அபிராமி அந்தாதி 48
“சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றி
படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே”
பட்டர் தன் முதல் வரியில் “சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில்” என பாடி தொடங்குகின்றார்
அதாவது “ஒளிவிடும் (சுடரும்) கலைமதி (பிறை நிலா) ஒட்டி நிற்கும் (ஒன்றும்) சடைமுடி குன்று மே;ல்” என சொல்கின்றார்,
மலையின் மேல் நிலா இருப்பதையும், மலையின் உச்சியில் இருந்து அருவிகள் நீண்டு விழுவதையும் காண்கின்றார், அக்காட்சியுடன் பிறை நிலா தாங்கிய சடாமுடி கொண்ட சிவனின் தோற்றத்தையும் பொருந்த சொல்கின்றார்
அழகான கவித்துவத்தோடு சொல்கின்றார்
சிவனை ஒரு அழகான மலைகுன்றாக நிலாவினை தாங்கிய மலைகுன்றாக சொல்லும் பட்டர், அன்னையினை அம்மலையில் படரும் ஒரு கொடியாக உருவகபடுத்தி அடுத்து பாடுகின்றார்
“ஒன்றி படரும் பரிமளப் பச்சைக்கொடியைப்” என்கின்றார்
அதாவது மலையில் படரும் கொடி போல சிவனை பற்றி பிடித்து நிற்கும் அன்னையே என அழகான உருவகமாக பாடுகின்றார், அன்னையினை பச்சைகொடியாக பாடுதல் என்பது மரபு
ஏன் கொடி என்றார்கள்?
கொடி என்பது வளைந்து நெளியும் தன்மை கொண்டது என்பதை சொல்லி, அவ்வாறே அன்னை கருணை வடிவினள் பக்தரின் கோரிக்கைக்கு நெகிழ்ந்து வரம் தருபவள் என உருவகபடுத்தி அவளை கொடி போன்றவள் என்றார்கள்.
அன்னைக்கு பச்சை நிறத்தை குறிக்கும் “சியாமாபா” என ஒரு திருநாம் உண்டு
அவளை பச்சை ஆடை உடுத்தியவள், பச்சைகொடி என்றார்களே ஏன்?
இந்த உலகில் உணவிடும் பயிர்கள் பச்சை, மூல தாவரம் பச்சை, உயிருக்கு உணவளிக்கும் மூல நிறம் பச்சை, பச்சை என்பது உயிரின் நிறம், உயிரை தாங்கி நிற்கும் ஆதார நிறம்
அதனாலே மலைகள் முதல் மண்முதல் பச்சை நிறத்தால் மூடபட்டுள்ளன, பச்சை என்பது வாழ்வளிக்கும் நிறம் என்பதால் அன்னைக்கு பச்சைநிறமிட்டார்கள், அன்னை பச்சை நிறத்தவள் என உருவகமிட்டார்கள்
அவளுக்கு பச்சை ஆடை உடுத்துவதும் பச்சையம்மன் என கொண்டாடுவது மரபும் ஆயிற்று
இந்த இடத்தில் அழகான உருவகம் இன்னொன்றையும் செய்கின்றார் பட்டர், மலை இல்லாமல் ஆறுகள் இல்லை ஆறுகள் இல்லாமல் உலக உயிர்கள் இல்லை
அந்த மலைக்கு அழகும் மழையும் ஈர்த்து கொடுப்பது மலையின் மரம் செடி கொடிகள். அப்படி மலையும் அதன் செடிகொடிகளுமாக சிவனும் அன்னையும் இருந்து உலக உயிர்களை காக்கின்றார்கள் என அழகாக உவமையில் பாடும் பட்டர் தொடர்கின்றார்
அன்னையினை பட்டர் “பரிமள பச்சைகொடி” என்கின்றார்
பரிமளம் என்றால் வாசனை என பொருள், இங்கு அன்னையின் ஞானத்தை குறிக்கும் சொல், அன்னை மிக ஞானமானவள் ஞானகொடி என்பதை சொல்கின்றார் பட்டர்
அன்னைக்கு லலிதா சஹஸ்கர நாமத்தில் “திவ்ய காந்தாட்யா” என ஒரு பெயர் உண்டு என்பது குறிப்பிடதக்கது
அடுத்து “பதித்து நெஞ்சில் இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார்” என்கின்றார்
அதாவது அப்படிபட்ட அன்னையினை நெஞ்சில் இருத்தி நொடிபொழுது (இமைப்போது) கூட மறக்காமல் தவம் இருப்ப்பவர் என்பது பொருள்
அன்னை பரிமள பச்சைகொடி என சொன்னவர் பட்டர் அதாவது ஞானமும் வாழ்வும் தருபவள் என பொருள், அன்னை ஞானவடிவானவள், ஞானத்தின் ஊற்றும் உலகமும் மூலமும் அவளே
அன்னையினை மனதில் இருத்தி எப்பொழுதும் தியானித்து யோகத்தால் வழிபட்டால் மனம் ஞானமயமாகும், ஞான மயமான மனம் வினைகளை அறுக்கும், ஞானம் கர்ம வினைகளை அறுக்கும், அந்த கர்ம வினைகள் அகன்றால் பிறந்த கர்மாவும் தீரும் இனி பிறப்பற்ற நிலை வரும்படி புதிய கர்மாக்களும் வராது
அன்னை ஞானமான மனதை அருள்பவள் அதனால் லலிதா சகஸ்ரநாமம் அவளை “தியான கம்யா” என்கின்றது, “ஞானவிக்ரஹா” என்கின்றது
அன்னை தவமிருந்து வழிபட்டால் அவளை நெஞ்சில் நிறுத்தி வழிபட்டால் பெரும் ஞானத்தை அருள்வாள் அல்லவா? அப்படிபட்ட ஞானத்தை அடைந்தவர்கள் என்ன பலன் பெறுவார்கள்? அன்னையினால் ஞானமடைந்தவர்கள் என்ன ஆவார்கள் என்பதை அடுத்து சொல்கின்றார் பட்டர்
” பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே” என்கின்றார்
குரம்பை என்றால் உடல்
குடலும் கொழுப்பும் ரத்தமும் கலந்த இந்த உடலுக்கு திரும்ப அந்த ஆத்மா திரும்ப வருமா என கேட்கின்றார்..
