மாரிதாஸ் கண்ணனை வணங்கட்டும்

நாம் முழு தேசியவாதி எனும் நிலைப்பாட்டை கொண்டவர்கள், சில விஷயங்களை எழுதாதே என யாரும் எம்மை நிர்பந்திக்க முடியாது, இங்கு தேசியம் அவசியம் அதை உருவாக்க பாஜக மிக அவசியம்

அந்த பாஜகவில் ஒரு சலசலப்பு எழுமானால் அதை பற்றி சொல்லவேண்டியது தேசாபிமானிகள் கடமையாகின்றது

இந்த மாரிதாசரின் திடீர் சலசலப்புகளை பற்றியும் அதனால் எழும் சில அதிர்வுகள் பற்றியும் சீர் தூக்கிபார்க்க வேண்டியது முக்கியமாகின்றது

அண்ணாமலைக்கும் மாரிதாசுக்குமான சில அலசல்கள் இங்கு அவசியமாகின்றது

அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி பணியினை விட்டுவிட்டு அரசியலில் இணைந்தவர், அவரை அதிகாரபூர்வமாக நியமித்தவர்கள் அகில இந்திய பாஜகவின் மேலிடத்தார்

ஏன் நியமித்தார்கள்? என்ன எதிர்பார்த்து நியமித்தார்கள் என்பது நமக்கு தெரியாது அல்லது அவசியமுமில்லை ஆனால் நியமித்த காரணத்தை சரியாக செய்கின்றார்

இன்று தமிழகம் மட்டுமல்ல அகில இந்தியாவிலும் அவரை எதிர்பார்க்கும் ஒரு கூட்டம் பெருகிவிட்டது நிஜம், அவரின் குரலுக்கு ஒரு கடுமையான பலம் இருப்பதும் நிஜம்

திமுகவின் சிம்ம சொப்பணமாக அமர்ந்திருக்கின்றார், வழக்கமாக ஒருவன் பலவீனம் கொண்டோ இல்லை திரைமறைவு அரசியலில் அவனை அமைதியாக்கும் திராவிட விளையாட்டு அவரிடம் எடுபடவில்லை என்பதும் எல்லோரும் அறிந்தது

பிராமண சாதி அல்லாமல், பெரும் ஊழலோ இல்லை குற்றம் சொல்ல வழியோ இல்லாமல் தனித்து நிற்கும் அண்ணாமலை இன்றைய சூழலுக்கு பாஜகவுக்கு பொருத்தமான தலமை, அவ்வகையில் பாஜவின் தேர்வு சரியானது

இங்கு அண்ணாமலை தன்னை வளர்க்கவில்லை மாறாக கட்சியின் முகமாக கட்சியின் குரலாக மட்டும் அறியபடுகின்றார்

அண்ணாமலை கட்சிக்குள் வந்ததும் அவருக்கான அங்கீகாரம் கிடைத்ததும் மிக திறந்த புத்தகமாக எங்கும் உள்ளது அதில் ஒளிவு மறைவு இல்லை

மாரிதாஸர் என்பவரின் முதல் அடையாளம் நமக்கு தேவை இல்லை, ஆனால் மோடியின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பேன் என எழுத தொடங்கித்தான் களத்துக்கு வந்தார்

அதை பலர் எழுதினாலும் அவருக்கு ஒரு கவனம் விழுந்தது , ஒரே நேரத்தில் மோடி ரஜினியினை எல்லாம் சந்திக்கும் வாய்ப்பும் அவருக்கு உருவானது

அப்பொழுதும் அவர் பாஜகவில் இணையவில்லை விரும்பவுமில்லை.

