நவராத்திரி சிந்தனைகள் : 05 & 06

லட்சுமி எனும் ஐஸ்வர்யம் அருளும் தெய்வத்தை அலைமகள் என்றார்கள் இந்துக்கள், அலையாடும் நீரில் அமர்ந்திருப்பவள் என அதற்கு பொருள்

“ஆறில்லாத ஊர் பாழ்” என்பார்கள், ஆறு போல் நீர் இல்லா ஊர் சிறக்காது.

நீர் வளமே மானுடம் வாழ செழிக்க முதல் வளம். நீர் இன்றி எந்த தொழிலும் சிறப்பதில்லை, உயிர்களும் பயிர்களும் வாழவும், எல்லா வகை தொழில்களும் நடக்கவும் நீர்வளம் அவசியம். இதனால் நீர் இருக்கும் இடம் லட்சுமி இருப்பாள் என நீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள்

ஆறு, குளம், ஏரி என எல்லா இடங்களிலும் லட்சுமி வாசம் உண்டு என சொல்லி நீர் நிலைகளை பெருக்கினார்கள், அதனால் வருமானம் கொட்டிற்று, எதெல்லாம் தொழில்கள் சிறக்க அவசியமோ அதனை எல்லாம் லட்சுமி வாசம் என சொன்ன இந்துமதம் நீரில் அமர்ந்திருக்கின்றாள் லட்சுமி என சொல்லிற்று

இன்னும் அழுத்தமாக நீர் அலையாடும் இடங்களை கடந்து பொருள் தேட வேண்டும் என்றும் சொல்லிற்று, ஆறு, கடல்களை தாண்டி மெல்ல மெல்ல விரியும் வணிகம், அலையாடும் இடங்களை தாண்டி வளர்ந்த வணிகம் செழிக்கும்

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பதெல்லாம் அலைமகள் வழிபாட்டின் தொடர்ச்சியே, எப்ப்பாடு பட்டாலும் செல்வம் சேர் என்றார்கள், அதற்கு அன்னையின் துணை எக்காலமும் உண்டு என்பதையும் சொன்னார்கள்.

எல்லா தொழிலிலும் லாபம் பெருக லட்சுமி கடாட்சம் அவசியம் என்பதால் அவளை அலைமகள் என குறிப்பிட்டு சொன்னார்கள்

எத்தனையோ பறவைகள் இருக்கும் உலகில் ஆந்தையினை ஏன் லட்சுமியின் வாகனம் என இந்துமதம் சொல்லிற்று? என்றால் விஷயம் இல்லாமல் இல்லை

இந்துமதம் மகா பழமையான மதம், மானிடருக்கு புரியும்படி அது விளக்கம் சொல்ல இயற்கையில் பல விஷயங்களை காட்டிற்று, விலங்குகள் பறவைகளின் சுபாவத்தை அது சொல்லி மானிடருக்கு பிரபஞ்ச சக்தியினை விளக்கிற்று

சேவல் முருகனின் வாகனம் என்ற இந்துமதம் சேவலிடம் இருந்து அதிகாலை விழித்தல் முதல் தலமை தாங்கும் விஷயம் வரை கற்க சொன்னது. எலியினை விநாயகருக்கு வாகனமாக்கிய அந்த ஞானமதம் மனம் எலிபோல் ஓடிகொண்டிருக்கும் அதை கட்டுபடுத்தும் விஷயம் விநாயக பக்தி, அவர் அமர்ந்த மனம் எலிபோல் ஓடாது என சொல்லிற்று

இப்படி ஏகபட்ட தத்துவங்களை சொன்ன அந்த தத்துவமதம் செல்வத்தை கொண்டிருக்கவேண்டியோரின் தன்மைகளை ஆந்தையினை காட்டி விளக்கிற்று

இன்று தமிழக பகுதிகளில் ஆந்தை என்பது அபசகுணமாக சில இடங்களில் மாறிவிட்டாலும் தொடக்கத்தில் அப்படி அல்ல, அந்த பறவை அறிவின் அடையாளமாக செல்வத்தின் சின்னமாகவே கருதபட்டது

வட இந்தியாவில் இந்த நம்பிக்கை இன்றும் உண்டு, ஐரோப்பாவிலும் இன்றும் ஆந்தை அறிவின் அடையாளமே

ஆந்தையின் சிறப்புக்கள் ஏராளம், அது விழித்திருக்கும் பறவை. எப்பொழுதும் ஒருவித விழிப்பு நிலையில் இருக்கும் பறவை. பகலில் அது பதுங்கியிருந்து இரவில் வேட்டையாடும் அதாவது வாய்புக்காக காத்திருக்கும்

