நவராத்திரி சிந்தனைகள் : 08

நவராத்திரி சிந்தனைகள் : 07

மானிட வாழ்வில் கல்வி கலைகள் முக்கியம் என்றும் அதனால் உருவாகும் செல்வம் முக்கியம் என கவனித்த இந்துமதம் அதை காக்க வீரம் மகா அவசியம் என்பதை உணர்ந்தது

அணை இல்லா நதியும், வேலி இல்லா பயிறும், காவல் இல்லா செல்வமும் வீணாகும் என்பதை அது உணர்ந்திருந்தது

இதனால் கல்வி, செல்வம் போலவே வீரமும் தைரியமும் மகா அவசியம் என சொன்ன மதம் அதற்கொரு தெய்வத்தினையும் சொன்னது

மானிட உலகில் எல்லோரும் வீரர்களாவதில்லை, எல்லோருக்கும் துணிவும் தைரியமும் வாய்ப்பதில்லை. எவன் துணிந்து எழுகின்றானோ, எவன் தன் சக்தியெல்லாம் காவலுக்கும் ஆபத்துகளை எதிர்கொள்ளவும் பயன்படுத்துகின்றானோ, எவன் சாவுக்கு துணிகின்றானோ அவனுக்கு தனி தெய்வ அனுகிரகம் இருப்பதை ஞானியர் உணர்ந்து அதற்குரிய தெய்வ அருளை சொன்னார்கள்

கோள்களின் சஞ்சாரத்தில் செவ்வாய் கிரகம் காவலுக்கான கிரகம் என்றார்கள், ரத்தத்தில் புஷ்டியும் வேகமும் கொண்டவர்கள் துணிவும் வீரமும் கொண்டவர்களாய் இருப்பார்கள், செவ்வாய் எனும் சிவப்பு கிரஹம் அதற்கு அனுக்கிரஹம் செய்யும் என வானியல் சாஸ்திரத்திலும் கணித்தனர்

போர் தெய்வங்களுக்கெல்லாம் இதனாலே செவ்வாய் உகந்த நாளாயிற்று முருகன் முதல் பல தெய்வங்களுக்கு அந்த நாள் உகந்தது என சொல்லும் தத்துவம் இதுதான்

எல்லா வீரமும் ஒரு மூல சக்தியிடம் இருந்து வருவதை உணர்ந்த இதுமதம் முருகனுக்கு வேல் கொடுத்தது முதல் தானே வந்து அரக்கர்களை அழித்தது வரை கவனித்து அந்த மூல சக்தியினை பராசக்தி என்றது, பார்வதி அவள் அம்சம் என்றது

வீரத்துக்கும் காவலுக்கும் முதல் தகுதி வலுவான உடலும் தைரியமான மனமும்

மானிடர் இந்த வலுவான உடலையும் மனதையும் பெற மலைமேல் பார்வதிக்கு கோவில் அமைதார்கள், அந்த மலையில் ஏறி இறங்கி காட்டு மிருகங்களுக்கு அஞ்சாமல் செல்ல பழகினால் மன வலிமையும் உடல் வலிமையும் எளிதில் வரும் எனும் ஏற்பாடு அது

மலைமகள் என வீரத்துக்கான அன்னை பெயர் பெற்றது இப்படித்தான். மலை என்பது உறுதியானது காவலானது எனும் தத்துவகுறியீடும் அதில் அடங்கியிருந்தது.

மானிட சுபாவத்தை இந்துமதம் முழுக்க அறிந்திருந்தது, எல்லா மனிதரும் நல்லவர்கள் அல்ல மனிதரில் வஞ்சகர் உண்டு, பேராசையும் ஆணவமும் அகங்காரிகளும் எல்லாம் தனக்கே என கொண்டாடும் கொடியவர்கள் உண்டு. மாயையும் பேராசையும் பெற்றெடுத்து அகங்கார தொட்டிலில் வளர்ந்த அவர்கள் யார் தங்கள் பலத்தால் எல்லா மானிடரையும் அடிமைபடுத்தி கொடுமை செய்வார்கள், நல்லோரும் எல்லோரும் அவர்களால் மிகுந்தை கொடுமைக்கு உள்ளாவார்கள்

இதை தடுக்க வீரம் அவசியம் என சொன்ன இந்துமதம், வீரத்தையும் ஒரு வழிபாடாக்கி அதற்கு தெய்வங்களையும் கொடுத்தது

