ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 200 – குருவழி / குறள் : 04
“தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால்
வலைப்பட்ட மானதுவே யாம்.”
இக்குறள் “தலைபட்ட சத்குருவின் சந்நிதி இல்லாமல் வலைபட்டமானது அதுவேயாம்” என இக்குறள் பிரிந்து பொருள் தரும்
அதாவது அறிவில் சிறந்த , முதிர்ச்சி அடைந்த சற்குருவின் சன்னதிக்கு செல்லாமல் அறியாமை வலையில் (கண்ணியில்) சிக்கிய மனதை விடுவிக்க முடியாது என்பது பொருள்
நல்ல குருவே ஒருவனுக்கு முதல் அவசியம், நல்ல குரு அமைந்துவிடுவதை போல வரம் வேறொன்றுமில்லை
குரு ஒருவனுக்கு ஞான வெளிச்சம் கொடுப்பார், குரு ஒருவனை அடுத்த ஞான நிலைக்கு அழைத்து செல்வார், குருவே ஒருவனை பரிபூரண நிலைக்கு கொண்டுவருவார்
எல்லோரும் குருவாகிவிட முடியாது, அதற்கு பல பிறவிகள் வேண்டும், இறைவனின் தனிபெரும் கருணை வேண்டும், அந்த குருவினை இறைவன் தேர்ந்தெடுத்து ஞான விளக்கை ஏற்றிவைப்பான், அந்த விளக்கு பல விளக்குகளை ஏற்றும், பலருக்கு வழிகாட்டும்
குரு ஒரு கைகாட்டி, குரு என்பவர் ஞானபடிகட்டு
தெரியாத ஊருக்கு வழிதேடி பல்லாண்டு செலவிட்டு அதை அடைவதை விட அல்லது செல்லமுடியாமல் தவிப்பதை விட வழிதெரிந்த ஒருவரிடம் கேட்டால் அவரே கூடவந்து சிலநொடிகளில் தேடும் இடத்தை அடையவவைத்தால் எப்படி இருக்கும்
அப்படி வருபவர்தான் குரு
குரு என்றால் ஒளி என பொருள்
குரு என்பது தொல்காப்பியத்திலே இருக்கும் சொல், இறைவனார் சிவனை குருவாக கொண்ட அகத்தியரை குருவாக கொண்ட தொல்காப்பியர் அந்த வார்த்தையினை அடிக்கடி சொல்கின்றார்
“குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே” என்பது தொல்காப்பிய வரி
எது வளருமோ, எது அடிப்படை முக்கியமோ, எது ஆதாரமோ அதையெல்லாம் “குரு” பெயரால் அழைப்பது இந்து மரபு
மரத்தின் வளர்ச்சிபாகத்தை “குரு”த்து என்பார்கள், எது மரத்தை வளர்க்குமோ அது “குரு”த்து
உடலினை இயக்கும் முக்கிய திரவத்தின் பெயர் “குரு”தி
எது வெண்மையானதோ அது குரு, இதனாலே வெள்ளை பொருளெல்லாம் பறவையெல்லாம் “குருணை” “குருகு” என பெயர் பெற்றது
குரு என்றால் முனைப்பு, முளைப்பு, குரு என்பது ஞானநிலைக்கு உயர்த்தும் பெரும் தத்துவபிம்பம்
குரு என்பவரின் பெருமையினை உணர்ந்துதான் ஞானிகளும் ரிஷிகளும் நல்ல குருவின் அவசியத்தை சொன்னார்கள்.
“குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே” என்பது திருமந்திரம்
“உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
“கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே”
என கந்தர் அனுபூதியில் குருவாக முருகனை பாவித்து பாடுகின்றார் அருணகிரிநாதர்
எல்லா வகைக்கும் ஒரு குரு அவசியம், அதுவும் ஞான நிலைக்கும் ஆன்மீக படிநிலைக்கும் ஒரு குரு அவசியம், குரு இல்லா ஆன்மீக தேடல் சூரியனில்லா உலகம் போன்றது
அதைத்தான் இங்கு பாடலாக சொல்கின்றார் ஒளவையார்