குலேசனின் கதை
பகவான் கிருஷ்ணனின் அவதாரம் அரசுரர்களையும் அதர்மத்தையும் அழிப்பதற்கு என்றாலும் அங்கு அந்த பரந்தாமனின் ஒவ்வொரு அசைவும் வாழ்வுக்கும் ஆன்மீகத்துக்குமான தத்துவ போதனைகள்
விளையாட்டாகவும், புன்னகையடனும், இயல்பாகவும் அவன் நடத்திய ஒவ்வொரு காட்சியும் ஆழ்ந்த போதனைகளை வாழ்வுக்கும் ஆத்மாவுக்கும் போதித்தது, அப்படி கண்ணன் நடத்தியதுதான் அந்த குலேசன் கதை
அந்த குலேசனின் கதை எப்பொழுது படித்தாலும் உருக்கமானது, பல தத்துவங்களை போதிப்பது
பகவான் கண்ணன் இளவயதாயிருந்த பொழுது அவனுக்கிருந்த பல நண்பர்களில் குசேலனும் ஒருவன்
பின்னாளில் கண்ணன் பெரும் அரசை அமைத்து துவரகாபுரி அரசனாகின்றார், குசேலன் 27 குழந்தைகளுடன் சிரமபடுகின்றான்,
கண்ணணின் அரசு பற்றியும் , கொடை பற்றியும் அறிந்தாலும் , கண்ணனிடம் சென்றால் தன் வாழ்வின் கஷ்டமெல்லாம் தீரும் என கருதினாலும், எத்தனையோ பேருக்கு, அறிமுகமே இல்லாதோரையெல்லாம் வாழவைக்கும் கண்ணன் தன்னையும் வாழவைப்பான் என நம்பிக்கை இருந்தாலும் இரு விஷயம் அவருக்கு தடையிடுகின்றது
முதலில் கண்ணனிடம் கை ஏந்த அவனின் தன்மானமும் கவுரவமும் தடுக்கின்றது, இரண்டாவது மாபெரும் மன்னனாக இருக்கும் கண்ணன் தன்னை இந்த எளியவனை ஏறேடுத்தும் பார்ப்பானா எனும் தயக்கமும் இருக்கின்றது
வாழ்வு அவனை அழுத்துகின்றது, வாழ்வின் சுமையும் வலியும் தாளாது தளர்ந்துவிட்ட அவன் கடைசி நம்பிக்கையாக கண்ணனை சந்திக்க கிளம்புகின்றான், மன்னனை சந்திக்க செல்லும் பொழுது வெறும் கையுடன் செல்ல கூடாது என்பது மரபு
அவன் வீட்டில் இருந்தது பிடி அவல் மட்டுமே, கண்ணனுக்கும் அவனுக்கும் நட்பு இருந்த காலங்களில் நட்பின் அடையாளமாக அவர்கள் பகிர்ந்து கொண்டதும் அதுதான்
அந்த அவலை பழைய நட்பின் அடையாளமாகவும், அதுதான் கண்ணனுக்கும் தனக்குமுள்ள தொடர்பு என்பதாகவும் காட்ட முடிந்து செல்கின்றான்
தன்னை அடையாளம் தெரியாவிட்டாலும் அவல் மூலமாவது அவன் அறிந்துவிட மாட்டானா என ஒரு சிறிய நம்பிக்கை அதனில் இருந்தது
துவாரகாபுரியில் கண்ணன் வாழ்ந்த அரண்மனைக்கு ஈடாக இன்றுவரை ஒன்று இல்லை அந்த அளவு அழகும் செழுமையும் கொண்ட அரண்மனையில், எங்கும் செல்வமும் தங்கமும் குவிந்தாடும் மாளிகையில் அழுக்கு ஆடையுடனும் வாழைதார்போல் குனிந்த முதுகுடனும், தளர்ந்த உடலுடனும் முகமெல்லாம் ஏக்கத்துடனும் செல்கின்றான் குசேலன்
வறுமை கொடிது, அதுவும் வறுமையில் நண்பனிடம் சென்று நிற்பது கொடுமைகளிலெல்லாம் கொடிது
அவனை கண்டதும் குசேலுக்கு கண்ணீர்தான் வந்தது, யாரிடமும் எக்காலமும் கையேந்த கூடாது என கருதினானோ அந்த கண்ணனிடம் சரணடைய வரும்பொழுது கண்ணீர்தான் முந்தியது
“கண்ணா” என அழைக்கும் குரலை கேட்டவுடன், தாயினை குரல் கேட்ட கன்றுபோல் துள்ளிவந்தான் கண்ணன்
வந்தவன் அவனை கட்டிஅணைத்து கொண்டான், அவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை, என்னை காணவா வந்தாய் என்றவன் அவனை தங்க ஆசனத்தில் அமரவைத்தான்
அத்தோடு விட்டானா?