போர் என்பது ரத்தமும் சதையும் குவியும் இடம், ஆயுதம் ஏந்தி உக்கிர தாண்டவமாடி தீர வேண்டிய இடம்.
ஆயுதம் ஏந்தாமலும் ரத்தம் சதையினை தாண்டாமலும் இன்னும் மிகபெரிய மனவலிமையோடு இவற்றை எல்லாம் கடக்காதவனும் வீரனாக முடியாது, வெற்றிகளை பெற முடியாது, காவல் செய்ய முடியாது

இதனால் உக்கிரமான தெய்வங்களை போர் தெய்வங்கள் என்றார்கள். அவை சிம்மம் புலி இவற்றில் அமர்ந்திருப்பதாய் இன்னும் உக்கிர காட்சிகளை கொடுத்தார்கள், அவர்களை வழிபட்டால் வெல்லமுடியாத பலமிக்க விலங்குகளை போல பாயும் வலிமை கிடைக்கும் என்றார்கள்

வீரன் தன் பெயராலும் கர்ஜனையாலுமே எதிரிகளை மிரள வைப்பான், அதற்கான வல்லமையினை அன்னை தருவாள் என உணர்ந்து வழிபட சொன்னார்கள்

இந்து உக்கிர தெய்வங்களையெல்லாம் ஆயுதத்தோடு நிறுத்திய காட்சியில் மனரீதியாக ஒரு பலம் வீரனுக்கு கிடைத்தது, தெய்வதுக்கு அஞ்சும் குணம் மற்றவர்களுக்கும் வந்தது

காளி உள்ளிட்ட காவல் தெய்வங்கள் போர் தெய்வங்களுக்கெல்லாம் உயிர்பலி கொடுத்து வணங்க சொன்னார்களே ஏன்?

தேசத்துக்காக அல்லது ஊருக்காக போருக்கு செல்பவன் ரத்தம் கண்டு அஞ்ச கூடாது, உயிர்வதைக்கு தயங்க கூடாது என மனரீதியாக அவனை தயார்படுத்தும் விஷயம் அது, மனதை கல்லாக்கி செய்ய வேண்டிய யுத்தத்துக்கான தயாரிப்பு அது

தெய்வத்தை முன்னிட்டு மனிதனை ரத்தத்துக்கு அஞ்சாமல் துண்டு துண்டாக வெட்ட அஞ்சாமல் கோவிலில் பலி என பழக்கம் கொடுத்தார்கள், அந்த வழக்கமே இன்றும் உக்கிர ஆலயங்களில் மிருக பலியாக தொடர்கின்றது

போருக்கான தெய்வங்கள் என வராகி முதல் நிசும்ப சூதனி , காளி என பல வகைபடுத்தபட்டு அவற்றின் வழிபாட்டில் உக்கிரமான வீரம் புகட்டபட்டது.

அஸ்வமேத யாகம் உள்ளிட்டவற்றை மிருக பலி என கொடுத்தார்களே ஏன்? அதெல்லாம் காட்டுமிராண்டிதனமா?

இல்லை, ஒரு காலமும் இல்லை

யுத்தம் என்பதில் குதிரை சாகும், யானை சாகும், ரத்தம் தெரிக்கும், கொள்ளை நடக்கும், பொருள் போகும், நண்பன் சாவான், எதிரி வைக்கும் தீயில் ஏதேதோ எரியும் இன்னும் எல்லா இழப்புக்கும் கலங்காத மனம் வேண்டும் பற்றில்லா மனம் வேண்டும், எதை இழந்தாலும் கலங்காத‌ மனம் வேண்டும் என்பதற்காக யாகம் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்தார்கள்

யாகம் தெய்வ அருளை பெற்றுதருவதுதான் சந்தேகமில்லை, ஆனால் அதன் மூலம் பல காரியங்களை செய்து மனரீதியாக

விளையாட்டு உடலை வலுவாக்கும் என்பதால் இந்துக்களின் வழிபாட்டிலும் கொண்டாட்டதிலும் வீர விளையாட்டுக்கள் கண்டிப்பாய் இருந்தன‌

காளையினை அடக்குதல் முதல் யானையோடு விளையாடுவது வரை, கத்தி சண்டை முதல் எல்லா வீர கலைகளும் ஆலய விழாக்களில் நடத்தபட்டன‌

அக்காலத்தில் தற்காப்பு கலை எல்லா இந்துவுக்கும் தெரிந்திருந்தது, ஒவ்வொருவனும் களறி உள்ளிட்ட பல வீர கலைகளை கற்றிருந்தார்கள், பின்னாளைய பவுத்த இஸ்லாமிய ஆட்சியில் அவை அழிந்தன ஆனால் இவை அதிகம் தொடாத கேரள மண்ணில் இந்த வழக்கம் இன்றும் உண்டு, அது இந்துக்களின் வாழ்வியல்

நல்ல சிந்தனையும் அந்த சிந்தனையால் எழும் உழைப்பையும் அந்த உழைப்பில் எழும் செல்வத்தையும் காக்க வீரம் அவசியம் என கண்டா இந்துக்கள் செய்த ஏற்பாட்டின் தொடர்ச்சி அது.

