முக்கியமானது நட்பு

ஒரு மனிதனுக்கு பல விஷயங்கள் பெற்றோர் குடும்பம் என பிறப்பில் அமையும், ஒரு சில உறவுகளை அவன் தேடி பெற்றுகொள்ள வேண்டும், அப்படி அமையும் விஷயங்களில் முக்கியமானது நட்பு

ஒருவனி விதிபலனை அதுதான் வழிநடத்தும், நட்பு அமைவதை பொறுத்தே ஒருவன் வாழ்வு மாறும், இதனால் நட்பினை எப்பொழுதும் கவனமாக தேர்ந்து கொள்ள வேண்டும் என்றது இந்துமதம்

அது நட்பிற்கான தத்துவத்தை, அந்த வாழ்வியல் அவசியத்தை தன் இரு இதிகாசங்களிலுமே அழுத்தி சொன்னது

ராமனுக்கும் குகனுக்குமான நட்பை அது ஆழமாக சொன்னது, நண்பனாய் வருபவனே குருவாகவும் மாறமுடியும் என ராமனுக்கும் ஆஞ்சநேயருக்கும் இடையில் எழுந்த உறவை சொன்னது

நண்பன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என மகாபாரதத்தில் கர்ணனை காட்டிற்ற்று, நட்பு ஒன்றுக்காகவே கடைசிவரை தன் சொந்த ரத்தத்தை எதிர்த்து நட்புக்காய் செத்தான் அந்த அவன் வாழ்வை எக்காலமும் நட்பின் சிகரமாகவே காட்டிற்று

நல்லவனும் கெட்டவனும் நட்பாலே வழிநடத்தபடுகின்றார்கள் என்பதை அந்த பாரதம் அழகாக காட்டிற்று

நல்ல நண்பனே நல்ல குருவாக ஆகமுடியும் என்பதை கண்ணன் அர்ச்சுணன் நட்பில் மறுபடியும் அம்மதம் காட்டிற்று

அதே நேரம் மனமொத்து பழகிய இரு நண்பர்கள் பிரிந்தால் அந்த அழிவு அணுபிளக்கும் அணுகுண்டை விட மோசமானது என்பதை துருபதனுக்கும் துரோணருக்குமான நட்பை சொல்லி அந்த நட்பின் பிளவு எவ்வளவு பெரும் விபரீதத்தை கொடுத்தது என்பதையும் சொல்லிற்று
நண்பர்கள் பிரிய கூடாது என்பதையும் , மற்ற பகைகளைவிட பிரிந்த நண்பர்களின் பகை தீவிரமானது என்பதையும் இந்துமதம் தத்துரீதியாக போதித்தது

அப்படியே கண்ணன் குசேலன் கதையினை சொல்லி அந்த நட்பின் பெருமையினையும் அது சுட்டிகாட்டிற்று

நண்பர்களை எப்படி பெற வேண்டும்?, நட்பை எப்படி தக்கவைக்க வேண்டும் என்பதையே வனவாசத்தின் பொழுது ராமனும், பாண்டவர்களும் செய்தார்கள்

அந்த நட்பின் பலத்தில்தான் வென்றார்கள்

ஆம் கண்ணனுக்கும் ராமனுக்குமே நல்ல நண்பர்கள் தேவைபட்ட உலகில் ஒவ்வொருவனும் வெற்றிபெற நல்ல நண்பர்கள் அவசியம் என வலியுறுத்தியது இந்துமதம்

நண்பர்களில் போஜராஜனும் காளிதாசனும் தனித்து நிற்கின்றார்கள், துரியோதனின் “எடுக்கவோ கோர்க்கவோ” என்ற கள்ளம் கபடமில்லா நட்பில் தன்னையும் இணைத்து கொள்கின்றான் போஜராஜன்

காளிதாசன் பெரும் கவிஞன் சந்தேகமில்லை, ஆனால் கவிஞர்களுக்குள்ள பலவீனம் அவனுக்கும் உண்டு என தெரிந்தும் அவன் சந்தேகம் கொள்ளவில்லை, தன் மனைவியின் பாராட்டும் ரசனையுமே காளிதாசனின் உந்துசக்தி என தெரிந்தும் அவன் காளிதாசனையோ தன் மனைவியினயோ கொஞ்சமும் சந்தேகிக்கவில்லை

