நவராத்திரி சிந்தனைகள் : 08
வீரம் என்பது பராக்கிரமத்தால் மற்றவர்களை வெல்லுதல் மட்டும் அல்ல, தன்னை வெல்லுதல் என அறுதியிட்டு சொன்ன மதம் இந்துமதம், எவன் தன்னை கட்டுபடுத்தி தர்மத்தையும் இறைவனையும் தேடுவானோ அவனையே உண்மையான வீரன் எனவும் அந்த ஞானமதம் குறிப்பிட்டு காட்டியது
ஒவ்வொரு மனதிலும் அகங்காரம் உண்டு, பேராசை உண்டு, இன்னும் ஏகபட்ட மயக்கங்கள் உண்டு. அந்த மயக்க குரோதங்களையெல்லாம் யார் வெற்றி கொள்வானோ அவனே முக்தி அடைவான் என்றது இந்துக்கள் போதனை
வீரத்தின் உச்சபட்சம் தன்னை வெல்வது தன் ஆசைகளையும் மாய மயக்கங்களையும் வெல்வது, தான் எனும் அகந்தையினை வெல்வது, தன் மனதில் விடாபிடியாக இருந்து தன்னை ஆட்டுவிக்கும் ஆசைகளை வெல்வது
அது அல்லாது ஒருவன் ஞானம் பெற முடியாது
எல்லாம் தன்னால் நடப்பது என்றும், “நான்” எனும் அகந்தையும் ஆங்காரமும் கொண்டவனுக்கு ஒரு காலமும் முக்தியுமில்லை நிம்மதியுமில்லை. எவன் இந்த உடல் வெறும் கூடு இதில் ஆன்மா அமர்ந்து இறைஉத்தரவால் கர்மாவினை மட்டும் செய்கின்றது என கருதுவானோ அவனிடம் அகங்காரம் இராது ஞானம் பெருகும்
இந்த சிந்தை உள்ளவன் வெற்றியில் மகிழ்வதில்லை, தோல்வியில் கதறுவதுமில்லை, பெரும் இழப்புகளில் கதறுவதுமில்லை, உலகமே காலடியில் கிடந்தாலும் ஏறெடுத்து பார்ப்பதுமில்லை
அதில் தர்ம ஞானத்தை கலந்தவன் காலத்துக்கும் நிலைக்கின்றான்
இந்து ஆலயங்களின் முகப்பிலே பலிபீடம் வைத்திருப்பார்கள், மூல தெய்வத்தின் சன்னதிக்கு நேராக அது அமைக்கபட்டிருக்கும் எல்லா ஆலயங்களிலும் இது உண்டு
ஆலயம் செல்லும் பொழுது அந்த பலிபீடத்தில்தான் மனதின் அகங்காரம் முதல் அனைத்து மாய குரோதங்களையும் பலியிட வேண்டும் என இந்துமதம் சொல்லிற்று, பலிபீடம் அருகே விழுந்து வணங்கும் தத்துவமும் அதுதான், முழு சரணாகதி எனும் அடையாளம் அது
பலிபீடம் என ஆலயத்தில் ஏன் வைத்தார்கள் என்றால், மிருக பலியினை போல மனிதனின் மிருக குணமெல்லாம் அதில் பலியிடபட வேண்டும் என வலியுறுத்தினார்கள், மிருக குணம் வெளியேறிய மனிதன் தெய்வீக நிலையினை அடைவான்
ரஜோ குணம் எனும் அந்த மிக கொடிய குணத்தை வெல்வதே உண்மையான வீரமாகும்
எவ்வளவு பெரிய வீரனென்றாலும் யார் காலமெல்லாம் நிலைப்பார்கள் என்பதற்கு இந்து புராணங்களே சாட்சியாயின
எவ்வளவு பெரிய பக்திமானாயினும், எவ்வளவு பெரும் வீரனாயிலும் அவனுக்கு அகங்காரமும் ஆசையும் “நான்” எனும் அகங்காரமும் ஆட்டிபடைத்தால் அவன் அழிவான் என்பதை சொன்னன
எவன் மிகபெரிய வீரனாயினும் தர்மத்தை அறிந்து இறைவனை சரணடைவானோ அவன் வாழ்வான் என்பதையும் அவை சொன்னது
ராமாயணத்தில் இரு பெரும் வீரர்கள் அப்படி உண்டு. ராவணன் வாலி என இரு பராக்கிரமசாலிகள் அவர்கள்
அதிலும் ராவணன் மகா வீரன், மிக பெரிய மன உறுதி படைத்தவன். அவன் மனம் எப்படி உறுதியானது என்றால் யாகதீயில் தன் தலைகளையும் கால்களையும் வெட்டிபோடும் அளவு உறுதியான பக்தி கொண்டதாய் இருந்தது