இந்த வீரத்தோடு இருப்பவனோடு அவனை கூர் தீட்ட ஞானத்தால் முதிர்ந்தவர்களையும் அருகில் வைத்து அவனை சமூகத்தின் காவலாக்கியானர்கள் இந்துக்கள்

அந்த காவல்காரனே மன்னன் என்றானான், அவனை சுற்றி இருக்கும் அறிவுடை சமூகம் மன்னன் சமூகம் என்றாயிற்று

ராஜவாழ்க்கை, ராஜ உபச்சாரம் என்பதல்ல விஷயம். யுத்தம் என்றால் அவனே படை நடத்தி செல்வான் உயிர் கொடுத்து போரிடுவான், தோற்றால் அவன் வம்சமின்றி வீழ்வான் எனும் பெரும் ஆபத்தும் அவனுக்கே இருந்தது, சாவை அனுதினமும் எதிர்பார்க்கும் வீரனே மன்னனாக இருக்க முடியும்

அந்த வீரத்துக்கும் சில இலக்கணங்களை எழுதியது இந்துமதம்

பராகிரமத்தை எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதையும் அது சொல்லிற்று, அப்பாவி மக்களையும் அறியாதோரையும் இன்னும் வலுகட்டாயமாக வீரத்தை காட்டி தனக்கு வேண்டியதை பெறும் சுயநலத்தை அது கொள்ளை, கொலை என்றது அதை செய்பவன் குற்றவாளி என்றது

எவன் தர்மத்துக்காய் பொது நலனுக்காய் மக்களுக்காய் தன் உயிரை துச்சமென மதித்து நிற்கின்றானோ அவனைதான் வீரன் என்றது இந்துமதம்

வீரபராகிரமத்திலும் தர்மம் ஒன்றைத்தான் செய்யவேண்டும், வீரம் எனும் அருள்பெற்றவன் தன் கர்மத்தினை மட்டுமே செய்யவேண்டும் என வலியுறுத்தினர் இந்துக்கள்

இதற்கு மிகபெரிய உதாரணம் பகவத் கீதை உபதேசிக்கபட்ட இடம்

அர்ஜூனன் பெரும் வீரன், ஆனால் யுத்த களத்தில் உறவுகளை பார்த்துவிட்டு தன்கடமையில் இருந்து தவற விளைகின்றான், அவன் மனம் சொந்தங்களுக்காய் இரங்குகின்றது

அந்த இடத்தில்தான் இந்துமதம் மிகபெரிய போதனையினை கொடுத்தது, வீரன் என்பவன் தர்மத்தை மட்டுமே கர்மமாக பார்க்க வேண்டும், சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்கட்டு தன் கடமையினை மட்டும் செய்யவேண்டும் என சொன்னது

இன்றளவும் அந்த போதனை நிலைத்து நிற்கின்றது, வீரத்துக்கு அடிப்படை இலக்கணம் கொடுத்த மதம் இந்துமதம், தர்மம் ஒன்றுக்கே வீரன் யுத்தம் செய்ய வேண்டும் என சொன்ன மதமும் அதுவே

வீரம் என இந்துமதம் வலியுறுத்தும் மானிட குணம் அதுதான், தர்மத்துக்கான காவலேதான், தெய்வம் சிலருக்கு அந்த அருளை கொடுத்து மானிட இனத்தை காப்பதை அறிந்த இந்துக்கள் வீர கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்

இந்து வழிபாடுகளும் பக்தியும் வீரத்தை வளக்க வழி செய்திருந்தன, உக்கிர தெய்வங்களுக்கான ரத்த பூஜை முதல் வீர விளையாட்டுக்களெல்லாம் அவ்வகையே

