கந்தர் அனுபூதி : 05
கந்தர் அனுபூதி : 05
“மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை மடந்தையர் என்ற அயரும்
செகமாயையுள் நின்று தயங்குவதே”
இந்த பாடலின் வரியினையும் பொருளையும் ஒவ்வொன்றாக காணலாம்
“மக மாயை களைந்திட வல்ல பிரான்” என்பது முதல் வரி,
மகம் என்றால் மிகபெரிய மிக அதிகாரமும் வல்லமையும் கொண்ட வெளிப்பாடானது என பொருள், அப்படிபட்ட பெரிய மாயை என பொருள், களைதல் என்றால் நீக்குதல். அப்படியான பெரிய மாயைகளையும் நீக்க வல்லவரான முருகபெருமான் என பொருள்
“முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே” என்பது சிலேடை மொழி, அதாவது மாயையினை வெல்லும் வழியினை தன் முகத்தின் மொழியாக சொல்லும் முருகன் என்பதும், ஆறு முக தத்துவத்தின் வழியாக சொல்லும் முருகன் என்பதுமாக இருபொருள் உண்டு, பொருள் இரண்டு என்றாலும் அது சொல்லும் விளக்கம் முருக பெருமான் மாயையினை வெல்லும் வழியினை போதிக்கின்றார் என்பதே
முருகபெருமான் அந்த மாயையினை வெல்லும் வழியினை போதிக்கின்றார் என பொருள்
அடுத்த வரி “அகம் மாடை மடந்தையர் என்ற அயரும்” என வரும்
அகம் என்றால் வீடு என பொருள், மாடை என்றால் மாடு எனும் சொல்லின் திரிபு, மாடு என்றால் செல்வம் பொன் முதலான செல்வம், மடந்தையர் என்றால் பெண்
மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை எனும் மூன்று உச்ச ஆசைகளையும் சொல்கின்றார் அருணகிரியார், இந்த மூவகை ஆசையில் மூழ்கி போராடி சலித்து சோர்ந்து போகும் நிலையினை சொல்லும் அருணகிரியார் கடைசி வரிக்கு வருகின்றார்
“செசகமாயையுள் நின்று தயங்குவதே” இப்படி உலக (செகம் என்றால் உலகம்) மாயையில் சிக்கி தயங்கி நிற்கின்றேனே முருக பெருமானே என தன் வேதனையினை புலம்புகின்றார்
பாடலின் சுருக்கமான பொருள் என்னவென்றால் மிக பெரிய வல்லமையான மாயைகளையும் வெல்லும் வழியினை ஆறுமுக கடவுள் போதித்து என் முன்னால் நிற்கும் பொழுதும் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை எனும் ஆசைகளில் சிக்கி இந்த லவுகீக மாயையில் இருந்து வெளிவரும் வழி தெரியாமல் சிக்கியிருக்கின்றேனே, முருகபெருமானே மொழிந்தும் அந்த போதனையினை ஏற்காமல் தயங்கி நிற்கின்றேனே என்பது
இந்த பாடல் எளிமையாக தோன்றினாலும் உட்பொருள் மிக ஆழமானது
மாயை என்பதன் மாபெரும் விளக்கத்தை “மக மாயை” எனும் ஒரு வார்த்தையில் சொல்லிவிடுகின்றார் அருணகிரிநாதர், நம்மை அந்த வார்த்தையினை தேடிபிடித்து படித்து உணர்ந்து கொள்ள அழைக்கின்றார்
மாயை என்றால் என்ன?
மாயை என்பது ஒன்றுமில்லாதது, ஆனால் பரபிரம்மத்துக்கும் மானிட ஆத்மாவுக்கும் இடையே அது ஒரு பனிமூட்டம் போல நின்று மறைக்கின்றது , அது சிறிய விதைக்கு ஒப்பானது , சிறிய ஆலமரத்து விதை பெரிய மரத்தினை உருவாக்குவது போல, சிறிய மீன் முட்டை பெரிய மீனை உருவாக்குவது போல, ஒரு துளி ரத்தம் ஆறடி மனிதனையும் அவனின் மனதையும் உருவாக்குவது போல ஒரு விளக்கு ஓராயிரம் விளக்கை ஏற்றுவது போல அது பலுகி விரியும் சக்தி கொண்டது
அது பரம்பொருளில் தோன்றுகின்றது, அங்கேயே ஒடுங்குகின்றது , இந்த பெரும் அண்டம் அந்த மாயையில் தொடங்கி மாயையில் ஒடுங்கி பரம்பொருள் முன் சரணடைகின்றது என அதன் இயல்பை விளக்குகிறது சைவசித்தாந்தம்.
