பண கட்டுப்பாட்டினை தொடர்ந்து தங்க கட்டுப்பாடு

பண கட்டுப்பாட்டினை தொடர்ந்து தங்க கட்டுப்பாடும் அறிவித்துவிட்டார்கள், ஒரு பெண் 500 கிராம் வைத்துகொள்ளலாமாம், ஒரு ஆண் 100 கிராம் வைத்துகொள்ளலாம், அதற்கு மேல் வைத்திருந்தால் அரசு சும்மா இருக்காதாம்

இவர்களுக்கு என்ன ஆயிற்று என தெரியவில்லை, ஒரு மாதிரியாக அறிவித்துகொண்டே இருக்கின்றார்கள். அடுத்த குறி நிச்சயம் நிலமாக இருக்கும், அது இந்திரா காலத்திலே வந்ததுதான் எனினும் இவர்கள் எப்படி அறிவிப்பார்கள்

ஒருவனுக்கு 1 செண்ட் நிலம் போதும், 4 பேர் உள்ள குடும்பம் 3 அறை உள்ள வீட்டில்தான் தங்க வேண்டும் என்ற அளவிற்கு செல்லலாம்

அடுத்து உணவில் கை வைக்கலாம், எல்லோரும் காலை 2 சப்பாத்தி மதியம் கொஞ்சம் சோறு, இரவில் கஞ்சி அதற்கு மேல் உண்டால் அரசுக்கு வரி கட்டவேண்டும் என்ற அளவிற்கு வரலாம்

கோவணத்தை தவிர எல்லா உடைகளுக்கும் விலை கட்டுபாடு வந்தாலும் வரலாம், காவி சாமியார்களுக்கு விலக்கு இருக்கலாம்

வெளிநாடுகளில் கடும் வரி விதிப்பு உண்டென்றாலும், அங்கு கல்வி, மருத்துவம் என எல்லாம் இலவசம், மக்களுக்கு சேர்த்துவைக்கும் அவசியம் இல்லை, சந்தோஷமாக கட்டுவார்கள்

இங்கு அரசு முதல்வரே தனியார் ஆஸ்பத்திரியில்தான் சிகிச்சை பெறுவார், கல்விக்கு கட்டும் பணம் என்ன என்பது மூவேந்தர் மதனை கேட்டாலே தெரியும்

ஆக அரசும் மக்களுக்கு ஒன்றும் செய்யாது, மக்கள் பணம் சேர்த்து செய்ய முயன்றாலும் அது பதுக்கல் பணம் என கைபற்றுவார்களாம்

இந்திய குடும்பங்கள் ஸ்பெஷாலிட்டியே பணம் சேமித்து பிள்ளைகளை படிக்க வைப்பதும், நகை சேர்த்து பிள்ளைகளுக்கு திருமணம் செய்வதுமே. வாழும் இந்தியர்கள் அதற்காகவே வாழ்கின்றார்கள்

நல்ல அரசு கல்வி கொள்ளையினை நிறுத்திய பின்பு, மருத்துவமனை கொள்ளையினை கட்டுபடுத்தியபின்புதான் மக்கள் பணத்தில் கை வைக்க வேண்டும்

ஆனால் அவன் கொள்ளையடிப்பதை அடிப்பான், நீ கையிலிருப்பதை கொடு என்பது நிச்சயம் ஏற்றுகொள்ள முடியாதது

ஒரு குடும்பம் இவ்வளவுதான் பணம் வைத்திருக்க முடியும், சரி அப்படியானால் நீங்கள் படிக்க வைப்பீர்களா? பதில் இருக்காது

ஒரு குடும்பம் இவ்வளவு நகைதான் வைத்திருக்கவேண்டும், இவ்வளவு திருமண செலவுதான் செய்யவேண்டுமாம்

சரி அப்படியே ஜோடிபார்த்து செலவழித்து பந்தல் அமைத்து நீங்களே திருமணமும் செய்து வைத்து விடுங்கள், பெற்றோர் எதற்கு?

சுத்த கம்யூனிச நாடுகளில் கூட இம்மாதிரி கோமாளி கூத்துக்களை பார்க்க முடியாது

கருப்புபணம் ஒழித்தோம் என்கின்றார்கள், எவ்வளவு ஒழித்தீர்கள் என்றால் பதில் இல்லை, எந்த பணக்காரனிடம் எவ்வளவு கைபற்றீனீர்கள் என்றால் சுத்தமாக பதில் இல்லை

இப்பொழுது தங்கத்திற்கு வந்துவிட்டார்கள், குஜராத்திய வைர வியாபாரம் பற்றி நாம் பேச கூடாது

இனி நிலம் என்பார்கள், அரைநாண்கொடி என்பார்கள்

இந்திய வாழ்க்கை என்பது அவரவர் குடும்பங்களுக்காக வாழ்வது, அந்த வாழ்க்கையின் அடிநாதமே தன் பிள்ளைகளுக்கு சேர்த்து வைப்பதுதான், அதில்தான் இந்தியா இன்றளவும் இயங்கிகொண்டிருக்கின்றது

இவர்கள் இன்னும் 3 ஆண்டுகள் இருப்பதை கூட பூர்த்தி செய்யமாட்டார்கள், நிச்சயம் இடையிலே போட்டுவிட்டு போகும் ஆபத்து அல்லது மகிழ்ச்சி இருக்கின்றது

