நாச்சியார் திருமொழி : 24
அன்று தோழியரோடு சுனை எனும் மலையில் இருக்கும் தடாகத்துக்கு குளிக்க சென்றிருந்தாள் ஆண்டாள், அங்கும் அவளின் துணிகள் காணாமல் போயின, அதை கண்ணனே எடுத்திருக்க வேண்டும் எனும் ஆத்திரத்தில் பாடுகின்றாள் ஆண்டாள்
“பரக்க விழித்தெங்கும் நோக்கிப்
பலர்குடைந் தாடும் சுனையில்
அரக்கநில் லாகண்ணநீர்கள்
அலமரு கின்றவா பாராய்
இரக்கமே லொன்று மிலாதாய்
இலங்கை யழித்த பிரானே
குரக்கர சாவதறிந்தோம்
குருந்திடைக் கூறை பணியாய்”
( அதாவது அரக்க பரக்க நான் கு திசைகளிலும் கண்களை ஓடவிட்டு (யாருமில்லாததை உறுதி செய்துகொண்டு),சுனையில் முங்கிக் குளிக்கும் போது, கண்களில் கண்ணீர் அடக்கியும் முடியாமல் இருப்பதைப் பார்.(அதைக் கண்டும்) சிறிதும் இரக்கமில்லாமல், வேடிக்கைப் பார்ப்பவனே!இலங்கையை அழித்த எம்பிரானே, குரங்குகளின் தலைவன் ஆனவனே, குருந்து மரத்தின் இடையே நீ வைத்திருக்கும் எங்கள் துணிகளைக் கொடுத்துவிடு என பொருள்)
பாடலை பாடி முடித்தபின் பார்த்தால் அந்த ஆடைகள் அங்கேதான் இருந்தன, அதாவது அவசரத்தில் அவள் கவனிக்காமல் பாடிவிட்டாள், அவள் மனம் மிகவும் வருந்திற்று
வீட்டுக்கு வந்தவள் கண்ணன் சிலைமுன் அமர்ந்து மன்னிப்பு கோரினாள், ஆனால் கண்ணன் வரவில்லை, அவள் மறுபடி மறுபடி கேட்டபொழுது ஒரே ஒரு குரல் மட்டும் ஒலித்தது
“நான் குரங்கா? நான் குரங்குகளின் தலைவனா?” என கேட்டது, சிரித்துகொண்டே “குரங்குகளை கூட்டி திரிந்தவனை வேறு எப்படி சொல்வதாம்?” என ஆண்டாள் சொல்ல அந்த குரலும் மறைந்தது
அதன் பின் ஆண்டாள் எங்கு தேடியும் கண்ணன் வரவில்லை, ஆண்டாளுக்கு கொஞ்சம் அச்சம் வந்தது, கண்ணன் தாமதிப்பதும் அவள் குரலுக்கு வராமல் இருப்பதும் அவளுக்கு அச்சத்தை கூட்டின
கண்ணா என உரிமையில் அழைத்தவள் பின் கண்ணா என கலங்கிய குரலில் அழைத்தாள், அந்த கலக்கமான குரலும் பின் உடைந்து அழுகுரலாயிற்று
ஆனாலும் கண்ணன் வரவில்லை
அவன் நேரில் வரவில்லையே தவிர அவள் தன்னை தேடி அலைவதையும் தவிப்பதையும் பார்த்துகொண்டேதான் இருந்தான், அப்படி அவளை தவிக்கவிடுவதில் அவனுக்கொரு ஆனந்தம்
தன்னை அவள் தேடுவதில் அப்படி ஒரு மகிழ்ச்சி அவனுக்கு
ஆனால் இனியும் தாளமாட்டாள் எனும்பொழுது எப்பொழுது வரவேண்டும் என்பதும் அவனுக்கு தெரியும்
அந்த மயக்கும் மாலையில் மெல்லிய தென்றல் இதமாக வீசிகொண்டிருந்தபொழுது ஒரு குளிர்ச்சியும் நல்ல நறுமணமும் ஆண்டாளை சூழ்ந்தது, சோர்ந்திருந்தவள் “கண்ணா..” என மனம்விட்டு ஆனந்தமாய் கத்தினாள்
கண்ணன் அவள் அருகே புன்னகை பூக்க நின்றுகொண்டிருந்தான்
அவனை ஆரதழுவி ஓ என அழதொடங்கினாள் ஆண்டாள், கண்ணன் அவளை புன்னகைத்தபடி அணைத்து கொண்டிருந்தான்
பின் மெல்ல சொன்னான் “ஒரு குரங்கினை ஏன் அணைத்திருக்கின்றாய்?”
ஆண்டாள் சிரித்தபடி பின் வாங்கி அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள், கண்ணன் அப்பொழுதும் கேட்டான் “என் முகம் அப்படியே குரங்கு போல் இருக்கின்றதல்லவா? அதைதானே பார்க்கின்றாய்”?