இல்லாத ஒன்று இருப்பதாக தோன்றி கடைசியில் இல்லாமல் போவதுதான் மாயை
அந்த மாயையினை மூன்று வகையாக பிரித்ததும் இந்துமதமே
தூய மாயை (சுத்த மாயை), தூய்மையில் மாயை (அசுத்த மாயை), பகுதி மாயை (பிரகிருதி மாயை) என மூன்று வகையாக அது பிரித்தது
நாதம், விந்து, நாதம், சதோக்கியம், ஈஸ்வரம், சுத்த வித்தை என அது சுத்த மாயையினை குறித்தது, இந்த சுத்த மாயைதான் எல்லா மூலங்களின் மூலமாக நிற்பது
இங்கு நாதம் என்பது சிவதத்துவம், விந்து என்பது சக்தி தத்துவம். சிவசக்தி இணைவால் அண்டமும் உலகமும் உண்டாயிற்று என்பது இதுதான்
சதாக்கியம் என்பது சதாசிவ தத்துவம் அதாவது படைத்தது இன்னும் விரிவடையும் நிலை
ஈஸ்வரம் என்பது சதாசிவத்தின் அடுத்த நிலை, அதாவது விரிந்த அண்டத்தில் இருந்து ஒவொன்றாக தோன்றும் அந்த படிநிலை
சுத்த வித்தை என்பது முத்தொழிலும் நடக்க தொடங்கும் நிலை படைத்தல் காத்தல் அழித்தல் என மூன்று இயக்கங்களும் மாறி மாறி நடக்கும் நிலை
அடுத்து அசுத்த மாயையினை காணலாம்
,காலம்,நியதி, ராகம்,வித்தை,புருஷன் (புருடன்), மாயை,கலை என அது ஏழு வகைபடும்
காலம் என்பது எல்லா படைப்புக்கும் ஒரு காலம் மட்டுமே செயலாற்றும் வரையறை உண்டு, அந்த கால அளவில் செய்யும் வினைகளுக்கும் அளவு உண்டு
நியதி தத்துவம் என்பது அந்ந்த காலத்தில் செய்த வினையின் பயனை குறிப்பது
கலை என்பது கிரியா சக்தி, ஒவ்வொரு ஆன்மாவுக்கும் விதிக்கபட்ட பணி அல்லது கடமை, இதனாலே ஒவ்வொரு மனிதனும் தனி தனி சிந்தையும் திறமையும் பெற்று விளங்குகின்றான், கலை என்பது அந்த கிரியா சக்தி
வித்தை என்பது கலையின் அடுத்த பரிணாமம், கலை எனும் அந்த மூலத்தின் வெளிப்பாடு வித்தை என்றாகும்
ராகம் என்பது வித்தைக்கேற்றபடி இழுத்து செல்லும் ஒரு சக்தி அல்லது வழி
புருடன் என்றால் இவை அனைத்தும் கலந்த ஆன்மா
மாயை என்பது இங்கு இவைகளெல்லாம் இறைவனில் இருந்து வந்தது என மறைக்கும் அந்த அறியாமை, ஆன்மா அறியாமையில் சிக்கி கிடக்கும்
“வித்தியா தத்துவம் ஏழும் வெருண்டோட
சுத்தபர் யோகத்தை துய்க்கும் நாள் எந்நாளோ
சுத்த வித்தையே முதலாய் தோன்றுமோ ரைந்து
தத்துவத்தை நீக்கியருள் சார்நாள் என்னாளோ? “
என தாயுமானவர் பாடிய பாடலின் பொருள் இதுதான், அந்த புலமபலைத்தான் அருணகிரியாரும் பாடுகின்றார்
அடுத்து பிரகிருதி மாயையினை காணலாம்
இது 24 வகையாக பிரிக்கபடும்
மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என நான்கு
ஸப்தம்,( ஓசை ),ஸ்பர்சம் ( தொடு உணர்ச்சி ),ரூபம் ( உருவம் அறிதல்),ரஸம் ( ருசி ), வாசனை
ஆகியன தன்மாத்திரைகள் ஐந்து
மெய் ( உடல் ),நாக்கு,கண்,மூக்கு செவி,ஆகிய ஐந்து ஞானேந்த்ரியங்கள்
கை,கால்,வாய்,குறி,எருவாய். ஆகியன ஐந்து கர்மேந்திரியங்கள்
ஆகாயம்,காற்று,நெருப்பு( அக்னி),நீர்,நிலம்.,(மண் ) ஆகிய ஐந்து பூதங்கள்
ஆக மொத்தம் பிரகிருதி மாயைகள் 24
மொத்தம் 36 வகை தத்துவங்களை கொண்டதுதான் இந்த அண்டமும் மானிடமும் , 36 வகை தத்துவம் எனும் மாயைகள் மானிட உடலாகவும் ஆத்மாவாகவும் உண்டு
இப்படி தத்துவங்கள் மொத்தம் மூன்று பிரிவுகளகா 36, இந்த அடிப்படையில்தான் மாயை அமைக்கபட்டிருக்கும்
(இங்கு ஒரு கேள்வி எழலாம் எல்லாம் மாயை என்றால் சிவனும் சக்தியும் முத்தொழில் செய்யும் தெய்வங்களும் மாயையா?
