Raksha Bandan

சமூகம் என்பது மானுடர்கள் சேர்ந்து வாழுமிடம், அந்த சமூகம் அமைதியாகவும் நலமாகவும் வளமாகவும் வாழ சில ஏற்பாடுகள் அவசியம், சில ஆலோசனைகளும் அறிவுரைகளும் விதியும் அவசியம்

அதற்கு மானுட மனங்களை படிக்க வேண்டும், அந்த மனதின் பலம் மற்றும் பலவீனத்தை கூர்ந்து கவனித்து பல ஆலோசனைகளையும் வழிகளையும் சொல்ல வேண்டும், அதை சரியாக செய்த மதம் இந்த சனாதான தர்மம்

அது மானிட வாழ்வியலை செம்மைபடுத்திய அளவு உலகில் எதுவும் மானிடருக்கு ஆலோசனையும் நல்வழியும் காட்டியதில்லை

சமூகம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இயங்க அது ஏற்படுத்திய ஏற்பாடுகளில் ஒன்றுதான் இந்த ரக்ச பந்தன் விழா

ஆம், சனதான தர்மம் எனும் இந்துமதம் வாழ்வை மிக சுமூகமாக வாழ வழி சொன்ன மதம், மானிட வாழ்வின் சகல உணர்வுகளையும் உறவுகளையும் நெறிபடுத்தி அன்பும் சமாதானமும் செழுமையும் கிடைக்க வழி செய்த மதம்.

கூடிவாழும் மனிதனிடை ஆயிரம் சிக்கலும் பிரச்சினைகளும் எழும், மானிட உணர்வுகளும் இன்னும் பல ஆசைகளும் பல மோதலுக்கும் சண்டைக்கும் வழிவகுக்கும் என்பதால் பல ஏற்பாடுகளை ஞானமாக செய்தது

உலகின் மிக அதிசயமான தெய்வீக படைப்பு பெண்கள். இறைவன் படைப்பில் மானிட இனம் தொடர்ந்திருக்கவும் நிலைத்திருக்கவும் பெண்ணே மூலம்

இதனாலே ஒருவன் காக்க வேண்டிய நான்கு விஷயம் என வலியுறுத்தியது இந்துமதம் அதனை அந்தணர்கள், பெண்கள், குழந்தைகள், பசுக்கள் என சொல்லிற்று

ஆம், அது தங்கத்தை சொல்லவில்லை, செல்வத்தை சொல்லவில்லை, அரசனை சொல்லவில்லை, ஆலயங்களை கூட சொல்லவில்லை மகா முக்கியமானவை எக்காலமும் காக்கபட வேண்டியவை என இந்த 4 பிரிவைத்தான் காட்டிற்று

அதனில் பெண்களை தலமையாக குறித்தும் சொன்னது

பெண்கள் வளமாக வீடு வாழும், அந்த வீடு வாழ வாழ நாடு வாழும். பெண்கள் மகிழ்ச்சியாக இல்லா நாடும் வீடும் வாழாது, தர்மத்தின் விதி இது

பெண்கள் மனதால் பலமானவர்கள், எவ்வளவு பெரும் சிக்கலையும் அவர்களால் தீர்க்கமுடியும், எந்த துயரையும் தாண்டி வரமுடியும்

ஆனால் உடலால் பலவீனமானவர்கள். ஆன்மாவால் வலுவானது எல்லாம் உடலால் பலம் குறைந்தது என்பது மானிட விதி, அதை நுணுக்கமாக கவனித்து பெண்களுக்கு ஆண்களே பாதுகாப்பு கொடுத்து சமூகம்

பெண்கள் எனும் அந்த புரிந்துகொள்ள முடியாத பொக்கிஷங்களை மானிட உணர்ச்சியால் மிருகமாகும் பலரிடம் இருந்தும் காக்க அவன் புத்தியினை தெளியவைக்க நுண்ணிய ஏற்பாடுகளை செய்தது இந்துமதம்

