அண்ணன் காட்டிய வழியம்மா!
அண்ணாவிடமிருந்து கண்ணதாசன் வெளிவந்த காலங்களில் அவரின் மனம் என்ன பாடுபட்டதோ கிட்டதட்ட நம் மனநிலையும் அதனை போலவே இருக்கின்றது
அக்காலங்களில் கண்ணாதாசன் எழுதிய கட்டுரைகளை படித்து ஆறுதல் தேடிகொண்டாலும், அவர் எழுதிய மிக பிரமாதமான பாடலை பார்க்க முடிந்தது
உயிராய் நினைத்தவர்களின் புறக்கணிப்பினை கவியரசை தவிர யாரும் இவ்வளவு அழுத்தமாக சொல்லமுடியாது, கம்பன் கூட இந்த இடத்தில் தடுமாறுவான், ஆனால் கண்ணதாசன் அழகாக அடித்துபோட்டு செல்கின்றார்.
அண்ணாவினை பிரிந்து செல்ல அவர் எடுத்த மனநிலையின் இப்படி பாடலாக வடிந்தது
“அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கணணை இமையே கெடுத்ததம்மா
என் கையே என்னை அடித்தம்மா
அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன்
அணைத்தவனே நெஞ்சை எரித்துவிட்டான்
பொறுத்தருள்வாய் என வேண்டிநின்றேன்
கும்பிட்ட கைகளை முறித்துவிட்டான்
அவனை நினைத்தே நான் இருந்தேன்
அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்
இன்னும் அவனை மறக்கவில்லை அவன்
இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை”
இப்பொழுது கேட்கும்பொழுது எனக்காகவே எழுதபட்டவரிகள் போன்றே இருக்கின்றது, கண்ணதாசன் படத்தினை பார்த்து புன்னகைக்க தோன்றுகின்றது
போகட்டும், எல்லாவற்றையும் கடந்து செல்வதுதான் வாழ்க்கை.
முன்பொரு காலத்தில் நல்லமிளகு நாற்றுகளை கேரளாவிலிருந்து பாண்டிநாட்டு மக்கள் பறித்து வந்தார்களாம். பாதிக்கபட்ட மக்கள் மன்னன் மார்த்தாண்ட வர்மாவிடம் முறையிட்டார்களாம்
அமைதியாக சொன்னான் மன்னன், “அந்த பாண்டிநாட்டு மக்களால் மிளகுநாற்றை கொண்டு செல்லமுடியுமே தவிர ஆனிஆடி சாரல்மழையினை கொண்டு செல்ல முடியுமா? நடக்குமா?
சாரல் இல்லா மிளகுசெடி காய்க்குமா?
அந்த பரிதாபத்திற்குரிவர்களை மறந்துவிட்டு வேலையினை பாருங்கள்”
அதனைபோலவே சில காரியங்களிலிருந்து என்னை அவர்கள் விரட்டிவிடலாம்
ஆனால் புனிதமான அந்தோணியாரின் கரங்களினுன்று என்னை அவர்களால் பிரித்துவிடமுடியுமா? நடக்குமா?
மனிதர்களை வைத்து தெய்வங்கள் விளையாடுமே தவிர, தெய்வங்களை வைத்து மனிதன் ஆட முடியுமா?
அப்படி ஆடினாலும் எவ்வளவு காலம் விளையாடிவிட முடியும்?
அப்படி ஆட துணிந்தால் என்னாகும் என்பதற்கான சான்றுகள் வரலாற்றின் பக்கங்களில் அடிக்கொரு முறை காணகிடக்கின்றது.
அடியார்களில் ஒருவராக தன்னை எண்ணிகொண்டு ஆலயத்தில் பணிந்து நின்ற மாமன்னர்களே வரலாற்றில் நிலைத்தார்களே அன்றி, நான் யார் தெரியுமா? என தெய்வதிடம் சவால் விட்ட எந்த மன்னின் பெயரும் வரலாற்றில் இல்லை.
இதுதான் தெய்வத்தின் தர்ம நீதி.
காலம் காலமாக சுழலும் அந்த தர்ம சக்கரம் இவ்வுலகில் என்றும் சுழன்றுகொண்டே இருக்கும், அது சுழலா காலத்தில் இவ்வுலகம் அழிந்தே விடும்.
இறைவன் எல்லாவற்றையும் கண்காணித்துகொண்டே இருக்கின்றான். வஞ்சகம் இல்லா மனம் என்பது எது? என்பது அவனுக்கு தெரியும்., அந்த ஆறுதல் போதும்
ஆனாலும் இந்த வரிகளில் கண்ணதாசன் நம்மை போலவே கலங்கி நின்றது அழகாக தெரிகின்றது
“பொறுத்தருள்வாய் என வேண்டிநின்றேன்
கும்பிட்ட கைகளை முறித்துவிட்டான்
அவனை நினைத்தே நான் இருந்தேன்
அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்..”