வரலாற்றில் உன்னதமான நட்பு அது

தமிழக இந்து வாழ்வியலில் எத்தனையோ நட்புகளை இந்துமத வாழ்க்கைமுறை காட்டிற்று

அதனில் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு உன்னதமானது

பாரி இல்லாமல் வாழமாட்டேன் என கபிலர் அப்படியே வடக்கிருந்து இறந்த கதையில் தெரிகின்றது தமிழக இந்துக்களின் நட்பு உண்டர்வு

அதியமானுக்கும் ஒளவைக்குமான நட்பு புறநானூற்று பக்க‌ங்களில் முக்கியமானது, அதுதான் நட்பில் ஆண்பெண் வேறுபாடு இல்லை என்பதை சொல்லிற்று

வள்ளுவன் நட்பு பற்றி அதிகாரங்களையே எழுதினான், ஒளவையும் அவனும் மாறி மாறி நண்பர்களை பற்றி போதித்தார்கள்

நட்பாராய்தல், நட்பு என நட்பின் பெருமைகளை எழுதிவைத்த வள்ளுவனை நாலடியார் எழுதிய புலவன் பாடல்களில் சமன் செய்தான்

“நாய்க்கால் சிறுவிரல் போல் நன் கணியாராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும், செய்வினைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு”

அதாவது நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல, மிகுந்த நெருக்கம் உடையவராய்ப் பழகும் பலர், ஈயின் காலளவு கூட உதவி செய்யா பண்பினராய் இருப்பர்; அப்படிப்பட்ட நட்பினால் எந்தவொரு பயனும் இல்லை. வயலால் தனக்கு எந்தவொரு பயனும் இல்லை எனத் தெரிந்தாலும் தூரத்திலுள்ள நீரைக் கொணர்ந்து, வயலை விளைவிக்கும் வாய்க்காலைப் போன்ற பண்பினராய் அமைவோர் சிலர். அப்படிப்பட்ட நட்பினை நாம் நாடிப் பெறுதல் வேண்டும் என்பது பொருள்

அடுத்த பாடல் இதோ

“கடையாயார் நட்பிற் கமுகனையார் ஏனை
இடையாயார் தெங்கின் அனையர் தலையாயார்
எண்ணரும் பெண்ணை போன்று இட்டஞான் று
இட்டதே தொன்மையுடையார் தொடர்பு”

அதாவது நாள்தோறும் தண்ணீர் ப்பாய்ச்சினால் மட்டுமே பயன்தரும் பாக்கு (கமுகு) மரம் போன்று தினமும் உதவி செய்தால் மட்டுமே பயன்படுபவரின் நட்பு ‘கடை’ நட்பாகும்.

விட்டு விட்டு நீர் பாய்ச்சிக் கவனித்து வந்தாலும் போதும் என்ற நிலை கொண்டது தென்னை மரம் (தெங்கு) அனையது ‘ இடை’ நட்பு. அவ்வப்போது உதவி செய்தலால் பயன்படுவர்.

விதையிட்ட நாளில் வார்த்த தண்ணீரன்றிப் பிறகு ஒரு பராமரிப்பும் செய்யாமலே உதவும் மதிப்பு மிக்க பனைமரம் (பெண்ணை) போன்ற நட்பே ‘தலை’ நட்பு. இப்படிப்பட்ட நட்பே தொன்மை தொடர்புடைய நட்பாகும்.

நாலடியாரின் பாடலை தன் பாணியில் சொல்வார் ஒளவை

“நல்தாமரைக் கயத்தில் நல்அன்னம்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பு இல்லா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்@ முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்”

தாமரைக்குளத்தில் அன்னப்பறவைகள் இருக்கும். சுடுகாட்டில் பிணத்தைத் தின்னும் காக்கைகள் இருக்கும். அதுபோல, கல்வி கற்றவர்கள் கல்வி கற்றவர்களுடனே நட்பு கொள்வார்கள். மூர்க்க குணம் உடைய முட்டாள்களுடன் முட்டாள்களே சேர்ந்திருப்பர்.

