ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 04

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 04

“வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்
ஆயுமிடந் தானே சிவம்”

இக்குறள் “வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றின் உட்பொருளாய் ஆயுமிடம் தானே சிவம்” என பிரிந்து பொருள் தரும்

அதாவது காற்றாய் உயிராய் மற்றவற்றின் எல்லா உட்பொருளாய் இருப்பது சிவமே, ஆழ ஆராய்ந்தால் இதை உணரலாம் என்கின்றார் ஒளவையார்

இங்கு காணும் எல்லாவற்றுக்கும் ஒரு ஆயுளும் இயக்கமும் உண்டு, கல் மண் என சொன்னால் கூட அவைகளுக்குள்ளும் ஒரு சக்தி உண்டு, அதனால்தான் சில வகை மணல்கள் அணுகுண்டாய் மாறும் தன்மையினை பெருகின்றன‌

தாவரம் எனும் செடி கொடிகளுக்கும் உயிரும் சுவாசமும் உண்டு

அப்படி அசையாத உயிர்கள் மட்டுமல்லாமல் அசையும் எல்லா உயிருக்கும் சுவாசமும் உயிரும் முக்கியமானது இவை இரண்டும் இல்லாமல் உயிரகள் இயக்கம் இல்லை, அப்படியான சுவாசம் எனும் பிராணமும் உயிர் எனும் சக்தியும் இன்னும் எல்லாமும் சிவமே என்கின்றார் ஒளவையார்

உடலும் உயிரும் சுவாசமும் சிவமே என்பது ஒளவையார் சொல்லவரும் தத்துவம்

இதனாலே ஞானியர் எல்லா உயிரையும் நேசித்தனர், எல்லா உயிர்களிலுமெ சிவனை கண்டனர், பாரதி ஞான சுடராக “தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம்” என சொன்னதும் இதன் தத்துவமே