சந்தியா மகளுக்கு இந்தியா அழுகின்றது…

Image may contain: one or more people

எத்தனையோ தலைவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தபட்ட ராஜாஜி ஹால் ஜெயலலிதாவினையும் சுமந்து நிற்கின்றது

முதன் முதலாக கண்மூடிய ஜெயலலிதாவினை பார்க்கும்பொழுது மனம் கனக்கத்தான் செய்கின்றது, அவரின் பெரும் அடையாளம் நம்பிக்கை மின்னும் அந்த கண்கள்,

அது மூடிகிடக்கும் கொடுமை காண முடியவில்லை

உத்தரவிட்ட வாய் உலர்ந்திருக்கின்றது

கட்சிக்கொடிக்கு பதிலாய் தேசியகொடி போர்த்தபட்டிருப்பது அவரின் நாட்டுபற்றிற்கு பெரும் அடையாளம்,

(அண்ணா எம்ஜிஆருக்கு எல்லாம் கட்சி கொடியே போர்த்தபட்டிருந்தது..)

அருகில் சசிகலாவும் அவரது குடும்பத்தாருமே வளைய நிற்கின்றார்கள், ஓரமாக அவர் கணவர் நடராஜனும் நிற்கின்றார்

ஜெயா உறவினர் யாரையும் காணவில்லை.

1987ல் இப்படி எம்ஜிஆர் உடலருகே நின்றவர் அன்றைய பின்னணி சக்தி ஆர்.எம் வீரப்பன், (தலை அருகே நின்ற ஜெயலலிதா அன்று முக்கியத்துவம் பெறவில்லை. பின் அவர் விரட்டவும் பட்டார்..)

எம்ஜிஆருக்கு பின் அந்த வீரப்பன் காணாமல் போனார் என்பது வரலாறு, இன்று அஞ்சலிக்கு வருவாரா இல்லையா என்பது தெரியாது

சசிகலா எதிர்காலம் என்ன என்பதை காலம் முடிவு செய்யும்

இதே மேடையில் 1987ல் அவமானபடுத்தபட்ட ஜெயலலிதா இன்று அதே எம்ஜிஆர் நாற்காலியில் அமர்ந்து, அவரை போலவே ராஜாஜி ஹாலிலும் அஞ்சலி பெற்று இனி எம்ஜிஆர் சமாதி அருகே நித்திய நித்திரை செய்யபோகின்றார்.

தன் எதிரிகளுக்கு எல்லாம் , தன்னை புறந்தள்ளியவருக்கு எல்லாம் தான் எம்ஜிஆரின் வாரிசு என எல்லா வகையிலும் தன்னை நிரூபித்துவிட்டு இறுதியாக விஸ்வரூபமாக நிரூபிக்கும் நேரமிது

மரணம் எல்லோருக்கும் பொதுவானது, ஆனால் அந்த நாட்களுக்குள் தான் யாரென நிரூபிப்பதுதான் சவால்

அந்த சவாலில் பெரும் வெற்றிபெற்றுவிட்டு, உறங்க செல்கின்றார் அவர்

அவர் ஆட்சி நிச்சயம் ரவுடிகளுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் சவால் விட்ட ஆட்சி

அன்றைய திமுக என்பது போர் குணம் கொண்ட கட்சி, அன்றைய காங்கிரசார் செய்த வன்முறைகளால் அது ஒரு போராட்ட குணம் கொண்ட தொண்டர்களால் மாறிப்போனது

அதன் பாதிப்பு பின் இரு கட்சிகளிலுமே உண்டு, இன்றும் கலைஞர் என்ற ஒற்றை மனிதருக்காக அக்கட்சியினர் அமைதி காத்தனர், கொஞ்சம் அவர் கண்ணசைத்திருந்தால் சீமானை எல்லாம் புளியமரத்தில் கட்டி வைத்து ஒவ்வொரு முடியாக பிடுங்கி இறுதியில் நாக்கையும் பிடுங்கி இருப்பார்கள்

அப்படி சில அடையாளங்களை கொண்ட தீவிர தொண்டர்கள் அதிமுக, திமுக என இரு இடங்களிலும் உண்டு, அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க பெரும் தைரியம் வேண்டும்

இங்கு கலைஞர் யோசிப்பார், ஜெயா கொஞ்சமும் யோசிப்பதில்லை யாராயினும் சட்டம் பாய்ந்துவிடும்

ஜெயா ஆதரவு ரவுடிகள் எல்லாம் கூட ஒன்று கொல்லபட்டார்கள் அல்லது விரட்டபட்டார்கள், கொஞ்சமும் அஞ்சவில்லை அவர்.

