சிவாஜிகணேசன் கிராமத்து மக்களை எளிதாக தொட்டபடம் “மக்களை பெற்ற மகராசி”, அப்படியே “பாகபிரிவினை” படம் ஒவ்வொரு கிராமத்தானையும் தொட்டது
நிலத்தை விட பாசத்தையும் குடும்பத்தையும் பெரிதென கருதும் அந்த கலாச்சாரம், நிலம் வெட்டுபட்டால் குடும்பமே வெட்டுபடும் என கருதும் அந்த முரட்டு பாசத்தில் கலந்த ஒவ்வொரு கிராமத்து மனதையும் பாகபிரிவினை படம் தொட்டு சென்றது
பீம்சிங் அந்த கிராமத்து சிவாஜியினை அழகாக கண்முன் நிறுத்தியிருந்தார்
கிராமத்து படங்களில் சிவாஜியினை கண்டால் தமிழகம் தனி சிலிர்ப்பு கொள்ளும், அதை சரியாக உணர்ந்த அடுத்த இயக்குநர் பாரதிராஜா
அந்த படம் இன்றும் என்றும் தமிழ் சினிமாவின் கிளாசிக் வகை, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அற்புதமான படம்
உருக்கமான கதை, தேர்ந்த இயக்கம், கிராமத்து வெகுளி மனிதர்களின் பாத்திரம் என அப்படியே எல்லா தமிழனையும் கட்டி போடும் படம் அது
படத்தின் பலம் சிவாஜிகணேசனின் கிராமத்து வைராக்கிய நடிப்பு, கிராமத்து பெருசு என அப்படியே மாறியிருந்தார், பாரதிராஜாவின் இயக்கம் கல்லையும் மரத்தையும் சிட்டுகுருவியினை கூட நடிக்க வைத்திருந்தது
தமிழகம் கொண்டாடிய படம் அது
1985ல் வந்த அப்படம் தமிழகத்தின் பெரும் வரவேற்பை பெற்றது, பாரதிராஜா எனும் மகத்தான கலைஞன் செய்திருப்பது மிகபெரிய விஷயம்
ஆம், தொலைந்துவிட்ட கிராமத்து திண்ணைகளையும், கிழவிகளையும், மண் சுவரையும், வைராக்கியம் மிக்க கிழவர்களையும், வெகுளித்தனமான அந்த வாழ்வியலையும் அவர்தான் பதிந்து வைத்தார்
இனி கிராமங்கள் எப்படி இருந்தன என்பதை அவர் படத்தை காட்டித்தான் வருங்கால தலைமுறைக்கு சொல்லிகொடுக்க வேண்டும்
எங்கள் கிராமம் கூட எப்படியெல்லாம் மாறிவிட்டது என்பதை அவர் படங்களை பார்த்தபின்புதான் உணரமுடிகின்றது
கமலை, மாட்டு உழவு, பாம்படம் அணிந்த கிழவிகள், கிராமத்து நையாண்டி, கோபம் சண்டை என்றாலும் நொடியில் மறக்கும் அந்த வெகுளியான வாழ்வு, ஒரு சிறிய வட்டத்துக்குள் இருந்து கொண்டு உலகமே இதுதான் என அம்மக்கள் வாழும் பாசம் என அந்த அழகான கிராமத்தை அவர்தான் பதிவு செய்தார்
பழைய கிராமத்து மனிதர்கள் நினைவெல்லாம் அவர் படத்தை பார்த்தால் வந்து கண்முன் நிற்கின்றது, அவரின் ஒவ்வொரு பாத்திரமும் ஒரு கிராமத்து அடையாளத்தை நிறுத்துகின்றன
அந்த முதல் மரியாதை படத்தை முதன் முதலில் பார்த்த காலம் நினைவுக்கு வருகின்றது
அக்காலத்தில் சினிமா என்பது அபூர்வம் , இப்பொழுது இருப்பது போல் நினைத்தவுடன் நினைத்த சினிமாவினை போனில் இணையத்தில் பார்க்கலாம் என்றெல்லாம் யாரும் கனவிலும் நினைத்திருக்க முடியாது
இன்று தமிழகத்தில் ஆங்காங்கே தென்படும் விலை உயர்ந்த கார்கள் போல் சில வீடுகளில் டிவி இருந்தன, அது பெரும் அந்தஸ்தின் அடையாளமாயின