சில இடங்களின் மனித ரத்தத்தால் செய்யபடும் வழிபாடுகளும் இருந்தன, அதெல்லாம் வீரனின் மனதை கல்லாக்கும் துணிவினை கொடுக்கும் பயிற்சி அன்றி வேறல்ல‌

மானிடரில் பொல்லா கூட்டத்தை, மனிதநேயம் மறந்த இரக்கமற்ற அரக்க மானிட கூட்டத்தை அழிக்க இதை தவிர வேறு வழி இல்லை என்பதை இந்துமதம் உணர்ந்திருந்தது

அதன் புராணங்கள் கூட வீரத்தை முன்னிட்டுத்தான் சொல்லபட்டன, அன்னை சக்தி முதல் ராமன் கண்ணன் வரை அசுர்களை அழித்த வீர சம்பவங்கள் நிறைய அதில் வலியுறுத்தபட்டன‌

வெறும் வீரம் என்பது முரட்டுதனம், அதில் விவேகமும் சேரவேண்டும் என்பதால் அனுபவஸ்தர்கள் ஆசான்களாக நின்று பயிற்சி கொடுத்தார்கள்

யோக கலை முதல் வீரகலை வரை இந்துமதம் வலியுறுத்தியது, இன்றும் இந்துமத தெய்வ சிற்பங்கள் அல்லது சாதாரண சிற்பங்கள் ஏதாவது தொப்பையும் தொந்தியுமாக பார்த்ததுண்டா?
இல்லை,கட்டுகோப்பான உடலுக்கும் அந்த உடலால் விளையும் பலத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த மதம் இது

வீரம் மிகவும் போற்றபட்டது, எல்லா வகை பயிற்சியும் வழியும் தெய்வத்தின் பெயரால் தெய்வ வழிபாட்டின் பெயரால் மக்களுக்கு போதிக்கபட்டது

அதில்தான் இந்நாடு செல்வத்தில் மிகுந்திருந்தது, அலெக்ஸாண்டர் எனும் மாவீரன் இந்தியாவுக்குள் வரும்பொழுது இந்துமதம் உருவாக்கிய இந்து வீரம் அவனை ஓடவிட்டது

ஆனால் புத்தமதம் எனும் சாத்வீக மதம் மனிதநேயம், ஜீவகாருண்யம்,கொல்லாமை என பல விஷயங்களை மானிட குணநலன்களுக்கு எதிராக போதித்தது, ஜைனமதமும் அதையே சொன்னது

மானிட குணத்துக்கு எதிரான எந்த போதனையும் பின்னாளில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தும்

இந்த மனிதநேயம் , மக்கள் நேயம், கம்யூனிசம், சமதர்மமெல்லாம் பேசுவதற்கும் கற்பனைக்கும் சரி. ஆனால் மானிடர்களின் சுபாவத்துக்கும் கூடி வாழும் சமூகத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் பொருந்தாது
புத்தம் இந்துக்களின் போர்குணத்தை அடக்கியது, ஒருமாதிரி சமூகத்தை அது உருவாக்கிற்று, ஜைனமும் அதை தொடர்ந்தது

அதனாலே ஆப்கானிய கொள்ளைகள் நடந்தன, சோமநாதபுரி போன்ற எத்தனையோ ஆலயம் தாக்கபட்டு பின் அந்நியர் ஆட்சியும் தலைதூக்கிற்று, என்னென்ன கொள்ளைகளெல்லாமோ நடந்தன‌

மதுரை வரை ஆப்கானியர் வந்து தாக்க பெரும் காரணம் இங்கே புத்த சமண தாக்கத்தில் இந்துக்களிடம் ஏற்பட்ட குழப்பத்தில் வீரம் குறைந்து போனதன்றி வேறல்ல‌

ராஜராஜ சோழன், ஜடாவர்மன் போன்ற சுத்தமான இந்து வீரன் இருந்தவரை இங்கே இம்மண்ணை தொட்டுபார்க்கும் தைரியம் எவனுக்குமில்லை

ஆப்கானியர் முதல் ஐரோப்பியர் வரை இங்கே வந்து ஆள இந்துக்கள் தங்கள் போர்குணத்தை இழந்ததுதான் காரணம், காந்தியும் அதைத்தான் செய்தார், அவரும் இந்துக்களின் போர்குணத்தை இழக்க வைத்தார்

இந்திய வரலாற்றில் இந்துக்கள் தங்களை இந்துக்களாய் உணர்ந்து போரும் வீரமும் மானிட கடமை என இந்து வழியில் சிந்தித்து பயிற்சி பெற்ற பொழுது அதிசயங்கள் நிகழ்ந்தன‌