பெண் என்பவள் அற்புதமான பொக்கிஷம், கலைகளின் உறைவிடம், ஆற்றல்கள் அனைத்துக்கும் அவளே மூலம், பெண்ணால் ரசிக்க முடியாததோ மாற்றமுடியாததோ சிந்திக்க முடியாததோ என எதுவுமில்லை, எல்லா சக்திகளும் அவளிலே உறைந்து கிடக்கின்றன‌

ஆனால் ஆண்களின் பலவீனமும் கொடும் சுபாவமும் அவளை ஒரு சிறைக்குள் அடைக்கின்றன, ஆண்களின் இயல்பான சுவாபத்தில் அவள் அஞ்சி ஒடுங்கி அவள் சக்தியெல்லாம் வீணாகின்றது, அந்த புதையல் வெளிவராமலே புதைந்துவிடுகின்றது

அவள் பிரகாசிக்க, அவள் தன் ஆற்றலை வெளிபடுத்த, அவள் இந்த சமூகத்துக்கு பெரும் கடமையாற்ற அவளுக்கு காவல் அவசியம், பெரும் கட்டுப்பாடான அக்கறையான பாதுகாப்பு அவசியம்

அதைத்தான் பெண்கள் விரும்புவார்கள், அவர்களின் மனதின் ஆழத்தின் ஏக்கமும் அதுதான்

இந்த பாதுகாப்பினை பெண்கள் அடைய, தாங்கள் நிம்மதியாய் அச்சமின்றி எந்த மிரட்டலுமின்றி இருப்பதாக உணர, அந்த நிம்மதியில்தான் அவர்கள் ஆற்றலும் சக்தியும் வெளிபடும்

இதற்கு காமம் தாண்டிய உறவை கொண்ட , காமம் தவிர்த்த பாதுகாப்பை கொண்ட ஆண்களின் துணையும் காவலும் அவர்களுக்கு அவசியம், மிக அவசியம்

பெண் என்பவள் அற்புதமான பிறப்பு, அவளை முழுக்க புரிந்துகொண்டால் அவள் ஒரு ஞானகடல் அவள் கொடுக்கும் அன்பும் ஆற்றலும் சக்தியும் பிரமாண்டமானவை, ஆனால் காமம் தவிர்த்த ஒரு பார்வையும் அன்பும் அவள் பெற்றாலே அது சாத்தியம்

அதைத்தான், உலகில் எந்த மதமும் கொடுக்காத அந்த நுணுக்கமான ஞான ஏற்பாட்டை அன்றே ஞானமாக செய்தது இந்து மதம்

அதுதான் ரக்ச பந்தன்

ரக்ச என்றால் காப்பாற்றுதல் என்று பொருள், ரட்சித்தல் என்பதெல்லாம் இந்த பொருள். பந்தன் என்றால் உறவு, பந்தம் என்ற பொருளில் வரும், மொத்தத்தில் “பாதுகாக்கும் உறவு” எனபொருள்

இது மகாபாரத காலத்திலே தொடங்கிற்று, பகவான் கண்ணனின் கையில் வழிந்த ரத்த காயத்தை தன் சேலையினை கிழித்து பாஞ்சாலி கட்டியதாகவும் , அதனால் மனம் இறங்கிய கண்ணன் அவளை தங்கையாக பாவித்து எக்காலமும் உன்னை காப்பேன் என உறுதி வழங்கியதாகவும் அதுதான் முதல் “ரக்ச பந்தன்” என அழைக்கபடுகின்றது

உண்மையில் மகாபாரதம் என்பது வெறும் புராணம் அல்ல, வெறும் கற்பனை அல்ல, என்றோ இரு குடும்பங்கள் மண்ணுக்காக ஒரு பெண்ணை முன்னிட்டு மோதிய மோதல் அல்ல‌

அது ஒரு வாழ்க்கை நெறியின் தொகுப்பு, ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு தத்துவத்தை போதிக்கும்

