அரேபிய விருமாண்டி மாவீரன் சதாம் உசேன் : 02
எல்லா அரபு அரசர்களையும் போலவே ஈரானிய மன்னர் ஷாவும் எண்ணெய் கம்பெனிகளிடம் எண்ண முடியாத பணம் வாங்கிகொண்டு, “எண்ணெய் கிடைத்தது எனக்காக “என பாடிக்கொண்டும் ஆடிகொண்டும் இருந்தார்.
ஈரான் ஷியா இஸ்லாமிய மக்களின் நாடு, நமது பாஷையில் சொல்லவேண்டுமென்றால் கிட்டதட்ட “தாழ்த்தபட்ட” இஸ்லாமியர், அவர்களுக்கு ஒரு அடையாளமிட்டு, தலைவராகி புரட்சி செய்து ஷாவையும், அவருக்கு உதவியாக வந்த நாட்டாமையையும் விரட்டி ஈரானை இஸ்லாமிய குடியரசாக்கினார் அயதுல்லா கோமேனி, என்றென்றைக்கும் அவரே ஷியாக்களின் தன்னிகரற்ற தலைவர்,வழிகாட்டி என சகலமும்.
அவர் ஷியாக்களுக்கு வழிகாட்டியது தப்பில்லை, அந்த வழியில் எண்ணெய் வியாபாரம் மட்டுபடுத்தபட்டதுதான் மேற்குலகத்திற்கு தப்பாக தெரிந்தது, கப்பல்களையும், தொழில்நுட்பத்தினை கொண்டு உடனே அடிக்க முடியாது, காரணம் ஈரானின் அந்த பக்கம் சிகப்பு பூதம் சோவியத் யூனியன், எண்ணெய் சோவியத்திற்கு பிரச்சினையே அல்ல, அவர்களின் எண்ணெய் ராசி அப்படி,
ஆனால அமெரிக்கா ரஷ்யர்களுக்கு பிரச்சினை, தமிழக உணர்வாளர்கள் எங்காவது ராஜபக்சேவை தனியே கண்டால் என்ன ஆகும்? அந்த நிலமைக்கு சோவியத் அமெரிக்கவை அடிக்க வாய்ப்பு தேடிய காலம், மாவீரர் அமெரிக்கா உண்மையில் அன்று அஞ்சியது, அறை போட்டு ஆறுமாதம் விவாத்தித்து இறுதியாக ஒரே ஒரு வழியினை கண்டார்கள், கிடைத்தார் சதாம் உசேன்.
மிரட்டியே காரியம் சாதிப்பது அவர்களின் வழக்கம், சதாமிற்கு மிரட்டல் பிடிக்காது என்பதால் , அக்கறையாக “எடுத்து” சொன்னார்கள்,
அயத்துல்லா கோமேனி ஒரு பெரும் ஆபத்து, எங்களுக்கல்ல அரபு தேசத்திற்கு, இனி அடங்கி கிடக்கும் ஷியாக்கள் எல்லாம் உணர்ச்சியால் பொங்குவார்கள், உங்கள் நாட்டிலும் ஏராளமான ஷியாக்கள் உண்டு, பக்கத்து நாட்டு புரட்சியில் உங்கள் நாடு உடையலாம், எங்களுக்கென்ன வந்தது, நீர் நண்பர் அதனால் சொன்னோம், சண்டை என்றால் சொல்லுங்கள், அணுகுண்டு தவிர எல்லாம் தருவோம்,
பதிலுக்கு உங்கள் அன்பு முக்கியம், எண்ணெய் அதனை விட முக்கியம்”
சதாம் யோசிக்கும் முன் கோமேனியின் புதிய ஈரானுக்கும், ஈராக்கிற்கும் எல்லை பிரச்சினை, வன்முறைகள் போராய் வெடித்தது, விடுமா மேற்குலகம் புதிது புதியாய் ஆயுதங்கள் கொடுத்தது சதாமிற்கு, (அயதுல்லா கோமேனியை பழிவாங்குகின்றார்களாம்) 8 ஆண்டுகால போர். களைத்துபோன இருவருமமே முடிவில் ஓய்ந்தார்கள், இருவருக்குமே வெற்றி இல்லை.