நண்பர்களை கொண்டு ஒரு குழு அல்லது கும்பலின் குணத்தையே சொல்கின்றார் ஒளவை

எப்படிபட்ட நட்பு கூடாது என சொன்னவளும் அவளே

““அற்றகுளத்தின் அறுநீர்ப் பறவை போல
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு”

நீர் நிரம்பிய குளத்தை பறவைகள் வட்டமிடும். நீர்வற்றி விட்டால் பறவைகள் குளத்தை விட்டு அகன்றுவிடும். ஆனால் நீர்வற்றினாலும் நீர்த்தாவரங்கள் வாடி அங்கேயே இருக்கும். செல்வர்களை பலரும் சூழ்ந்திருப்பர், நட்பு பாராட்டுவர். செல்வம் இல்லாவிட்டால், பறவைகளைப் போல் பறந்து விடுவர். செல்வம் இல்லாத போதும் நட்பு பாராட்டும் நீர்த்தாவரங்களைப் போன்றவர்களே உண்மையான நண்பர்கள் என்கின்றார் ஒளவை

நட்பு வாழ்வுக்கு அவசியம், அதுவும் நல்ல நட்பு மகா அவசியம்

இதனைத்தான் இந்துமதம் தன் இதிகாசங்களில் சொன்னது, அவதாரங்களை வந்த தெய்வங்கள் தேடி சொன்னது, இந்து ஞானியரும் புலவர்களும் பாடி பாடி சொன்னார்கள்

எமக்கு தனிபட்ட வகையில் நண்பர்கள் மிக குறைவு, காரணம் நண்பர்களை தக்கவைக்கும் வழி எக்காலமும் எமக்கு தெரியாது அல்லது நெஞ்சில் இருப்பதை கம்பன் போல காட்டவும் தெரியாது

அந்த மிக சிறிய நண்பர் வட்டத்தில் முகநூலில் இருந்தும் பலர் வந்தார்கள், அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் ஒளவையின் அந்த பாடல் நினைவுக்கு வரும்

““உடன்பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா
பாமலையில் உள்ள மருந்தே பிண் தீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு”

உடன்பிறந்தவர்களே சுற்றத்தார் என இருக்க வேண்டாம். உடம்போடு பிறந்த நோயைப் போல உடன்பிறந்தவர்களும் தீமை செய்வர். எங்கோ பெரியமலையில் இருக்கும் மூலிகை நோயைத் தீர்ப்பதைப் போல எங்கோ இருந்து வரும் என்பது பொருள்

சொந்தம் பந்தம் என எவ்வளவோ உறவுகள் வலியும் வேதனைகளையும் கொடுத்தபொழுது முகமறிய சொந்தங்கள் எம்மை எவ்வளவோ தாங்கின தாங்கி நின்றன‌

அதனில்தான் எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன், ஒரு சாதாரண கணிபொறி ஊழியனாக யாருக்கும் தெரியாமலே மறைந்தே போயிருக்க வேண்டியவனான நான் இன்று பலருக்கு அறிமுகமாகியிருக்கின்றேன், சிலருக்கு நெருங்கிய நட்பாகவும் மாறியிருக்கின்றேன்

இங்கு எமக்கு கர்ணன் கிடைத்தார்கள், கண்ணன் கிடைத்தார்கள், சடையப்பன் கிடைத்தார்கள் போஜராஜன் குடும்பம் போல பலர் வந்தார்கள், அதனில்தான் அந்த பலத்தில்தான் இவ்வளவு எழுதமுடிகின்றது

அந்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்

எமக்கு எவ்வளவோ செய்தார்கள், செய்துகொண்டும் இருக்கின்றார்கள் , அவ்வகையில் அவர்கள் நிச்சயமாய் கண்ணனின் அவதாரங்கள்

நான் குசேலனுக்கு கூட தகுதியில்லை காரணம் அவன் கையிலாவது ஒரு பிடி அவல் இருந்தது