அவ்வகையில் கண்ணனுக்கும் பாஞ்சாலிக்கும் ஒரு ஆழமான நட்பும் பாசமும் இருந்தது, பாஞ்சாலி ஒருத்தியே அந்த கவுரவ கூட்டத்தை ஒழிக்கும் சக்தியின் மூலம் அவளாலே எல்லாம் சாத்தியம் என்பதை முதலிலே உணர்ந்து கொண்டான் கண்ணன்

ஆம், அவள் மட்டும் இல்லையென்றால் அதுவும் ஐந்துபேருக்கும் அவள் மனைவியாக இல்லை என்றால் பாரத யுத்தமே இல்லை பாண்டவர்க்கு அழிவே இல்லை, பாண்டவர்களின் ரத்தபாசம் அப்படியானது

கண்ணன் பாஞ்சாலியினை முன்னிறுத்தியே ஆடினான், அவளுக்கு நேர்ந்த அவமானமும் அதனால் அவள் செய்த சபதமும் அந்த சபதத்தை முன்னிட்டு பாண்டவர்களை அவள் வற்புறுத்திய விதமுமே பாரத போருக்கு காரணம்

ஆம், பெரும் சக்தி படைத்தவள் என்பதாலும் எல்லா சக்திக்கும் அவளே மூலம் என்பதாலும் அவளை பலமுறை ஓடிவந்து காத்தான் கண்ணன், இரு இடங்கள் அதில் முக்கியமானவை

முன்பொருநாள் தன் சேலையினை கிழித்து தன் காயத்துக்கு கட்டுபோட்டவள் என்பதை சாக்காக வைத்து அவள் சேலைக்காக போராடியபொழுது பெரும் அதிசயமாக அவளை காத்தான்

இன்னொரு இடத்தில் துர்வாசமுனியின் பெரும் சாபம் விழும் நேரம் ஓடிவந்து பாஞ்சாலியினை காத்தான்

பாஞ்சாலியினை அவன் அப்படி காத்ததுதான் தர்மம் மீள வழிவகுத்தது

அதைத்தான் ஒவ்வொரு ஆணையும் செய்ய சொல்லி இந்த நாளை பண்டிகையாக்கினார்கள், ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் துணையாய் நின்று அவளின் சக்தி வெளிபடவும், முழு ஆற்றலோடு அவள் செயலாற்ற துணை இருக்க உறுதி செய்ய இந்த நாளை உருவாக்கினார்கள்

இந்து சமூகத்தில் கையில் காப்போ, நூலோ கட்டி சில விஷயங்களை உறுதிபடுத்துதல் இந்திய மரபு. விரதம் என்பதை காட்ட காப்பு கட்டுதல், போர் என்றால் கங்கணம் கட்டுதல் என ஏராளமான விஷயங்கள் உண்டு

இன்றும் ஆலயங்களில் கையில் கட்டிவிடும் கயிறு அந்த வகையே, அந்த தெய்வம் நம்மோடு இருக்கின்றது என்ற நம்பிக்கையினை கொடுத்து கொண்டே இருக்கும் என்பது உறுதியான நம்பிக்கை

இது இந்து மரபு, இந்துக்களின் அடையாளம்

கையில் கட்டபடும் கயிறு அவனின் சிந்தனைக்கு அவனின் நிலையினை சொல்லி கொண்டே இருக்கும், கோவிலுக்கு கட்டபடும் கயிறு தெய்வம் அவனோடு இருப்பதை சொல்லும், அவன் மனசாட்சிக்கு கட்டுபட வேண்டியதை சொல்லும்

கங்கணம் என்பது போர்கால கவனத்தை சொல்லி கொண்டே இருக்கும்

கையில் பெண்ணால் ஆணுக்கு கட்டபடும் ரக்ச பந்தன் கயிறும் அப்படி அவனுக்கு அவள் உன் சகோதரி, அவளை நீ காக்க வேண்டும் என்பதை சொல்லிகொண்டே இருக்கும்..

