ஆளாளுக்கு பெரும் புலனாய்வில் இறங்கிவிட்டார்கள்…
ஒரு பெரும் பிரபலம், மக்கள் அபிமானம் பெற்ற தலைவர் , அவருக்கு ஒன்று என்றால் தமிழகத்தையே கொளுத்தும் வெறிபிடித்த கூட்டம் என பெரும் அதிகாரத்தில் இருப்பவர் இறந்தால் அதனை அறிவிக்க பல கட்டங்கள் உண்டு
பொதுமக்கள் பாதுகாப்பு, பொது சொத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு உறுதி என ஏகபட்ட விஷயங்களை செய்யும் கடப்பாடு அரசுக்கு உண்டு, அரசு அதனைத்தான் செய்தது
எம் எல் ஏக்களை பாதுகாக்கும் பொறுப்பு ஆளும்கட்சிக்கு உண்டு, ஒரு மாதிரியானவர்கள், விட்டால் யாரும் கடத்தலாம், இல்லாவிட்டால் மாட்டு சந்தை போல எங்காவது துண்டுபோட்டு விரல்பிடித்து பேரம் பேசிகொண்டிருப்பார்கள், அவர்களையும் மொத்தமாக பிடித்து அடைக்க வேண்டும், இதனை கட்சி செய்தது
ஆக ஒரு பிரபலத்தின் மரணம் எப்படி எல்லா பாதுகாப்பையும் உறுதி செய்துவிட்டு அறிவிக்கபடவேண்டுமோ அப்படி அறிவிக்கபட்டது
அதற்குள் ஆளாளுக்கு பெரும் புலனாய்வில் இறங்கிவிட்டார்கள்
மரண அறிவிப்பில் சதி, அது சதி இது சதி என ஏகபட்ட கேள்விகளை கேட்டுகொண்டே இருக்கின்றார்கள்
2 வருடமாகவே அவரின் உடல்நிலை சரிந்துகொண்டே வந்தது கவனிக்க முடிந்தது, இதில் மர்மம் ஏதுமில்லை அவர் பகிரங்கமாக வரவே இல்லை
அப்பல்லோவில் ஏன் படம் எடுக்கவில்லை என்கின்றார்கள், ஜெயா வித்தியாசமானவர், மக்கள் மனதில் தன் அழகான படமே எப்போதும் இருக்கவேண்டும் என்ற எம்ஜிஆர், பிரபாகரன் போன்ற சிந்தனை அவருக்கும் உண்டு,
தான் பரிதாபமான கோலத்தில் இருப்பதை மக்கள் பார்க்க அவர் விரும்பவும் மாட்டார், அம்மாதிரியான படங்களை அனுமதிக்கவும் மாட்டார்.
இன்னொரு கும்பல் ஏய்.. ஏன் போஸ்ட்மார்ட்டம் செய்யவில்லை என குதிக்கின்றது, இது என்ன கொலையா, விபத்தா? நோய். இதனை கூட புரிந்துகொள்ளமுடியாதா? அதுவும் மரணம் மருத்துவ மனையிலே நடந்திருக்கின்றது
இதனை எல்லாம் விட்டுவிட்டு இவர்கள் அமெரிக்க சிஐஏ அளவிற்கு புலனாய்வில் பின்னி எடுக்கின்றார்கள்
ஏகபட்ட அனுமானங்களை அள்ளி வீசுகின்றார்கள், இன்னும் என்னவெல்லாம் வருமோ இப்படி வரலாம்
முன்பு ஜெயலலிதாவிற்கு கொடுத்த மலர் கொத்திலும், தூவிய ரோஜாவிலும் காற்றில் பரவும் மெல்ல கொல்லும் விஷமான இஸ்ரேலிய மொசாத் கைவண்ண விஷத்தை கலந்தார்கள், அதனை தூவினார்கள், அது ஜெயலலிதாவினை பாதித்தது
சரி அப்படியானால் அதே காற்று விஷம் தூவியவரை கொல்லாதா? என்றால் பதிலிருக்காது
ஏகபட்ட புலனாய்வாளர்களுமும் நிபுணர்களும் முகநூலிலும் வாட்சப்பிலிம் இருக்கின்றார்கள்.