விசித்திரமானது என்னவென்றால் இருவருமே இஸ்லாமியர், இருவருமே இனம் வேறு என்றாலும் கொள்கைளில் ஒற்றுமை, ஆனால் கோமேனி முதலிலே உறுதியாக புரிந்துகொண்டார், அமெரிக்க தூதரகம் கூட ஈரானில் இருக்ககூடாது என்றார், சதாமுக்கு இந்த உண்மை புரிய கொஞ்சம் தாமதமானது, விதி முந்திகொண்டது.
போர் எப்படிபட்ட பணக்கார நாட்டையும் அதல பாதாளத்தில் தள்ளும், உருப்படியாக ஒரு யுத்தம்கூட நடத்தாத சீனா, இன்று புதுபணக்கார போதையில் “ஒரு மாதிரி” முறைக்கலாம். முறையான யுத்தம் ஒன்று நடக்கும் பட்சத்தில் அருணாசல பிரதேசம் அல்ல, அரைஞாண் கயிறு கூட வேண்டாம் என்று கதறுவார்கள்.
குவைத் மீது சதாமிற்கு கொஞ்சம் கடுப்பு இருந்தது, ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தது, குர்தீஸ் (ஈராக்கின் சுயாட்சி பகுதி,துருக்கியின் ஆசீர்வாதம் உண்டு) பகுதி பிரச்சினையில் கருத்து தெரிவித்தது என நிறைய இருந்தாலும், போர் நடந்த காலத்தில் குவைத் எல்லையில் ஈராக்கிய எண்ணெய் கிணறுகளை குவைத்திற்கு ஓப்பந்த அடிப்படையில் கொடுத்ததாக பேச்சு உண்டு, ஆதாரம் தேடினால் மலேசிய விமான கதை தான்.
அந்த ஒப்பந்தபடி கிணறுகளை கொடுக்காமல் காலம் தாழ்த்தியது குவைத் என்பார்கள், தாழ்த்த சொன்னது 7 சனிகளில் 2 சனி. இதற்கு இடையில் சதாமை ஆத்திரமூட்டும் செயலை குவைத் மூலம் செய்தார்கள்.
அதாகபட்டது எண்ணெய் எடுக்கும் நாடுகளுக்கு ஒபெக் என ஒரு அமைப்பு உண்டு, அவர்கள்தான் விலை நிர்னயிப்பார்கள், யார் எவ்வளவு எண்ணெய் எடுக்கவேண்டும் என எல்லைகளும் உண்டு.
குவைத் அந்த கட்டுப்பாடுகளை மீறி ஏராளமான எண்ணெயை, குறைந்தவிலையில் விற்க தொடங்கியது இது தான் பிரச்சினையின் மூலம், சதாம் வன்மையாக கண்டித்தார், இதனால் அரபுலகம் பொருளாதாரம் பாதிக்கும் என்றார், “உன்போர் உனது கஷ்டம் எங்களுக்கென்ன?” என எல்லோரும் ஒதுங்கினார்கள், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றார் சதாம்.
ஒரு கட்டத்தில் பொங்கிய சதாம்,மிக எளிதாக குவைத்தை கைபற்றினார், அது மிக சிறிய நாடு. 19வது மாநிலமாக குவைத் இணைந்தது என்றார்.
பாரதத்தில் விதுரரிடம் கிருஷ்ணன் சொன்ன வார்த்தைகள்தான் “தோல்வி மனிதனுக்கு வெறியூட்டும், வெறியில் மதி மாறும், எதிரி மேலும் இடங்கண்டு அடிப்பான்,வெறி மேலும் ஓங்கும், இறுதியில் படுகுழியில் மனிதன் வீழ்வான் ,இல்லை எதிரி விழவைப்பான் இந்த அநீதியில் கைதேர்ந்தவன் சகுனி”
அதேதான் சதாமுக்கும் நடந்தது, சகுனி என்ற பெயருக்கு பதிலாக இன்னொரு 3 எழுத்து நாட்டை சேருங்கள், சரியாக பொருந்தும்.
