அபிராமி அந்தாதி 55
அபிராமி அந்தாதி 55
“மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது”
கடந்த பாடலை சேர்மின் என முடித்த பட்டர் இப்பாடலை மின்னாயிரம் என தொடங்குகின்றார், இங்கு மின் என்பது மின்னலை குறிப்பது
அன்னையின் தோற்றம் எப்படியானது என்பதை இங்கு முதல் வரியில் சொல்கின்றார் பட்டர்
“மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது” என்கின்றார்
அதாவது அன்னையின் தோற்றம் ஆயிரம் மின்னல்களுக்கு சமமானது என்கின்றார், இது சாதாரணமான ஒப்புமை அன்று, மூலசக்தியே அன்னை என சொல்லும் அந்த பெரும் தத்துவம்
கீதையில் மூலசக்தியினை “ஆயிரம் சூரியன்களுக்கு ஒப்பானவன்” என சொல்லபடும் வரியினை இங்கு அன்னை ஆயிரம் மின்னல்களுக்கு ஒப்பானவள் என்கின்றார்
மின்னல் என்பதே மழையின் அறிகுறி,மின்னல் இன்றிமழை இல்லை , மின்னலின்றி மழைக்கான தூண்டுதல் இல்லை, பூமியில் பலத்த மாற்றங்களை கொடுப்பது மின்னல்
அப்படி அன்னை பெரும் அருள்மழைபொழிபவள் பெரும் சக்தியாய் நிற்பவள் என்பதை ஆயிரம் மின்னல்களுக்கு ஒப்பிடுகின்றார் பட்டர்
அன்னைக்கு “தடில்லா ஸ்மருசி” என்றொரு நாமமும் லலிதா சஹஸ்கரநாமத்தில் உண்டு
ஆனால் இந்த மாபெரும் ஒளிபிழம்பை அககண்ணால் பார்க்கமுடியுமா என்றால் இல்லை, பின் எப்படி பட்டர் சொன்னார் என்றால் அவரின் அககண்களில் அந்த பேரோளி தெரிந்தது
அன்னைக்கு “அந்தர்முக ஸ்மராத்யா”, “பஹிர்முக ஸ்துர்லபா”என இரு நாமங்கள் சகஸ்கரநாமத்தில் உண்டு,இதற்கு அன்னை அககண்களில் தெரிபவள் என பொருள், அன்னை அடியாரின் உள்ளத்தில் எழுந்தருள்வதால் அவளுக்கு “ஹிருத்யா” “ஹ்ருதியஸ்தா” என இன்னும் இரு பெயர்கள் உண்டு
இப்படி அன்னை ஆயிரம் மின்னல் ஒளியுடன் உள்ளத்தில் தோன்றுவாள் என சொல்லும் பட்டர், அடுத்து பாடுகின்றார்
“அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி” என்கின்றார், அதாவது அன்னை ஆனந்தமானவள் அடியார்க்கு மிகபெரும் ஆனந்தம் தருபவள் என பொருள்
“பரமானந்தா” என்பது அன்னைக்குரிய திருநாமங்களில் ஒன்று, அன்னை தன் அடியாருக்கு மிக பெரிய நிரந்தரமான ஆனந்தத்தை தருபவள் என பொருள்
இதனால்தான் அன்னையின் அடியார்களெல்லாம் அன்னையினை உணர்ந்தவர்களெல்லாம் கவலையுற்றோ, வாடியோ காணபடுவதில்லை, அன்னை வந்த மனம் ஆனந்தமாகும் அந்த ஆனந்தம் முகத்தில் பிரகாசிக்கும்
அதைத்தான் அடியார்க்கு மனதில் பெரும் மகிழ்வும் சந்தோஷமும் தரும் ஆனந்தவல்லியே என உருகும் பட்டர் அடுத்து பாடுகின்றார்
“அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி” என்கின்றார்
அன்னை வேதங்களின் வடிவானவள், வேதமே அவள்தான் அந்த வேதங்கள் அவளிடமிருந்தே தோன்றுகின்றன அவளிடமே முடிகின்றன, வேதத்தின் தொடக்கமும் முடிவும் அவளே
அன்னைக்கு வேதவல்லி என்றும் இன்னும் பலவகையான பெயர்களும் உண்டு, அன்னையே வேதம், வேதமே அன்னை என்பது ஆன்றோர் அறிந்தது
அப்படி அந்த வேதத்தின் தொடக்கமும் நடுவும் முடிவுமாய் நிற்பவள் என அன்னையின் புகழை பாடும் பட்டர் கடைசி வரிக்கு வருகின்றார்
“தன்னை உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது” என்கின்றார்
அதாவது இவ்வளவு சிறப்பு வாய்ந்த அன்னையே உன்னை பூலோக மக்கள் நினைந்து போற்றாவிட்டாலும் குறைவு அவர்களுக்குத்தானே தவிர உனக்கு இல்லையே எனபாடி முடிக்கின்றார்