இந்த கால்கள் தானே என்னை தேடியது என சொல்லி அந்த பாதங்களுக்கே நீராட்டி பூஜித்தான்
குசேலன் திகைத்தான், நாராயணின் அம்சமாக யாரும் வெல்லமுடியாதவனாக உலகின் மாபெரும் ஒரே மன்னனாக வீற்றிருக்கும் பரமாத்மா தன் பாதத்தை பிடிப்பதா என பதறும்பொழுது கண்ணன் நிமிராமல் சொன்னான்
“இன்று நான் மன்னன், ஆனால் அன்று ஒரு இடையனாக மாடுமேய்த்தபொழுது என்னோடு விளையாடியதும் எனக்காக உணவு சுமந்ததும் இந்த கால்கள், எனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலையும் கொடுத்தது இந்த கால்கள், என்னை தடுக்காதே குசேலா”
குசேலனிடம் பதில் இல்லை, பதில் அவசியமுமில்லை
சற்று இயல்புக்கு வந்தாலும் குசேலன் தடுமாறினான், தயங்கினான்
அந்த மாளிகையினையும் கண்ணனின் தெய்வீக வாழ்வையும் பார்க்கும் குசேலன் இவனிடம் எப்படி அவலை கொடுப்பது என நெளிகின்றான், அவமானம் அவனை சூழ்கின்றது
முக்காலமும் உணர்ந்த கண்ணன், என்னை பார்க்க வெறுங்கையோடு வந்திருக்கமாட்டாயே என கேட்கும் பொழுது தன் மடியில் இருக்கும் அவலை மறைக்கின்றான் குசேலன்
“என்ன மறைக்கின்றாய் குசேலா” என உரிமையோடு அந்த அவலை வாங்கும் கண்ணன் அதை உற்று பார்த்து தன் மர்ம புன்னகையில் சொல்கின்றான், ஆம் குசேலன் நிலை அவலில் தெரிந்தது
அவல் என்பது அப்படி தயாரிக்கபடுவது, நெல்லை ஊற்வைத்து பின் அதற்கான பிரத்யோக வழிகளில் இடித்து அவலாக்குவார்கள், உரலில் இடிபடும் நெல்லைவிட அவலாகும் நெல் படும் பாடு அதிகம்
வாழ்வில் மிகவும் அடிவாங்கி நொந்து நைந்துவிட்டான் குசேலன் என்பதை அந்த அவல் சொன்னது
அவன் கஷ்டத்தையெல்லாம் தான் ஏற்பதாக, அதன் அடையாளமாக பிடி அவலை தன் வாயில் இட்டான் கண்ணன்
இது நடந்த வரலாறு என கண்ணன் வாழ்வு சொல்கின்றது, வரலாற்றிலும் நிலைத்தாயிற்று
கண்ணன் ஒரு தத்துவ அவதாரம், குசேலன் வாழ்வில் கண்ணன் சொல்லவரும் தத்துவம் இதுதான்
எல்லோரும் குழந்தையாய் இருக்கும் பொழுது கடவுள்தன்மையிலேதான் இருக்கின்றோம், அப்பொழுது ஈகோ எனும் வறட்டு கவுரவம், தன்மானம், தான் எனும் அகம்பாவம் என எதுவுமில்லை
மானிடன் வளர வளர அவை எல்லாம் வளர்கின்றன, ஒரு கட்டத்தில் அவை மானிடனை முழுக்க ஆக்கிரமிக்கின்றன, எல்லோர் மனமும் நான் யார் தெரியுமா? நான்… என்னுடையது.. என் சக்தி.. என் அந்தஸ்து.. என் கவுரவும் என்பதில் நிரம்பிவிடுகின்றது, கூடவே பாசமும் பந்தமும் அதனை உரமிட்டு வளர்க்கின்றன
அந்த மாயையினை உடைக்கத்தான் வாழ்வின் ஞானம் பெற சங்கடங்களும் தொல்லைகளும் வருகின்றன. வாழ்வில் ஒவ்வொரு கஷ்டமும் பகவானிடம் நம்மை சேர்க்கும் படிகட்டுக்கள்
ஒவ்வொரு கஷ்டமும் பிரச்சினையும் பகவானிடம் கரைசேர்க்கும் அலைகள்