ஆம், மூல பரம்பொருளை தவிர எல்லாம் மாயையே, அந்த மூல பரம்பொருளைத்தான் பரபிரம்மம் என்றும் ஆதிபராசக்தி என்றும் அழைக்கின்றது இந்துமதம் . சிவனும் சக்தியும் அந்த மூலபரம்பொருளின் சாயலே
யுகத்துக்கு ஒரு பிர்ம்மன் என சொல்லபடும் தத்துவம் இதுதான், சண்டேஸ்வரர் மாறுவர் என்பதும் இதுவேதான்
மும்மூர்த்திகள் கூட சுத்த மாயையில்தான் வருவார்கள்
சுத்த மாயை பரம்பொருளை போதிக்க வைக்கும் நல்ல மாயை, அது சாட்சாத் பரம்பொருளின் நிழல் என்பதால் அவற்றின் வழியாக பரம்பொருளை நோக்கி செல்லலாம் அது சரியான வழி )
இப்படி அண்டமும் அதில் இருக்கும் படைப்பும், அந்த படைப்புக்களின் ஒன்றான அற்ப மானிடனும் மாயை என்பதுதான் பாடலின் பொருள்
(“அகம் மாடை மடந்தையர் என்ற அயரும் செகமாயையுள்” என்பது இன்னொரு பொருளிலும் பிரியும்
அகம் ஆடை மடந்தை எனவும் வரும், அதாவது அகமான மனதில் மூடியிருக்கும் மாய ஆடையின் மடத்தனம் என்பதும் பொருள், அதை கடந்த அதாவது மாயை கடந்த தெளிவான ஞானமே உலக மாயையினை நீக்கும் என்பது வரியின் இன்னொரு கோணம் )
இங்கு காணும் காணாதவை எல்லாம் மாயை, ஆனால் எல்லாம் நிஜம் போல மானிடனை அவன் அகங்காரத்தில் மும்மலத்தில் இழுத்து போட்டு இயக்கி பிறவி சுழலில் சுற்ற வைக்கின்றது, அவனால் மாயையினை மீறி அந்த பரம்பொருளை நினைத்து பார்க்க முடியவில்லை
அறியாமை அதை செய்கின்றது
(பரம்பொருள் என்பது இந்த மாயைகளை கடந்த ஜோதி, அது உருவாவதுமில்லை அழிவதுமில்லை என்றும் நித்தியமானது, அந்த மூலபரம்பொருளுடன் இணைவதுதான் சமாதி பெருநிலை அது மாயையினை கடந்த நிலை )
இப்படி மாயைகள் மொத்தத்தையும் மக மாயை என ஒரே வரியில் சொல்கின்றார் அருணகிரியார், இந்த மாயைகள் என்பது மிக பெரிது, அந்த மாயையில் ஒரு துளிதான் இந்த பூமி, அந்த பூமியின் ஒரு சிறு புல்தான் மனிதனும் அவன் கொண்டிருக்கும் ஆசைகளும்
அந்த அளவு எல்லாம் தெரிந்தும் மானிட எல்லை தாண்டிய மாயைகளையும் தெரிந்தும் அருணகியார் புலம்புகின்றார்
இந்த வழி எப்படி என சிந்திக்கும் அருணகிரியார், அதாவது 36 வகை மாயைகளை வெல்லும்வழி தெரிந்தும் அதனை எப்படி பின்பற்றுவது என தவிக்கும் அருணகிரியார் அதற்கு முருகபெருமானே வழிகாட்டியிருப்பதாக சொல்கின்றார்
அவரே தன் திருபுகழில் அதனை பாடியும் இருக்கின்றார்
“ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞான மொழிபேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரைவ தைத்தமுகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுக மானபொருள் நீ அருளல் வேண்டும்”
இங்கு மயிலேறும் முருகன் என்பது யோகத்தில் அமரும் நிலையினைசொல்கின்றது, மயில் பறப்பது போல முருகபெருமான் குண்டலி யோகத்தில் சக்தியாய் மேலேழுந்து வருவார், அந்த யோகத்தில் ஞானம் தெரியும், ஞானத்தில் முருகபெருமான் தெரிவார் என்பதே
யோகத்தில் அமர்ந்திரு என முருகன் சொல்வது முதல் வழி
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் என்பது சுத்த மாயையினை அகற்றுவது முருகபெருமானால் அது கைகூடும்
அடியார் வினை தீர்க்கும் முகம் என்பது அடியார்களின் கர்மவினையினை முருகபெருமான் தீர்த்து வைப்பான் என்பது