அதாவது எல்லா பறவைகளும் குவியும் பகல் பொழுதில் அது வராது, பெரும் போட்டிகள் எப்பொழுது இருக்காதோ அந்த இரவில்தான் அது வெளிவரும்

அதற்கு இருட்டிலும் பார்க்கும் சக்தி உண்டு, எந்த இருளும் அதன் கண்களை மறைக்காது, அதுவும் தொலைநோக்கு பார்வை அதிகம் கொண்ட பறவை அது. தூரத்தில் இருக்கும் இரையினையும் எளிதாக பார்க்கும்

ஆந்தையின் மிக பெரிய பலம் சத்தமே இல்லாமல் பறக்கும் சாகசம், அதன் இறக்கைகளின் அமைப்பும் அதன் அசைவும் அதற்கு உதவுகின்றன‌

தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அதனால் 359 டிகிரி கழுத்தை திருப்பி பார்க்கமுடியும் இப்படி ஏகபட்ட தனி இயல்புகளை கொண்டது ஆந்தை

ஆந்தை வசிக்குமிடம் வளம் கொண்டதாய் இருக்கும், ஆம் வயல்களில் எலிகள் போன்றவற்றைத்தான் அவை வேட்டையாடும், எலிகள் பயிர்கள் அதிகம் விளையும் வளமான நீர் வயல்கள் பக்கமே அதிகமிருக்கும். ஆந்தை ஒரு இடத்தில் இருந்தால் வளம் உண்டு என பொருள்.

இதையெல்லாம் கவனித்த இந்துமதம் ஆந்தையினை முன்னிட்டே செல்வந்தர்கள் இருக்க வேண்டிய இயல்பை சொன்னது

ஆந்தை போல் எப்பொழுதும் (இரவிலும்) செல்வம் இருப்பவன் விழிப்பாய் இருத்தல் வேண்டும், தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை எல்லா திசையிலும் பார்த்து கொண்டே இருக்க வேண்டும்

ஆந்தை போட்டிகள் அதிகமில்லா இரவில் வேட்டையாடுவது போல் செல்வந்தன் போட்டி இல்லா தொழில்களில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும், லாபம் அதில்தான் அதிகம்

ஆந்தைக்கு தொலைதூர பார்வை அதிகம் என்பது போல செல்வந்தன் தன் தொழிலில் அடுத்த அடுத்த நீண்ட தூர காலங்களை கணக்கிட்டு கொண்டே இருக்க வேண்டும்

தொலைதூரத்தில் வாய்ப்புகள் கிடைக்குமா என நோக்கி கொண்டே இருக்க வேண்டும்

ஆந்தை பறக்கும் பொழுது, இரையினை கவ்வும் பொழுது ஓசைபடாமல் பறப்பது போல் தொழில் வாய்ப்புகளில் எப்பொழுதும் அமைதி தேவை, ஆரவாரமின்றி தொழிலை கைபற்றுவதும் செய்வதுமே சால சிறந்தது

ஆந்தை பறக்கும் பொழுது சத்தம் வராதது போல செல்வம் பெருகும் பொழுதும் ஒரு ஆரவாரமும் இருக்க கூடாது, செல்வந்தனின் ஆரவாரம் அழிவுக்கு அறிகுறி

வளமான இடத்தில் ஆந்தை இருப்பது போல செல்வமும் தொழில்களும் உற்பத்தியும் இருக்கும் இடத்தில்தான் இருக்கும், அங்கு எப்பொழுதும் உலாவிகொண்டே இருக்க வேண்டும்

இப்படி ஒருவன் ஆந்தையின் இயல்பில் கவனமாக தொழில் செய்தால் அவனிடம் செல்வம் தங்கும் பெருகும். இதனால் அந்தையினை லட்சுமிக்கு வாகனமாக்கினார்கள்

அறிவுள்ளது ஆந்தை அந்த அறிவும் அது கொடுக்கும் பாய்ச்சலுமே இரையினை சரியாக அதை பிடிக்க வழிகாட்டுகின்றன என்பதைத்தான் ஆந்தை போல் விழித்திரு என தத்துவமாய் சொன்னார்கள்

விழிப்பு, முழு விழிப்பு நிலைதான் செல்வத்தின் தொடக்கம்

செல்வத்தை நீர் என இந்துக்கள் சொன்னதிலும் ஏகபட்ட தத்துவங்கள் உண்டு. நீரின் மேல் அமர்ந்திருப்பவள் லட்சுமி என வளங்களின் குறியீட்டினை சொன்னாலும் இன்னொரு பெரும் தத்துவமும் அதில் உண்டு