தூதர்ஷன் மட்டும்தான் டிவி, அதிலும் வாரம் ஒருமுறை மட்டும் ஒரு படம் , மற்றபடி தினம் ஒருமணிநேர செய்தி மட்டுமே
இதை தாண்டி அது செய்த ஒரே சேவை தலைவர் இறந்தால் ஒளிபரப்புவது அல்லது கிரிக்கெட்
இப்படிபட்ட காலத்தில் திரையரங்குகள் தவிர எங்கும் சினிமா காணமுடியாது, டெக் எனப்படும் இன்றைய பென் டிரைவ்களின் அன்றைய பெட்டி வெர்சன் இருந்தது அதுவும் டிவி போல் அபூர்வம்
அது இருந்தாலும் சைவ சிந்தாந்த கழக கம்பராமாயணம் போல் வீடியோ கேசட்டும் வேண்டும்
முதல்மரியாதை படம் வந்து ஊரெல்லாம் ஓடியபின் அந்த கேசட்டும் வந்தது, கிராமங்களுக்கு அப்பொழுதெல்லாம் பல மாதம் கழித்து இப்படித்தான் படங்கள் வரும்
அப்படி எங்கள் ஊருக்கும் வந்தது
ஊரில் இருந்த பணக்காரர் வீட்டுக்கு அந்த கேசட் வந்திருப்பது கடவுளே வந்திருப்பது போல் செய்தியானது, அந்த வீடு ஊரில் மதிப்பு மிக்க வீடு, யார் எது கேட்டாலும் இல்லை என சொல்லாத வீடு
அவர்களிடம் ஊரே கூடி நின்றது, ஏதோ கலவரம் போல என அஞ்சியபடி கதவை திறந்தாள் அந்த பாட்டி
“எக்கோவ், அந்த படம் வந்திருக்காம்லா.. நாங்களெல்லாம் பாக்கலாமா? தெருவில டிவி வச்சி பார்த்திருவோமா” என ஊரே கேட்டது
“சவத்து பயவுள்ளேளா இதுக்கால ஊர் கூடி அடிக்கவந்த மாதிரி வந்திய, இன்னா கிடக்கு யழவு கேசட்டு யார் வேணுமோ பாத்துங்கல..” என சொல்லிவிட்டார்
ஊரே விழாகோலம் பூண்டது இருநாள் கழித்து இரவில் படம் என தீர்ப்பானது, அதற்கொரு கூட்டமும் நடந்தது, படம் கண்டிப்பாக கோவில் ஜெபமாலை வழிபாடு முடிந்தபின்புதான் என கட்டளையிட்ட ஒரு கிழவியினை படத்தின் பொன்னாத்தாளை பார்ப்பது போல் பார்த்து பல்லை கடித்தது கூட்டம்
அந்த நாளின் அந்தியும் வந்தது, அவசரமாக பாதி சாப்பிட்டுவிட்டு எல்லோரும் படம்பார்க்க ஓடினார்கள், பால் கறப்பது மாட்டுக்கு தீனி வைப்பதெல்லாம் முடிந்தன,
“இங்க பாரு, செல்லம்மா அக்கா வீட்டுக்கு படம் பார்க்க போறேன், இவர கட்டி எந்த படம் பார்க்க முடியும்? ஒரு தியேட்டர கண்டேனா திருநேலி நார்கோயில்னு ஊர் சுத்தினேனா, எல்லாம் என் கிரகம்” என மாட்டோடு பேசி கணவனை திட்டியபடி எல்லா பெண்களும் ஓடிவந்தார்கள்
அவசரமாக கோவிலில் ஜெபமாலையினை பாதியில் முடித்தார்கள், பின்னர் பாவமன்னிப்பு பெறலாம் என சொல்லி கொண்டார்கள்
பெரும் கூட்டம் தெருவில் டிவி முன்னால் அமர்ந்திருந்தது, கரண்ட் போய்விட கூடாது என அந்தோணியாரிடம் பிரார்தனையும் செய்தாயிற்று
கூட்டத்தின் நடுவே நன்றி அறிவித்து செல்லம்மாவுக்கு பாய் போட்டு கொடுக்கபட்டது
படம் தொடங்கிற்று, கூட்டத்தில் உற்சாகம் தொற்றி கொண்டது, “ஏறாத மலைமேல..” என சிவாஜி பாடும் பொழுது எல்லோரும் கைதட்டி மகிழ்ந்தார்கள்