அவரின் சில திட்டங்கள் பாராட்டுகுரியவை, முதல்வராக இருந்தும் துணிந்து அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிந்த முதல்வர் அவர், வேறு யாரும் அதனை செய்யமாட்டார்கள்

200ரூபாய்க்கு சக தமிழன் கடும்பாடுபடும்பொழுது அரசு ஊழியர் சம்பளம் பெருமதியானது, அவர்களுக்கு போதவில்லை எனும்பொழுது சாட்டை எடுத்தார் ஜெயலலிதா

தன் வோட்டு வங்கியினை பாதிக்கும் என தெரிந்தும் கந்துவட்டி, நில அபகரிப்பு சட்டம் என அவரின் பல சட்டங்கள் பலன் கொடுத்தவை

இதில்தான் அவர் மறுபடி மறுபடி வெல்ல முடிந்தது, பணம் கொடுத்ததால் வெல்லமுடியும் என்பது முற்றிலும் ஏற்புடையது அல்ல, அப்படியானால் புலிகள் தமிழகத்தில் அள்ளி எரிந்த பணத்திற்கு வைகோ என்றோ முதல்வராகியிருப்பார்

எனக்கு தெரிந்த முதியவர் உண்டு, அவருக்கு சொந்தமான கடை ஒன்று உண்டு. அம்முதியவர் கொடுத்த பவர் பத்திரத்தினை கொண்டு அவரின் சகோதரர் ஒரு பெரும் புள்ளிக்கு மதுக்கடைக்கு வாடகைக்கு விட்டார்

இவர் பவரினை ரத்து செய்தாலும் அந்த பெரும் கைகளை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியவில்லை, அப்பொழுதுதான் ஜெயலலிதாவின் அறிவிப்பு வந்தது

கடைக்காரர் ஒப்புதலின்றி மதுகடைகள் நடத்தபட கூடாது எனும் அறிவிப்பு, வேறு வழியின்றி உரிமையாளர்க்கு கடை வந்தது

இப்படி பல மக்கள் அவரால் பல இடங்களில் பெற்ற பலனே இன்று தமிழகம் காணும் கண்ணீர்.

அடிப்படை மக்களின் கஷ்டம் உணர்ந்து பல திட்டங்களை செய்தவர் அவர், அவரின் அரசியல் வெற்றிக்கு அதுதான் காரணம்

எல்லா மக்களும் அவரால் ஏதோ ஒரு வகையில் பலன் பெற்றிருக்கின்றனர், இல்லாவிட்டால் இந்த உச்சம் சாத்தியமில்லை

சினிமாவில் கூட பெண்கள் ஒரு வளையம் தாண்டி வரமுடியாது, ஏன் பெண் கவிஞராக தன்னை நிலைநிறுத்திகொள்வது கடினம், அப்படி ஆணாதிக்கம் நிறைந்த உலகிது

சினிமாவே அப்படி என்றால் அரசியல் எப்படி இருக்கும்? பெரும் அயோக்கியர்களும், சிறுபுத்திக்காரர்களும் இருக்குமிடத்தில் ஒரு பெண் வெற்றி பெறுவது சாதனை

அதில்தான் தமிழக மக்கள் அவரை வியப்பாக பார்த்து தங்கள் வீட்டில் ஒரு பெண் போன்றே கொண்டாடினர்

அரசு நிர்வாகத்தை மிக அதிரடியாக நடத்திய அவரைப்போல இன்னொரு முதல்வர் இனி வரமாட்டார்.

