அபிராமி அந்தாதி : 43

அபிராமி அந்தாதி : 43

“பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே”

முதல்வரி”பரிபுர சீறடி” என என்றாகின்றது, பரிபுரம் என்றால் சிலம்பு, பரிபுரம், ஞெகிழி, ஞெகிழம், அரதனம், நூபுரம் என பல பொருள் உண்டு எனினும் இவை எல்லாம் சிலம்பு எனும் கொலுசை குறிப்பதே

அன்னை கால்களில் சிலம்பை அணிந்திருக்கின்றாள் என்பதை “பரிபுர சீறடி” என்கின்றார் பட்டர், இங்கு ஒரு விஷயத்தை சூசகமாக சொல்கின்றார் அவர்

அதாவது வேதங்கள் என்பது ஒலிவடிவம், அந்த ஒலி அதிர்வுகள்தான் உலகை இயக்குகின்றன, அன்னை அந்த வேதங்களை காலில் சிலம்பாக கொண்டு உலகை இயக்குகின்றாள் எனும் பட்டர் தொடர்கின்றார்

லலிதா சஹஸ்கரநாமம் ‘மஞ்ஜீர மண்டித பூர்பதாம்புஜா” என்கின்றது, அதாவது அன்னை வேதங்களை சிலம்பாக அணிந்தவள் என பொருள்

தொடர்ந்து பாடும் பட்டர் “பாசாங்குசை பஞ்சபாணி” என்கின்றார்

இது அன்னை கையில் வைத்திருக்கும் பாச அங்குசம் பஞ்சபாணங்களையும் கரும்பு வில்லையும் குறிப்பது, அன்னையின் கரங்களில் பாசகயிறும் அங்குசமும் ஐந்துவகை (பஞ்ச) கனைகளும் கரும்பு வில்லும் கொண்டிருக்கின்றாள் அல்லவா? அதைத்தான் சொல்கின்றார்

அன்னை இவற்றினை வைத்திருப்பது ஞான அடையாளங்களாகும், அதனை இங்கு நினைவுபடுத்துகின்றார் பட்டர்

பாசகயிறு என்பது உலகின் பந்த பாசங்களை குறிப்பது, அன்னை எல்லா பந்தங்களில் இருந்தும் விடுதலை அளித்து ஞானம் தருவாள் என்பது அதன் பொருள்

அங்குசம் என்பது யானையினை கட்டுபடுத்தும் கருவி, அன்னை ஐம்புலன்களையும் கட்டுபடுத்தும் சக்தியினை அருள்வாள் என்பது அதன் தாத்பரியம்

கரும்பும் ஐவகை பாணமும் மன்மதனுக்குரியது.

ஐந்து பானம் என்றால் ஐந்துவகை புலன்களாலும் எழும் ஆசை. பெண்ணை கண்டோ அவள் குரல் கேட்டோ, நறுமணமோ, தொடுதலோ என எதுவோ தூண்டிவிடும் ஆசை, இதனை ஐந்து மலருக்கு ஒப்பிட்டார்கள் அந்த ஐந்து மலர்களான தாமரை மலர் , அசோக மலர் , குவளை மலர் , மாம்பூ , முல்லை மலர் ஆகிய ஐந்தும் பார்வைக்கு, மணத்துக்கு, மென்மைக்கு என ஒவ்வொரு தனித்துவ ஈர்ப்பை கொண்டது

கரும்பு என்பது இனிமையானது மட்டுமல்ல அதன் ஒவ்வொரு துண்டும் மறுபடி மறுபடி வளரகூடிய சக்தி கொண்டது, அந்த சுழற்சியில் வரும் ஆசைக்குத்தான் கரும்பும் ஐவகை பாணங்களும் அடையாளமாக கொடுத்தார்கள்

அன்னையினை வழிபட்டால் உலகின் மயக்கங்களில் இருந்து விடுபடலாம் அன்னை அந்த சக்தியினை அருள்வாள் என்பது அந்த அடையாளத்தின் விளக்கம்

(இதையே பாசகட்டில் இருந்துவிடுபட்டு ஐம்புலன்களையும் அடக்கி , லவுகீக ஆசைகளை வென்றால் அன்னையின் அருளை அடையாலாம், இதையெல்லாம் வென்று அவளை சரணடைந்தால் முக்தி பெறலாம் எனும் விளக்கம் சொல்வாரும் உண்டு)

அன்னையின் இந்த தோற்றத்துக்கு இன்னொரு பொருளும் உண்டு, பொதுவாக வென்றவர் தோற்றவரின் ஆயுதங்களை எடுத்து வைத்து தன்னை நம்புவோருக்கு தைரியம் அளிப்பார்கள்

அப்படி அன்னை மன்மதனை வென்று அவன் அடையாளத்தை பறித்து பலமிழக்க செய்தவள், பாசத்தை வென்றவள், ஐவகை புலன்களையும் வென்ற ஞானம் கொண்டவள் எல்லா வளமும் பலமும் நம்பிக்கையும் தருபவள், அவளை அண்டினால் அந்த பலன்களை நமக்கும் தருவாள் என்பது பொருள்

இப்படி அன்னையின் கால்சிலம்பையும் அவள் கையின் ஆயுதங்களையும் சொல்லும் பட்டர் அடுத்து தொடர்கின்றார்