அதாவது நீர் ஓடிகொண்டே இருக்கவேண்டும், தேக்கிவைக்கும் நீர் கெட்டுவிடும், தேக்கி வைத்து கொண்டே இருப்பதால் பலன் ஏதுமில்லை

அணைகட்டி தடுத்தாலும் தகுந்த நேரம் திறந்துவிடவில்லை என்றால் அதனால் பலனில்லை. ஒன்று தன்னில் வற்றி போகும் அல்லது பலனளிக்கா வகையில் கெட்டு போகும்

கிணற்றில் இறைக்காமல் விடும் நீர் பாசிபிடித்து இன்னும் பல ஜந்துக்கள் பெருகி நாசமாகும், இறைக்க இறைக்க ஊறும் கிணறு நலமாய் இருக்கும்

நீரின் இயல்பு அது, குடத்தில் வைத்தாலே சில நாட்களில் புழுவும் இன்னும் பலவும் தோன்றும் அது பின் பயன்படாமல் போகும் , பயன்படுத்தினாலும் நோயில் வீழ்த்திவிடும்

செல்வமும் இத்தகையதே அது கட்டி வைக்கும் இடத்தில் பலனளிக்காதும் வெறுமனே குவித்து வைத்திருந்தால் அது மெல்ல மெல்ல அதை கொண்டவனை ஒருமாதிரியான மனநிலைக்கு கொண்டு சென்று அழித்துவிடும் அந்த செல்வமும் கொஞ்சம் கொஞ்சமாக் சரியும்

“குந்தி தின்றால் குன்றும் மாளும்” என்பது அதுதான்.

செல்வம் நீரை போல் ஓடிகொண்டே இருக்க வேண்டும், செல்வம் வர வர அதற்கான நியாயமான வழிகளிலும் இன்னும் பலருக்கு பயன்படும் வழிகளிலும் அது செலுத்தபட்டு கொண்டே இருக்க வேண்டும்

ஓடும் நீரும் முறையான வழிகளில் செல்வத்தை திருப்பிவிடும் மனிதனும் ஒரு காலமும் கெட்டு போவதில்லை

இறைக்கும் கிணறு ஊறும் என்பது போல, தன் பயிர்களுக்கு நீர் இறைக்க குடியானவன் இறைத்து கொட்டுவதை போல பல மக்கள் வேலைபெறவும் வாழ்வும் பெறவும் அந்த செல்வத்தை இறைத்து கொண்டே இருந்தால் லட்சுமி அருளில் அவனின் செல்வ கிணறு ஊறி கொண்டே இருக்கும்

செல்வத்தை நீர் என சொல்வதும் இதனாலே, கோவில்களில் நீராபிஷேகமு பாலாபிஷேகமும் செய்யும் தத்துவமும் இதுவே

நீரால் ஆனது எல்லாம் சேமித்து வைத்தால் கெடும் இயல்பு கொண்டவை, அவற்றை ஓடவிட்டு கொண்டே , செலவிட்டு கொண்டே, தர்மத்துக்கு இறைத்து கொண்டே இருக்க வேண்டும். அதே நேரம் தொடர்ந்து அது வரும் வழியினையும் தயார் படுத்த வேண்டும்

இந்த தத்துவம் எளிதில் புரியும்படிதான் நீரை செல்வத்துக்கு ஒப்பிட்டு சொன்னார்கள் இந்துக்கள். அதில் லட்சுமி வாசம் செய்கின்றாள் என்பதையும் புரியும்படி விளக்கி சொன்னார்கள்

சரி, இவ்வளவு அரும்பாடுபட்டு ஒவ்வொருவனும் சேர்க்கும் செல்வத்தை தர்மம் செய், ஈகை செய் என்றெல்லாம் இந்துக்கள் சொன்னார்கள், எவனோ அரும்பாடுபட்டு சேர்த்து உழைக்காத சோம்பேரிக்கும், பிழைக்க தெரியாத தற்குறிக்கும் அள்ளி கொடுக்க வேண்டுமா?

ஏன் சும்மா தர்மம் , தானம் என அள்ளி அள்ளி இறைக்க வேண்டும்?

விதிக்கபட்டது என கொடுக்கபடும் தர்மமும், எதிர்பார்பே இல்லா தானமும் ஏன் செல்வந்தன் செய்ய வேண்டும்? இந்த தானமும் தர்மமும் செல்வந்தன் கையினை நம்பியே ஏழைகளையும் வறியவர்களையும் இருக்க செய்துவிடாதா?

