பொங்கலுக்கு விடுமுறை தொடர்பாக சர்ச்சை

பொங்கலுக்கு விடுமுறை தொடர்பாக பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் நிலவுகின்றன‌

அதாகபட்டது இந்தியா எனும் மாபெரும் நாட்டில் பல்வேறு இனங்களும் கலாச்சாரமும் உண்டு, எல்லா இனங்களுக்கும் தனி தனி கொண்டாட்டம் உண்டு

நாட்டின் தேசிய கொண்டாட்டம் என சில உண்டு , சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி என தேசிய உணர்வுகளும், மத ரீதியாக தீபாவளி, ரமலான், கிறிஸ்துமஸ், மகாவீரர் ஜெயந்தி, குருநாணக் ஜெயந்தி என்ற பண்டிகைகளுக்கும் விடுமுறை உண்டு

இது மத்திய அரசின் அறிவிக்கபட்ட நடவடிக்கை, நேருவுக்கு முந்தைய காலத்திலே தொடங்கபட்டது

இனங்கள் என்பது இன்று மாநிலவாரியாக வாழ்வதால் அவற்றின் விடுமுறைக்கு மாநில அரசுகளே பொறுப்பு

கேரள ஓணம், பஞ்சாப் பைசாகி, குஜராத் பண்டிகைகள், ஒரிசா பூரி ஜெகநாதர், காஷ்மீரின் குளிர்கால பண்டிகை, ஆந்திராவின் மகர சங்கராந்தி, அசாம், மணிப்பூரின் திருவிழாக்கள் என அந்த அந்த மாநிலங்களின் கலாச்சார திருவிழாவினை மாநில அரசின் கொள்கைக்குட்பட்டு கொண்டாடலாம்

பொங்கல் என்பது மத பண்டிகை அல்ல, அது தமிழ் கலாச்சார பண்டிகை.

அதனால் அந்த நாட்களில் தமிழகத்தில் இருநாள் பொதுவிடுமுறை உண்டு, இது முழுக்க முழுக்க மாநிலம் சம்பந்தபட்டது

இப்பொழுது என்ன சர்ச்சை வருகின்றது?

ஏதோ பொங்கல் அகில உலக பண்டிகை போலவும், டெல்லியில் வருடா வருடம் ராம் லீலா போல கொண்டாடபட்டது போலவும், இந்திய பிரதமர் சர்க்கரை பொங்கல் செய்து எதிர்கட்சி தலைவருக்கு ஊட்டிவிட்டது போலவும்

திடீரென மோடி அப்படி எல்லாம் கிடையாது, எல்லோரும் சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு வேலையினை பாருங்கள் என சொன்னது போலவும் கொதித்து கொண்டிருக்கின்றார்கள்

இது முழுக்க முழுக்க மாநில அரசின் பிரச்சினை

ஒருவேளை மத்திய அரசு, “அது என்னடா பொங்கல்?.. அடுத்த நாள் சோறு பொங்க மாட்டீர்களா?… வருடம் ஒருமுறைதான் பொங்குவீர்களா? ..ஒழுங்காக வேலையினை பாருங்கள் ..” என நெருக்கடி கொடுத்தாலும் அதனை எதிர்த்து நிற்க வேண்டியது மாநில அரசே

ஆனால் தமிழக காட்சிகள் விசித்திரம்

என்ன நடந்தது? மாநில அரசின் உரிமை எது? முறைபடி நெருக்கடி கொடுத்தார்களா? என்பது கூட தெரியாமல் ஆளாளுக்கு பொங்குகின்றார்கள்

அப்படி சிக்கல் இருந்தாலும் கூட கழுத்தை பிடித்து மாநில உரிமை காக்க என்ன செய்தாய்? ஏய் இன துரோகி என கழுத்தை பிடிக்க வேண்டியது பன்னீர் செல்வத்தையே அன்றி வேறல்ல‌

அவர்தான் இன்று மாநில முதல்வர், சசிகலா நம்புகின்றாரோ இல்லையோ நாம் அப்படித்தான் நம்புகின்றோம்..

ஒரு வருடமும் இல்லாத சிக்கல் இப்பொழுது வருகின்றது

தமிழ்நாட்டில் ஒன்றுமே சரியில்லை, தமிழனுக்கு தமிழக ஆளும், ஆண்ட கட்சிகள் ஒன்றுமே செய்யவில்லை அல்லது செய்ய முடியாது எனும் நிலை வரவேண்டும் என சிலர் விரும்புகின்றார்கள்

இந்த கட்சிகள் பெரிதாக ஒன்றும் கிழிக்கவில்லை என்பதும் உண்மை என்பது வேறு விஷயம்

தமிழர்களால் ஆட்சியில் ஏற்றபட்ட ஆட்சி, தமிழர்களாலே வீழ்த்தபடவேண்டும் எனும் திட்டம் எங்கோ வகுக்கபடுகின்றது

பல விஷயங்கள் தமிழர் விரோத செயல்களாக சித்தரிக்கபடுகின்றன அல்லது அப்படிபட்ட பிம்பம் உருவாக்கபடுகின்றது.