விஜயநகர பேரரசும்,மராட்டிய பேரரசும் பெரும் சக்தியாய் எழும்பி ஆப்கானியரை அலற வைத்தன இந்தியா முழு இஸ்லாமிய நாடாக மாறாமல் இருக்க இந்த வீரமான அரசுகளே காரணம்

அதனையும் மீறி ஆப்கானியரின் திரண்ட படை இந்தியாவுக்குள் வந்து கொண்டே இருந்தது

கூர்ந்து கவனித்த இந்துமதம் தன் இயல்பில் ஒன்றான சீக்கிய சமூகத்தை கொடுத்தது, சீக்கியரின் எழுச்சியே ஆப்கானியர் வருகையினை தடுத்தது, அந்த வீரமான இனம் எழும்பாவிட்டால் இன்று பாகிஸ்தான் வங்க தேசம் வரை நீண்டிருக்கும்

வீர சீக்கிய இனம் அவர்கள் வருகையினை தடுத்து இந்தியாவுக்கும் ஆப்கானுக்கும் இடையே அரணாக வீரமுடன் நின்றது

இந்தியாவுக்குள் ஆப்கான் இனம் பொறியில் சிக்கிய எலியாக மாட்ட பிரிட்டிஷாருக்கு அவர்களை ஒழிப்பது எளிதாயிற்று

பின் பிரிட்டிசாரை எதிர்த்து காந்தியின் அஹிம்சா வழி ஒரு புல்லையும் புடுங்கா நிலையில் வீரமான இந்திய சிங்கம் போஸ் கொடுத்த அச்சத்திலுமே விடுதலை கிடைத்தது

போஸ் கொடுத்த எழுச்சி அப்படி, இனி அவன் வழியில் யார் வந்தாலும் ஆபத்து என அஞ்சித்தான் இத்தேசத்தை காந்தியின் துணையோடு இரண்டாக உடைத்துபோட்டான் வெள்ளையன்

இன்று இந்தியாவின் பலமிக்க வீர ராணுவ இனமே அதிலும் வீர சீக்கிய இனம் அதிகம் கொண்ட இந்திய ராணுவமே தேசத்தை காக்கின்றதே அன்றி காந்தியின் கொள்கை அல்ல‌

சமாதானம் செய்பவன் பலமானவனாக இருத்தல் வேண்டும் , பலமில்லாதவன் ஒரு சவாலும் கொடுக்க முடியாது

இத்தேசம் காந்தி தேசம் என எல்லையில் எல்லோரும் அஹிம்சா, உண்ணாவிரதம் என இருந்தால் உலகம் சிரித்துவிடும், நாடு நாடாய் இராது

மேற்கத்திய நாடுகளின் பலமே அவைகளை பல நாடுகளில் சமாதானத்தை உருவாக்க வைக்கின்றது
அன்பே போதித்து சிலுவையில் தன்னை கொன்றவனுக்கும் மன்னிப்பு அருளியவர் கிறிஸ்து என்பார்கள், ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஒரு பிடி மண்ணையோ அவர்கள் தொழிலையோ ஒருவன் தொட்டுவிட முடியும்?

ரஷ்யாவின் எண்ணையினை ஒருவன் ஒரு சொட்டு அள்ள முடியும்?

முடியாது, அவர்களின் பலமான ராணுவம் அந்த காவலை வழங்குகின்றது, அதில் அவை செழிக்கின்றன். அன்றல்ல இன்றல்ல என்றும் பலமான வீரமே நாட்டையும் மக்களையும் காக்கும் வாழவைக்கும்

ஜப்பான் பவுத்த நாடுதான் ஆனால் உலகளவில் பல முத்திரைகளை அவர்கள் பதிக்க காரணம் அவர்களின் ராணுவ பலமே அன்றி புத்த கொள்கை அல்ல‌

ஆம், வீரம் மகா அவசியம், சமூக வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் காவலுக்கும் வீரம் முழு அவசியம் என சொன்னது இந்துமதம்

வீரம் துணிவில் பிறக்கும் அந்த துணிவினை கொடுப்பது தெய்வம், அந்த தெய்வத்தை மலைமகள் என்றும் துரிகை என்றும் போதித்தது இந்துமதம்

அதுவும் வீரம் என்பது அதர்மத்தை களையும் தர்மத்துக்கான போராக மட்டும் இருக்க வேண்டும் என அது சொல்லி வலியுறுதிற்று கீதை அதை விளக்கமாக சொல்லிற்று