ஆனாலும் தர்மமும் தானமும் அவசியம், செல்வந்தனுக்கு கண்டிப்பாய் அவசியம் என இந்துமதம் சொன்னது?

அதில்தான் இருக்கின்றது இந்துக்களின் ஆழமான சமூக நோக்கு, 20ம்நூற்றாண்டின் புரட்சிகள் மார்க்ஸும் இன்னும் பலரும் ஐரோப்பாவின் மூலைகளில் முழங்கியதை இன்னும் பல சமதர்வாதிகள் சொன்ன தத்துவத்தை ஓசையில்லாமல் பல்லாயிரம் ஆண்டுக்கு முன்னமே சொன்னது இந்துமதம்

அதை தெய்வத்தோடு சேர்த்து, மானிட கர்ம பலன்களோடு சேர்த்து இன்னும் பல அம்சங்களோடு சேர்த்து, மனிதனின் பலவீனம்,பலம், மனோ சிந்தனை எல்லாம் கலந்து அன்றே சொன்னது இந்துமதம்

செல்வம் எப்படி குவிகின்றது, செல்வந்தன் எப்படி உருவாகின்றான் என்பதை கூர்ந்து கவனித்த இந்து சமூகம், ஓசைபடாமல் சில முடிவுகளுக்கு வந்தது

செலவந்தன் என்பவன் பல பூக்கள் இழந்து உருவாக்கும் தேன் கூடு போல ஏராளமான ஏழைகளின் பணத்தை அவர்களுக்கு தெரியாமலே எடுத்து செல்வத்தை குவிக்கின்றான் என்பதை கண்டு கொண்டது

ஒரு மனிதனின் தேவை அல்லது ஆசையினை பயன்படுத்தி அவனிடம் இருப்பதை எடுத்து சேர்ப்பதே செல்வம் என அறுதியிட்டு உணர்ந்தது

இதனைத்தான் 19ம் நூற்றாண்டில் கார்ல் மார்க்ஸ் சொன்னான், ஏஞ்சல்ஸ், இங்கர்சால் என யார் யாரோ ஐரோப்பாவில் சொன்னார்கள், இதை பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே உணர்ந்திருந்த மதம் இந்துமதம்

ஆனால் உடனடியாக புரட்சி செய், அடித்து பிடுங்கு, பொதுவுடமை என அது இறங்கவில்லை, அது மானிட சுபாவத்தை இன்னும் கூர்ந்து நோக்கியது

இவ்வுலகில் பல விஷயங்கள் புரிந்து கொள்ளமுடியாதவை என்பதை உணர்ந்தது அம்மதம், காட்டில் புலிக்கு மான் ஏன் உணவு என்பதில் தொடங்கி மானிடரில் ஒரு சிலருக்கு மட்டும் பெரும் வாய்ப்பும் அதிர்ஷ்டமும் பெருகுவது எப்படி என்பது வரை பல விஷயங்கள் புரிவதில்லை

ஆனால் ஒரு மானிடன் சக மானிடர்கள் தன் கைபொருளை உழைப்பை கொடுத்து அவனை செல்வந்தனாக்குவது சூழ்நிலை அல்லது ஒரு அறியாமை என முடிவுக்கு வந்தார்கள்

இந்த சூழலும் அறியாமையும் கர்மாவாலோ கிரகபலன்களாலோ உருவாவதை கணித்தார்கள், செல்வம் சேர்ப்பவனுக்கு தெளிவும் தந்திரமும் இருப்பதை உணர்ந்தார்கள்

இவ்வுலகில் அஷ்ட லஷ்மி என ஏன் இந்துக்கள் சொன்னார்கள் என்றால், ஒவ்வொருவருக்கும் இந்த எட்டு வகை ஆசிகளில் ஏதோ ஒன்று கண்டிப்பாய் இருக்கும்

அந்த ஆசி இல்லா மனிதனே இல்லை, பரம்பொருள் அப்படித்தான் படைத்திருக்கின்றான்

நோயில்லா நிலை, தானியம் நிறைந்திருப்பது, எதிர்ப்புகளை சமாளிக்கும் தைரியம், வாழ்வின் நற்பேறுகள் (நன்மனைவி, நல்ல பிள்ளைகள் என 16 வகை), தீரா புகழ், எடுக்கும் காரியத்தில் சித்தி, கலை மனோபாவம், செல்வம் தொடர்ந்து பெருகும் வழி என எட்டு ஆசிகள் உண்டு