தமிழக கோவில் கொடைகளில் காப்பு கயிறு கட்டுவார்கள் , விரதம் அனுசரிக்கின்றோம் எனும் அடையாளம் அது..

அவ்வகையில் ஒன்றுதான் புனிதமான இந்த ரக்ச பந்தன் கயிறு..

சிலர் சொல்வது போல இது வட இந்திய பண்டிகை என்பதோ, தமிழருக்கு தொடர்பில்லா பண்டிகை என்பது சரியானதல்ல‌

இது வரலாறு முழுக்க காணபடுகின்றது, ஆப்கானிஸ்தானை கைபற்றிய அலெக்ஸாண்டர் அங்கிருந்த இந்து அரசியினை திருமணம் செய்தான் அவள் பெயர் ரக்சனா.

யாராலும் வெல்லமுடியா அலெக்ஸாண்டரை மிக எளிதாக வென்றான் புருஷோத்தமன், அலெக்ஸாண்டரை அவன் கைது செய்தாலும் உரிய மரியாதையோடுதான் நடத்தினான்

எனினும் புருஷோத்தமனால் அலெக்ஸாண்டருக்கு அச்சுறுத்தல் வரலாம் என அஞ்சிய அந்த இந்து பெண் ரக்சனா, புருஷோத்தமனுக்கு ராக்கி அனுப்பினாள்

ஆம், அலெக்ஸாண்டர் உயிர் தப்ப அந்த ராக்கியும் காரணமாயிற்று, அதனாலேதான் போரசுக்கும் அவனுக்கும் ஒரு நட்பும் ஏற்பட்டது

பாரத கண்டம் முழுக்க இந்துமதம் இதை சொல்கின்றது, பல இடங்களில் உதவி வேண்டும் ராணியர் பக்கத்து அரசனுக்கு ராக்கி கயிறு அனுப்பிய காட்சிகள் எல்லாம் உண்டு

இன்று இந்துக்களின் அந்த ரக்ச பந்தன் விழா. இந்த தர்மத்தை இந்துமதம் ஏன் ஏற்படுத்திற்று? கணனும் பாஞ்சாலியும் தொடங்கி வைத்த விழாவா இது? வலுகட்டாயமாக புகுத்தபட்டதா?

கண்ணனுக்கு பாஞ்சாலி கயிறு கட்டினாள் என்பது ஒரு தத்துவம், தாயினையும் மனைவியினையும் தவிர மற்ற பெண்கள் உனக்கு சகோதரிகள் என்ற பெரும் தத்துவம் அதில் அடங்கி இருக்கின்றது

கயிறு கட்டியதன் மூலம் அண்ணன்கள் மத்தியில் வாழ்கின்றோம் என்ற பெரும் பாதுகாப்பு உணர்வு அக்கால பெண்களுக்கு இருந்திருக்கின்றது

தனக்கு கயிறு கட்டிவிட்டாள், அவள் தங்கை அவளை கண்போல் காக்க வேண்டுமென்ற கடப்பாடு அந்த ஆண்கள் மேல் சுமத்தபடுகின்றது

அந்த ஆணுக்கு அவள் தங்கை ஆகின்றாள், அவளின் அண்ணனாக அவனுக்கு பொறுப்பு கூடுகின்றது, அவளை காக்கும் கடப்பாட்டினை அக்கயிறு நினைவூட்டிகொண்டே இருக்கின்றது

எவ்வளவு அருமையான விழா?, எவ்வளவு அருமையான சமூக ஏற்பாடுகள்

இப்படி ஒரு விழா எந்த வேறு நாட்டிலாவது உண்டா என்றால் நிச்சயம் இல்லை.

இந்துக்களின் சிந்தனை அக்காலத்திலே அவ்வளவு உயர்ந்ததாய் பெருந்தன்மைமிக்கதாய் இருந்திருக்கின்றது

அருமை பாரதம் தாய் , மனைவி தவிர எல்லா பெண்களும் உன் சகோதரிகளே என உலகிற்கு சொன்ன ஒப்பற்ற தத்துவத்தின் வடிவம் இவ்விழா

இதனை பெருமையொடும் கர்வத்தொடும் கொண்டாடலாம், இந்த கலாச்சாரங்களை எல்லாம் முறையாக பின்பற்றினாலே சமூகம் மிக அமைதியாக இருக்கும்.

