அடுத்தது யார்?

அண்ணா மறைந்தபொழுது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது, அடுத்தது யார்? நெடுஞ்செழியனா மதியழகனா? என விவாதம் நடந்தது. காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிக்கும் நெடுஞ்செழியனே விருப்பம்.

திடீரென அதுவரை கேட்காத குரல் கேட்டது, கருணாநிதி முதல்வர் பதவிக்கு போட்டிக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? ஆடிபோனது தமிழகம், அது அன்று மிக புதிது. காங்கிரஸ் தலையினை சொறிந்தது, கலைஞரின் இமேஜ் அன்று அப்படி

நெடுஞ்செழியனோ என்னை விட மிக இளையவரான கருணாநிதியினை எப்படி முதல்வராக ஏற்பது என தயங்கினார், கலைஞரின் சித்துவிளையாட்டு தூள்பறத்தியது, முதல்வரானார். அதோடு காங்கிரஸ் அரசியலிலிருந்தே தூரம் சென்றது, நெடுஞ்செழியன் ரூம்போட்டு அழுதார்

அதாவது எதிர்பார்ப்பினை மீறி கட்சியினை கலைஞர் துள்ளி கைபற்றிய நேரம் அது.

எம்ஜிஆர் மறைந்தபோதும் அதே எதிர்பார்ப்பு, அடுத்தது யார்? வீரப்பனா? ஜாணகியா? அல்லது இன்று குஷ்பூவோடு மல்லுகட்டும் திருநாவுக்கரசரா என எதிர்பார்ப்பு. மூப்பனார், சிதம்பரம் போன்ற காங்கிரஸ்காரர்களின் எதிர்பார்ப்பு வீரப்பன் மீது இருந்தது, சிலர் ஜாணகி என்றார்கள்

ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக ஜெயா விஸ்வரூபமெடுத்தார், காய்களை மிக சரியாக நகர்த்தினார், தனக்கும் கூட்டம் உண்டு என நிரூபித்தார், எல்லோரையும் விரட்டி கட்சியினை சுருட்டி காலுக்குள் வைத்துகொண்டார்

கலைஞர் ஆட்சியினை கைபற்றும்போது வயது 45, ஜெயா முதல்வராகும்பொழுது வயது 43

இங்கே இப்படி என்றால் வடக்கே அத்வாணியா, வாஜ்பாயியா, ராஜ்நாத்சிங்கா என பட்டிமன்றம் நடக்கும்பொழுது உள்புகுந்த மோடி மைக்கை பிடுங்கி, எல்லோரையும் வெளியே தள்ளி கதவினை பூட்டி நாற்காலியில் அமர்ந்தாகிவிட்டது

இதுதான் ஆற்றல், வாய்ப்புகளை தகுந்த நேரத்தில் பயன்படுத்தும் சாமர்த்தியம்

இப்படி சிலர் வாய்ப்பினை பயன்படுத்துவர், சிலர் வாய்ப்பினை ஏற்படுத்தி சாதிக்கின்றேன் என கிளம்பி நாசமாய் போவார்கள், பெரும் உதாரணம் கள்ளதோணியில் விரைவில் தப்பி எங்காவது செல்ல இருக்கும் வை.கோபால் சாமி

அண்ணா இறந்த பின் எந்த நிலையோ, எம்ஜிஆர் இறந்த பின் எந்த நிலையோ அதே நிலையில்தான் இன்று அந்த கட்சி இருக்கின்றது

மிக திறமையான ஒருவர் இருந்தால் கலைஞர் போல, ஜெயா போல சடீரென எழும்பி வரலாற்றினை மாற்றுவார்கள்

யார் வருவார் என தெரியவில்லை, வர வாய்ப்பு இருக்கின்றது.

தலைவனில்லா கட்சி, கட்டுபாடற்ற குதிரை. அதனை அடக்கி சவாரி செய்ய அலெக்ஸாண்டர் போல திறமை வேண்டும்

மிக கனத்த மவுனம் நிலவும் நேரம், மிகுந்த நுட்பத்துடன் யாரேனும் நிலமையினை கண்காணிக்க கூடும்

கலைஞர் திமுகவினையும், ஜெயா அதிமுகவினையும் கைபற்றுவார்கள் என அவர்களே அன்று நினைத்திருக்க மாட்டார்கள், நிலமை அப்படித்தான் இருந்தது. பின்னாளில் நடந்தது வரலாறு.

அந்த வரலாறு இனி திரும்புமா? என விரைவில் தெரியலாம்

மிக இறுக்கமான மவுனம், பெரும் சூறாவளியின் அடையாளம்.

சசிகலா கட்சியினை கைபற்றுவது என்பது எளிதில் நடக்காத விஷயம், அப்படி சாத்தியம் என்றால் அன்றே ஆர்.எம் வீரப்பன் அதிமுகவினை கைபற்றி இருப்பார்.

எத்தனை திறமையாளர்கள் மோத போகின்றார்கள் என தெரியவில்லை, மோதாமல் தீர்வு இல்லை

நாஞ்சில் சம்பத், சரஸ்வதி, நவநீத கிருஷ்ணன்,கருணாஸ் என பெரும் கூட்டமொன்று இருக்கின்றது, நிச்சயம் அவற்றிலிருந்து ஒன்று வராது என்பது மட்டும் உண்மை.

ஆனால் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற பெரும் அனுபவஸ்தர்களும் அங்குதான் இருக்கின்றார்கள், பார்க்கலாம்

விசித்திரமாக எம்ஜிஆர் விசுவாசிகளை விரட்டி கட்சியினை கைபற்றினார் ஜே, அடுத்து வருபவர் ஜெ விசுவாசிகள் மீதுதான் கை வைப்பார்

இதுதான் அரசியல்.

பெரும் எதிர்பார்ப்பு குவிந்திருக்கும் நேரமிது.

(நீ பொய்யன் கட்சி தொடங்கி உடனே அண்ணா கலைஞரிடம் தம்பி நீதான் என் வாரிசு என உருகினார், பெரியார் ஆசீர்வதித்தார் இது தெரியாமல் நீ உளறுகின்றாய் என சிலர் வருவர்

கொஞ்ச நாள் போனால் நெடுஞ்செழியன் என ஒருவன் கிடையவே கிடையாது, மதியழகன் எல்லாம் உன் கற்பனை என சொல்பவர்கள் அவர்கள்

அவர்களுக்கு அண்ணாவே நினைவில் இருப்பது பெரும் விஷயம்)