இந்த எட்டு வகை செல்வத்தை கொடுப்பவளை அஷ்ட லட்சுமி, எட்டு ஆசிகளையும் தரும் லட்சுமி என்றார்கள்
ஆதிலட்சுமி, தானிய லட்சுமி, வீர லட்சுமி, கஜலட்சுமி (யானை போல அள்ளி தருபவள்), சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தனலட்சுமி

இதில் எல்லோரும் ஒரு ஆசியாவது பெற்றிருக்கின்றார்கள் ஆனால் அது எது என்பதை தெரியா வகையில் அவர்கள் அறிவு மறைக்கபட்டிருகின்றது, அந்த அறிவினை திறந்து கொடுத்தாலும் அவர்கள் கர்மா அதை விடுவதில்லை

இது கல்வியால் மாறும், அடித்தால் மாறும், தெளிந்த போதனை சொன்னால் மாறும் என்பதல்ல, இது அவரவர் கர்ம பலன்

உதாரணம் இந்தியாவின் தமிழகத்தில் பல காட்சிகள்

அங்கே கூலி தொழிலாளியும் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றான், ஆனால் அதில் பாதியினை டாஸ்மாக் கடையிலே அழித்துவிடுகின்றான் மீதி என்னாகின்றது என்பது அவனுக்கே தெரியவில்லை

இந்தியா சுதந்திர நாடு, அவன் அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை அவனுக்கு உண்டு. ஆனால் காசுக்கும் பிரியாணிக்கும் மயங்கி தன் வோட்டினை நாசமாக்குகின்றான். இது நம்மை ஆளும் அரசை தேர்ந்தெடுக்கும் காரியமல்லவா எனும் அறிவு அவனுக்கு இல்லை, அதை சொன்னாலும் புரியாது

சினிமா நட்சத்திரங்கள் நம்மை போல் மனிதர்கள் என்பதை அறியாமல் ஆயிரமாயிரம் ரூபாய்களை அள்ளி எறிகின்றான், அந்த நடிகனும் நடிகையும் இயக்குரும் கோடியில் குளிக்கின்றார்கள், இதெல்லாம் யார் பணம்?

ஆம், நடிகரும் நடிகையரும் தமிழ்நாட்டில் ரசிகர்களை ஒரு வித மயக்கத்தில் வைத்திருக்கின்றார்கள் அல்லவா? சொன்னாலும் ரசிகனுக்கு புரியாது அல்லவா? இதுதான் நடிகனுக்கு வாய்த்த லட்சுமி கடாட்சம்

தமிழக கட்சிகள் இன்னும் மிகபெரிய உதாரணம்

(ஆனால் அவர்கள் மனசாட்சி உள்ளவர்கள் அதனால்தான் மக்கள் பணம் மக்களுக்கே என தேர்தல் நேரம் கொஞ்சமாவது கொடுக்கின்றார்கள், இந்த திரை நட்சத்திரங்கள்தான் மகா மோசம்)

இன்னும் ஏராளம் சொல்லலாம், வெளிநாட்டு மது முதல் கார் வரை தன் உழைப்பை எல்லாம் கொட்டி வாங்கும் இந்தியர்கள் நிலை அதுதான், வெள்ளையனின் வியாபார தந்திரம் அது

காபி முதல் குளிர்பானம் வரை தேவையே இல்லாமல் மனிதன் வாழமுடியும், ஆனால் இந்தியர்கள் வெள்ளையனுக்கு அறவிடும் பணம் என்ன?

இன்னும் தெளிவாக சொல்ல உலக விஷயங்களுக்கு செல்லலாம்

அரபுநாடுகள் செல்வந்த நாடுகள் ஆனால் அவர்கள் பணமெல்லாம் அமெரிக்க ஆயுதங்கள் வாங்கவும் பாதுகாப்பு வாங்கவும் செலவழிக்கபடுகின்றது, ஏன் என அவர்கள் சிந்திப்பதே இல்லை அவர்கள் அறிவு அவ்வளவு மயங்கிற்று, நமக்குள்ளே ஒற்றுமை என்றால் ஏன் இந்த செல்வம் அமெரிக்காவுக்கு செல்லும் என சிந்திப்பார்களா?

