50 வருடங்களுக்கு முன்பு அண்ணா பதவியேற்ற நாள்
மிக சரியாக 50 வருடங்களுக்கு முன்பு இந்தியா அந்த அதிசயத்தை கண்டது
அதாவது ஒரு மாநில கட்சி முதன் முறையாக மாநில ஆட்சிபீடத்தில் அமர்ந்தது, காங்கிரசினை வீழ்த்தி திமுக அந்த மகத்தான சாதனையினை படைத்தது
காமராஜர் தோற்றிருக்க கூடாது, இம்மக்கள் அவரை விட நம்மிடம் அதிகம் எதிர்பார்க்கின்றனர் என்ற அச்சத்தோடே அண்ணா பதவியேற்ற நாள்
அந்த பஞ்சகாலத்தில் ரூபாய்க்கு 3 படி அரிசி என்பதே அவர்களுக்கு பெரும் பிரச்சார யுத்தியாக இருந்தது, ஆட்சிக்கு வந்தபின் அண்ணா அப்படி வழங்க திணறினார்
ஒரு சில இடங்களில் கொடுத்ததோடு நிறுத்திகொண்டார், கலைஞரோ மதுகடைகளை திறந்தால் இவை எல்லாம் சாத்தியம் என்றார்
“ஒரு குடும்பம் பசியாற, நூறு குடும்பங்கள் பாழாகும் அந்த பாவ காரியத்தை கழக அரசு செய்யாது” என மறுத்துநின்றார் அண்ணா
அவரின் அகால மரணம் தமிழக தலைவிதியினை மாற்றியது, கலைஞர் அத்திட்டத்தை கொண்டுவந்தார், ஆனால் விளைவுகளின் விபரீததினை புரிந்து பின்னர் நிறுத்தினார்
ஆனால் மதுகடைகள் இன்றி இலவசங்கள் வழங்கி ஆட்சி செய்வது முடியாத காரியம் என்பது ராமசந்திரனுக்கு விளங்கிற்று, இரண்டாம் மதுபுரட்சியினை அவர்தான் தொடங்கினார்
அதனை நிறுத்தினால் இலவசம் வழங்கமுடியாது எனும் நிலைக்கு கலைஞர் தள்ளபட்டார்
இவர்கள் காலம் வரை மது என்பது அரசின் கவனத்திற்குட்பட்ட தனியார் வியாபாரமாகவே இருந்தது
ஜெயாவோ ஒருபடி மேலே சென்று அரசே மதுவிற்கும் என அதிரடி காட்டினார், ஆனால் அதில் வந்த வருமானமெல்லாம் தானே செலவழிப்பது போல சீன் போட அவர் தயங்கவில்லை
ஜெயா செய்தது மூன்றாம் மதுபுரட்சி.
இன்று ஜெயா இருந்திருந்தால் அரசே மதுபானமும் தயாரிக்கும் என களமிறங்கி இருக்கலாம்
இனி மதுகடையின்றி தமிழக அரசு அமைவது சாத்தியமில்லை என தெளிவாயிற்று
இந்த அரசும் ஸ்கூட்டி கொடுக்கின்றேன் என கிளம்பி, இருக்கும் நெருக்கடியினை கூட்டியாயிற்று
ஆசிரியர் உட்பட அரசு ஊழியர்களுக்கு உழைப்பிற்கு மீறிய சம்பளத்தை கொடுத்தாயிற்று, வெட்டி செலவுகளும் உண்டு
உதாரணம் மே மாத விடுமுறையில் அவர்களுக்கு வகுப்புகள் இல்லை, ஆனால் அரசு சம்பளமும், தேர்வுதாள் திருத்த சம்பளம் என வெட்டி செலவுகளும் உண்டு
ஆக ஒரு பக்கம் அரசு ஊழியருக்கும், ஒரு பக்கம் இலவச திட்டங்களுக்கும் அள்ளிகொடுத்துவிட்டு மக்கள் பணியினை கவனிக்கவேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கின்றது.
இப்படி எல்லாவற்றையும் அள்ளிகொடுத்து தமிழகத்தை கெடுத்தாயிற்று
இதற்கு பெரும் வருமானம் டாஸ்மாக் என தெரிகின்றது
எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலை, மதுகடைகளை மூடிவிட்டு இனி ஆட்சிநடத்துவது சுலபம் அல்ல
சம்பள வெட்டு முதல், பெரும் சிக்கல்களை இம்மாநிலம் சந்திக்கவேண்டும், விலைவாசிகள் எகிறும்
இந்த பெட்ரோல் வரி உயர்வு என்பது வெறும் 1% வலிதான். இன்னும் 99% சதவீத வலி மீதமிருக்கின்றது
அதாவது மதுகடை எனும் செயற்கை மருந்தால் பெருத்துவிட்ட தமிழகத்தை அதன் இயல்பு நிலைக்கு கொண்டுவர இனி கடும் பயிற்சிகள் தேவை
அந்த சவாலை இக்கட்சிகள் எடுக்காது, டாஸ்மாக்கும் அவ்வளவு எளிதில் மூடபடாது
மது கொள்கையில் கெடுத்தது யார்? சாட்சாத் அண்ணா கண்ட திமுகவும், அண்ணா திமுகவும்
கெடுக்க சொன்னது யார்? எங்களுக்கு இலவச ஆசை காட்டுங்கள், வாக்களித்துவிடுகின்றோம் எனும் மக்கள்.
ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி என சொன்னார் அண்ணா, அவர்தான் இந்த இலவச திட்டங்களின் தொடக்கபுள்ளி,
அரிசி கொடுப்போம் என்றாரே அன்றி, எப்படி கொடுக்கமுடியும் என்ற காமராஜரின் கேள்விக்கு அவர் பதில் சொல்லவே இல்லை.
மக்களும் எந்த வருமானத்தில் கொடுப்பீர்கள்? என கேட்காதது அவருக்கு பெரும் வசதி
50 ஆண்டுகளுக்கு முன்னால் பெரும் புரட்சி இயக்கமாக திமுக அரியணை ஏறிய நாள் இன்று
அண்ணா மறைந்த பின் அது எப்படிபட்ட மாபியா இயக்கமாக இன்று மாறிவிட்டது என சொல்லி தெரியவேண்டியதில்லை
அவர்களை பற்றி சொல்ல ஒன்றுமில்லை, நல்ல மக்கள் இருக்குமிடத்தில் நல்ல தலைவர்கள் உருவாவார்கள், இஸ்ரேல் சிங்கப்பூர் , அமெரிக்கா போல
அறியாமையிலும், கொஞ்சமும் சமூக அக்கறையும், ஆள்வோர் அக்கறையும் இல்லாத நாட்டில் கொள்ளை கூட்ட தலைவர்கள்தான் உருவாவார்கள் கொலம்பியா, மெக்ஸிகோ, சிலி நாடுகளை போல
இன்று அண்ணா பதவியேற்ற நாள்
“நம் ஆட்சியில் கழக உறுப்பினர்கள் யாரின் குடும்பத்தார் தலையீடும் இருக்க கூடாது, கட்சி வேறு ஆட்சி வேறு
எக்காலமும் மதுகடை எனும் பெரும் பாவத்தை இக்கழகம் செய்யாது
எந்த தமிழக நலனை காப்பதாக அரியணை பெற்றோமோ, அந்த தமிழகத்தை காத்த சாதனைகளை நாம் அரியணைவிட்டு இறங்கும் பொழுது பட்டியலாக வாசித்துவிட்டே இறங்க வேண்டும்”
இப்படி எல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் முழங்கினார் அண்ணா
அய்யோ பாவம்
அவருக்கு குடும்ப வாரிசும் இல்லை, கட்சி வாரிசும் இல்லை, கொள்கை வாரிசும் இல்லை
அப்படி ஒருவர் அவர் கொள்கையோடு இருந்திருந்தால் தமிழகம் இப்படி சீரழிந்திருகாது
இன்று சில நூறு மது கடைகளை மூடியது தமிழக அரசு, அதற்குள் விழிபிதுங்கி பெட்ரோலுக்கான வரியினை கூட்டியிருக்கின்றது, பெட்ரோல் சுமைகளை சுமைக்கின்றோம், பெட்ரோல் விலை உயர்ந்தால் இனி எல்லா விலையும் உயரும்
தமிழகம் முழுக்க ஆயிரகணக்கான மதுகடைகள் உண்டு, ஒருவேளை முழுகடைகளையும் மூடினால்…
அதே வெள்ளையன் ஆட்சியின் அட்டகாசம் நிகழலாம்
புரியவில்லையா?
உப்புக்கும் வரி என கிளம்புவார்கள், இல்லாவிட்டால அரசினை இனி இயக்கமுடியாது
அந்த அளவிற்கு நாட்டை கெடுத்தாகிவிட்டது
மொத்தத்தில் மதுகடைக்கு இம்மாநிலத்தை அடகு வைத்துவிட்டார்கள், இனி மீட்டுவர பெரும் சிரமபடவேண்டும்
மீட்டால் எல்லா வரிகளும் உயரும் உப்பு உட்பட
அதன் பின் காந்திகாலத்திற்கு திரும்பி உப்பு காய்ச்சி சத்தியா கிரகம் எல்லாம் செய்யவேண்டும்
ஆக தமிழகத்தை வெகுகாலம் பின்னுக்கு தள்ளிக்கொண்டிருக்கின்றது, இந்த 50 வருட கழக ஆட்சி
புரட்சி இயக்கம் என சொல்லிகொண்டு, ஒரு மாபியா இயக்கமாக மாறிபோன இயக்கம் உலகளவில் இதுவாகத்தான் இருக்க முடியும்