அவனின் வீரம் மூவுலகையும் ஆட்டிவைப்பதாக இருந்தது
ஆனால் சீதையினை களவாடி தான் செய்து சரி எனும் அகங்காரத்தில் இருந்தான், எத்தனையோ நல்லவர்கள் அவன் செய்தது தவறு என சொல்லியும் அவன் கொஞ்சமும் கேட்கவில்லை, அந்த மனதின் ஆசையினை அகங்காரத்தை அவனால் வெல்ல முடியவில்லை
அண்ட சராசரங்களை வென்ற மாவீரன் தன்னை வெல்ல முடியாமல் தன் அகங்கார ஆசையினை வெல்ல முடியாமல் தோற்று சரிந்தான்
வாலி எனும் மாவீரனின் கதையும் இதேதான், ராவணனையே வென்ற அவன் தன் மனதில் ஆழபடிந்த ஆசையினை வெல்ல முடியாமல் வீழ்ந்தான்
தன்னை வெல்லமுடியா வீரன் எதை தன் வீரத்தால் பெற்றாலும் பெருமை இல்லை
அதே நேரம் ராமனை பணிந்த அனுமன் தெய்வமானான், தெய்வத்திலும் தர்மத்திலும் கலந்த அந்த வீரம் நிலைத்தது
மஹாபாரதம் இன்னும் தெளிவாக சொல்கின்றது
பெரும் வீரர்களான பீஷ்மரும் கர்ணனும் வீரத்தால் தங்களை வெல்லமுடியா நிலையில் தங்களை வெல்ல முடியாத நிலையில் தோற்றார்கள்
அவர்களுக்கு எது சரி எது தவறு என தெரியும் மிக நன்றாக தெரியும் ஆனாலும் தங்கள் மனதில் உருவாக்கியிருந்த ஒரு மனபிம்பத்தை உடைக்க முடியாமல் சரிந்தார்கள்
ஆனால் கண்ணனை அண்டிய வீரன் அர்ஜூனன் வாழ்ந்தான், நியாயம் உணர்ந்த வீரன் விதுரனும் வாழ்ந்தான்
இந்துக்கள் திரும்ப திரும்ப சொல்வது அதுதான், வீரத்தின் உச்சமே தன்னை வென்று ஞானம் பெறுதல் என்பதே
பத்து நாள் பட்டினியாய் இருப்பவன் இருப்பது விரதம் அல்ல, அறுசுவை உணவு அருகிருந்தும் தொடாமால் இருப்பதே விரதம்
வறுமையில் வாடி பொருளாசை இல்லை என சொல்வது வீரம் அல்ல, குவிந்து கிடக்கும் செல்வத்தையெல்லாம் காலால் தள்ளிவிட்டு செல்வதே ஆசையின்மை
அப்படி மகா உச்சநிலையில் இருக்கும் ஒருவன் தன்னை ஒப்புகொள்ளுதல், தன் மனதை பகிரங்கமாக ஒப்புகொள்ளுதல் என்பதுதான் உண்மையான வீரம்.
ஒவ்வொருவரிடம் ரஜோ குணம் எனும் அந்த பிடிவாத குணம், மாய ஆசை குணம் உண்டு. அந்த ரஜோ குணமே பாராக்கிரம பலாத்கார செயல்களின் அடிப்படை
அந்த ரஜோ குணத்தை புத்தியால் வென்று இறைபாதம் சேர்ந்து ஞானமடைந்தால் நிம்மதியும் முக்தியும் ஏற்படும் என்றது இந்துமத போதனைகள், பூஜா கால சிந்தனையும் அதுவே
ஒவ்வொருவர் மனதிலும் விடமுடியா ஆசைகள் உண்டு, எவ்வளவு போராடினாலும் கட்டுபடுத்த முடியா மோசமான வழக்கமோ பழக்கமோ உண்டு
இன்னும் வறட்டு சிந்தாந்தங்களும் மாயையும் “நான்” எனும் வடிவிலும் “என்னால்…” எனும் ஒரு கோர வடிவிலும் உள்ளே அமர்ந்திருகின்றது
இதை விட ஒரு துணிவு வேண்டும் ஒரு தைரியம் வேண்டும்
அது ராவணனுக்கு இல்லை, வாலிக்கு இல்லை, பீஷ்மருக்கும் இல்லை, கர்ணனுக்கும் இல்லை. நியாய தர்மம் உணர்ந்திருந்தும் ஊர் உலகம் பேசும் பேச்சு, உலகில் தங்கள் மரியாதை கவுரவம் என சிந்தித்து தங்கள் உயிரே போனாலும் “நான்” எனும் அந்த அகங்காரத்தில் நின்றார்கள்