சில உண்மைகளும், பல பொய்களும் மாறி மாறி கசியவிடபடுகின்றன.

அவன் மாநில அரசினை புழுதிவாரி தூற்றவேண்டும் என்பதும் அத்திட்டத்தில் ஒன்று

( அது உண்மையும் கூட, விளக்குமாற்றால் அடித்தாலும் தகும்)

தமிழன் சிந்திக்க வேண்டும், இந்த மாநில அரசுகள் தமிழன் உரிமையினை காக்க என்ன செய்தன? அல்லது செய்கின்றன என சிந்திக்க வைப்போம் எனும் புள்ளிநோக்கி திட்டம் நகர்த்தபடுகின்றது

ஆனால் தமிழன் எப்படிபட்டவன்? அவன் மத்திய அரசினையே குறை சொல்லி பழக்கபட்டவன்

இப்பொழுதும் ஆரம்பித்துவிட்டான், வீரமணி முதல் சீமான் வரை ஊளையிட தொடங்கியாயிற்று

இப்பொழுது என்ன நடந்திருக்கின்றது என தெரியாமலே? என்னது ஜல்லிகட்டும் இல்லை? பொங்கலும் இல்லையா என கொதிக்கின்றான் ஒருவன்

தமிழர் இனி வேட்டி அணிய கூடாதாம், பைஜாமா அணிய வேண்டுமாம் என கொழுத்தி போடுகின்றான் இன்னொருவன்

சரி எதிர்ப்பு தெரிவிப்பதை மொத்தமாக சேர்ந்து தெரிவிக்கின்றார்களா என்றால் இல்லை

ஒன்று சேர்ந்து பன்னீர் செல்வத்தை முற்றுகையிட்டு மத்திய அரசு என்ன ஆணை அனுப்பியது என கேட்கின்றார்களா? என்றாலும் இல்லை..

ஆளாக்கு ஒவ்வொரு மரத்தடி, முட்டு சந்தில் நின்று கத்திகொள்கின்றார்கள்

எங்களை மீறி பொங்கல் மீது மத்திய அரசு கைவைக்குமா? என பீறிட்டு கிளம்பவேண்டிய மாநில அரசு கோமா நிலையில் இருக்கின்றது

அந்த ஆட்சியினை இப்பொழுது யார் வைத்திருக்கின்றார் என்பதே தெரியாதபொழுது எப்படி?

ஆக பேசவேண்டிய மாநில அரசினை தவிர எல்லோரும் பேசிகொண்டே இருக்கின்றார்கள்

பொங்கல் எப்போதும் தமிழர் பண்டிகையே, பஞ்சாபின் பைசாகி போல அதுவும் அறுவடை திருவிழாவே

ஆக நாம் மட்டும்தான் தை மாதம் கொண்டாடுவோம், இன்னும் கொண்டாடுவோம் சிக்கலே இல்லை

தமிழனின் உழைப்பு, வீரம் இரண்டையும் வெளிகாட்டும் விழாவாக பொங்கல் அமைந்தது, அப்படித்தான் அது கொண்டாடபட்டது

எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்த காலத்தில் இந்த மானம், வீரம் எனும் இரண்டை சினிமா, அரசியல் எனும் “இரட்டை” இலையில் தொலைக்க ஆரம்பித்தான் தமிழன்

அது வளர் வளர தமிழகம் நாசமாய் போயிற்று

இன்று அந்த இரட்டை இலை, சசிகலா பன்னீர் என ஆளும் கட்சியாக நிற்கின்றது

இந்த சர்ச்சையில்அதிமுக அரசின் கருத்து என்ன? மத்திய அரசு மிரட்டியதா? மிரட்டினாலும் தமிழர்களுக்கு இவர்கள் சொல்வதென்ன என்பது பற்றி எல்லாம் ஒரு பதிலும் வராது

பொங்கல் விவசாயிகள் பண்டிகை, விவசாயி செத்துகொண்டிருக்கும்பொழுது பொங்கல் எதற்கு என்று சொன்னாலும் சொல்வார்கள்

அம்மா இல்லா தமிழகத்தில் பொங்கல் தேவையா? என சீறினாலும் சீறுவார்கள், அப்படி அவர்கள் மூளை மழுங்கி போயிற்று..

அந்த அளவிற்கு மத்திய அரசின் முன்னால் சரணாகதி ஆகி கிடக்கின்றார்கள்.