குசேலனுக்கும் அதுதான் நிலை அந்த கொடிய வறுமையிலும், கால்பிடி அரிசி இல்லா நிலையிலும் கவுரவமும் , வீண் தன்மானமும் ஒரு மனிதனை கடவுளிடம் வர தடுக்கின்றது
தற்பெருமை போல் பெரும் பகைவன் இல்லை, கவுரவம் போன்ற கொடிய துன்பமில்லை
என்று அவை எல்லாம் தாண்டி பகவானே சரணம் என ஒருமனிதன் தன் தெய்வத்தை தேடி ஓடுகின்றானோ அத்தெய்வம் அவனை எதிகொண்டு வரும்
அவனை ஆனந்த கண்ணீரோடு வரவேற்று கட்டி தழுவி கொள்ளும்
ஆம் குசேலனிடம் அவனின் கவுரவமும் தன்மானமும் அழியும் பொழுது எஞ்சியிருந்தது அவல்தான், அதைத்தான் கண்ணனுக்காய் கொண்டு சென்றான்
வாழ்வில் தற்பெருமையும் அகந்தையும் வீண் வறட்டு கவுரவமும் உடையும் நேரம் உன்னிடம் என்ன இருக்கின்றதோ அதை தெய்வத்துக்கு கொடு, முதல் காணிக்கையாக கொடு அத்தெய்வம் உன்னை எல்லா ஆசியோடும் காக்கும் எனும் தத்துவம் அது
பிறக்கும் பொழுது தெய்வாம்சமாய் இருக்கும் மனதை வளர வளர சூழும் வீண் பிடிவாதமும் வறட்டு கவுரவமும் ஒருவனை பல சிக்கல்களில் தள்ளும்
அந்த சிக்கலும் பிரச்சினைகளும் அவனை அழிக்க அல்ல, ஞானம் கொடுக்க
எப்பொழுது ஒருவன் தற்பெருமையினை விட்டு , கவுரவத்தைவிட்டு பகவானிடம் சரணடைகின்றானோ அவன் வாழதொடங்குவான்
கண்ணனை கவனியுங்கள், அவன் கொஞ்சமும் தான் அரசன் என்ற அகந்தையில் இல்லை, ஏழையா நீ , என் வீட்டு படியேறுவதா எனும் அகங்காரம் இல்லை
அவன் அதே ஆயர்பாடி கண்ணனாக இருந்திருக்கின்றான்
ஆம், தெய்வம் எப்பொழுதும் அதே உயர்ந்த நிலையில்தான் இருக்கின்றது. அதற்கு ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் பூசாரி, பாவி, நல்லவன் கெட்டவன் என எதுவுமில்லை
தன் குணத்தோடு பிறந்து வளர வளர தெய்வீகத்தை இழந்த மனிதன் தன்னை நோக்கி வரும்பொழுது அவனை அணைக்க அது தயாராக இருகின்றது
இந்த குசேலன் கதையின் வரிகளை கவனியுங்கள்
ஆம் 27 குழந்தைகள் என்பது, 27 நட்சத்திரங்களை குறிப்பது. உலகின் எந்த மனிதனும் இந்த 27 நட்சத்திரத்தில் ஒருவனே
இந்த குசேலன் முதலிலே கண்ணனை அணுகியிருந்தால் 27 குழந்தைகளும் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கும் வறுமையில் சிக்கியிறா
ஆனால் குசேலனின் தயக்கமும் ஒருவித சுயகர்வமும் அவற்றை வறுமையில் தள்ளின, எந்த ஒரு மனிதனுக்கும் இருக்க கூடா தயக்கம் அந்த சுயகர்வம்
இதுதான் 27 குழந்தைகளின் தத்துவம், 27 குழந்தைகளின் பொதுவான தந்தை குசேலன் என்பது, உலகின் எல்லா மனிதருக்கும் பொதுவான குணம் வீண் கர்வம் என்ற பொருளில் அழகாக சொல்லபடுகின்றது
குசேலன் கண்ணன் கதை, நட்புக்கு மட்டுமல்ல , ஆழ்ந்த ஞானமிக்க தத்துவங்களை உள்ளடக்கியது