ஆப்ரிக்கா ஆப்கன் முதல் எல்லா நாட்டின் நிலமை அதுதான்

ஆம், எவ்வளவு சொன்னாலும் புரிகின்றவனுக்குத்தான் புரியும் இதன் பெயர்தான் லட்சுமி கடாட்சம்

ஆனால் இப்படி அறியாமையிலும் சில தேவையிலும் இருப்பவர்களிடம் சம்பாதிப்பது தவறு என உணர்ந்த இந்துமதம் அந்த பாவத்தை போக்க சில வழிகளை போதித்தது

செல்வத்தின் பயன் ஈதல் என அது சொல்லிற்று. செல்வம் அறகாரியங்களுக்கும் இறைபணிக்கும் செலவழிக்கபடாவிட்டால் அதனால் பலனில்லை என சொல்லிற்று

இந்துமதம் பலவித அறங்களை, கொடைகளை, தான தர்மங்களை செய்ய ஊக்குவிப்பதே செல்வந்தரிடம் உள்ள பாவங்கள் கரையவே

அறம் செய்யா செல்வம் குலநாசம் செய்யும், இதை சிலப்பதிகாரம் தெளிவாய் சொல்லும்

“ஊழ்வினை உறுத்த” என இளங்கோவடிகள் சொன்னது கோவலலின் முற்பிறவியினை அல்ல, அது அவன் வம்சம் செய்த வினை

அவன் முன்னோர்கள் வணிகர்கள், கண்ணகியும் வணிக பரம்பரையே. அவர்கள் ஏமாற்றி சம்பாதிக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் அறியாமல் வரும் பாவம் வணிகம், அந்த வணிக பலனை முறையாக தானம் செய்து பாவ கணக்கை தீர்க்காவிட்டால் அது பெருகி வம்சத்தை பாதிக்கும்

கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடந்தது, பட்டினத்தாருக்கு நடந்தது இன்னும் யார் யாருக்கெல்லாமோ வரலாற்றில் நடந்தது சாட்சிகள் ஏராளம்

ஆம், வணிகத்தில் பெருகும் செல்வம் இன்னும் பல விஷயத்தில் பெருகும் செல்வம் பாவம் நிறைந்தது. யாருடைய அறியாமையிலோ இங்கே குவிவது. அதை முறையாக தான தர்மம் செய்யாவிட்டால் குல நாசம் செய்யும்

இதனாலே எந்த மதத்திலும் இல்லாதபடி இந்து ஆலய சடங்குகளும் வழிபாடும் மிக பிரமாண்ட செலவு பிடிக்கும் விஷயங்களாயின‌

அன்னதானம், உபயம் என செல்வந்தனின் பணம் செலவழிக்க வழிகளை சொல்லி கொடுத்து கொண்டே இருந்தார்கள்

சத்திரம் கட்டுதல், உணவளித்தல், கல்வி கொடுத்தல், ஏழை பெண்களுக்கு தாலி தானம், அந்தணருக்கு கொடைகள், முன்னோர் வழிபாடு என தான தர்மங்கள் செய்தல், கோவில் கட்டுதல், குளம் வெட்டுதல் என குவிந்த செல்வம் நல்வழியில் சென்று பாவத்தை தீர்க்க அது வழியும் சொன்னது

ஆம்,லட்சுமியின் அருளில் செல்வம் குவியும், குவிந்த செல்வத்தை நல்வழியில் செயல்படுத்தினால் காலத்தை வென்று நிலைக்கலாம், மாறாக சுயநலத்தில் தனக்கும் தன் வம்சத்துக்கும் என குவித்து தான தர்மங்களை மறந்தால் அது நாசமே விளைவிக்கும்

நல்வழியில் செலவழிக்கா செல்வம் என்னாகும் என்பதை நாய் பெற்ற தேங்காய் என இந்துமதம் சொல்லிவிட்டு நகரவில்லை, அச்செல்வம் என்னாகும் என்பதை பல இடங்களில் சொல்லிற்று, இந்த விவேக சிந்தாமணி பாடல் கூட அதுதான்

சிந்தாமணி செல்வம் என்றொரு சிறுநூல் உண்டு, அதிலொரு பாடல் இப்படி வரும். பரத்தை தோழியிடம் கேட்பாள்

அன்னையே அனைய தோழி!
அறந்தனை வளர்க்கும் மாதே!
உன்னையோர் உண்மை கேட்பேன்
உரைதெளிந்து உரைத்தல் வேண்டும்
என்னையோ புணருவோர்கள் எனக்குப்
பேரின்பம் நல்கி
பொன்னையும் கொடுத்துப் பாதப்
போதினில் வீழ்வ தேனோ?

அதாவது ஏ தோழியே, நீ உண்மை அறிந்தவள் என்பதால் ஒன்று கேட்பேன் தெளிவாய் சொல்வாய். என்னிடம் வருபவர்கள் எனக்கு உடல் இன்பத்தையும் கொடுத்து எனக்கு பொருளும் கொடுத்து என் காலில் விழுந்து கிடப்பது ஏன்?