அந்த இடத்தில் ஒரு தவறு அல்லது விதிவசத்தால் ஒரு தவறினை செய்தார் மாரிதாஸ்

அவரின் நோக்கமும் உழைப்பும் ரஜினியினை முன்னிலைபடுத்தி இருந்தது , ரஜினி முதல்வர் என்ற கோஷம் இருந்தது, ரஜினி முன்னிலைபடுத்தபட்டார்

அந்த மாரிதாஸ் ஒரு காலமும் தமிழக பாஜக தலைவர் முதல்வராக வேண்டும் என்றோ, இங்கு பாஜக ஆட்சிக்குவரவேண்டும் என்றோ சொன்னதே இல்லை, இதை யாரும் மறுக்க முடியாது

நிச்சயம் தேர்ந்த அனுபவமுள்ள பாஜக இதை குறித்திருக்கும்

ரஜினி வழக்கம் போல் சிரித்து கொண்டே நழுவியபின்புதான் அவர் பாஜகவில் இணையலாம் என செய்தி பரவியது ஆனால் பாஜக அமைதி காத்தது

பின் அவர்மேல் திமுக வழக்கு தொடர்ந்தது ஆனால் பாஜக முழு பலத்துடன் அவரை காத்தது, அப்பொழுதும் அவர்கள் அவரை கட்சிக்கு பெரிதும் வற்புறுத்தி அழைக்கவில்லை

இந்த இடத்தில் பாஜக ஒரு ராஜ்தந்திர அணுகுமுறையினை அமைதியாக சொன்னது அதாவது மாரிதாஸர் எனும் தேசாபிமானியினை நாம் கைவிட மாட்டோம் அதே நேரம் கட்சிக்கு வரும்படி வலுயுறுத்தமாட்டோம் வந்தால் தடுக்கவும் மாட்டோம் எனும் நிலைப்பாடு அது

இதன் பின்புதான் இரு பக்கமும் முறுகல்கள் தொடங்கின‌

பாஜக ஒருமாதிரியான கட்சி, அங்கு அத்வாணியே அரங்குக்கு வெளியில்தான் இருக்கின்றார். மோடி 1995க்கு முன் எங்கிருந்தார் என யாருக்கும் தெரியாது

ஏன் பல வருடங்களுக்கு முன் தூத்துகுடியிலும் சிவகாசியிலும் பராரியாய் களபணி செய்த நிர்மலா சீதாராமனை கூட பலருக்கு தெரியாது

அவர்கள் அப்படித்தான் அங்கு உழைப்பும் தியாகமும் அப்பழுக்கில்லா நாட்டுபற்று ஒன்றுதான் ஒருவனை உயர்த்தும் அதுவும் திடீரென பதவி பறிக்கபட்டால் அதை ஏற்றுகொள்ளவும் வேண்டும்

அக்கட்சியின் நிலைப்பாடு அது, அதுதான் அங்கு முக்கியம்

இங்கு மாரிதாஸர் கட்சியில் முதலில் இணையவில்லை அவர் தன்னை ஒரு அடையாளபடுத்தினார், தன் எழுத்து வீடியோ மூலம் தனக்கான ஒரு அடையாளத்தை பெற்றார்

அதை கொண்டு ரஜினியினை முதல்வராக்கபாடுபட்டார் முடியவில்லை பின் தன்னை வளர்ப்பதிலே குறியாக இருந்தார்

பாஜக அப்பொழுதும் அவரின் எல்லா நடவடிக்கைகளையும் காத்தது, கருப்பர் கூட்டமோ ராமசாமி விவகாரமோ மத்தியில் பாஜக இல்லை என்றால் மாரிதாஸால் வெற்றிபெற்றிருக்க முடியுமா என்பது கேள்விகுறி

பாஜகவிடம் உரசினால் அவர்களிடம் இருந்து ஒரு கேள்வி நிச்சயம் மாரிதாஸுக்கு சீறிவரும்

“இவ்வளவு வீடியோ வெளியிட்டு எத்தனை இடங்களில் பாஜக வென்றது? எத்தனை கோடி வாக்குகளை அள்ளி கட்சிக்கு கொடுத்தீர்கள்?

சொல்லுங்கள்

வீடியோ வெளியிட்டீர்கள் அவசியாமானதை பேசினீர்கள் உங்களுக்கு ஒரு அடையாளம் பெற்றீர்கள் மாறாக கட்சிக்கு நடந்தது என்ன?”