இந்தியாவிற்கொரு இந்திரா என்றால், தமிழகத்திற்கு நிச்சயம் ஜெயலலிதாவே

இரு விஷயங்களில் அவரின் நாட்டுபற்று விளங்கும்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சீறி எழுந்து அறிக்கை விட்ட இந்திய அரசியல்வாதிகளில் அன்று முதன்மையானவர் ஜே

புலிகள் நடமாட்டம் தமிழகத்தில் இருந்த வேளையிலும், பிரபாகரனை தூக்கில் போடவேண்டும் என சொன்ன ஒரே தமிழ் அரசியல்வாதி அவரே, புலி ஆதரவு வைகோவினை பொடாவில் வைக்க வேண்டிய இடத்தில் வைத்ததும் அவரே

இந்தியாவினை நேசித்த அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர்,, அவரின் நாட்டுபற்று பாராட்டுதற்குரியது

இறுதிவரை தேசிய கட்சிகளின் தமிழக கூட்டணிக்கு முதல் சாய்ஸ் ஜெயலலிதாவே, காரணம் நாட்டு நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஜெயா எப்பொழுதுமே முழு ஆதரவு கொடுப்பவர் என்பது உண்மை.

ஆனால் தன்னகே உரிய சில தன்மைகளில் அவர் கட்டளையிட்ட பின்பே வாய்ப்பு கலைஞருக்கு சென்றது

பல நினைவுகள் வந்து மோதுகின்றன‌

உள்ளம் அவருக்கு அஞ்சலி அஞ்சலி என சொல்லிகொண்டே இருக்கின்றது

மாலை நல்லடக்கமாம்..

அதனை நினைக்கும்பொழுதே மனம் வெடித்து அழதோன்றுகின்றது, அக்காட்சியினை காணும்பொழுது தாங்க கூடிய மனநிலமையினை இறைவன் அருளட்டும்

தமிழகத்திற்கு எப்பொழுதுமே ஒரு சாபம் உண்டு, அதாவது முதல்முறை கோட்டைவிட்ட முதல்வர்கள் இரண்டாம் முறை அமர்ந்து ஏதாவது செய்ய நினைக்கும் பொழுது காலம் வழிவிடாது

கட்சியினை காப்பாற்ற போகிறேன் என சென்றுவிட்ட காமராஜர் பின் வரமுடியாமல் போனது

அண்ணாவிற்கு ஆயுள் குறைவு

கலைஞர் 1970களில் செய்த சில தவறுகளை 2000ம் அதற்கு பின் மாற்றிகொண்டார், உண்மையில் சில நல்ல காரியங்களை அவர் ஆற்ற நினைத்தார், கடும் உழைப்பில் இறங்கினார்

ஆனால் அவரது குடும்பத்தாரின் அரசியலும் இன்னும் பல பிரச்சினைகளும் அவரை மறுபடி அரியணைக்கு வராமல் தள்ளின‌

ஜெயா அப்படித்தான் 1991 டு 96ல் செய்த தவறுகள் மறுபடி நடக்காமல் பார்த்துகொண்டார், தொடர்ந்து இரண்டாம் முறையாக இப்பொழுது ஆட்சிக்கு வரும்பொழுதும் நன்றாகத்தான் மாநிலத்தை நடத்தினார், இன்னும் அவரிடம் திட்டம் இருந்தது

பல நல்ல விஷயங்களை செய்ய முயற்சி எடுக்கத்தான் செய்தார்

ஆனால் விதி முந்திகொண்டது

தமிழக சாபம் தொடர்கின்றது….

அவரின் ஆன்மாவிற்கு இளைபாற்றியும் நிம்மதியும் அவர் வணங்கிய அன்னை சாமுண்டிஸ்வரி அருளட்டும்.


 காந்திமுதல் நேரு,சாஸ்திரி,இந்திரா ராஜிவ் என எல்லோருக்கும் இரங்கல்பா பாடியவர் அவர்

ராஜாஜி, அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் என எல்லோருக்கும் கவிதாஞ்சலி செலுத்தியவர் அவர்

அய்யா

அவர் உச்சம் பெறவும் நீரே காரணம், அந்த நன்றி அவர் அடியாழத்தில் நிச்சயம் இருந்திருக்கும்

உங்களை விட அவருக்கு அஞ்சலி செலுத்த இன்னொருவருக்கு தகுதி இருப்பதாக உலகம் எண்ணாது, உங்கள் தமிழில் உங்கள் வார்த்தைகளில் ஒன்றை அஞ்சலியாக சாற்றிவிடுங்கள்

அது அல்லாது அந்த ஆன்மா சாந்தி அடையாது