தமிழன் சிந்திப்பதற்காக இன்னும் ஏராள செய்திகள் வரும்..

இன்னும் ஏராளமான சர்ச்சைகள் வரும், அப்படியாவது தமிழனுக்கு அறிவு வராதா? கொஞ்சமேனும் மாநில உரிமை, தேசபற்று என அவன் சிந்திக்கமாட்டானா?

இந்த மாநில அரசு என்ன கிழிக்கின்றது, டெல்லியில் எம்பிக்கள் என்ன கிழிக்கின்றார்கள் என சிந்திக்கமாட்டானா? என ஏராளமான செய்திகள் வரும்

அது வந்துகொண்டே இருக்கும், ஆனால் தமிழனுக்கு அறிவும், வீரமும் வருமா என்றால் வராது

அவனுக்கு அறிவும் வீரமும் என இரட்டை குணம் எதற்கு? இரட்டை இலை போதாதா?

எல்லா தமிழக‌ தலைவர்களும் மத்திய அரசினை கண்டிக்கின்றார்களாம்.

அட பதர்களா? இப்பிரச்சினையில் உண்மையினை விளக்கவேண்டியது யார்? அப்படியே மத்திய அரசு சொன்னாலும் தன் அதிகாரத்தை பயன்படுத்தியோ அல்லது மக்களை திரட்டியோ போராட வேண்டியது யார்?

சாட்சாத் பன்னீர் செல்வம் என்பவர்

அதற்காகத்தான் அந்த கட்சியினை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கின்றார்கள்

அவரோ மகா அமைதி

சரி கட்சியினை கைபற்றிய சசிகலா என்ன செய்கின்றார்?

தமிழகம் பொங்கல் கொண்டாடினால் என்ன? கொண்டாடவிட்டால் என்ன? நமது பிரச்சினை எல்லாம் பொங்கலுக்கு முன்பு பதவி ஏற்கலாமா? அல்லது பொங்கல் கழிந்தே ஏற்கலாமா?

என்னது மத்திய அரசு பொங்கலுக்கு விடுமுறை இல்லை என சொல்கின்றதா? சரி அன்றே ஏற்றுவிடலாமா, மிக நல்லதாக போயிற்று

வோட்டை யாருக்கோ போட்டுவிட்டு குழம்பி நிற்கின்றான் தமிழன்

எதிர்கட்சிகள் தனி தனியாக கத்துகின்றன‌

பாஜக ஒன்றும் யோக்கிய சிகாமணி அல்ல, பல இடங்களில் சித்துவிளையாட்டு காட்டும் கட்சிதான்

கேரள ஓணதிருவிழாவினை வாமண ஜெயந்தி என குதர்க்கமாக அமித்ஷா சொல்லிவிட கொந்தளித்த கேரளம் அமித்ஷாவினை ஓட விரட்டியது

தமிழகமும் அதனை செய்யலாம், ஆனால் செய்யாது, செய்தால் தமிழகம் இப்படி இருக்காது

என்ன செய்ய விதி அப்படி?

தமிழனுக்கு சுட்டு போட்டாலும் வராது அறிவும், ஒற்றுமையும்.

ஆனாலும் ஜல்லிகட்டு வேண்டும் என்ற கோரிக்கையினை, பொங்கல் பண்டிகையே வேண்டுமா? வேண்டாமா? எனும் சர்ச்சையில் மறக்கடின்றார்கள் அல்லவா?

இதுதான் ராஜதந்திரம்


கொசுறு

விவசயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை, எல்லோரும் குடும்ப மற்றும் உடல் பிரச்சினைகளால் இறந்தவர்கள் : தமிழக அமைச்சர்கள்

டியர் மினிஸ்டர்ஸ் ஜெயா எப்படி இறந்தார் என்றா கேட்டார்கள்?

ஜெயா இறந்த மர்ம்மே தெரியாத அமைச்சர்கள் எல்லாம் விவசாயிகள் மரணம் பற்றி என்ன தெரிந்துவிட போகின்றார்களோ…


பொங்கல் விழாவிற்கு கட்டாயப் பொதுவிடுமுறை இல்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பு கொடுஞ்செயல் : சீமான்

வந்துட்டார்ல..வந்துட்டார்ல.. வந்துட்டார்ல‌

அப்படி மத்திய அரசு ஒன்றும் சொன்னதாகவே தெரியவில்லை, ஆனாலும் பூட்டிய வீட்டுமுன் சத்தமிட அங்கிள் சைமனை தவிர யாராலும் முடியாது.

தடையினை மீறி பொங்கல் வைப்பேன் என சட்டி பானையுடன் அங்கிள் கிளம்பினாலும் கிளம்புவார்