அபிராமி அந்தாதி : 57
அபிராமி அந்தாதி : 57
“ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே”
இந்த பாடல் பெரும் விஷயங்களை சொல்லும் பாடல் என்பதால் ஒவ்வொரு விஷயமாக பார்க்கலாம்
“ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம் உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி” என தொடங்குகின்றார் பட்டர்
இந்த “இருநாழி கொண்டு” எனும் வரி காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மனை பற்றிய பிரசித்தியான வரி
காஞ்சியிலுள்ள எந்தச் சிவாலயத்திலும் அம்மன் சந்நிதி இல்லை. அங்கு காமாட்சி அம்மன் ஆலயத்தில் மட்டும் அவள் வீற்றிருப்பாள், அதற்கு இல்லறத்திற்குரிய காரணங்கள் சொல்லபடுகின்றன
அதாவது வீட்டின் அதிபதி மனைவி, ஒருவன் நாட்டுக்கே அதிபதியாக இருந்தாலும் அவன் வீட்டில் அவன் மனைவிதான் ஆட்சி செய்வாள், அதனால் ராணி என்றானாள்
மனைக்கு அதிபதி மனைவியே, எங்கும் மனையன் என சொல்வதில்லை, இல்லத்தரசி என சொல்வார்களே தவிர இல்லத்து அரசன் என யாரும் சொல்வதில்லை, இல்லாள் என மனைவியினை சொல்வார்களே தவிர இல்லான் என கணவனை சொல்வதில்லை
காரணம் மனைவியின் பெருமை அது , கணவன் எவ்வளவு பெரிய சக்கரவர்த்தி என்றாலும் வீட்டை நடத்துபவள் அவளே
கணவன் வருமானம் அறிந்து அவன் பொருளில் எல்லா இல்லற கடமையும் நிறைவேற்றுபவளே நல்ல மனைவி
இதனை “இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை” என சுருக்கமாக சொன்னாள் ஒளவை, இத்னையே “மனைதக்க மாண்புடையாள்” என்றான் வள்ளுவன்
அப்படிபட்ட மனைவி கணவன் கொடுக்கும் பொருளை கொண்டு குடும்பம் நடத்தி ஊருக்கான அற்காரியங்களையும் செய்வாள்
ஆம், அக்காலத்தில் பெண்களே அறகாரியங்கள் ஊருக்கும் சமூகத்துக்கும் தேவையான நல்ல செயல்களை செய்தார்கள், அதனாலே பிச்சைக்காரன் கூட “அம்மா தாயே” என்றுதான் அழைத்தானே அன்றி யாரும் “அய்யா” என அழைக்கவில்லை
அக்கால சமூகம் 32 அறங்களை வளர்க்க சொன்னது
1) ஆதுலர்க்கு சாலை அமைத்தல், 2) ஓதுவார்க்கு உணவு, 3) மாந்தர்க்கு உணவு
4) பசுவுக்கு உணவு, 5) சிறையில் இருப்போருக்கு உணவு, 6) இல்லாதோருக்கு ஈகை, 7) வழிப்போக்கர்க்கு உதவுவதல், 8) அறவைச் சோறு எனும் ஆதரவற்ற அனாதைகளுக்கு உணவளித்தல், 9) மகப்பேறுவித்தல் எனும் பெண்கள் பிரசவிக்கும் நேரத்தில் அவர்கள் உடனிருந்து தேவையான உதவிகளை செய்தல்
10) மகவு வளர்த்தல் குழந்தைகளை பராமரித்து அவர்களை வளர்ப்பதில் உதவுதல்,
11) மகப்பால் வார்த்தல் எனும் தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்குப் பாலளித்தல், 12) அறிவைப் பிணம் எனும் அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்களின் உடலுக்கு ஈமச்சடங்கு செய்து தகனம் செய்ய உதவுதல்