இதனை எதிர்பார்த்த அமெரிக்காவும் , அதற்கு வால் பிடிக்கும் அடிபொடிகளும் பொங்கின, சவூதி மன்னரிடம் பயம்காட்டபட்டது, இன்று குவைத், நாளை நீங்கள். உங்கள் எல்லையெல்லாம் ஈராக்கிய படை, நாங்கள் மட்டுமே உங்களை காப்போம், இடம் மட்டும் தாருங்கள், ஆபத்து நீங்கியதும் சென்றுவிடுவோம், நீர் எங்கள் நண்பன்.
இடையில் உலகெல்லாம் மீடியாக்கள் சதாமினை ஹிடலர் அளவிற்கு தாக்கின,அலறின. பல நியாயமான உண்மைகள் மறைக்கபட்டன. சதாம் ஒரு வெறியர், ஆபத்தானவர். மீடியாக்கள் உருவாக்குவதுதான் செய்தி, உண்மை வெகுதொலைவில் இருக்கும்.
சீனா திபெத்தை விழுங்கியதை கண்டுகொள்ளா மேல்நாடுகள், சதாம் குவைத்தை பிடித்ததை மட்டும் பெரும் ஆக்கிரமிப்பு என உலக செய்தி ஆக்கினர். அவர்கள் ஊடக உலகம் அல்லவா? அப்படித்தான் செய்வார்கள்
முதலில் தயங்கிய சவுதி மன்னர்,பின்னர் தளம் அமைக்க ஒப்புகொண்டார், படை பரிவாரங்களோடு முதலில் வந்தது அமெரிக்க ராணுவம்,பின்னால் வந்தது அராம்கோ போன்ற பரகாசுர எண்ணெய் கம்பெனிகள். அவர்கள் ஏன்? அவர்களும் சண்டையிடுவார்களா என அப்பாவியாக கேட்ட சவூதி மன்னருக்கு கிடைத்த பதில், “சண்டையிட எண்ணெய் வேண்டும், அவர்கள் உற்பத்திசெய்து தருவார்கள் அவ்வளாவுதான்.
(இன்று சதாம் இல்லை, சண்டை இல்லை ஆனால் அராம்கோ போன்ற கம்பெனிகள் மட்டும் சவூதியில் உண்டு)
ஒரு சுபநாளில் களப்பலி ஏதும் கொடுக்காமல் யுத்தம் தொடங்கினார்கள். இவ்வவு நாளும் அடக்கிவாசித்த அமெரிக்கா அப்பொழுது மட்டும் எப்படி தாக்குதலில் இறங்கினார்கள் என்றால் காரணம், சோவியத் எனும் செம்பூதம் குழப்பத்தில் இருந்த காலம், அதாவது அந்திம காலம். எதிர்க்க ஆளில்லை.
குற்றால குறவஞ்சி கொண்டாட்டத்தில் அமெரிக்க குழு இருந்தது.
சதாமோ ஒற்றை மனிதர், யாரும் துணைக்கில்லை, ஈரானோடு சண்டையிட்டு களைத்துபோன காலமெனினும் அவர் கலங்கவில்லை, துணிந்தார். எதிர்கொண்டார். சோவியத் பாணியிலான ஸ்கட் ஏவுகனைகள் முதல் பாவித்தார், இஸ்ரேலை தைரியமாக தாக்கினார், முடிந்தவரை களத்தில் முன்னால் நின்றார், அதுதான் அவர் ஸ்பெஷாலிட்டி.
எந்த தலைவனுக்கும் உலகில் இல்லா தைரியம் சதாமிற்கு இருந்தது, யுத்த களத்தின் முன்னால் இருந்து சண்டையிட்டார். அப்படி ஒரு தலைவனை அதன் பின் உலகம் இன்றுவரை காணவில்லை.
ஆனால் அமெரிக்காவும் அதன் அடிப்பொடிகளும் நடத்தியது யுத்தம் என்றாலும், உண்மையில் அவர்கள் செய்தது ஆயுத கண்காட்சி, ஒரு ஆயுத சோதனைகளமும் கூட.