இதற்கு நிச்சயம் அவரிடம் பதில் இருக்காது

ஆம், பாஜக நிலைப்பாடு ஒன்றுதான் யாரும் வரலாம் கடைமட்ட தொண்டனாய் இருந்து உழைக்கலாம், உழைத்து தனக்கொரு கோஷ்டி இல்லாமல் உருவாக்காமல் அத்வாணி போல வாஜ்பாய் போல இன்னும் பல தியாக தலைவர்கள் போல் இருந்தால் பெரும் உயர்வு நிச்சயம்

மாறாக தன்னால்தான், நான்.. எனும் நினைப்போடு வந்தால் அங்கு அவர்கள் ஏறேடுத்து பார்க்கபோவதுமில்லை

இப்பொழுது அண்ணாமலை என்பவருக்காக வரும் கூட்டம் அவருக்கானது அல்ல,, அது மோடியின் எழுச்சிக்கும் பாஜகவின் அவசியத்துக்கும் உருவாகும் கூட்டம்

நாளையே இன்னொரு தலைவர் வந்து அண்ணாமலை செய்வதை பேசுவதை செய்தால் தேசாபிமான கூட்டம் அவரைத்தான் ஆதரிக்குமே அன்றி அண்ணாமலை எனும் தனிநபரை அல்ல‌

அண்ணாமலை செய்து கொண்டிருப்பது கட்சி வளர்ச்சி, தேசத்துக்கான வளர்ச்சி, அவரின் லகான் மிக சரியாக கட்சியின் மேலிடத்திடம்தான் உண்டு, கொஞ்சம் சறுக்கினாலும் இழுத்துவிடுவார்கள்

மாரிதாஸ் அப்படி அல்ல, அவருக்கு மேலிடம் என எதுவுமில்லை அவர் தனியாக பத்திரிகை போல ஒன்றை நடத்திகொண்டிருக்கின்றார்

அவர் அவரைபற்றி என்ன கற்பனையில் இருக்கின்றார் என்பது எமக்குதெரியாது ஆனால் ஆனானபட்ட கண்ணதாசன், ஜெயகாந்தன், சம்பத், வைகோ, வலம்புரி ஜாண் என பெரும் பெரும் பிம்பங்களெல்லாம் சரிந்த அரசியலில் அவரால் தனியாக எதையும் சாதிக்க முடியாது அரசியல் அப்படித்தான்

எமக்கு மாரிதாஸை ஒரு தேசாபிமானியாக நிரம்ப பிடிக்கும், அவரை போன்ற தேசாபிமானிகள் எப்பொழுதாவதுதான் அதிசயமாக வருவார்கள், அவர்களை விட கூடாது

அதே நேரம் அவர்களும் தன்னிலை உணர்தல் வேண்டும்

தேசபணி என்பது தியாகம், பாரதி முதல் எத்தனையோ பேர் இன்றுவரை கட்சிக்கும் பதவிக்கும் அப்பாற்பட்டு நின்றவர்கள்

கட்சிபதவிக்கு சண்டையிட்டு புரட்சிசெய்த ஒரே மனிதர் ஈரோட்டுராமசாமி அவர்கள்தான், காங்கிரஸில் பதவி இல்லை என்பதற்காக அவர் தொடங்கிய குழப்பங்கள்தான் இன்றுவரை நீடிக்கின்றன‌

பதவியும் அது கொடுக்கும் சிக்கலும் அப்படியானது

ஈரோட்டு ராம்சாமி செய்த அதே தவறை அவரை எதிர்க்கும் மாரிதாசரும் செய்ய கூடாது என்பதுதான் எம்மை போன்றோரின் பெரும் கவலை

அவருக்கு பாஜகவில் பொருத்தமான பணி கொள்கைபரப்பாளர் பணி, அதை மிக சரியாக அவரால் செய்யமுடியும்

அந்த சேவையினை கட்சிக்குள் இருந்து அல்லது வெளியில் இருந்தோ அவர் செய்யலாம் அதற்கு அங்கீகாரம் தேவையில்லை இந்நாடும் தேசாபிமானிகளும் அவரை நிச்சயம் கைவிடமாட்டார்கள்

அனுமனை விட பலசாலி வாலி ஆனால் ராமனை சரியாக புரிந்து கொண்ட அனுமன் இன்று சஞ்சீவியாக தெய்வமாக நிற்கின்றான், ராமனை நம்பாத‌ வாலி சரிந்துவிட்டான்

அர்ஜூனை விட பலமானவன் கர்னன், அவனை விட பலமானவன் அஸ்வத்தாமன் ஆனால் கண்ணனை நம்பிய அர்ஜூனன் மட்டும்தான் ஜெயம் கண்டான்.

