இந்துக்களின் இசையின் பெரும் பாரம்பரியம் அவர், நிச்சயம் கால‌ வரலாறு, மெல்லிசைகளை பூக்களை போல் அள்ளிவீசிய அந்த தென்றல் அவர்.

இந்துக்களின் தெய்வீக இசை மாலையில் அழகான வரிகளை கோர்த்து கொடுத்த வித்தகர் அவர், அந்த தென்றல்தான் தமிழ் நறுமணத்தை தாங்கி வந்தது, அந்த இசை அஸ்திபாரம் பல பாடல் கோபுரங்களுக்கு வழிசெய்தது

அந்த இசைமேகம் எத்தனையோ அற்புத பாடல்களை கொட்டி கொட்டி கொடுத்தது, அந்த இந்து இசைகடல் எவ்வளவோ ராகங்களை அலையாக வீசிற்று

தமிழக‌ இசைவரலாறு அவரை அப்படித்தான் குறித்துகொண்டது

மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் சுருக்கமாக எம்.எஸ் விஸ்வநாதன்.

பாலக்காட்டில் பிறந்து, 7 வயதிலே திருவனந்தபுரம் தெருக்களில் போராடி, ஏகபட்ட அவமானங்களை சந்தித்து, நாடக கம்பெனி ஆபீஸ் பையனாக வாழ்க்கை தொடங்கி, இசைகற்று பின் சக்கரவர்த்தியாக நிலைத்து விட்ட வரலாறு அவர்.

சுப்புராமன் குழுவில் தொடங்கி, பின் தன் ஆர்மோனியத்தை ராமமூர்த்தியின் வயலிகோடு கலந்து இசைதென்றலாக வீசி, பின்னாளில் தனியாக மெல்லிசை கொடுத்து, இசைதுறையில் சிகரமாகி அதில் சிம்மாசமிட்டு அமர்ந்தவர்.

கவியரசர் கண்ணதாசனுக்கும், இவருக்கும் இருந்த நட்பு உலகறிந்தது. அவர் வானம் என்றால் இவர் மேகம். அவர் கடல் என்றால் இவர் வெண்மணல் கரை. அவர் தென்றல் என்றால் இவர் மெல்லிய குளிர்
இருவருக்கும் வயது வித்தியாசமென்றாலும் புரிந்துணர்வு மிக அதிகம்,

அந்த ஆத்மநெருக்கம் தான், அழியா பாடல்களை கொடுத்தது.

கண்ணதாசன் தன் அழியா காவியங்களான வனவாசம்,மனவாசம்,அர்த்தமுள்ள இந்துமத புத்தகங்களில் எல்லாம் கண்ணனுக்கு அடுத்து உச்சரித்த பெயர் விஸ்வநாதன். எம் எஸ் விஸ்வநாதன் பேட்டிகளில் எல்லாம் தவறாது இடம்பெறும் பெயர் கண்ணதாசன். நட்பு அப்படி.

கண்ணதாசன் வரிகளில் சொல்வதென்றால் “ரஷ்யா சென்றோம், வழியில் ஆப்கனில் இதுதான் காபூல் என்றேன்? அப்படிண்ணா? என்ன என்றான், கஜினி தெரியுமா என்றேன்? யாரது நான் பார்த்ததில்லை” என்றான். சரித்திரம் தெரியவில்லை, பூகோளம் தெரியவில்லை, சோவியத் தெரியவில்லை அப்பாவியாய் இருந்தான்.

ஆனால் ரஷ்ய அருங்காட்சியகத்தில் அவர்களின் புகழ்பெற்ற கலைஞனும் யாராலும் எளிதில் வாசிக்கமுடியா குறிப்புகளை கொடுத்தவனுமான‌ டிராவேஸ்கியின் நோட்ஸ்களை கொண்டு அவன் பியாணோ வாசிக்க, மொத்த கூட்டமும் சிலையாய் நின்றது. வாசித்துமுடித்தவுடன் ஆரதழுவி கைதட்டி கொண்டாடியது,
அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது இசைதான் அவனுக்கு உலகம்.

ஆம், உலக நாடுகளை தெரியாதே தவிர “பட்டத்துராணி” பாடலில் எகிப்திய இசை, தென்றல் வீசதோ என “பாண்டிநாட்டு இசை”, இன்னும் பல பாடல்களில் மேற்கத்திய இசை, அரேபியன் இசை, கிழக்கத்திய இசை, மெக்ஸிகன் இசை என எல்லா நாட்டு இசையையும் தமிழுக்கு கொண்டு வந்தவன் அவன்” என சொல்லியிருந்தார்.

