அபிராமி அந்தாதி 46

“வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே”

இந்த பாடலை “வெறுக்கும் தகைமைகள் செய்தினும்” என தொடங்குகின்றார் பட்டர்

வெறுக்கும் தகமைகள் என்பது சான்றோரும் அறிஞரும் நல்லோரும் பிறரும் வெறுக்கும் குணங்கள் அல்லது செயல்களை குறிப்பது

அப்படிபட்ட செயல்களை பொறுப்பவர்களை, அப்படி செய்பவர்கள் மேல் வெறுப்பு கொள்ளாமல் பெருந்தன்மையாக கடந்து அணைப்போர் மேலோர் என்பது இந்துக்கள் கருத்து

வள்ளுவன் கூட “இன்னா செய்தார்க்கும் இனியவை” என்ற குறளில் இன்னா செய்வோருக்கு நன்மை செய்தலே பெரியோர் தகமை என்கின்றார்

மானிடரில் சிறந்தோரே இப்படி எனில் எல்லா உயிர்களையும் விட வானலோகத்தாரை விட மும்மூர்த்திகளை விட பெரியவளான அன்னையின் தன்மை எப்படி இருக்கும்?

மானிடரிலே குழந்தைக்கு அன்னையானவள் அந்த குழந்தை செய்யும் எல்லா குற்றங்களையும் பொறுப்பாள், அது அறியாமையில் செய்யும் தவறுகளை சிரித்துகொண்டே அணைக்கும் அன்னை அக்குழந்தை வளர்ந்து அறிந்தே தவறுகள் செய்யும்பொழுதும் அதனை நினைத்து வருந்துவாளே தவிர வெறுக்கமாட்டாள்

மானிட சுபாவத்திலே இப்படிபட்ட குணம் உண்டென்றால் கருணையே உருவான அன்னையின் அன்பும் கருணையும் எப்படிபட்டது என்பதைத்தான் இங்கு சொல்கின்றார் பட்டர்

“வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியது அன்றே” என்கின்றார்

மிக்கோர் என்பது அறிவுடையோர், சான்றோர் எனும் பொருளில் வரும் வார்த்தை.

என்னதான் வெறுக்கும் தன்மைகள் இருந்தாலும் தன் அடியார்களை பெரியோர்கள் பொறுப்பது ஒன்றும் புதியது இல்லையே என்கின்றார் பட்டர்

அதற்கு காரணங்களும் உண்டு

சூர்பத்மனையே தன்னோடு சேர்த்துகொண்டார் முருகபெருகான், மகாபலி சக்கரவர்த்தி வேண்டும் வரம் அருளினார் விஷ்ணு

நாயன்மார்களில் தன் அடியார்கள் தவறு செய்தாலும் அதனை பொருட்படுத்தாது அவர்களை தன்னோடு சேர்த்து கொண்டார் சிவன்

இப்படி ஏகபட்ட உதாரணங்களை காட்டமுடியும்

காரணம் மானிடன் தவறு செய்யும் இயல்புள்ளவன் அவன் தவறுகளுக்காக தண்டிக்க தொடங்கினால் அதற்கு முடிவே இல்லை என்பதை தாயுள்ளம் கொண்ட இறைவன் அறிவார், அதுவும் அறியாமையாலே அவன் அத்தவறை செய்கின்றான் என்பதையும் அறிந்தவர் அப்பரம்பொருள் அறிந்திருப்பதால் மானிட அறியாமை குற்றங்களை தாய் தன் குழந்தையின் குற்றங்களை மன்னிப்படு போல் மன்னிக்கின்றது

இப்படி அன்னை தன் அடியாரின் குற்றங்களை மன்னித்து தன் அடியார்களை காப்பார் என உறுதியாக பாடும் பட்டர், ஒரு அழகான உதாரணத்தையும் சொல்கின்றார்

“புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே” என்கின்றார்

பாற்கடலை கடைந்தபொழுது ஆலகால விஷம் திரண்டதையும், உலக உயிர்களுக்காக சிவன் அந்த விஷத்தை குடித்ததையும் எல்லோரும் அறிவோம், அந்நேரம் சிவனின் கழுத்தை இறுகபிடித்து அவரை அன்னை காத்தார் என்பதும் எல்லோரும் அறிந்தது

