குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 52
“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்”
இங்கு கர்மம் என்பது அவரவர் மனதில் உதிக்கும் திட்டமாயிருக்கின்றது, ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையான சிந்தனையினை கொண்டிருக்கின்றான், கர்மா அந்த சிந்தனையின் வழியாகத்தான் வாழ்வை இழுத்து செல்கின்றது
பாடலின் பொருள் என்னவென்றால், தன் கர்மம் இதுவென ஒருவன் உணர்ந்து முடிவெடுத்தால் அவன் உடல் நோவு வருத்தம் பாரான், பசியினை பொறுத்துகொள்வான், எந்த இடையூறு வந்தாலும் தாங்குவான், இதை முடிக்கமுடியுமா என யோசித்து தயங்கமாட்டான், அந்த செயலில் வரும் அவமானங்களை பொறுத்து கொள்வான் என்பது.
ஒருவன் உடல் சுகத்தையும், நல்ல உணவயும், இடையூறு இல்லா சொகுசையும், நிச்சயமான உத்திரவாத வாழ்வும், பெரும் மானமும் கருதி கொண்டே இருந்தால் அவனால் தன் கர்மத்தையும் செய்யமுடியாது, தன் திட்டங்களையும் செயல்படுத்தமுடியாது என்பது குமரகுருபரர் சொல்லும் போதனை
அரிய செயல்களும், கர்மாவும் நிறைவேற்ற வேண்டுமானால் எல்லா சுகங்களையும் வெறுத்து, மிகுந்த சிரமபட்டு, அவமானத்தை தாங்கித்தான் ஆகவேண்டும் அது அல்லாது வெற்றி இல்லை என்பது பாடலின் போதனை