பின்னாளில் “பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா” என ஒரு தொடக்கவரியையும் அவரை நினைத்தே எழுதியதையும் சொன்னார், “ராகங்கள் பதினாறு உருவான வரலாறு” என்பதும் அவரிடம் பெற்றதே என்றார்.
இருவரும் இணைந்து கொடுத்த “கிருஷ்ணகானங்கள்” கேட்காத செவிகளில்லை, கேட்டுவிட்டு உருகாத மனமும் இல்லை. தமிழக பக்தி உலகிற்கு பெரும் கொடைகள் அந்த பாடல்

ஜாம்பவன்களான கே.பாலசந்தரும், இன்னும் பலரும் சொலவது போல இருவரும் இணைந்து பணியாற்றுவதை பார்க்கவே சுவராஸ்யமாக இருக்கும் என்பார்கள்

விஸ்வநாதனை பற்றி பேசினால் பல ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும் தீராது, கவியரசரின் கவி காற்றினை, அருமையான இசையாக மாற்றிய புல்லாங்குழல் விஸ்வநாதன்.

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்பதை விட, அந்த புருஷோத்தமன் கை புல்லாங்குழலே என அவரினை சொல்வதில் மிகைபடுத்தல் ஏதுமில்லை.

சர்ச்சைகளில் சிக்கிகொள்ளாத இசையமப்பாளர்களில் அவரும் ஒருவர். நன்றி எனும் சொல்லுக்கு இறுதிவரை இலக்கணமாக இருந்தார். எளிமையும், நெற்றிநிறைய விபூதியுமாக, வெள்ளையுடையில் வெள்ளை மனமாகவே வாழ்ந்தவர்.

நல்ல இந்துவின் எல்லா அடையாளமும் அவருக்கு இருந்தது

கவிஞர்களில் பாபநாசம் சிவன் முதல் முத்துகுமார் வரை பழகியவர், இசைகலைஞர்களில் சுப்பையாநாயுடு முதல் அனிருத் வரை கண்டவர். சொந்த குரலில் அடுத்த அடுத்த தலைமுறைகளான இளையராஜா,ரகுமான்,ஜிவி பிரகாஷ் இசைவரை பாடியவர்.

அவ்வகையில் பெரும் நீடித்த வரலாறு அவருக்கு உண்டு

இசைக்காகவே இசை கலைஞராஜவே இறுதிவரை வாழ்ந்தவர், யாரையும் புண்படுத்தியவர் அல்ல அல்லது எல்லோரையும் நண்பராகவே இறுதிவரை கொண்டு சென்ற வெண்மனதுக்காரர்.

சிகாகோ மருத்துவமனையில் தனது இறுதிநிமிடத்தில், தன்வாழ்வு முடியபோவதை புரிந்துகொண்டு கவியரசர் புலம்பிய தருணங்கள் மறக்கமுடியாதவை, நினைவு தப்பியும் தப்பாத அந்த நிலையிலும் அவர் சொன்னது

“விஸ்வநாதா மெட்டு போடு….”

தமிழகம் அந்த வார்த்தையினைத்தான் நினைத்து நினைத்து பார்க்கின்றது

இனி அந்த மெல்லிசை மெட்டினை யார் எமக்கு தருவார்?

கண்ணன் கையில் புல்லாங்குழல் உண்டு, கண்ணதாசன் கையில் புல்லாங்குழலாக இருந்தவர் விஸ்வநாதன்
அது கொடுத்த இசையும் பாடலும் ஏராளம்

இன்று அவரின் பிறந்த நாள், கண்ணதாசனுக்கும் அவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் என்பது ஆச்சரியம்
இந்து ஆலயங்களின் பக்திபாடல்கள் முதல் இன்றும் உற்சாகமும் அமைதியும் கொடுக்கும் திரைசை பாடல்கள் வரை விஸ்வநாதன் மறக்க முடியாதவர்

மலேசிய சிங்கப்பூர் தெருக்களில் நடக்கும் பொழுதும், திரும்பும் திசையெல்லாம் அழகான காட்சிகளும் நாகரீக அடையாளங்களும் மிக அமைதியான மக்களையும் அழகு மங்கையர்களையும் காணும் பொழுது “நினைத்தாலே இனிக்கும்” என்ற படத்தின் பாடலெல்லாம் நெஞ்சுக்குள் இனிக்கும்

கண்ணனும் பலராமனும் இரட்டை அவதாரம் என்பார்கள், கண்ணனின் வாழ்வில் இரண்டு என்பது பிரதானமானது

அவனின் மனைவியர் இரண்டு என்பது முதல் ஏகபட்ட இடங்களில் அவனுக்கு இரட்டையர் ராசி உண்டு
அந்த கண்ணனை பாட இரு அவதாரங்கள் கண்ணதாசனும் விஸ்வநாதனுமாக வந்த நாள் இன்று, நவீன கால தமிழின் அற்புதமான கண்ணன் பாடல்கள் அவர்களால்தான் வந்தன, அம்மனும் இன்னும் எல்லா தெய்வங்களும் அந்த சாரலில் குளிர்ந்தும் கொண்டனர்