ஆனால் உலகம் என்ன பேசினாலும் சரி, நான் இப்படித்தான் என சொல்லும் தைரியம் அர்ஜூனனுக்கும் அனுமனுக்கும் இருந்தது, அவர்கள் நிலைத்தார்கள்
ஆம், ஒவ்வொரு மானிட மனமும் மாய போலி கவுரவத்திலும், தர்மத்தையே மறக்கடிக்க செய்யும் மாயா ஆசைகளிலும் சிக்கி “நான்” என ஒவ்வொருவனையும் அகங்காரத்தில் ஆட விடுகின்றது
அந்த அகங்காரத்தை விட ஒரு தைரியமும் துணிவும் வேண்டும், அந்த துணிவுதான் ஞானம் கொடுக்கும், அந்த ஞானம் முக்தியினை கொடுக்கும்
இந்த துணிவும் தைரியமும் புத்தி எனும் நல்ல சிந்தனையால் வரும், அதை கொடுப்பவள் அன்னை துர்கா என்றார்கள் இந்துக்கள்
அவள் கையில் பாச அங்குசமெல்லாம் கொடுத்தார்களே ஏன்? பாசம் என்றால் உலக உறவுகள் கட்டு, அங்குசம் என்றால் யானை போன்றவற்றை கட்டுபடுத்தும் கருவி
அன்னை உலக மயக்கங்களை அகற்றுவாள், மனம் எனும் யானையினை கட்டுபடுத்தி அருள்வாள் என சொன்னார்கள், இன்னும் எவ்வளவோ போதித்தார்கள்
ஒவ்வொரு மனிதனும் மனதால் சிந்தையால் வாழ்வால் தொழிலால் இன்னும் பலவற்றால் ஒவ்வொரு கட்டுக்குள் சிக்கி இருக்கின்றான், அதை விட்டு வெளிவர அவனுக்கு தைரியமில்லை துணிவில்லை
தன்னை முழுமையாக ஒப்புகொள்ள மானிடருக்கு பெரிதும் விருப்பமில்லை. அப்படி ஒப்புகொண்டால் ஊரும் உலகமும் என்ன பேசுமோ?, தான் கட்டிவைத்த மாய பிம்பத்துக்கு ஆபத்துவந்துவிடுமோ என போராடுகின்றான்
எவன் இதை உண்மையாக ஒப்புகொள்கின்றானோ அவனே வீரன், தன் தவறையும் தப்புகளையும் தன் மனதின் ஆசைகளையும் எவன் உலகறிய சொல்லிவிட்டு இறைபாதம் சரணடைவானோ அவனே உண்மையான வீரன், அதுதான் வீரம்
அது சாமான்யமாக வராது, அதற்கு மிகபெரிய தைரியமும் துணிவும் வேண்டும். அதை தருபவளே அன்னை துர்கா, நவராத்திரியின் மிக முக்கிய தத்துவங்களில் இதுவும் ஒன்று
இந்த பக்குவமும் தெளிவும் ஞானமும் ஒவ்வொருவரிடமும் வந்தால் அவர்மனதில் இருக்கும் அசுர குணம் அழியும், எருமை குணம் அழியும் அவன் மனதில் தெய்வீக ஞானமும் சிங்கம் போல் தைரியமும் வரும்
அவன் ஞானி எனும் நிலை அடைவான், அவன் தொட்டதெல்லாம் துலங்கும், பாவமோ பழியோ அவன் வழியில் இராது, வாழ்வாங்கு வாழும் அவன் முக்தியும் அடைவான்
நவராத்திரியில் துர்கா அன்னையினை பூஜிக்கும் தத்துவமும் அவளிடம் இருந்து தைரியமும் துணிவும் வந்தால் ஒவ்வொருவர் மனதில் இருக்கும் அசுரன் கொல்லபடுவான் என போதிக்கும் தத்துவமும் அதுவே
தன்னை வெல்லுதலும் தன்னை அறிதலும் தன் மனதை அறிந்து அடக்கி வெல்வதுமே பெரும் வீரம், அதை அடைய தைரியம் வேண்டும், தைரியத்துக்கு ஞானம் வேண்டும்
கீதை எனும் ஞானநூல் இந்த ஞானத்தை சொல்லித்தான் தைரியத்தை கொடுக்கும்படி போதிக்கபட்டது
நவராத்திரி காலமும் அதே கீதா உபதேசத்தை இன்னொருவகையில் போதித்தபடி கொண்டாடபட்டு கொண்டிருக்கின்றது
(தொடரும்..)