“இன்சொல் திரிபுரசுந்தரி” என்கின்றார் , ஏன் முன்பு அன்னையின் கரும்பு வில்லையும் ஐம்பாணங்களையும் சொல்லிவிட்டு இப்பொழுது திரிபுரசுந்தரி என்கின்றார் என்றார் அங்குதான் அழகான வரலாற்றை சொல்கின்றார்

சிவன் மனமதனை எரித்தார் அல்லவா? அந்த சாம்பலில் இருந்து பண்டாசுரன் என்பவன் தோன்றி பெரும் அக்கிரமங்களை செய்தான், அவனை திரிபுர சுந்தரியாக அவதரித்த தேவி கரும்பு வில்லும் பாணங்களும் ஏந்தி சென்று அழித்தொழித்தாள்

மூன்று லோகத்தின் நாயகி என்பதால் திரிபுர சுந்தரி என்றானாள், அப்படியே மூவகை ஆசையும் மூவகை மலமும் ஒழிப்பதாலும் அவளுக்கு அந்த பெயர் உண்டாயிற்று

அவளை அடுத்து “சிந்துர மேனியள்” என்கின்றார் பட்டர்

அன்னை சிவந்த மேனி கொண்டவள் என்பது எல்லோரும் அறிந்தது (உடலின் இயக்கும் சக்தியான உதிரம் முதல் ஆகாயத்தை மறைமுகமாக இயக்கும் அகசிகப்பு கதிர்வரை எல்லாம் சிகப்பு , அன்னை இயக்கும் சக்தி கொண்டவள் என்பதால் அவளுக்கும் சிகப்பு நிறமாகி அவளின் பிரசாதமான குங்குமமும் சிகப்பு நிறமாயிற்று

அடுத்து “தீமை நெஞ்சில் புரிபுர வஞ்சரை” என்கின்றார்

இங்கு “புரிபுர வஞ்சரை” என்பது திரிபுரத்தில் வாழ்ந்த அசுரர்களை குறிப்பது. மால்யவான், சுமாலி, மாலி எனும் மூன்று அரசர்கள் முன்று பறக்கும் உலகை வரமாக வாங்கி முப்புரங்களாக எல்லா உயிர்க்கும் தொல்லை கொடுத்ததையும் சிவன் அதை அழித்ததையும் அறிவோம் அல்லவா?

அந்த முப்புரம் எரித்த கதையில் வரும் அசுரர்களான மால்யவான், சுமாலி, மாலி என்பவர்களத்தான் நெஞ்சில் தீமை கொண்ட வஞ்சகர்களின் புரம்” என சொல்லும் பட்டர் தொடர்கின்றார்

“அஞ்சக் குனி” என்கின்றார், இதற்கு அஞ்சும்படியாக என பொருள்

அடுத்து “பொருப்புச் சிலைக்கை” என்கின்றார், இதற்கு மேருமலையினை வில்லாக வளைத்த கை அதாவது சிவன் என பொருள்

முப்புரத்தை சிவன் எரிக்கும்பொழுது மேரு மலையினை வில்லாக வளைத்தார் அல்லவா? அந்த விஷயத்தை சொல்லும் பட்டர் அடுத்து சொல்கின்றார்

“எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே”

எரிபுரை என்பது நெருப்பு நிறத்தை சொல்வது, நெருப்புகணல் போன்ற நிறம் என்பது பொருள், நெருப்பு போன்ற கணல் கொண்ட சிவந்த சிவனின் சரியாதியாக (செம்பாகம் அதாவது சரிபாதி) இருப்பவளே என்கின்றார்

பாடலின் பொருள் இதுதான்
apiraami awh
“சிலம்பு அணிந்த பாதங்களை கொண்டவளும் கையில் பாசாங்குசமும் ஐந்துகனைகளும் கொண்டவளே, இனிமையான மொழிகொண்ட திரிபுர சுந்தரியே, தீமை குடியிருக்கும் வஞ்சகர்கள் இருந்த முப்புரத்தை அழிக்க மேருவினை வில்லாக்கிய சிவனில், அந்த நெருப்பு மேனியில் சரிபாதியாக குடியிருப்பவளே என் அன்னையே”

இந்த பாடலில் அன்னை ஆசைகளை ஒழிப்பவள், மும்மலங்களை ஒழிப்பவள், பற்றினை அறுப்பவள் என சொல்லும் பட்டர், அந்த அன்னை தானும் பற்றறுத்து ஞானம் வல்லமை கொண்டவளாக இருந்தும், பாவங்களை பொசுக்குபவரும், தீமையினை சுட்டெரிப்பவருமான சிவனிலும் பாதியாக இருக்கின்றாள்

அவளும் தூய்மையானவள் ஒளியானவள் ஞானவடிவானவள் மாசுமறுவற்ற பரிசுத்தமானவள், அவள் குடியிருக்கும் சிவனும் ஞான நெருப்பு, பாவங்களை ஒழிக்கும் அருள் நெருப்பு, அதனால் அன்னையினை வணங்கினால் எல்லா பாவமும் கர்மமும் ஒழியும், அகங்காரமும் மும்மலமும் அழியும் அதனால் முக்தி கிட்டும் என்கின்றார் பட்டர்