இம்மாதிரி பெரும் தத்துவங்களை கொண்ட இந்து தர்மத்தை கொண்டது அருமை பாரத நாடு

இந்நாட்டின் உயர்ந்த தத்துவங்களும், மிக உன்னதமான பாரம்பரிய கலாச்சார விழாக்களும் அவற்றின் அர்த்தமும் புரியாத தலைமுறை உருவாகிற்று , இந்து தர்மத்தை விரும்பாத சில சக்திகள் அப்படி இந்துக்களை குழப்பியும் விட்டன.

இவற்றை எல்லாம் மீட்டெடுத்தால் வருங்காலத்தில் மிக அமைதியான, பெண்கள் பாதுகாப்புமிக்க சமூகத்தை உருவாக்க முடியும்

இந்துக்களின் பெரும் ஞான தத்துவம் இவ்விழா, சந்தேகமில்லை. இந்தியாவின் மிக பெரும் மாண்பினை உலகிற்கு சொல்லும் விழா

இந்து மத விழாக்கள் என்பது வெறியூட்டுபவை அல்ல, ஆழ சிந்தித்தால் அது சமூகத்தை நல்ல விதமாக பிணைக்கபட்ட சங்கிலிகள், ரக்ச பந்தன் அப்படி ஒரு விழா

பகுத்தறிவு என்ற பெயரில் இந்த சங்கிலியினை உடைத்தால் எதற்கும் கட்டுபடாத , அடங்காபிடாரியான தலைமுறையே உருவாகும், அத்தலைமுறை குழப்பமான எதிர்கால தலைமுறையினை உருவாக்கும் அது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதே அல்ல‌

அப்படி ஆகிவிடாமல் நல்ல தலைமுறையினை உருவாக்க பழங்கால நல்ல பாரம்பரியங்களை பின்பற்றுதலோ அவற்றை துணைக்கு அழைத்தலோ தவறே ஆகாது, தாராளமாக பின்பற்றலாம்

பெண் சுதந்திரம் என்பது முழுக்க பெண்களை தலைவிரித்து அவர்கள் விருப்பம் போல் ஆட சொல்வது அல்ல, உரிய பாதுகாப்பு கொடுத்து நம்பிக்கை கொடுத்து அவர்கள் திறமையினை ஆற்றலை வெளிவரசெய்து அதனால் வீடும் நாடும் வாழ வழிசெய்தலே

அந்த பெண் சுதந்திரத்தை வலியுறுத்தும் நாள்தான், அதற்கு இந்துக்கள் கண்ட நாள்தான் ரக்ச பந்தன்

உனக்கு பாதுகாப்பாக நாங்கள் இருக்கின்றோம் பெண்ணே, அஞ்சாதே என அவளுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் கொடுக்கும் நாள் இது

ரக்ச பந்தன் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,

நிச்சயம் ஒவ்வொரு இந்தியனும் கொண்டாட வேண்டிய விழா. இந்து தர்மம் சொன்ன மிக சிறந்த சமூக விழா..

காமம் கடந்து பெண்ணை ஒரு உறவாக ஏற்றுகொண்டு அவளுக்கு முழு காவலும் நம்பிக்கையும் கொடுப்பது ஆண்களின் கடமைகளில் ஒன்று என்பதை உணர்த்தும் விழா

எந்த நாட்டிலும் எந்த இனத்திலும் இல்லாத வகையில் இந்து தர்மம் உன் தாயும் மனைவியும் தவிர எல்லா பெண்களும் உனக்கு சகோதரிகளே , அவர்களை காப்பது உன் பொறுப்பு என மிகபெரும் தத்துவத்தை தன் மக்களுக்கு சொல்லிகொடுத்த உன்னத விழா