கச்சா எண்ணெய் தடுமாறும்பொழுதே இப்படி தவிக்கும் இவர்கள், பழைய விலை இருந்தால் தேசத்தை திவாலாக்கி இருப்பார்கள்

மக்களின் கோபம் பல இடங்களில் அதிகரித்துகொண்டே செல்கின்றது,, இவர்களோ ஆண்டாண்டு காலம் ஆளப்போவதை போல அறிவித்துகொண்டிருக்கின்றார்கள்

கையில் இருந்த பணத்தை பறித்தாகிவிட்டது, கழுத்தில் தொங்கும் நகையில் கைவைத்தாகிவிட்டது, இனி இருப்பட்து உணவும் உறைவிடமும் தான்

கொஞ்ச கொஞ்சமாக தெருவில் நிறுத்தும் திட்டத்தினை தொடங்கிவிட்டார்கள்.

இனியும் தேசம் அமைதியாக இருக்க வாய்ப்பில்லை, கச்சா எண்ணையில் மிச்சமாகும் அந்நிய செலாவணியினை என்ன செய்கின்றார்கள் என்றே தெரியவில்லை

நோயாளி நலம்பெற கொடுக்கபடும் மருந்துகளில் கூட கட்டுப்பாடு உண்டு, ஒரு மாதம் எடுக்கவேண்டிய மருந்தினை ஒரே வாயில் பிடித்து ஊற்றினால் நோயாளி எப்படி பிழைப்பான்

இங்கு அதுதான் நடந்துகொண்டிருக்கின்றது, ஒவர் நடவடிக்கைகள் நாட்டிற்கு நல்லதல்ல‌

சோவியத் யூனியன் சிதற கார்பசேவ் கொண்டுவந்த பெஸ்தரிகா எனும் ஒவர் டோஸ் ஆப்பரேஷனே காரணம், அவரே பின்னாளில் ஒப்புகொண்டார்

அதே குழப்பத்தைத்தான் மோடி அரசும் இங்கு செய்கிறது, இது தேச ஆபத்து

சரி பணம் செல்லாது என்றீர்கள்?, பதுக்கிய பணம் எவ்வளவு சிக்கியது? வங்கியில் இத்தனையாயிரம் நோட்டு மாற்றபட்டிருக்கிறதே, வராத நோட்டுக்களை கண்டுபிடிப்பதா சிரமம்?

ஏதும் தகவல் உண்டா?, வராது ஒரு காலமும் வராது

சரி தங்க கட்டுபாடு அறிவித்திருக்கின்றீர்கள்

திருப்பதி பெருமாளும், சபரி வாசனும், பூரி ஜெகநாதரும், வேளாங்கண்ணி மாதாவும் டன் கணக்கில் வைத்திருக்கின்றார்களே அதனை தொட முடியுமா?

அவர்களும் இந்தியாவில் ஆலயம் அமைத்திருக்கும் குடிதெய்வங்கள்தானே, தொடமுடியுமா?

இன்னும் என்னென்ன அறிவிப்பு வருமோ, தெரியாது

ஆக இந்தியர்களே மனமார வயிரார உண்டு மகிழுங்கள், அடுத்த அறிவிப்பு அங்கு வரலாம்

யாரேனும் காதலித்துகொண்டிருந்தால் திருமணம் செய்தாவது தொலையுங்கள், விரைவில் அதற்கும் கட்டுபாடுகள் வரலாம். அரசு சொல்பவரைத்தான் நீங்கள் திருமணம் செய்ய வேண்டும் என சட்டம் வந்தாலும் வரலாம்.

அப்படி ஏதும் செய்யவேண்டுமானால் ஒரு நடிகன் ஆண்டுக்கு ஒரு படம்தான் நடிக்க முடியும், இயக்குநர் ஆண்டுக்கு ஒரு படம்தான் இயக்க்க முடியும் என ஒரு சட்டம் போடுங்கள், சமூகம் கொஞ்சம் நன்றாக இருக்கும். அவர்களுக்கு எப்படி கட்டுப்பாடு போடூவீர்கள், ரஜினி வீட்டில்தானே உங்களுக்கு காபி.

மத்திய அரசே

மறந்தும் இந்த கட்டுபாடுகளை எல்லையில் இருக்கும் ராணுவ வீரன் இத்தனை தோட்டாக்கள்தான் வைத்திருக்கலாம், போர் விமானம் இத்தனை தூரம்தான் பறக்கலாம், குடோனில் இத்தனை குண்டுகள்தான் இருக்கலாம் என கட்டுபாடுகளை விதித்துவிடாதீர்கள் அது மகா ஆபத்து.

பாகிஸ்தானும் சீனாவும் பாராளுமன்றத்திற்கே வந்துவிடும்.

தங்கம் சேமிப்பு என்பது இந்திய குடும்ப நடவடிக்கையில் ஒன்று, பாரம்பரியத்தில் ஒன்று, அதில்தான் கை வைக்கின்றார்கள்

அதாவது தேன் கூட்டில் கை வைக்கின்றார்கள், இனி கொஞ்சம் சிக்கல்தான்.