அன்னை மகா சக்திகொண்டவள் எனினும் மானுடத்தின் அறியாபதர்கள் அவளை நினைப்பதில்லை, அவர்கள் அப்படி நினைக்காவிடிலும் அன்னைக்கு ஒன்றும் குறையபோவதில்லை என பட்டர் காரணமில்லாமல் சொல்லவில்லை
மானிடர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளவர்கள், சக மானிட உதவியின்றி இன்னொரு மானிடன் வாழமுடியாது
அரசனே ஆயினும் மக்கள் அவனை மறந்து வரிகொடுக்காவிட்டால் அல்லது மறுத்தால் அவன் ராஜ்ஜியம் நில்லாது
ஆனால் அன்னை அப்படி அல்ல அவள் கடல் போன்றவள், மேகம் நீரெடுத்து அக்கடல் வற்றுவதுமில்லை ஆறுகள் கலப்பதால் அது பெருகுவதுமில்லை
அன்னை சூரியன் போன்றவள், அவளுக்கு பூலோகத்தில் இருந்து எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அதன் ஜோதி குறைவதுமில்லை கூடுவதுமில்லை
அன்னை அப்படி ஞான பெருங்கடலாக உருவகித்து, ஞான பிழம்பாக உருவகித்து இப்பாடலை பாடுகின்றார் பட்டர்
இப்பாடல் தியானத்தின் வலிமையினை பலனை குறிக்கும் ஒரு பாடல்
அன்னையினை புறகண்களால் காணமுடியாது, அமைதியான ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டால் அன்னை ஆயிரம் மின்னல்களை கொண்ட பிரகாசமான வடிவாக நெஞ்சில் எழுந்தருள்வாள், அவளை அந்த அககண்களால் ஞானகண்களால் காணலாம்
அன்னை வேதங்களின் தொடக்கமும் முடிவுமானவள் என்பதால் அன்னை வரும் நெஞ்சம் வேதங்களின் இல்லமாகின்றது, அவள் குடியிருக்கும் மனம் எல்லா வேதங்களையும் அறிகின்றது, ஓதாமலே எல்லா ஞானமும் அங்கு குடிவருகின்றது
அப்பொழுது அந்த மனம் நித்திய ஆனந்தத்தில் மகிழ்கின்றது, அந்த ஆனந்தம் எக்காலமும் குறைவதுமில்லை கூடுவதுமில்லை
அன்னை போலவே அந்த ஆனந்தம் எப்பொழுதும் நிலைத்திருக்கின்றது
அன்னை மிகபெரிய சக்தி, உலகை படைத்து இயக்கும் மாபெரும் சக்தி, அந்த ச்கதியினை மனதால் தியானித்தால் அந்த அடியார்களுக்குத்தான் நன்மை மாறாக அவளை யாரும் தேடாவிட்டால் அவளுக்கு ஏதும் குறைவதுமில்லை, கொஞ்சமும் இழப்புமில்லை
ஆனாலும் அந்த பெருநிலையில் இருக்கும் அன்னை, தன் அடியார்கள் தேடினால் ஒடிவந்து மனதில் அமர்வாள், அந்த அளவு கருணை கொண்டவள் என்பதை சொல்லாமல் சொல்கின்றார் பட்டர்
ஆக ஞானபிழம்பாக, வேத ஜோதியாக விளங்கும் அன்னையினை மனதார தரிசித்து பெரும் ஆனந்தத்தில் மூழ்கலாம், அப்படி தேடாவிட்டால் அன்னைக்கு ஏதும் குறைவில்லை எனும் நிலையில் அடியார்கள் அவளை மனதால் தேடி அடையவேண்டும், அவளுக்கு மானிடரால் கிஞ்சித்தும் பலனில்லை என்றாலும் தன் அடியார்கள் அழைத்தால் ஓடிவந்து தன்னை வெளிபடுத்துவாள், நித்திய ஆனந்தமும் ஞானமும் தருவாள் என்பது பாடலின் பொருள்
ஆக 55ம் பாடல் சொல்லும் பொருள் இதுதான்
“அன்னையே, ஒரு ஆயிரம் மின்னல் சேர்ந்த வடிவம் கொண்டவளே. அகம் மகிழும் ஆனந்தம் தருபவளே, வேதத்தின் தொடக்கமும் முடிவுமான வேதவல்லியே, யார் உன்னை தேடாவிட்டாலும் குறையாத சக்தியும் ஆற்றலும் கொண்டவளே, அந்த மகாசக்தி நிலையிலும் அடியார் அழைத்தால் ஓடிவந்து மனதில் அமரும் கருணை கொண்டவளே, என் அன்னையே….”
ஓம் அன்னை அபிராமி போற்றி போற்றி..🌺🌺🌺
ஓம் அமிர்தகடேஸ்வரர் போற்றி போற்றி.. 🌺🌺🌺
அபிராமி அம்மை பதிகத்துக்கும் விளக்கங்களை பதிவிட வேண்டுகிறேன் அண்ணா..🙏🙏🙏