யாரும் உலகினில் எதிர்த்துகூட பேசவில்லை, ராஜிவ்காந்தி மட்டும் பகிரங்கமாக எதிர்த்தார், அவருக்கும் அன்றே முடிவு குறிக்கபட்டிருக்கலாம், யாசர் அராபத்தின் ராஜிவ் பற்றிய எச்சரிக்கை சாதாரணமானது அல்ல.
ஒரு வழியாக தாங்கள் தயாரித்த எல்லா ஆயுதங்களையும் பரிசோதனை செய்தார்கள். உலகிற்கு பயம் காட்டினார்கள். அமெரிக்க டொமோகாக்,பேட்ரியாட் ஏவுகனைகளும், எஃப்16 வகை விமானம். பிரான்சின் ஜாகுவார் விமானம், பிரிட்டனின் டையூன் என பயன்படுத்தி அவர்கள் சண்டையிட்டாலும், உலகிற்கு சொன்னது இதுதான்
“பாருங்கள், எங்களிடம் தரமான யுத்த தளவாடம் உண்டு வந்து வாங்கி செல்லவும், வேறு எங்கும் கிளைகள் இல்லை, தள்ளுபடு உண்டு”
“பேட்ரியாட்” எனும் எதிர்ப்பு ஏவுகனைகளை இஸ்ரேலுக்கு அமெரிக்கா கொடுத்தது, ஆனால அவர்கள் மிக கவனமாக அதனை பிரித்து அக்குவேறு ஆணிவேறாக அலசி புதிய பெயரில் தாங்கள் அதே ஏவுகனையை தயாரித்த காமெடியும் நடந்தது.
போர் என்ற பெயரில் நடந்த ஆயுத விளம்பரம் கொன்றது 70,000 ஈராக்கிய மக்களை. வேறு வழியின்றி யுத்தத்தினை நிறுத்தினார் சதாம், குவைத்தை விட்டுவிட்டார், எந்த எதிரியும் இல்லாத கழுகு தேசம் உயர பறந்தது. ஆனால் அதன் குறி மாறவே இல்லை.
மிக தந்திரமாக பொருளாதர தடை என்றார்கள், உண்மையில் அவர்கள் கேட்டது “எண்ணெய்க்கு நாங்கள் சொல்வதுதான் விலை”, முடியாது என்ற சதாம் அரசுமீது ஏராளமான தடைகள். இந்த கொடுமையை கண்காணிக்க ஐ.நா வேறு.
வளமான இரு ஆறுகளை கொண்ட நாடு கோதுமையை கூட விளைய வைக்க முடியாத தடை.
கடந்த நூற்றாண்டில் நடந்த பெறும் அநீதி, அட்லாண்டிக் கடலுக்கு அங்கிருந்து வந்து சொந்த நாட்டு மக்களை தெருவில் கைஏந்த வைக்கும் கொடுமை அது, உணவுக்கு எண்ணெய் என இந்தியாவும் எண்ணெய் வாங்கியது, அதிலும் நாம் முத்திரை பதித்தோம், அதுவேதான் அதிலும் ஊழல்.
இதனையும் தாண்டியும் சதாம் வாழ்ந்தார், அசைக்கமுடியவில்லை, போராடி போராடி வளரத்தான் செய்தார், துன்பங்களை கண்டபோதும் அவர்மீதான மக்களின் அபிமானம் மாறவே இல்லை.
இன்னுமா இவன் அழியவில்லை, இன்னுமா நினைத்த படி எண்ணையை கொள்ளையிட முடியவில்லை, எப்படியாவது பாக்தாத்தில் நுழைந்து தலையில் போடவேண்டும், என நினைத்த வல்லரசுகளுக்கு ஒரு வழிபிறந்தது,
அவமானத்திலும், அழிவிலும் கூட ஆதாயத்தினை அழகாக தேடினார்கள்
வழியை காட்டியது அல்கய்தா, செப்டம்பர் 11, 2001 அன்று.
தொடரும்…