சட்டென சிரித்தவள் கண்களை அசைத்தபடி சொன்னாள் “உன் குறும்புகள் அப்படி இருந்தன அதனால் சொன்னேன் என புன்னகைத்தாள்
“எனக்குத்தான் இரக்கமே இல்லையே, அப்படித்தானே பாடினாய்?, பின்னர் ஏன் என்னை தேடினாய்?” என செல்லமாக கோபித்தான் கண்ணன்
“இன்னும் கோபமா கண்ணா, ஒரு பெண்ணுக்கு தன் தோழியர் முன்னால் தன் காதலனை செல்லமாக திட்டுவது பிடிக்கும், வேறு யாரும் எதுவும் சொல்வதற்கு முன் அவள் அப்படி முந்திகொள்வாள், அவனை திட்டும் உரிமையினை கூட இன்னொருத்திக்கு விட்டுகொடுக்க அவள் விரும்புவதில்லை, நானும் அப்படி செல்லமாக திட்டினேன், கோபமென்றால் மன்னித்துவிடு” என அவள் கரம்பற்றினாள் ஆண்டாள்
அந்த கரத்தை பற்றி இழுத்தபடி அவளை தன்னோடு சேர்த்து கொண்டு “பாடலெல்லாம் இருக்கட்டும் அதன் பொருளை சொல்” என்றான் கண்ணன்
“உனக்கு தெரியாத பொருளா கண்ணா, பின் ஏன் என்னை கேட்கின்றாய்” என்றபடி அவனில் புதைந்து கொண்டாள் ஆண்டாள்
அவள் தலையினை கோதியபடி கேட்டான் கண்ணன் “பாடியவர்தானே பொருளை விளக்க வேண்டும்?”
“நிச்சயமாக தெரியவேண்டுமா?” என மெல்லிய குரலில் கேட்டாள்
“அதற்காகத்தானே வந்திருக்கின்றேன்” என்றான் கண்ணன்
“அப்படியானால் என்னை பார்க்க வரவில்லை அல்லவா? , போ இனி பாடமாட்டேன்” என முகம் திருப்பிகொண்டாள் ஆண்டாள்
“உன்னைத்தானே சந்தித்து பொருள் கேட்க வந்தேன், இனி வரமாட்டேன்” என்றவன் கையினை பிடித்து “அப்படி சொல்லாதே கண்ணா, அதனை தாங்கும் சக்தி எனக்கில்லை” என்றாள் ஆண்டாள்
தன் குளிர்ந்த புன்னகை வீசியபடி “ம்ம் அப்படியானால் பாடலை விளக்கி சொல்” என்றான் கண்ணன்
ஆண்டாள் அவனிடமிருந்து தன்னை விடுவித்து கொண்டாள், தன் தலைமுடியினை சரிசெய்து கொண்டு அமர்ந்தாள் கால்களை கரங்களால் பற்றியடி சொல்ல ஆரம்பித்தாள்
“கண்ணா, இந்த உலகம் என்பது ஒரு குளம், அங்கு பிறவி எனும் நீராட வந்த ஆத்மா நாங்கள். ஞானமெனும் ஆடையின்றி அந்த ஆத்மா நீராடிகொண்டிருக்கின்றது, எல்லா பக்கமும் இருந்து ஆசை மயக்கங்களும் லவுகீக ஆசைகளும் சூழ்ந்திருக்கின்றன, அந்த ஆத்மா அங்கு ஞானமின்மையால் தடுமாறுகின்றது, அது அவமானபட்டு கூனி குறுகி நிற்கின்றது
என்ன செய்வது, இந்த பிறவியில் இருந்து எப்படி மீள்வது என தெரியாத அந்த ஞானமில்லா ஆன்மா கண்களில் நீர்வர உன்னை தேடுகின்றது
கண்ணா எங்களுக்கு ஞானமெனும் ஆடைகொடு, இந்த அவமானத்தில் இருந்து தப்பி வீடு செல்ல வழிசெய், ஞானமெனும் ஆடைகொடு என கண்கள் பனிக்க நாங்கள் கெஞ்சுகின்றோம், நீயோ இரக்கமில்லாமல் இருக்கின்றாய்” என பொருள் கண்ணா என்றாள்
“நானா இரக்கமில்லாதவன்” என தலையாட்டிய கண்ணன் அடுத்து கேட்டான் “குரங்குகளின் தலைவன் என சொன்னாயே ஏன்?”
ஆண்டாள் தொடர்ந்தாள்
“கண்ணா, அந்த ராமாயணம் எனும் இதிகாசம் நடந்த பெரும் வரலாறு, ராமனாக வந்த நீ நடத்திய அங்கு எல்லாமே தத்துவகுறியீடு கண்ணா..