“பஞ்சம் பொழைக்க வந்தவுக..” என சிவாஜி பரிதாபபடும் பொழுது, “இந்த ஊர்ல பாதிபய இப்படி வந்தவன் தான்” என்ற வம்பும் வளர்ந்தது
ராதா மண்ணை காலால் குழைக்கும் காட்சியில் ஒவ்வொருவரும் “எங்க அய்யா இப்படி மிதிச்சித்தான் மாட்டு தொழுவு கட்டுனாவ” என குரலுடைந்து சொல்லி கொண்டார்கள்
“பூங்காத்து திரும்புமா” என மலேசியா வாசுதேவன் பாடும் பொழுது கூட்டம் மெய்மறந்து நின்றது
பொன்னாத்தா வடிவுகரசி வந்தபொழுது “செருக்கி முண்ட எங்க மாமியாரோட மோசம்” என சில மருமகள் குரலும் “பொண்ணு பார்த்து கட்டிவைக்கணும், இல்லண்ணா இப்படித்தான்” என மாமியார் குரலும் எங்கிருந்தோ ஒலித்தன
படம் ஓட ஓட கூட்டம் மொத்தமும் சிவாஜிக்கு கட்டுபட்டது, அவர் சிரித்தால் இவர்களும் சிரித்தார்கள், அவர் அழுதால் இவர்களும் அழுதார்கள்
அவர் சிந்தித்தால் இவர்களும் தீவிரமாக சிந்தித்தார்கள்
சந்தையில் துண்டை கையில் போட்டு ஆட்டு விலை பேசுவதில் இருந்து, மீன்குழம்பு காட்சிவரை ஒவ்வொருவரும் தங்களையே பார்த்தது போல் மகிழ்ந்தார்கள்
சோளக்கதிர் சுட்டு தின்னும் காட்சியில் “நம்ம ஊர் மாதிரியே எல்லா ஊர்லயும் சுட்டு திம்பாவ போல” என பேசிகொண்டார்கள்
சிவாஜி மீன் உறிஞ்சும் பொழுது “இது விராலு மீனுல….சும்மா பழம் மாதிரிவரும்” என சொல்லிகொண்டார்கள்
“பிள்ள உண்மையிலே சொல்லுதேன், எங்க ஆத்தாவுக்கு அப்புறம் மீன்குழம்பு” என சிவாஜி சொல்லும் பொழுது ஆண்களே கண்ணீர் விட்டார்கள், அதை மனைவியர் கவனமாக குறித்தும் கொண்டார்கள்
சிவாஜியும் இளையராஜாவும் அப்படி படத்தோடு ஒன்ற வைத்தார்கள்
அந்த நிசப்தமான இரவில் இளையராஜாவின் இசை மிக மிக சரியாக பொருந்திற்று , இசையின் வல்லமையும் அது கொடுக்கும் உணர்வும் அப்படியே எல்லோர் இதயத்திலும் ஊடுருவி நிரம்பி நின்றது
அந்த சோக ராக பின்னணி இசை அவர்களை அறியாமலே ஒரு மயக்க நிலைக்கு அவர்களை இழுத்து சென்றிருந்தது
படத்தின் ஒவ்வொரு காட்சியும் அப்படி வரவேற்பை பெற்றது
“குறும்பை ஆடு.. தலைகறி அப்படி இருக்கும்ணே” என வசனம் வந்தபொழுது கைதட்டி கொண்டார்கள்
“மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு” என ஜாண்கி பாடும் பொழுது கூட்டம் பெருமூச்சு விட்டு கொண்டது
ஜனகராஜை கண்டபொழுதெல்லாம் அடிமனதில் இருந்து வஞ்சகமில்லாமல் சிரித்தார்கள், அந்த சிரிப்பு சில கணவர்களுக்கு ஏனோ பிடிக்கவில்லை
சந்தை காட்சிகள் வந்தபொழுது அவர்கள் பேச்சு திசையன்விளை சந்தை, வள்ளியூர் சந்தை என பழங்கால கதைகளுக்குள் சென்றது
படம் கிளமேக்ஸை நெருங்கிற்று
“உன்ன பச்சபுள்ளையா நினைச்சி பழகுனது தப்பா போச்சி, ஊர் நினைச்ச மாதிரியே நீயும் நினைச்சிட்டல்ல” என சிவாஜி ராதாவிடம் சொன்னபொழுது அதற்கு மேல் தாங்காமல் கத்திவிட்டாள் ஒருத்தி