தோழியின் பதில் இப்படி வரும்

“பொம்மெனப் புடைத்து விம்மிப்
போர்மதன் மயங்கி வீழும்
கொம்மை சேர் முலையினாளே!
கூறுவேன் ஒன்று கேண்மோ!
செம்மையில் அறம் செய்யாதார்
திரவியம் சிதற வேண்டி
நம்மையும் கள்ளும் சூதும்
நான்முகன் படைத்தவாறே..”

அதாவது மன்மதனும் மயங்கும் அழகானவளே, அதன் பொருள் கேள், செம்மையான தானம் தர்மம் அறசெயல்கள் செய்யாதோர் செல்வம் சிதறி அழிய வேண்டி பரத்தையராகிய நம்மையும், கள்ளையும், சூதையும்பிரம்மன் படைத்தான். நல் வழியில் செலவழிக்கா செல்வம் இப்படித்தான் அழியும்

ஆம், இதில் கள், மது, மாது மட்டுமல்ல, அரசு ஆசை, பதவி வெறி, தகப்பன் சொத்து வெட்டுகுத்து என காட்சிகள் நீளும்

இதை அறுதியிட்டு சொல்லும் இந்துமதம், அது அக்காலம் முதல் எக்காலமும் உண்டு. பழைய வரலாற்றை புரட்டுங்கள் தெருவுக்கு 4 சாட்சி உண்டு, நீதிமன்றங்களில் கோடி சாட்சி உண்டு

இதனாலே “அறம் செய்ய விரும்பு” என்றார்கள் இந்துக்கள்

அதற்காக தகுதி இல்லாதோருக்கு அது அள்ளி கொடுக்க சொல்லவில்லை “பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்றது, தகுதி உள்ளோருக்கு மட்டும் கொடுக்க சொன்னது

காரணம் செல்வந்தனை சுற்றி காக்கா கூட்டம் போல் துதிபாடிகளும் வஞ்சக நரிகளும் சூழ்ந்திருப்பார்கள், அவர்கள் செல்வந்தனின் செல்வத்தினை கொத்தி போக தயாராய் இருப்பார்கள், அவர்களை தாண்டி யாருக்கு உதவி தேவையோ அவர்களுக்கு உதவ சொன்னது இந்துமதம், இதனாலேதான் கோவில் காரியங்களை அது முன்னிறுத்திற்று

லட்சுமி கடாட்சம் என்பது ஒரு சோதனை, கொடுக்கும் செல்வத்தில் ஒருவன் தான தருமம் செய்கின்றானா, இறை காரியம் செய்கின்றானா என வைக்கபடும் சோதனை

அதில் ராஜராஜசோழனை போல் கோவில் கட்டியவர்கள், குளம் வெட்டியவர்கள், சுலோச்சன முதலியார் போல் பாலம் கட்டியவர்கள், வ.உ சிதம்பரம் போல் நாட்டுக்கு இழந்தவர்கள். செட்டிநாட்டு தனவான்களை போல் திருப்பணிகள், கல்விபணி செய்தால் காலமும் நிலைப்பார்கள்

எத்தனையோ தொழிலதிபர்கள் இன்று இருக்கலாம் ஆனால் காலம் அடுத்த சில தசாப்தங்களில் அவர்களை வீசி எறியும், ஆனால் அவர்கள் இறைபணியோ அறபணியோ செய்திருந்தால் காலத்தால் கூட அவர்களை தொடமுடியாது

சினிமா தயாரிப்பாளர் ஆயிரம் இருந்தாலும் சின்னப்பதேவர் போன்றோர் அவர்கள் கோவில்பணியில்தான் வாழ்கின்றார்களே அன்றி செல்வத்தின் பெயரால் அல்ல

இதனால் செல்வத்தின் பலன் வறியோருக்கு ஈகை செய்து பலனடைவதே என வலியுறுத்தியது இந்துமதம்

ஆம், மானிடனுக்கு பலவீனம் உண்டு. இங்கு செல்வம் என்பது அறியாமை மக்களிடம் இருந்து பெறபடுவது அவர்களை சொல்லி திருத்த முடியாது, அடித்தும் திருத்தமுடியாது அவனின் அறிவும் அறியாமையும் கர்ம பலனும் அப்படி

இதனாலே வலிய பொதுவுடமை என திணிக்கபட்ட சோவியத் சிதறியது, வடகொரியா அழுகின்றது, சீனா உடைய காலம்பார்க்கின்றது, கியூபா திணறுகின்றது

