அபிராமி அந்தாதி : 37
“கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும்
எட்டுத்திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே”
இப்பாடல் அன்னையின் திருகோலத்தையும் அந்த கோலத்தில் அவளின் உயர்ந்த குணத்தையும் குறித்து பாடபடும் பாடல், பட்டர் அந்த பொருளில் மிக அழகாக பாடுகின்றார்.
முதல்வரி “கைக்கே அணிவது கன்னலும் பூவும்”
அன்னையின் கைகளில் கரும்பும் பூக்களும் கொண்டிருக்கின்றாள் என்பது பொருளாகும், அன்னை மன்மதனை வெற்றிகொண்டு அவன் ஆயுதங்களை பறித்தவள் எனும் அடையாளமாக அவள் கரும்பும் பூக்களும் ஏந்தியிருக்கின்றாள் என்பது புராண செய்தி
அதே நேரம் கரும்பு என்பது நன்செய் பயிர் என்பதும் அக்காலத்தில் மதிப்பான ஒரு பொருள் என்பதும் கவனிக்கதக்க விஷயம்
அப்படி கைகளில் கரும்பையும் ஐவவகை பூக்களையும் (காமனின் மலர் கனைகள், இதற்கு ஐந்து புலன்கள் என்பது ஞான தத்துவம்) ஏந்தியிருக்கும் அன்னையின் திருகோலம் பற்றி மேலும் பாடுகின்றார் பட்டர்
“கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை”
கமலம் அன்ன என்றால் தாமரை நிகர்த்த மேனி கொண்டவள், அந்த மேனியில் வெண் முத்துமாலையினை அணிந்திருக்கின்றாள் என்பது பொருள், முத்துமாலை என்பது கழுத்தில் அணியும் ஆபரணம் அது மார்பின் மேல் ஆடை போல் பரவியிருக்கும் என்பதும் எல்லாரும் அறிந்தது
அன்னை முத்துமாலையினை அணிந்திருப்பதை இங்கு பாடுகின்றார் பட்டர். அடுத்த வரி வருகின்றது “விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும்”
விட அரவின் பை என்றால் பாம்பின் படம் என பொருள்
மார்புக்கும் தொடைக்கும் இடையேயான பகுதி பாம்பின் படம் போல் இருப்பதாக அதாவது அடி பருத்து மேல் சிறுத்து இடை இருப்பதாக உருவகமாக சொல்கின்றார்.
“பன்மணிக் கோவையும் பட்டும்” என அடுத்து சொல்கின்றார்.
அந்த இடையின் மேல் பன்மணிக் கோவையும் பட்டும் அணிந்திருப்பதாக பாடுகின்றார் பட்டர், இங்கு பன்மணிகோவை என்பது பல அடுக்கு மணிகளை கொண்ட மாலை போன்ற எனும் நகை
எட்டு அடுக்கு கொண்டது காஞ்சி என்றும் ஏழு அடுக்கு கொண்டது மேகலை என்றும் , பதினாறு அடுக்கு கொண்டது கலாபம் என்றும், பதினெட்டு அடுக்கு கொண்டது பருமம், முப்பதிரண்டு அடுக்கு கொண்டது வரிசிகை
இப்படி அடுக்கு நகைகளையும் பட்டும் மேகலையாக அன்னை இடுப்பில் அணிந்திருக்கின்றாள் எனபாடுகின்றார் பட்டர்
அன்னைக்கு “ஸர்வாபரண பூஷிதா” அதாவது எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றவள் என்றொரு பெயரை லலிதா சஹஸ்ரநாமம் சொல்கின்றது.
“ரத்ன க்ரைவேய சிந்தாக லோலமுக்தா பலான்விதா” என்பது அன்னையினை பற்றி லலிதா சஹஸ்ரநாமம் சொல்லும் வரி, அதற்கு அன்னை ரத்னத்தால் அமைந்த அட்டிகை பதக்கம் அவைகளிலிருந்து தொங்கும் முத்துமாலைகளோடும் கூடியவள் என பொருள்
இப்படி அன்னை முத்துமாலையும், பட்டும், அடுக்குமணி மாலையும் அணிந்திருக்கும் அதாவது விலை உயர்ந்த மணிகளெல்லாம் அணிந்த அன்னையின் ஆச்சரிய குணம் பற்றி அடுத்து பாடுகின்றார் பட்டர்
“எட்டுத்திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே” என்கின்றார்.
அன்னை எட்டு திசையினையும் ஆடையாக கொண்ட அதாவது திகம்பர கோலத்தில் தவமிருக்கும் சிவனின் இடபாகம் சேர்பவள் என்பது பொருள்
அன்னை எல்லா வகையான நவமணிகளும் சூடிய அன்னை, மிக பெரும் சக்தியும் செல்வமும் உலகை இயக்கும் சக்தியும் கொண்ட அன்னை , ஒரு ஆபரணமும் இல்லாத சிவனை ஆடையின்றி திசைகளையே ஆடையாக கொண்ட பராரி சிவனின் இடபாகத்தில் சென்று அமர்ந்தாள் என்கின்றார் பட்டர்.
அன்னை அவ்வளவு தாழ்ச்சியானவள், கருணையானவள் அவள் செல்வத்தின் ஊற்றாக பொக்கிஷமாக இருந்தாலும் அதை கொஞ்சமும் பெரிதாக கருதாமல் எது அன்புடை அருளுடை இடமோ அங்கு தானாக எழுந்தருள்வாள், எது பற்றற்ற இதயமோ எது ஆடம்பரமும் ஆரவாரமும் அற்ற நிதர்சனமான ஞானபீடமோ அங்கு தானாக வந்து அமர்ந்துகொள்கின்றாள்
அவள் தேடுவதெல்லாம் பொன் அல்ல, பொருள் அல்ல, அன்புடை நெஞ்சம் ஒன்றே என்பது பொருள்
பாடலின் ஞான பொருள் என்னவென்றால் அன்னை கரும்பின் வெல்லத்தில் இடபடும் நைவேத்தியத்துக்கும், பொன்னுக்கும் முத்துக்கும் பட்டாடைக்கும் வகை வகையான அடுக்கு மாலைக்கும் இறங்கி வருபவள் அல்ல, அவள் அன்பான , முழு பக்தியான சரணடைதலான பக்திக்கு இறங்கி வந்து அருள் புரிவாள்
அந்த அருளைத்தான் ஏழை பட்டருக்கும் வழங்கினாள், தன்னிடம் சரணடையும் ஒவ்வொருவருக்கும் அருளுவாள் என்பதே பாடலின் ஞானபொருள்
அற்புதமான விளக்கம்… பொண்ணும், பொருளும் வேண்டாம். உண்மையான பக்தி ஒன்றே போதும். நவீன அபிராமி பட்டர்.. ஒவ்வொரு பாடல் விளக்கம் அபிராமி கண்களில் தெரிகிறார்..மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பொன் பொருள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நவரத்தினங்களில் ஒன்றை சிறிய ஒரு மோதிரம் அளவு கூட செய்து போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கும். வைரம் முத்து பவளம் போன்ற நவரத்தினங்கள் நம்மிடம் சேர ஆசை இருக்கும்… ஆனால் அதை விட சிறந்தது பக்தி. அது இருந்தால் மற்றவை தானாக நம்மிடம் வந்து சேரும்.
ஓம் அமிர்தகடேஸ்வரர் போற்றி போற்றி..
ஓம் அன்னை அபிராமி போற்றி போற்றி..