“இப்படி கண்ட சிறுக்கியும் அவபாட்டுக்கு நினைப்ப வளர்த்துக்குவா நாளைக்கு நீரும் சந்தி சிரிக்க நிப்பியருன்னா யார் கேக்குறா” என கண்ணை கசக்கினாள் ஒரு கிழவி
“செருக்கியுள்ள எங்க வந்து என்ன பேசுது பாரு, அவ அம்ம புத்தி அப்படியே” என பதில் குரல் ஆண்பக்கம் இருந்து வந்தது
“நடக்குறதான் சொல்லுதேன்”
“வீட்டுக்கு வா இன்னைக்கு வெட்டுதான், உங்க அம்மைக்கும் சேர்த்து”
“நா சாகணும் அதான, அப்பதான அந்த சிறுக்கி கூட வாழலாம், எல்லாம் எங்களுக்கும் தெரியும்”
“செருக்கியுள்ளா ஆளில்லா காட்டுகுள்ள அவகிட்ட கொஞ்சம் உப்பு கேட்டது தப்பா”
“ஆமா நம்ம வீட்டுல உப்பு இல்லல்லா, அவகிட்ட இன்னைக்கு உப்பு கேட்டியரு அதுக்கு முன்னாடி என்னெல்லாம் கேட்டியரோ யாருக்கு தெரியும், அதுவேற காடு” என வாக்குவாதம் நீண்டது
இந்த வாக்குவாதம் சண்டையாயிற்று, படத்தை நிறுத்தும் அளவு விவகாரம் வெடித்தது, கிழவிகளுக்கு வெற்றிலையோடு மெல்ல புதிய கதை கிடைத்ததில் மகிழ்ச்சி
பின் படம் தொடர்ந்தது
ஏனோ சிவாஜிகணேசனை எல்லாருக்கும் பிடித்து போயிற்று, “எங்க அய்யா இப்படித்தான் இருப்பாக, எங்க வீட்டுக்கார பொண்ணுபாக்க வரும்போது இப்படித்தான் துண்டு போட்ட்ருந்தாக” என ஏகபட்ட குரல்கள்
அவர் கவலையுறும் பொழுது கூட்டமே அழுதது, அக்கா மகனை “அய்யா கண்ணு” என அவர் பாசமாய் அழைத்தபொழுதும் கடைசியில் அவனை பறிகொடுத்து அமர்ந்திருந்த பொழுது அழுதது
“எலேய் மலைச்சாமி, என் வம்சத்துல உன்ன விட்டா யாருய்யா இருக்கா” என அவர் அழும்பொழுது குழந்தைகளை கிழவர்கள் கட்டிபிடித்து கொண்டிருந்தார்கள்..
கடைசி காட்சி வந்தது, சத்தியராஜை அடித்து கொல்லும் காட்சி
கூட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே சிவாஜியோடு வந்த ஒருவருக்குள் சாமி இறங்கிற்று, “அடி கொல்லு செருக்கியுள்ளைய விடாத, அப்படித்தான் .. நல்லா போடு.. போடு” என எழும்பி ஆடினார் ஒருவர்
மிக சிரமபட்டு அவரை அடக்கினார்கள்
படம் முடிந்தபொழுது ராதா வந்து சிவாஜியினை பார்க்க வந்து கொண்டிருந்தார்
கூட்டத்தில் ஒருத்தி கத்தினாள் “சீக்கிரம் வா..வந்துரு, இந்த பொன்னாத்த தலையில 2 அடி போட்டு அவளையும் கொன்னுட்டு போயிரு, எப்படியும் ஜெயிலுன்னு ஆகிபோச்சி, இவளையும் கொன்னுட்டு போயிரம்மா, விடாத…”
சுகமான நினைவுகளை கிளறிவிட்டது படம், அந்தகால கிராமத்து பெருசுகளளெல்லாம் கண் முன் வந்தன
அவர்கள் காலத்தில் முளைவிட்ட பனைமரம் இப்பொழுது எட்டா உயரத்தில் நிற்பது காலஓட்டத்தை சொல்கின்றது
இப்பொழுதும் அந்த ஊர் அப்படியே இருக்கின்றது, சில அடையாளங்கள் கமலை கல்லாக, வயல் வரப்பாக, குட்டி சுவராக எஞ்சியிருக்கின்றன
ஆனால் அந்த வெகுளியான கிராமத்து மனிதர்கள் மட்டும் இல்லை , அவர்கள் இல்லா ஊருக்கு செல்ல இப்பொழுதெல்லாம் மனமும் இல்லை