குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 54

குமரகுருபரர் நீதிநெறிவிளக்கம் : 54

“புறப்பகை கோடியின் மிக்குறினு மஞ்சார்
அகப்பகை யொன்றஞ்சிக் காப்ப வனைத்துலகும்
சொல்லொன்றின் யாப்பார் பரிந்தோம்பிக் காப்பவே
பல்காலுங் காமப் பகை”

வெளியில் இருக்கும் எதிரியின் படை கோடியினை விட அதிகம் என்றாலும் அறிவுடையர் அஞ்சமாட்டார்கள், ஆனால் தங்கள் குடியில் உட்பகை என்றால் பெரிதும் அஞ்சுவார்கள், ஒரு சொல்லில் உலகையே ஆட்டிவைக்கும் சித்தர்களாயிலும் தங்களுக்குள் காமம் புகுந்துவிடாதபடி அதவாது உள்ளே ஒரு ஆபத்து உருவாகிவிடாதபடி கவனமாக இருப்பார்கள் என்பது பாடலின் பொருள்

ஞானியர் தங்களுக்குள் எழும் காமத்தை மிக கவனமாக தவிர்ப்பதை போல உட்பகையினை ஒரு அரசன் கவனமாக கருதி பெரும் அச்சத்தோடு அதனை களையவேண்டும் என்பது போதனை

எதிரியின் கோடிபேர் கொண்ட படையினை விட ஆபத்தானது உள்வீட்டு பகை என்பது பாடலின் சுருக்கமான பொருள்

“உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்”

“செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி”

இப்படி வள்ளுவனும் பாடியிருக்கின்றான், அந்த உட்பகை ஆபத்தைத்தான் குமரகுருபரரும் தன் பாடலில் பாடுகின்றார்