13) அறவைத் தூரியம் எனும் ஆதரவற்றவர்களுக்கு தேவையான துணிமணிகள் மற்றும் ஆடைகள் கொடுத்து அவர்கள் மானம் காத்தல்
14) சுண்ணம் எனும் தாம்பூலம் தரிப்பவர்களுக்கு சுண்ணாம்பு கொடுத்து உதவுதல், 15) நோய்மருந்து எனும் நோயில் தவிப்பவர்களுக்கு மருந்து வாங்கித் தந்து உதவுதல், 16) வண்ணார் எனும் ஏழை எளியோருக்கு துணி துவைக்க உதவுதல் அதாவது கூலி கொடுத்தல்
17) நாவிதர் அதாவது ஏழை எளியோருக்கு முடிவெட்டிக்கொள்ள, முகச்சவரம் செய்ய உதவுதல் (நாவிதர்களின் கூலியையும் உடனே தந்துவிடவேண்டும். தாமதிப்பது பாபம்.), 18) கண்ணாடி எனும் உதவி ஒருவர் தங்களை ஒழுங்குபடுத்தி சரி செய்துகொள்ள கண்ணாடி கொடுத்து உதவுதல், 19) காதோலை : பெண்கள் காதணியில்லாது (தோடு) இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு காதணி வாங்கித் தந்து உதவுதல்
20) கண்மருந்து எனும் பெண்கள் தங்கள் கண்களை அழகுபடுத்திக்கொள்ள கண்மை அளித்தல், 21) தலைக்கு எண்ணை எனும் பரட்டை தலையோடு இருக்கும் ஏழை எளியோருக்கு தலைக்கு எண்ணை வாங்கி கொடுத்தல்
22) பெண் போகம் எனும் தனக்குரிய பெண்ணிடம் முறையான இன்பம் அனுபவிக்க வழியில்லா ஏழைகளுக்கு உரிய தனியிடம் அமைத்து தருதல், 23) பிறர் துயர் தீர்த்தல் எனும் காயமோ நோயோ ஏற்பட்டு துன்பப்படுபவர்களுக்கு உதவுதல், 24) தண்ணீர் பந்தலெனும் தாகத்தால் தவிப்பவர்களுக்கு தண்ணீர் தந்து உதவுதல்
25) மடம் அமைத்தல் அதாவது வழிப்போக்கர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள, குளிக்க, இயற்கை உபாதையை தணித்துக்கொள்ள சாலையோரங்களில், விடுதி அமைத்தல், 26) தடம் எனும் தாடாகம், வழிப்போக்கர்கள் நீர் அருந்தி இளைப்பாற குளம் தோண்டுதல், அவற்றை பராமரித்தல்
27) சோலை எனும் நிழல் தரும் மரங்கள் மற்றும் பூஞ்சோலை அமைத்து அவர்கள் தங்கி இளைப்பாற உதவுதல், 28) ஆ உராய்ஞ்சிக்கல் நிறுவுதல் எனும் பசுக்கள் மேயும் இடங்களிலும், பசு கொட்டில்களிலும் அவை தங்கள் உடலை தேய்த்துக்கொள்ள பசு உராய்ஞ்சிக்கல் நிறுவதல், 29) ஏறு விடுதல் எனும் பசுக்களை சினைப்படுத்த தரமான எருதுகளை கொடுத்து உதவுதல் மற்றும் எருதுகளை பேணுதல்
30) விலங்கிற்கு உணவு எஉம்பல்வேறு விலங்கினங்கள் பசியாற உணவை கொடுத்து உதவுதல், 31) விலை கொடுத்து உயிர் காத்தல் அதாவது கொலைக்குச் செல்லும் உயிர்களை வாங்கிக் காத்தல், 32) கன்னிகா தானம் அதாவது வரன் தேடிக் கொடுத்து உதவுதல். ஏழைப் பெண்களின் திருமணத்திலும் திருமண வயது நெருங்கியும் திருமணமாகாமல் தவிக்கும் முதிர்கன்னிகளுக்கும் திருமணம் செய்து வைத்து உதவுதல்
என இப்படிபட்ட அறங்கள் உண்டு, அவற்றையும் அக்கால பெண்கள் வளர்த்தார்கள்