சசிகலாவிற்கு வழக்கபோல குரு உச்சம் என்பதால் ஜெயா மரணம் மருத்துவமனையில் நிகழ்ந்தது, வீட்டில் மட்டும் நிகழ்ந்தால் இந்நேரம் கையில் விலங்கோடு இவர்களே சசிகலா வீட்டிற்கு சென்றிருப்பார்கள்.
எப்படியோ முன்பு என்னை கொல்ல சதி என ஜெயா பல இடங்களில் புலம்பியதை மறந்துவிட்டார்கள், அல்லது மறைக்கின்றார்கள்.
ஆனால் இது நோயினால் வந்த மரணம், எம்ஜிஆருக்கு நிகழ்ந்தை போலவே நோய் வீழ்த்திய மரணம்.
இன்னும் என்னென்ன புலனாய்வு அறிக்கைகள் வருமோ தெரியாது
நோய் யாருக்கு எப்பொழுது வரும், எப்பொழுது கொல்லும் என யாருக்கும் தெரியாது, அப்படி ஜெயாவிற்கும் நடந்தது.
விரைவில் அடுத்த முகநூல் புலனாய்வாளர் ஏதும் பதிவார் சிரிக்கலாம், நொடிக்கு பத்து அறிக்கைகள் பதியபடுகின்றன
உண்ணாமல் உறங்காமல் கடும் புலனாய்வினை லேப்டாப்பிலும், போனிலும் மூளையினை கழற்றி வைத்துவிட்டு செய்துகொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள் ஒருபுறம் இருக்கட்டும்
ஆவிகளோடு பேசுகின்றோம் என ஒரு கும்பல் தமிழகத்தில் உண்டு, காமராஜர், எம்ஜிஆர் ஆவிகளோடு பேசுவார்கள், மிக சிலநேரம் வட இந்திய ஆவிகள் வந்து பேசுமாம்
ஆனால் கென்னடி, லிங்கன்,லெனின், ஜப்பான் அரசர், கோல்டா மேயர், மாவோ போன்ற ஆவிகள் பேசாது அவைகளுக்கு தமிழ் தெரியாது
ஐன்ஸ்டீன், நியூட்டன் ஆவிகளும் பேசாது, தமிழ் தெரிந்தாலும் சீனிவாச ராமானுஜ ஆவியும் வந்து நம்பர் தியரி விளக்காது
வந்து பேசுவதெல்லாம் தமிழக அரசியல் ஆவிகளே, அதில் எம்ஜிஆர் ஆவி வந்து இனி பிறந்தால் அரசியலுக்கு செல்லமாட்டேன், அம்மா கையில் கஞ்சி குடிப்பேன் என முன்பு
பேசிற்றாம்
இதனைத்தான் அவர் உயிரோடு இருக்கும் போதும் பேசினார் என கேட்டால், ஆவியானாலும் அதனைத்தான் பேசுவார், பேச்சை மாற்றும் வழக்கம் தலைவருக்கு இல்லை என சொல்கின்றார்கள்
இனி ஜெயா ஆவியோடு பேசுவார்கள், அது நான் திமுகவினை அழிக்காமல் வந்துவிட்டேன் என வருத்தபட்டாலும் படும்.
சரி இனி எம்ஜிஆர் ஆவி வந்தால் என்ன பேசும்
“நான் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தேன், என்னை சுற்றி ஜாணகி, நெடுஞ்செழியன், மதுரை முத்து, சோமசுந்தரம் என பலபேர் நின்றார்கள், சின்னவரே என அழைத்து கேள்வி கேட்டார்கள் நான் அண்ணா கொள்கைகளை விளக்கிகொண்டிருந்தேன்
கடந்த 6ம் தேதி திடீரென அம்மு வந்தாள், மிஸ்டர் எம்ஜி ராமச்சந்திரன் நீங்கள் அமர்ந்திருப்பது என் நாற்காலி, எழும்புங்கள் என்றாள், என்னை விரட்டி விட்டு அவள் அமர்ந்து கொண்டாள்
இப்பொழுது நான் அமர நாற்காலி இல்லாமல் நிற்கின்றேன்”