பழமொழி நானூறு : 24
“நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப்
புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல் – புல்லார்
புடைத்தறுகண் அஞ்சுவான் இல்லுள் வில்லேற்றி
இடைக்கலத்து எய்து விடல்”
ஒருவன் பெரும் அறிஞர்கள் இருக்கும் அவையில் தன் நாவை சுருட்டி மவுனம் காத்துவிட்டு எதுவுமே பேசாமல் திரும்பிவிட்டு, புல்லறிவினர் இருக்கும் இடத்தில் கல்லாதவர் இருக்கும் இடத்தில் தன்னை பற்றி பெருமையாக சொல்லுதல் என்பது வீட்டை சுற்றி பெரும் வீரர்கள் வளைத்து நிற்கும் நேரம் வீட்டினுள் இருந்து தன் வீட்டு சட்டிபானைகள் மேல் அம்பு எய்து வீரத்தை காட்டுவது போன்ற நகைக்குரிய செயலாகும் என்பது பொருள்
ஒருவன் தான் விஷயம் அறிந்தவனாக தன்னை கருதினால் அறிஞர் பெருமக்கள் இருக்குமிடத்தில் வாதிட வேண்டுமே தவிர, ஒன்றுமே அறியாத புல்லர்கள் முன் பேசுவது பெரும் நகைப்புகுரியது என்கின்றார் புலவர்