தேவியர் அவதாரமும் அவர்கள் யுத்தமும் சொல்வதென்ன? வீரம் வாழ்வுக்கு அவசியம் என்பதை மட்டுமா சொல்லிற்று இல்லை அதில் கூர்ந்த நுணுக்கமான போதனை உண்டு

தேவியரால் கொல்லபட்ட அசுரர்கள் எல்லாம் பக்திமான்கள், மிகபெரிய தவவலிமை கொண்டு வரம் பெற்றவர்கள்

ஆனால் அதர்மம் செய்தவர்கள் என்பதற்காக தேவியே வந்து வதம் செய்தாள் என்பதில் இரு விஷயங்களை இந்துமதம் போதித்தது

முதலில் பிரபஞ்ச சக்தி தர்மம் எதுவோ அதை செய்யும், பக்திமான் பக்தியில்லாதவன் தனக்கு பிடித்தவன் பிடிக்காதவன் தன் துணையிடம் வரம்வாங்கி நெருக்கமானவன் என்பதெல்லாம் அதற்கு தெரியாது, தர்மம் ஒன்றே தேவியின் தீர்ப்பு

இரண்டாவது மாபெரும் பலம் பெற்ற வீரனும் பராக்கிரமசாலியும் அதர்மம் செய்தால் அழிவான்

ஆம், வீரம் என்றால் என்ன என்பது பற்றியும் வீரத்தை எங்கே எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும், அதர்மத்துக்கு துணைபோகும் வீரம் எப்படி அழியும் என்பது பற்றியும் புராணமெங்கும் சொல்லி வைத்தனர் இந்துக்கள்

அதைத்தான் நவராத்திரியில் இந்து சமூகம் சிந்தித்து கொண்டிருக்கின்றது

சரி, இந்துசமூகம் ஞான சமூகம் அல்லவா? அது எல்லா விஷயங்களையும் லவுகீகம் ஆன்மீகம் எனும் ஒரு தத்துவங்களுக்காக ஒரே பொருளில் போதித்த உன்னத மார்க்கம் அல்லவா?

அது லவுகீக வாழ்வுக்கு வீரம் அவசியம் என சொல்லிற்று, ஆன்மீக மனவியலில் ஆத்ம ஞானம் பெற வீரம் அவசியம் என சொல்லிற்றா என்றால் நிச்சயம் சொல்லிற்று

உண்மையான வீரம் தன்னை நம்பியோரை காக்கும், அதர்மத்தை அழிக்கும், ஒரு சிகரத்தில் அவனை ஏற்றிவைக்கும், அந்த சிகரத்தின் உச்சியில் தெய்வத்தை உணரவைக்கும்

இந்திய எல்லையில் தன்வீரத்தால் கால்வைத்து இந்துக்களின் ஞானத்தால் ஞானியான அலெக்ஸாண்டரும், இனி வெல்ல எதிரி இல்லை எனும் நிலையில் வீரத்தின் உச்சம் ஞானம் என சிவனடியாராக வாழ்ந்த ராஜராஜசோழனும், சேரமான் பெருமான் நாயனார், காடவர்கோன் போன்றவர்களும் அதற்கு மிகபெரும் எடுத்துகாட்டுக்கள்

ஒரு மனிதனின் ரஜோ குணம் வீரமாக வெளிபடும், அந்த வீரத்தை கூர்மையாக்கினால் அதை தர்மம் எனும் நெருப்பில் சுத்தமாக்கினால், இறைசக்தி எனும் பிரபஞ்ச சக்தியில் குளிரவைத்தால் ஞானம் பெருகும் அதில் முக்தி கிடைக்கும்

இதில் மிக முக்கியமான நிலை தன் மனதை வெல்லுதல், தன்னிலையினை உணர்ந்து துணிவுடன் அதை ஏற்றுகொள்ளுதல், அந்த துணிவுதான் ஞானமும் தெளிவும் தேடி அலையும் ஒவ்வொருவருக்கும் அவசியம் அதை அன்னை தருவாள்

எப்படி தருவாள், அந்த துணிவு என்னென்ன செய்யும்? அந்த துணிவில் இறைவனை அடைவது எப்படி என்பதை நாளை காணலாம், இந்துமதன் ஆன்மீக வழிக்கும் துணிவும் வீரமும் வேண்டும் என வலியுறுத்திய தத்துவ விசாரங்கள் அவை

(தொடரும்..)