அபிராமி அந்தாதி : 34

“திங்கட் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்–
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்
வெண்கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே”

இந்த பாடலில் பட்டர் ஒரு வித்தியாசமான கோணத்தில் அன்னை புகழினை பாடுகின்றார்

அன்னை நிலவின் மேல் நிற்பவள், அதாவது அன்னையின் காலடியில் நிலா இருக்கின்றது, அன்னையின் காலடியில் கிடக்கும் நிலாவினை அவள் கால்பட்ட நிலாவினை சிவன் தலையில் சூடியிருக்கின்றார் என்றால் அவர் அன்னையினையும் தலையினால் தாங்குகின்றார் அல்லவா?

சிவன் தலையிலே கால் வைக்கும் அன்னை தன் தலையில் கால் வைத்தது என்ன பாக்கியம்? அதுவும் தன்னை தேடி வந்து தன் தலையில் கால் வைத்தது எவ்வளவு பெரும் பாக்கியம் என்பதை உணர்ந்து உணர்ந்து உருகிபாடுகின்றார் பட்டர்

“திங்கட் பசுவின் மணம் நாறும் சீறடி” எனும் முதல் வரியில் சந்திரனை சூடிய சிவனின் தலையில் பூசபட்ட நறுமணம் , அன்னையின் காலிலும் பரவியிருக்கின்றது அந்த நறுமணம் மிக்க திருவடி என சொல்லும் பட்டர் அடுத்தவரிபாடுகின்றார்

“சென்னி வைக்க எங்கட்கு ஒரு தவம் எய்தியவா” என்கின்றார், அதாவது அந்த மகாபெரும் புண்ணிய பாதங்களை தன் தலையில் வைப்பதென்றால் எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும்? எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்

பட்டர் அதைத்தான் உணர்ந்து மனமுருகி பாடுகின்றார், சிவன் தலையில் வைத்த காலை என் தலையில் வைக்க என்னபேறு பெற்றேன் என மருகும் பக்தர், அது எவ்வளவு உயர்ந்தது என்பதை அடுத்தபாடலில் சொல்கின்றார்

“எண் இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ” என்கின்றார்

இந்த வரிக்கு எண்ணற்ற தேவர்களுக்கும் வாய்க்காத பெருமை இது, அவர்கள் தவமிருந்தாலும் கிடைக்கா பெருமை இது என மகிழ்ச்சியில் பாடுகின்றார்

இங்கு தேவர்கள் என அவர் சொல்வது பிரம்மனின் அருளில் உருவாகி வரும் தேவர்கள், அன்னைதான் பிரம்மனின் சக்தியாய் இருந்து அவர்களை படைக்கின்றாள் என்பது பட்டர் சொல்லவரும் இன்னொரு விஷயம்

தேவர்கள் சக்திமிக்கவர்கள், பெரும் தவத்தில் பல சக்திபெற்று சாதிப்பவர்கள், தெய்வ கடாட்சம் உள்ளவர்கள், அவர்களுக்கு கூட இந்த பேறு கிடைக்காது என பெரும் ஆனந்தம் அடையும் பட்டர் தொடர்கின்றார்

” தரங்கக் கடலுள் வெண்கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே” என்கின்றார்

தரங்கம் என்றால் அலை

அலையடிக்கும் பாற்கடலில் (தரங்க கடலுள்) , வெப்பமிகு கண்களுடன் படுத்திருக்கும் ஆதிஷேஷன் மேல் (வெண்கண் பணி அணைமேல்) படுத்திருக்கும் ஆதார சக்தியே (விழுபொருளே) என்பது பொருள்

இந்த இடத்தில் அன்னை சிவன் தலையில் கால் வைப்பவள் மட்டுமல்ல, தேவர்க்கு அருள் பொழியும் பிரம்மனின் சக்தியுமட்டுமல்ல , பாற்கடலில் வைஷ்ணவி தேவியாக இருப்பவளும் அவளே விஷ்ணுவின் வடிவில் இருப்பவளும் அவளே என்பது பாடலின் உட்பொருள்

ஆக பாடலின் முழு பொருள் இதுதான்

அன்னையே, சிவனின் தலையில் வைத்த காலை என் தலையிலும் தேடி வந்து வைப்பவளே, தேவர்க்கும் கிடைக்கா இந்த அரிய வாய்ப்பினை எனக்கு தருபவளே, அலையாடும் பாற்கடலில் பாம்பு படுக்கையில் துயிலும் ஆதார சக்தியே என்பது பொருள்

இந்த பாடலின் தத்துவம் எளிதானது

ஒருவன் தலைமேல் கால் வைத்தல் என்பது தான் அவனை ஆட்கொண்டதற்கு சமம், அவன் பாவங்களை எல்லாம் மன்னித்து அருளி ஏற்றுகொண்டதற்கு சமம்

இதை புரானங்களில் பல இடங்களில் காணலாம், மகாபலி சக்கரவர்த்தி கதையில் இருந்து பல இடங்களில் அந்த ஆட்கொள்தலை காணலாம்

இங்கே அன்னை அப்படி வந்து தன்னை ஆட்கொண்டாள் தானும் அவளிடம் சரணாகதி ஆகிவிட்டேன் என பூரிப்பில் பாடுகின்றார் பட்டர்