் சவுந்திரராஜனுக்கு சிறப்பு செய்தார்

ஒரு வகையில் பெரும் இந்துபக்தரான சவுந்திரராஜன் முருகபெருமானின் தனி அருளை பெற்றவர், அவ்வையார் போல சவுந்திரராஜனையும் முருகன் தமிழ்பாடவே தனி அருள் கொடுத்திருந்தான்

ஆம் அவர் 40 ஆண்டுகாலம் பாடினார், தமிழ் அவரின் நாவில் கொஞ்சி விளையாடியது, அந்த உச்சரிப்பும் அழகும் அவ்வளவு அழகு

அருணகிரி நாதரின் பாடலை அழகுற பாடியதுமல்லாமல் அவரே அவ்வேடத்திலும் நடித்தார்

முருகனும் தமிழும் பிரிக்கமுடியா விஷயம், தமிழ் செம்மொழி என அறிவிக்கபட்ட 2010ல் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டிற்காக “செம்மொழியான தமிழ்மொழியே” எனும் பாடலே அவரின் கடைசி பாடலுமாகும்

முருகபெருமானை பாடவும், தமிழின் அழகை சொல்லவவும் அந்த அருணகிரிநாதரே திரும்ப வந்த பிறப்பு அவர், அந்த மாபெரும் பாடகனுக்கு இன்று பிறந்தநாள். தமிழ் திரை இசை பாடல்கள் உள்ள வரை அவருக்கு மரணமில்லை …