இப்படி சிவனும் அன்னையும் குடும்பம் நடத்தி அறம் வளர்த்த காட்சி ஒன்று காஞ்சியில் உண்டு, அன்னையிடம் சிவன் இருநாழி நெல் மட்டும் கொடுத்தாராம், அன்னை அந்த இருநாழி நெல்லை பலவாறு பெருக்கி உலக உயிர்களுக்கெல்லாம் படியளந்து அறகடமையும் செய்தாராம்
அதாவது ஒரு வருடத்துக்கே இருபடி நெல்லை கொடுத்து அதையும் உலகத்தையே காக்க கொடுத்தாரம் சிவன்,மிக மிக குறைந்த நெல் அது ஒரு நாள் அல்ல ஒரு பொழுதுக்கு கூட வராது
ஆனால் அந்த நெல்லை மறுப்பேதும் சொல்லாமல் குறைபட்டு கொள்ளாமல் வாங்கி கொண்டு தன் சக்தியால் உலகுக்கு படியளந்து அறகாரியங்களை செய்தாளாம் நல்ல மனைவியாகிய அன்னை
இதனை காஞ்சிபுராணத்தில் வரும் இப்பாடல் சொல்கின்றது
“‘தொல்லே மறைதேர் துணைவன்பால் யாண்டுவரை
எல்லே இருநாழி நெற்கொண்டோர்
மெல்லியலாள் ஒங்குலகில் வாழும் உயிரனைத்தும் ஊட்டுமால்
ஏங்கொலிநீர் காஞ்சி யிடை”
எனும்பாடல் இந்த கதையினை சொல்லும்
(பழைய வேதம் ஆராய்ந்து காண முயலும் சிவபெரு மாளுகிய தன்னுடைய கணவனிடம் ஒராண்டாகிய கால அளவுக்கும் இரண்டு படி நெல்லேக்கொண்டு ஒரு மெல்லியலாகிய பெண், உயர்ந்த உலகத்தில் வாழும் எல்லா உயிர்களேயும், ஒலிக்கின்ற நீரையுடைய காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு உண்ணுவித்துக் காப்பாற்றினாள்)
இதனை “இருநாழிபடி கொடரங்காத்த மாபரச்சி” என்கின்றார் அருணகிரியார், இங்கு மாபரச்சி என்பது பரம்பொருளை ஆட்சி செய்பவள் எனும் பெயரில் வரும்
சுந்தரரும் இதுபற்றிபாடியிருக்கின்றார்
அப்படி இல்லறத்தில் சிறந்து பெரும் வழிகாட்டியாக நிற்கும் காஞ்சி காமாட்சியினை அவளின் பெருமையுடன் பாட தொடங்கும் பட்டர் தொடர்ந்து பாடுகின்றார்
“ஒருவர் தம் பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே” என்கின்றார்
அதாவது இருபடி நெல்லில் உலகுக்கே உணவும் அறமும் கொடுத்தவள் நீ, அப்படிபட்ட உன்னை நான் பாடிவிட்டு பின் இன்னொருவரிடம் சென்று யாசகம் பெற பொய்யும் உண்மையும் கலந்து பாடுவது தகுமோ? அது உன் அருளாக இருக்குமோ? இருக்காது. உன்னை அண்டினால் எல்லாம் அடையமுடிய்ம் இன்னொரு இடத்துக்கு சென்று கை ஏந்தும் நிலை வராது என பாடி முடிக்கின்றார்
ஒருத்தியிடம் பிச்சைக்காரன் யாசகம் வாங்க செல்லும்பொழுது, அவள் எப்படி பொல்லாதவளாயினும் அவளை புகழ்ந்து உன்னைபோல் வருமா என பொய்யாக புகழ்ந்து பேசி அவள் மனம்குளிரசெய்து பிச்சை வாங்குவான்
அப்படியே புலவர்களும் பணக்காரனை பொய்யாக புகழ்ந்து பரிசுவாங்குவார்கள்
அன்னை இப்படி சர்வலோகத்துக்கும் எல்லாமும் படியளப்பவளாக இருக்கும் நிலையில் ஏன் இன்னொருவரிடம் சென்று பொய் சொல்லி யாசகம் பெறவேண்டும், அன்னையே எல்லாம் அருள்வாளே?
