ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 08
“மந்திரங்க ளெல்லா மயங்காம லுண்ணினைந்து
முந்தரனை யர்ச்சிக்கு மாறு”
இக்குறள் “மந்திரங்கள் எல்லாம் மயங்காமல் உண்ணினைந்து முத்தரனை அர்ச்சிக்குமாறு” என பிரிந்து பொருள் தரும்
யோகதியான நிலையில் அமர்ந்திருக்கும் பொழுது மயங்காமல் (மறந்துவிடாமல் அல்லது நினைவிழந்துவிடாமல்) மனதின் உள்ளே அந்த மந்திரங்களை நினைந்து (உள் நினைந்து) மூன்று உலக காவலரான சிவனை (முத்தரனை) அர்ச்சிக்குமாறு
யோகத்தில் அமர்ந்துவிட்டால் அப்படியே எதையும் நினைக்காமல் அல்லது எல்லாவற்றையும் கடந்துவிடுவதல்ல தவம்
பத்மாசன கோலத்தில் அமர்ந்து கண்களை மூடி மனதால் மந்திரங்களை சொல்லவேண்டும், மனதால் ஒரே முகமாக இறைவனை நினைந்து தன் குருமூலம் கற்ற மந்திரங்கள் அல்லது பஞ்சராட்சர மந்திரத்தை மனதால் ஓதி சிவனை வழிபட வேண்டும்
இங்கு முத்தொழில் செய்யும் அரன் என ஒளவை சொல்வது மூல பரம்பொருளை என்றாலும் சிவனை குறிப்பிடலாகின்றது, இங்கு முத்தரன் என சிவனை சொல்வது இடகலை, பிங்கலை, சுழிமுனை என மூன்று நாடிகளின் சங்கமத்தில் தோன்றும் சிவத்தை குறிப்பது
மந்திரங்களை வாய்விட்டு மணிகணக்கில் சொல்வதை விட மனதால் ஆழ்ந்த தியானத்தில் சொல்லி வழிபடுவது உண்மையான அர்ச்சனை என்பது ஒளவை வாக்கு
அருமையான விளக்கம்….மனதை ஓரு நிலை படுத்தி தியானம் செய்யும் போது மந்திரம் செய்தால் சிவனை நம் நெற்றி கண்ணில் நோக்கலாம்..மந்திர உச்சாடனம் செய்யும் பொழுது நமது உடலில் உள்ள 72,000 நாடிகளில் சலனம் ஏற்படுகிறது. பிரபஞ்ச ஆற்றலில் சில விளைவுகளை ஏற்படுத்தும் இந்த சலனம் முடிவில் நாம் அடையவேண்டிய இலக்கை அடைகிறது.
மந்திர ஜெபம் மனதை ஒருமுகப்படுத்துகிறது. மனதில் ஏற்படும் சலனத்தை தெளிவாக்குகிறது.
கலங்கலான நீர் இருக்கும் பாத்திரத்தில் ஒரு நாணயத்தை இடும்பொழுது அனைத்து தூசும் அந்த நாணயம் இருக்கும் இடத்தை அடையும். நீர் தெளிவடையும். எப்பொழுதும் சலனம் கொண்ட நீர் போன்ற மனதில் மந்திர ஜெபம் செய்யும் பொழுது எண்ண அலைகள் மந்திரத்துடன் அடங்கி மனம் தெளிவடையும்…. அற்புதமான விளக்கம்… ஓளவையார் அப்போதே மந்திரம், தியானம் ஆகியவற்றை பற்றி வெகு தெளிவாக கூறுகிறார்