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே என்பது அன்னை சக்தியிடம் இருந்து அருள்பல பெற்று தருவான் முருகன் என்பது
மாறுபடு சூரரைவ தைத்தமுகம் ஒன்றே என்பது மாறிகொண்டே இருக்கும் மனதின் மும்மலங்களை, அகங்கார ஆணவத்தை அகற்றுதல் என்பது
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே என்பது ஒரு தத்துவம், வள்ளி மானிட பெண் முருக பெருமானோ தேவர் எனும் குலம், மானிடரான வள்ளியினை தேடி முருகன் வந்தான் என்பது ஜீவாத்மாவினை தேடி பரமாத்மா காத்து கொண்டிருக்கின்றார், உரிய நேரத்தில் அவர் தன்னோடு ஜீவாத்மாவினை கலப்பார் என்பது
ஆக முருகபெருமானின் ஆறு முகங்கள் சொல்லும் வழிகளும் பக்தன் தன்னை அண்டி இந்த மாயைகளை கடக்க வழி சொல்லும் போதனைகள், அந்த வழியினை முருகபெருமான் போதிப்பதாக சொல்லும் அருணகிரியார் அவ்வழியில் மாயைகளை அகற்றலாம் என்கின்றார்
இன்னும் ஒரு தத்துவம் உண்டு, அது முருகபெருமானின் 12 கரங்களும் ஆறு முகமும் மொத்தம் 18 என்றாகின்றது
அவ்வகையில் பதினெட்டு வகை புராணங்கள் உண்டு
இன்னும் ஆழமாக சொன்னால் சாஸ்திரம் வேதம் புராணம் என மொத்தம் 18 உண்டு 18 புராணங்களும் இந்த வேத சாஸ்திரங்களின் வெளிப்பாடே
முருகபெருமான் வேதமும் சாஸ்திரமுமாக புராணமுமாக நிற்கின்றார், மாயைகளை வெல்ல எல்லா வழியும் காட்டுகின்றார், அவரே ஞானபண்டிதன் அவரை அண்டினால் அவரை வணங்கி நின்றால் மாயையினை வெல்லலாம்
முருகபெருமான் 36 வகை மாயைகளுகும் அப்பாற்பட்டவர், அந்த சூரன் இந்த 36 தத்துவங்களையும் தன்னிலே கொண்டிருந்தான் என்பது கவனிக்கதக்கது
சூரன் என்பவன் தவத்தால் எல்லா வரமும் பலமும் பெற்றவன் அல்ல என்பதல்ல விஷயம், அவனுள் இந்த 36 வகை மாயைகளும் இருந்தது
மானிடம் தாண்டி அண்டவெளி பிரபஞ்ச மாயை எல்லாம் அவனுள் இருந்தது
முருகன் சூரனை பணியவைத்து தன்னோடு ஏற்றுகொண்டார் என்பது ஆன்மாவினை 36 வகை மாயைகளில் இருந்தும் மீட்கும் வல்லமை முருகனுக்கு உண்டு என்பதே
அதைத்தான் இங்கு சொல்கின்றார் அருணகிரியார்
மாபெரும் பிரபஞ்ச மாயைகளை எல்லாம் வெல்லும் வழியினை முருகன் போதித்தும் நான் உலக மாயைகளான மண், பொன், பெண் ஆசைகளை மீறமுடியாமல் தவிக்கின்றேனே என்கின்றார் அருணகிரியார்
அவர் அப்படி தயங்குவதாக சொன்னாலும் பாடலின் பொருள் இதுதான்
முருகபெருமான் எல்லா மாயைகளையும் , மாபெரும் மாயைகளையும் அழிக்க வல்லவர், அவ்ரை அண்டினால் பெரும் மாயைகளே அகலும் பொழுது இந்த மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை போன்ற மாயைகளும் அழியும், அந்த மாயைகள் அழியும் பொழுது ஆத்மா ஞானத்தில் நிறைந்து பரம்பொருளுடன் சங்கமாகும்
அந்த சங்கமமே அனுபூதி நிலை, அந்த சங்கமே ஆனந்த பெருநிலை
அந்த நிலையினை அந்த முழு நிறைவினை பூமியின் எந்த மாயையினாலும் கொடுக்க முடியாது, நிறைவில்லாத அற்பமானது மாயை அதனால் முழு நிறைவினை ஒரு காலமும் கொடுக்க முடியாது, முழுமையான நிறைவு என்பது பரம்பொருளில்தான் கிடைக்கும், அதை கொடுப்பவர் முருகபெருமான் அதுவே அனுபூதி நிலை என்பதை மறைமுகமாக சொல்கின்றார் அருணகிரியார்