கண்ணனை கொண்டாடும் தேசத்தில் கேரளாவில் குருவாயூர் கோவில் கண்ணனுக்கு பிரசித்தி
அங்கு இன்று அவல் சகிதம் இக்காட்சி கொண்டாடபடும், ஒரு மார்கழி முதல் புதனில் குசேலன் கண்ணனை காண சென்று வளம் பெற்றதாக ஐதீகம்
இதனால் இந்த புதன் குசேலனுக்கானது
தெய்வம் நம்மை எப்பொழுதும் எந்த நொடியும் அரவணைக்க தயாராய் இருக்கின்றது, மனிதனே அதை நாடாமல் மாயையில் சிக்கி பல நெருக்கடிகளில் சிக்குகின்றான், அவனின் குழந்தை இயல்பான தெய்வத்திடம் அவன் சரணடைந்தால் அவனுக்கு சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பதை சொல்லும் நாள் இது
கடவுளை விட்டு விலக விலக துன்பம் தொடரும், அவனை தேடி சென்று சரணடைந்தால் துன்பம் தீரும்
“அர்ஜூனா என்னை சரணடை..” என நேரடியாக சொன்னான் கண்ணன், “குசேலா என்னை தேடி வா..” என சொல்லாமல் சொன்னான் கண்ணன்
ஆம் தெய்வத்திடம் சரணடைவதே எல்லா சிக்கலில் இருந்துவிடுவிக்கும் என்ற ஞானத்தோடு இந்து சமூகம் இந்த குசேலன் கதையினை நினைவு கூர்ந்து கண்ணனிடம் சரணடைந்து கொண்டிருக்கின்றது
அவனும் சரண்டைவோர் எல்லோரையும் ஆசீர்வதித்துகொண்டிருக்கின்றான்
அவல் என்பது குசேலலின் கடைசி உணவு அல்லது அவனின் கடைசி ஆதார நம்பிக்கை. அதனை கண்ணனுக்கு கொடுத்தான் அவன் சிரமமெல்லாம் தீர்ந்தது
எதை உங்கள் நம்பிக்கை நங்கூரம் ஆதாரம் என கருதுகின்றீர்களோ சற்றும் தயங்காமல் அதை கண்ணனுக்கு கொடுங்கள், மனதார கொடுங்கள் அப்பொழுது இந்த ஜீவாத்மாவினை அந்த பரமாத்மா மாபெரும் வரவேற்புடன் அணைத்து கொள்வான், அவன் தொட்ட நேரம் எல்லா துன்பமும் பரந்தோடும்
குசேலனாக உங்களை கருதி மனமார சரணடைந்து , உங்கள் பிரச்சினைகளையெல்லாம் அவலில் ஏற்றி அவனுக்கு படையுங்கள்,
அது உங்களின் நொந்த மனமாக அவன் காலடியில் விழட்டும், உலகை காக்கும் அந்த பரமாத்மா குசேலின் கஷ்டத்தையெல்லாம் அவலாக ஏற்று அவனை வாழவைத்தது போல் உங்களையும் வாழ்வைப்பார்
எப்பொழுது கண்ணனை சரணடைவீர்களோ அப்பொழுது எல்லா கஷ்டத்துக்கும் அவனே பொறுப்பேற்றுகொள்கின்றான்
அந்த கண்ணனுக்கு நைந்த மனதினை அவலில் கலந்து வைத்து அந்த பரந்தமானின் பாதங்களில் சரணடையுங்கள், உங்கள் பாதங்களை தாங்க அந்த பரமாத்மா உங்கள் அருகிலே தயாராக நிற்பான், அப்படியே உங்களின் எல்லா துயரமும் ஒரு நொடியில் மறையும் அவனின் ஆசி எங்கும் நிறைந்திருக்கும்
உலகெல்லாம் ஏதோ நாளில் “நண்பர்கள் தினம்” என்பது இப்பொழுது மேற்கத்திய கூவலாக இருக்கலாம், ஆனால் வரலாற்றில் முதன் முதலில் நண்பர் தினம் கொண்டாடி வழிகாட்டியது கண்ணனே
அவ்வகையில் இந்து தர்மத்தின் “நண்பர்கள் தினம் இன்றுதான்”
சர்வம் கிருஷ்ணார்பணம்.