அந்த தேசாபிமானி மாரிதாஸர் ரஜினியால் சோர்ந்து அமர்ந்தபொழுது நாம் கீதையின் வரிகளை அவருக்கு சொன்னோம்

இப்பொழுதும் அதைத்தான் சொல்கின்றோம்

இங்கு நடப்பது தர்மயுத்தம், இங்கு பலனை எதிர்பாராமல் கடமையினை மட்டும் செய்யவேண்டும். கடமையினை தவமாக கர்மமாக ஏற்றிருக்கும் ஒருவன் உறவுகளால் துன்படமாட்டான் காமராஜரை போல் தனித்திருப்பான்

அவன் பதவிக்கும் ஆசைபடமாட்டான் பாரதி போல் தனித்து நிற்பான்

அவனை எவ்வித ஏமாற்றமும் அதிருப்தியும் அசைத்தும் பார்க்காது விவேகானந்தர் போல் நிலைத்து நிற்பான்

தேசபணியினை கர்மமாக ஏற்றவர்கள் கண்ணன் காட்டிய வழியில் கடமையினை செய்து கொண்டே இருக்க வேண்டும், தர்மம் அந்த கடமைக்கு கூட வந்து வழிகாட்டும்

அர்ஜூனன் ஒரு கணம் தயங்கி சோர்ந்திருந்தால், பீமனிடம் இந்த யுத்தத்தை நீ நடத்து நான் வரமாட்டேன் என சொல்லியிருந்தால் அல்லது தர்மனிடம் அரசு எனக்கானால் நான் யுத்தம் நடத்துவேன் என பேரம் பேசியிருந்தால் கண்ணன் அவனுக்கு தேரோட்ட வந்திருக்கமாட்டான்

அர்ஜூனன் குழம்பினான் ஆனால் தெளிந்தான், தெளிந்தவனுக்கு தன் முடி,குடி, சொந்தம்,பந்தம், அங்கீகாரம், அரசு, பதவி என எல்லாவற்றையும் விட அதர்மத்தை அழிக்க தான் செய்யவேண்டிய கர்மாவினை செய்ய வேண்டும் எனும் தெளிவு ஏற்பட்டது

அந்த தெளிந்த அர்ஜூனனுக்குத்தான் கண்ணன் தானே தேரோட்ட வந்தான், அந்த தர்மத்துக்குத்தான் அனுமனும் வந்தான் இன்னும் யாரெல்லாமோ வந்தார்கள்

அர்ஜூனன் கதை சொல்வது அதுதான், எவனொருவன் தன் சுயநலத்துக்காக அன்றி பொதுநலனுக்காக தர்மம் காக்க கிளம்புவானோ அவனுடன் தெய்வமே வரும் என்பது

மாரிதாஸ் கண்ணனை வணங்கட்டும், கண்ணன் அவருக்கான போதனைகளை வழங்கட்டும், எல்லாம் எல்லோருக்கும் விளங்கட்டும், அந்த ஞானத்தில் தமிழகத்தில் தேசியம் வளரட்டும்

ராமனின் படை போல, பாண்டவர் படை போல அந்த சேனை ஒன்றுபடட்டும், சிவாஜி எனும் ஒரு பெயருக்காக அன்று தேசம் திரண்டது போல மோடி எனும் மாமனிதனுக்காய் எல்லோரும் ஒன்றுபடட்டும், தேசியம் வளரட்டும், தமிழகம் ஆன்மீக பூமியாக மலரட்டும்