அன்னை உலக உயிர்க்கெல்லாம் படியளப்பவள், எல்லா அறகாரியங்களையும் செய்பவள், அப்படிபட்ட அன்னையினை சரணடைந்தால் யாரிடமும் கையேந்தி, பொய் சொல்லி யாசகம் பெற அவசியமில்லை என்பது பாடலின் பொருள்
இந்த பாடல் இன்னொரு யோக ரகசியத்தையும் சொல்லும், அது சுவாரஸ்யமானது
நாழி என்பதற்கு நாழிகை எனவும் பொருள் உண்டு, ஒரு நாழிகை என்பது இருபத்திநான்கு நிமிடம் என்பது கொண்டது
யோகத்தில் பிராணாயாமம் என்று சொல்லப்படும் மூச்சு பயிற்சி 12+24+12 என்ற மாத்திரை அளவு இருக்க வ் வேண்டும்
மாத்திரை என்பது நொடியினை குறிப்பது
அதாவது 12 நிமிடம் மூச்சை இழுத்து, 24 நிமிடம் அடக்கி 12 நிமிடம் வெளிவிடுதல் என்பதல்ல, 12 நொடி மூச்சை உள்ளிழுத்து, 24 நொடி அடக்கி வைத்து பின் 12 நொடி வெளிவிட வேண்டும் என்பது பொருள்
இருநாழிபடி மாத்திரை அளவு என்பதே கொள்ள வேண்டியது
மூச்சு இழுத்தல் (பூரகம்) மூச்சை அடக்கல் (கும்பகம்), மூச்சை விடுதல் (ரேசகம்) என்ற வழக்கின்படி உடலில் உள்ள உயிரை வெளியில் செல்ல ஒட்டாமல் காத்து நிற்கின்ற முறையினை இங்கு “இருநாழி” என்கின்றார்
இந்்த மூச்சு பயிற்சியை அமிர்த ப்ராணாயாமம் அமிர்த கும்பம், அமிர்த கடம், என்று குறிப்பிடுவர்.
திருக்கடையூரின் என்றும் இளமையுடன் இறவாமல் இருக்கின்ற மார்கண்டேயர் மூச்சில் சிவபெருமானை நிறுத்தி வழிபட்டார். அப்போது தான் கூற்றை சிவபெருமான் உதைத்தார் என்பது புராணம்
உண்மையில் திருகடையூரில் மார்கண்டேயனை சிவன் காத்தார் என்பது புராணமாக இருந்தாலும், இப்படி அமிர்த கடம் பயிற்சினை செய்தால் 100 ஆண்டு வாழலாம் என்பதே யோக தத்துவ பொருள்
இப்படி யோகத்தில் மூச்சு பயிற்சியில் நிலைத்திருந்தால் பெரும் ஞானம் கொட்டும் அந்த ஞானத்தில் “அறம்” எனும் செயல்களை நிறைய செய்யலாம், அது செய்ய செய்ய வீடுபேறு எனும் முக்தியும் வாய்க்கும்
இந்த யோகம் எனும் தத்துவத்தை சொல்லி அதனால் வீடுவேறு அடையும் வழி உண்டு என சொல்லும் பட்டர், இன்னொரு மதத்தை தேடி சென்று பொய்யும் மெய்யும் கலந்த அந்த மதங்களில் ஏன் ஏமாற வேண்டும் என்கின்றார்
அன்னையே இங்கு குருவாக இருக்க அவள் அருளிலே எல்லா ஞானமும் அறமும் வாய்க்க இன்னொரு மதம்காட்டும் பொய்வழி எதற்கு என சொல்கின்றார் பட்டர்
அதாவது அன்னையினை பணிந்தால் யோகம் கைகூடும், யோகம் கைகூடினால் அறம் செய்ய விழையலாம், அதனால் முக்திபெறு எளிதாகும் என்கின்றார் பட்டர்
சிவசக்தி தத்துவமே யோக தத்துவம் அதுவும் காஞ்சியில் இருக்கும் அன்னையின் அந்த “இருநாழி நெல்” என்பது யோகத்தை சொல்லும் பாடல் என்பதும் கவனிக்கதக்கது
ஆக இப்பாடல் இருபொருளை சொல்கின்றது
முதலாவது இருபடி நெல்லில் உலகுக்கே படி அளந்த அன்னையே அதனால் அறசெயல் எல்லாம் செய்வித்தவளே, உன்னை அண்டியபின் இன்னொருவரிடம் சென்று பொய்கலந்து பேசி யாசகம் பெறும் நிலைவருமோ வராது, உன் அருளே எல்லா தேவைகளயும் தீர்த்துவைக்கும் என்பது
இரண்டாவது அந்த 12+24+12 எனும் மூச்சுபயிற்சி அளவு, அதாவது பூரகம்,கும்பகம், ரேசகம் எனும் பயிற்சியினை இந்த மாத்திரை அளவில் வைத்து பிரணாயாமம் செய்தால் யோகம் கைகூடும், அந்த யோகத்தால் வீடுபேறை அடையாலாம், எந்த அந்நிய மார்க்கத்திடமும் வீழ்ந்து ஏமாறாத நிலைவரும் என்பதாகும்
மிகபெரும் விஷயங்களை , சிவன் பார்வதி இல்லறம் என்பதே யோக தத்துவம் எனும் சூட்சுமத்தை இங்கு மிக தெளிவாய் விளக்குகின்றார் பட்டர்