ஏன் இப்படி ஆயிற்று? மானிட சுபாவத்துக்கு எதிரான எதுவும் நிலைக்காது

இந்துமதமோ மானிடனின் சுபாவம் , சிந்தனை, மனோபாவம் என எல்லாம் உணர்ந்து போதித்த மதம் என்பதால் செல்வத்தின் பலன் ஈவது என காலத்துக்கும் பொருந்திய தத்துவத்தை சொன்னது

செல்வம் என்பது கீதையில் வரும் தமஸ் எனும் சோம்பேறி குணத்தை கொடுத்துவிடும், எமக்கு எல்லாம் உண்டு இனி என்ன வேண்டும் எனும் மமதையினை கொடுக்கும், அந்த மாம்தை ஞானத்தினை அருளாது

அதை நீர்போல் ஓடவிட்டு தேடிகொண்டே இருந்தால் ஒரு இடத்தில் ஞானம் கிடைக்கும், பணத்தாலும் செல்வத்தாலும் வாங்கமுடியா விஷயம் உண்டு அது பிரபஞ்சத்தால் மட்டும் கிடைக்கும் எனும் தெளிவு கிடைக்கும்

சில நேரங்களில் தகுதியற்றோருக்கு செல்வம் குவியும், அவர்கள் பாவம் மேல் பாவம் செய்தாலும் செல்வம் குறையாது, அந்நேரம் சிலர் தெய்வமில்லை கடவுள் இல்லை என அவநம்பிக்கை கொள்ளலாம்

மனிதனின் காலம் குறுகியது ஆனால் தெய்வத்தின் காலமும் சக்தியும் முடிவில்லாதது, அதன் கணக்குகள் மானிடருக்கு புரியாது

தகுதியற்றவனிடம் குவியும் செல்வம் அவன் பரம்பரையில் யாரோ வந்து அறகாரியங்கள் செய்து இறைவனை அடைவார்கள் என்பதற்காக கொடுக்கபடுவது என்பது மானிட கண்களுக்கு புரியாது

பட்டினத்தார் முதல் காரைக்கால் அம்மையார் வரை இந்து புராணங்கள் ஏகபட்ட இடத்தில் சொல்வது அதுதான், செல்வம் ஒருவனுக்கு கொடுக்கபடுவது அவனுக்காக அல்ல, அவன் வெறும் கருவி அவன் சந்ததி என்னாகும் என்ன செய்யும் என்பது ஆண்டவன் ஒருவனே அறியும் கணக்கு, இதில்தான் இந்து சமூகம் அமைதி கொள்கின்றது

செல்வம் இருபுறம் கூரான கத்தி போன்றது, அதை கவனமாக கையாண்டவர்கள் ஞானம் பெற்று முக்தி அடைவர், அதை செய்யாதோர் மறுபடி மறுபடி பிறந்து உழல்வார்கள்

பிச்சைகாரர்களோ யாசகம் பெற வருபவ‌ரெல்லாம் உன் கர்மம் கழிய உன்னிடம் கைநீட்டுவார்கள், அவர்களுக்கு மறுக்காதே என வலியுத்த தெய்வங்களே பிச்சை கேட்டு வரும் எனும் தத்துவத்தையெல்லாம் புராண சாட்சிகளாக வைத்தவர்கள் இந்துக்கள், அந்த அளவு தர்மத்தை வலியுறுத்தினார்கள்

தகுதியான விஷயங்களுக்கு தானமும் அறமும் அள்ளி செலவிடுங்கள், செல்வம் என்பது அறியா மக்களிடம் இருந்து தந்திரமாக பிடுங்கும் குவியல் அது பாவமும் சாபமும் கொடுக்குமுன் கொடையாக கொடுத்துவிடுங்கள் என்றது இந்துமதம்

இதற்கு மகாபாரத கர்ணனை காட்டிற்று, அவன் துரியன் கொடுத்த கெட்ட செல்வத்தை எல்லாம் அள்ளி எரிந்ததால்தான் விஸ்வரூப தரிசனம் பெற்று, பகவானை முழுக்க தரிசித்து நிம்மதியான மரணம் எய்தினான்

ஆனால் துரியன் உள்ளிட்டோர் வாழ்வு நிம்மதியாய் முடியவில்லை

தர்மம் செய்வதன் சக்தி அது, அதை செய்து செய்து பாவம் கழித்து பகவான் பாதம் சரணடைந்து நிம்மதி பெறுவதே லட்சுமி வழிபாடு

(தொடரும்..)