அதாவது அன்னையினால் ஞானம் பெற்ற ஒரு ஆத்மா மறுபடி இன்னொரு உடலுக்கு திரும்பாது மறுபிறவி எடுக்காது என்பது வரியின் பொருள்
மானிட பிறப்பு என்பது வியாபாரம் போன்றது, பழைய கர்மாக்களை தீர்க்க வரவாக வந்து பிறந்து கர்மாக்களை செலவாக செய்துகொண்டிருக்கின்றோம்
ஆனால் பழைய கர்மா தீரும்பொழுதே புதிய புதிய கர்மாக்களை கடனாக செய்து குவிக்கின்றோம், அந்த கடனை தீர்க்க அடுத்த பிறவி எடுக்க வேண்டியிருக்கின்றது
அது நல்ல கர்மா என்றால் அதை நல்வழியில் கழிக்கவும் கெட்ட கர்மா என்றால் சிரமமான வழியில் கழிக்கவும் பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கின்றது, அதே வரவு செலவு கணக்கில் கடன்களை பெருக்கி தீரா பிறவி சுழலில் சிக்க வேண்டியிருக்கின்றது
அந்த சுழலைத்தான் அன்னை தரும் ஞானம் அறுக்கும் என்கின்றார் பட்டர், அன்னையின் அருளினால் மனம் தெளியும் அந்த தெளிவு ஞானத்தை அருளும், அந்த ஞானம் கர்மாக்களை தீர்க்கும்
கர்மா தீர்ந்துவிட்டால் பிறப்பில்லை
ஆம் அன்னையினை அண்டியவருக்கு பிறவி சுழல் இல்லை, கர்மவினை முழுக்க தீர்ந்து முக்தி கிடைப்பதால் அவர் மறுபடி பிறக்க அவசியமில்லை எனபது பாடலின் சுருக்கமான போதனையாகும்
பாடலில் மலைஎன்றும் கொடி என்றும் வெறுமனே தொடங்கவில்லை பட்டர், அதனிலும் தத்துவம் சொன்னார் பட்டர்
மலையும் பச்சை கொடிகளும் உயிர்களை உருவாக்க அடிப்படையானவை, உலக உயிர்கள் வாழ அடிதளமானவை, அப்படிபட்ட வாழ்வை தரும் அன்னைதான் பிறப்பற்ற நிலையும் தருவாள் என்பதை சொல்கின்றார் பட்டர்
ஆக பாடலின் பொருள் இதுதான்
“அன்னையே, நிலவை கொண்ட மலை போன்ற சிவன் மேல் கொடி போல படர்ந்திருப்பவளே, உன்னை நெஞ்சில் முழுமையாக வைத்து வணங்குவோருக்கு ஞானத்தை அருள்பவளே, உன்னை நொடிபொழுதும் மறக்காமல் நெஞ்சிலே சுமப்போருக்கு இன்னொருமுறை உடலில் புகவேண்டிய அவசியம் வருமோ?
வரவே வராது. நீ கர்மவினைகளை தீர்த்து நிர்மலமான நிலையினை கொடுப்பதால் இன்னொருமுறை பிறக்கும் அவசியமே இல்லை என் அன்னையே” என உருகுகின்றார் பட்டர்
(இதே பாடலுக்கு ஞானமொழியில் இன்னொரு பொருள் உண்டு
இங்கே “சுடரும் கலைமதி” என பட்டர் சொல்வது சந்திரகலை சூரியகலை ஆகிய சுவாசங்களை
அந்த சுவாசத்தை முறைபடுத்தினால் யோகம் கைகூடும் யோகத்தில் கொடி போன்ற வகையில் குண்டலினி மேல் எழும், அந்த குண்டலினி உச்சியில் சுடர்விட்டு துரிய சக்கரத்தில் பிரகாசிக்கும்
அந்த ஞான பெருநிலையில் கர்மவினை எல்லாம் அழியும் பிறப்பற்ற நிலையும் கைகூடும்
இப்படிபட்ட அர்த்தமும் உண்டு, சிவசக்தி தத்துவத்தை மலையும் கொடியும் என்றும் உடலில் பரவும் குண்டலி சக்தியின் ரகசியமாகவும் சித்தர்கள் சொல்வார்கள்
பட்டர் ஒரு சித்தராக இந்த பாடலை பாடினார் எனும் கோணமும் உண்டு)