எல்லாமே போதனை , நுணுக்கமான போதனை
ஆத்மாவினை மாயை சிறைவைத்திருக்கின்றது, அந்த மாய சிறையினை உடைத்து ஆன்மாவினை மீட்க ஒரு பிறவியில் நடக்கும் போராட்டமே இந்த வாழ்வு, இது ஒவ்வொரு ஆன்மாவுக்கும் நடக்கின்றது, இதுதான் ராமாயணம் சொல்லும் தத்துவம்
இங்கு வெல்ல மனம் எனும் மகத்தான துணை வேண்டும், அது ஆற்றல் மிக்கதாகவும் ஒரேமுகத்தில் ஒடுங்கியதாகவும் இருக்க வேண்டும்
ஆனால் மனம் என்பது குரங்குக்கு ஒப்பானது கண்ணா. அதனை அடக்குவது என்பது எளிதானதே அல்ல, நொடிக்கொரு தரம் தாவி செல்வதும் யாராலும் கட்டுபடுத்தமுடியாதுமானது குரங்கு அந்த மனம்
ஆனால் அதனை அடக்கிவிட்டால் அனுமன் போல அது பலமாகின்றது, எவ்வளவு பெரும் சாதனையும் செய்யும்படி அது ஆற்றல் பெறுகின்றது என்பதுதானே அந்த காட்சியின் தத்துவம்?
ராமனாக வந்த நீ ஏன் எவ்வளவோ மன்னர் இருக்க, சக்திவாய்ந்த ரிஷிகள் இருக்க, ஏன் நீயே அரக்கபடைகள துவம்சம் செய்யும் வலுகொண்டிருக்க இந்த வானரங்களை ஏன் அழைத்து சென்றாய்?
உண்மையில் நீ காட்டியது தத்துவவழி, மனம் என்பது ஒரு குரங்கு, அதை அடக்கினால் கடலை தாண்டலாம் சாய்க்கமுடியா அரக்கனை சரிக்கலாம் என நீ போதித்த போதனை
நான் அந்த பாடலில் அதைத்தான் கேட்டேன் கண்ணா, இந்த மனதை அடக்கி வலுவாக்கும் வரத்தை கொடு என்றுதான் கேட்டேன்
எதை எதிர்த்தாலும் அந்த எதிரியின் பாதி பலம் வாலிக்கு வரும் என்பது மானிட மனம் எதை அடக்க நினைத்தாலும் அதில் பாதியாவது மனதோடு ஒட்டி வெல்ல வைக்கும் என்பதன்றி வேறு என்ன கண்ணா,
அப்படித்தானே மானிட மனம் வீழும்
உன்னை பணிந்த மனம் குரங்கு தன்மைநீங்கி தெய்வ பலம் பெறும் என்பதுதானே அனுமன் தத்துவம்
நான் அந்த மனதை அருளத்தான் உன்னை கேட்டேன், இந்த ஆத்மா ஞானம் எனும் ஆடையின்றி இருக்கின்றது , இந்த மனம் குரங்குபோல் தாவுகின்றது, கண்ணா எனக்கு ஞானமளித்து இந்த மனதை அடக்கும் சக்தி கொடு என்றுதான் கேட்டேன்
மனதில் எண்ணற்ற குரங்கு புத்தி உண்டு, குரங்கு இயல்பும் எண்ணமும் உண்டு அதை எல்லாம் அடக்கி ஆளும் சக்தி தருபவன் நீ, அதைத்தான் கேட்டேன் கண்ணா
எங்களுக்கு ஞானம் தா கண்ணா, எங்கள் ஆன்மாவின் மானத்தை காக்க ஞானம் தா கண்ணா. எங்கள் குரங்கு மனதை அடக்க வலிமை தா கண்ணா, அப்படியே இந்த பிறவியினை எங்களை கடக்க வை கண்ணா
அதைத்தான் ஒவ்வொரு ஆத்மாவும் உன்னிடம் கதறி கேட்கின்றது”
கண்ணன் அவளின் விளக்கம் கேட்டு மகிழ்ந்த அவளை தன்னோடு அணைத்து முத்தமிட்டான், தான் சொன்ன ஞான விளக்கத்தில் அவன் மனம் மகிழ்ந்ததை உணர்ந்த ஆண்டாள் பூரிப்போடு அவனை அணைத்து கொண்டாள்
ஆண்டாள் அந்த பரவச மகிழ்வில் தன்னை மறந்தாள், அவள் மீண்டும் கண் திறக்கும்பொழுது கண்ணன் மறைந்திருந்தான், அவன் நிச்சயம் அடுத்த பாடல் பாடும்போது வருவான் எனும் நம்பிக்கையில் நாணம் சூழ புன்னகைத்தபடி அவன் ஆலயம் நோக்கி சென்றுகொண்டிருந்தாள் ஆண்டாள்