எல்லாம் வல்ல சிவனையே அந்த விஷத்தில் இருந்து காத்த அன்னை, அதுவும் அந்த கொடிய விஷம் தனக்கும் பரவலாம் எனும் நிலையில் சிவனின் இடபாகத்தில் இருக்கும் அன்னை, அந்நிலையிலும் சிவனை காத்தாள்

சிவன் அந்த விஷத்தை குடித்ததை அவள் கண்டிக்கவில்லை, குடித்துவிட்டு நின்ற கோலத்துக்காக ஆத்திரமடையவுமில்லை மாறாக சிவனின் கழுத்தை பிடித்து அவரை காக்கின்றாள்

அப்படி பொறுமையும் அன்பும் கொண்ட அன்னை, சிவனையே சாவு விஷத்தில் இருந்து காத்த அன்னை அடியார்கள் செய்யும் சிறிய தவறுகளின் விளைவுகள் அவர்களை பாதிக்காதவாறு காப்பாள் என்கின்றார் பட்டர்

அன்னைக்கு பிடிக்காத விஷயங்களை செய்வது அதுவும் அடியார்கள் செய்வது பாவம், அது மரணத்துக்கு ஏதுவானது அல்லவா?

அறியாமையில் செய்யும் பாவம் மன்னிப்புகுரியது, அன்னையின் சக்தி அறிந்த அடியார்கள் பாவம் செய்தால் அது தண்டனைகுரியது அல்லவா?

ஆனால் விஷம் குடித்த சிவனையே காத்த அன்னை அடியார்களை சாவில் இருந்து காக்கமாட்டாளா என அழகாக பாடுகின்றார் பட்டர்

அடுத்து “மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே” என்கின்றார்

அன்னையின் பொறுமையினையும் அவளின் தாய்போன்ற கருணையினையும் பாடும் பட்டர், தன்னை பற்றியும் சில வரிகளை பாடுகின்றார்

தான் சிறந்த அடியவர் என்றோ, மிக சிறந்த பக்திமான் என்றோ, அன்னையின் அடியாராக அடிபிறழாமல் நடப்பவர் என்றோ சொல்லாமல் தானும் பல இடங்களில் அன்னை விரும்பாத, அன்னை வெறுக்க கூடிய காரியங்களை செய்பவன் என தன்னை தாழ்த்துகின்றார்

பட்டர் சிறந்த பக்தர்தான், சதா சர்வ காலமும் அன்னை நினைவில் யோகத்தில் பித்தாக அமர்ந்திருப்பவர்தான் ஆனாலும் மானிட சுபாவத்தின்படி அவருக்கு சில மன சஞ்சலம் நொடிபொழுதில் வந்திருக்கலாம்

அதைத்தான் பெரும் தவறாக எண்ணி, தாயே நானும் முழு நல்லவன் அல்ல, நானும் நீ விரும்பாதவற்றை வெறுப்பவற்றை செய்கின்றேன் அதன் பொருட்டு நீ என்னை ஒதுக்கலாம்

ஆனாலும் நான் உன் பாதம் பணிந்து வாழ்த்திகொண்டே இருப்பேன். நான் எந்த நிலையில் இருந்தாலும் உன்னை மறவேன் உன்னை தவிர எனக்கு யாரையும் தெரியாது தாயே என்கின்றார்

அறிந்தும் அறியாமலும் தான் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கோரும் பட்டர் அப்படியே அன்னையின் தயாள பெருங்குணத்தையும் சுட்டிகாட்டி பாடுகின்றார்

ஆக பாடலின் பொருள் இதுதான்

“அன்னையே, தவறு செய்வோர்களை பொறுத்தல் என்பது பெரியோரின் இயல்புதான் அது புதிதல்லதான், சிவன் விஷம் குடித்ததையே பொறுத்து நீ அவரை காத்தாய், அப்படிபட்ட என் தாயே, பொறுமையின் கடலே , தயாபரியே நான் அறிந்தும் அறியாமலும் செய்யும் தவறுகளை மன்னிப்பாயாக, என் தவறுகளின் பொருட்டு நீ என்னை ஒதுக்கினாலும் நான் உன்னைவிட்டு அகலாமல் உன் காலடியிலே கிடப்பேன், உன்னை விட்டு எங்கே செல்வேன் என் அன்னையே….”