ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 10

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 10

“நிலாமண்ட பத்தி னிறைந்த வமிர்துண்ணில்
உலாவலா மந்தரத்தின் மேல்”

இக்குறள் “நிலா மண்டபத்தில் உறைந்த அமிர்து உண்ணில் உலாவலாம் அந்தரத்தின் மேல்” என பிரிந்து பொருள் தரும்

நிலா மண்டபம் என்பது உச்சியில் இருக்கும் சக்கரத்தை குறிக்கின்றது இன்னும் சூரிய சந்திர கலை நாடிகளின் சேர்க்கையினை குறிக்கின்றது

அந்த உச்ச சக்கரம் துலங்கி அமிர்தம் வழியும் பொழுது அதை உண்டால், அன்னாக்கில் அமிர்தம் சுரப்பதை உணர்ந்து அருந்தினால் ஆகாய வெளி எங்கும் உலாவலாம் என்பது பொருள்

இது ஆத்மா உடலில் இருந்து பிரிந்து பின் உள்ளே புகுவதை குறிக்கின்றது, யோகிகள் கூடு கூட்டு கூடு பாய்வது முதல் பல வித்தைகளை செய்வார்கள், அதாவது ஆத்மாவினை உடலில் இருந்து பிரித்து ஆத்மாவினை நினைத்த இடத்துக்கு அழைத்து சென்று பின் உடல் கூட்டினுள் புகுத்துவார்கள்
இது யோகிகளுக்கு எளிதான ஒன்று

ஒளவையார் இந்த குறளில் சொல்லவரும் தத்துவம் , அந்த அமிர்தம் உண்ணில் அதாவது உச்சந்தலை சக்கரம் துலங்கி அமிர்தம் உண்டால் ஆத்மாவினையும் உடலையும் பிரித்து பார்க்கும் பக்குவம் உண்டாகும் என்கின்றார்
மிகபெரிய உதாரணம் ரமண மகரிஷி, அவருக்கு கையில் அறுவை சிகிச்சை நடந்தபொழுது அவருக்கு மயக்க மருந்து கொடுக்கபடாமலே அவர் இயல்பாக இருக்கும் பொழுதே அறுவை சிகிச்சை நடந்தது

அவர் கொஞ்சமும் அப்படி ஒரு சிகிச்சை நடப்பதாக கண்டுகொள்ளவே இல்லை, காரணம் அவர் உடலையும் ஆத்மாவினையும் பிரிக்கும் கலையில் தேர்ந்திருந்தார், அந்த உடலுக்கான எந்த வலியும் ஆத்மா அறியா வகையில் விலக்கி வைக்க அவரால் முடிந்தது

இதைத்தான் ஒளவையார் இந்த குறளில் கூறுகின்றார்