இன்று திப்புவின் பிறந்தநாள்

Image may contain: one or more people

இந்தியாவில் முதன் முதலில் பிரிட்டிசார் முடிசூட்டிகொண்ட இடம் கல்கத்தா, அங்கிருந்தேதான் படை நகர்த்தலை தொடங்கினார்கள்.

எந்த இடத்திலும் அவர்கள் பெரிதாக திணறியதாக சரித்திரம் இல்லை, அசால்ட்டாக அடித்துவிட்டு, முன்னேறிகொண்டிருந்தார்கள், வடக்கே பெரும் எதிர்ப்புகள் அவர்களுக்கு அன்று இல்லை. அடிக்கவேண்டும், மிரட்டவேண்டும் அல்லது லஞ்சம் கொடுக்கவேண்டும் அவ்வளவுதான், கம்பெனி கொடி பறக்கும்.

இந்தியாவில் அவர்கள் சந்தித்த ஒரு பெரும் சவால் மாவீரன் ஹைதர் அலியும், அவரின் மகன் மைசூர் சிங்கம் திப்புசுல்தானும், உண்மையில் ஹைதர் அலி சாதாரண பணியாளர்தான், ஆனால் சீர்கெட்டு கிடந்த மைசூர் சாம்ராஜ்ய நிர்வாகத்தை, ஒரு நாட்டுபற்றாளனாய் நின்று காப்பாற்ற அரியணை ஏறி அதனை செய்தும் காட்டினார்.

ஆங்கிலேயருக்கு பெரும் சிம்மசொப்பணமாய் இருந்தவர் ஹைதர் என்றால், அவர்களுக்கு புலிசொப்பனமாக இருந்தவன் மாவீரன் திப்பு சுல்தான். அவனது ஆட்சி அப்படி, நிர்வாகம் அப்படி,எல்லாவற்றிற்கும் மேல் அவரது மதசகிப்புதன்மை அப்படி.

ஹைதருக்கு பின்னால் மைசூர் அவ்வளவுதான் என இளம் திப்புவினை எடைபோட்டு வந்தனர் வெள்ளையர்.
முதல் மைசூர்போரில் அடிபடும்பொழுதே ஆங்கிலேயருக்கு தெரிந்தது, “இவன் வேறமாதிரி” என்று, இரண்டாம் மைசூர் போரில் வெள்ளையனுக்கு திப்பு உயிர்பிச்சை அளித்தபொழுதே தெரிந்தது இவன் வெல்லமுடியாதவன் என்று.

அப்படித்தான் இருந்தார் திப்பு, பிரென்ஞ் மாவீரன் நெப்போலியன் தன் காலத்தில் ஒரு சகவீரனை மதித்து ராணுவ உதவி அளிக்க தயாராக இருந்தார் என்றால் அது திப்பு மட்டுமே, காரணம் வீரனின் பெருமை வீரனுக்குத்தான் தெரியும்.
ஆனால் ஐரோப்பாவில் பலபோர்களில் அவர் பிசியாக இருந்ததால் உதவிக்கு வரமுடியவில்லை.

கொஞ்சமும் சோர்ந்துபோகாத திப்பு சுல்தான் மூன்றாம் மைசூர் போரில், 500 அடிவரைபாயும் ஏவுகனைகளை பயன்படுத்தி ஆங்கிலேயரை அலறவிட்டார், உண்மையில் அந்தபோரோடு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவினை விட்டே ஓடும் நிலைக்கு தள்ளபட்டது, திப்புவின் நிலை அப்படி.

படைகளால் வெல்லமுடியாத அம்மாவீரனை வேறுமாதிரி அடக்க எண்ணினர் வெள்ளையர், அதாவது அவன் இஸ்லாமியனாக இருந்தாலும் எல்லா மதங்களையும் நேசித்தார்,மதித்தார். புகழ்பெற்ற சிரிரங்கபட்டினம் ஆலயத்திற்கு அவர் அள்ளிகொடுத்த நகைகளும், சிலைகளுமே அதற்கு சாட்சி.

கிட்டதட்ட 200 இந்து ஆலயங்களுக்கு அவர் நன்கொடை அளித்ததும் வரலாறு. ஒரு மிக சமத்துவமான ஆட்சியினை செய்துகொண்டிருந்ததுதான் அவர் பலம், அவரது படையில் சரிக்குசரி இந்துக்களும் இருந்தனர்.

இங்குதான் வெள்ளையர் சிந்தித்து இந்து முஸ்லீம் வேற்றுமையினை வளர்த்தனர், பல வழிகளில் அவர் இந்துவிரோதி என சித்தரிக்கபட்டு, இறுதி போரில் தான் மிக நம்பிய தனது திவானால் வஞ்சகமாக வீழ்த்தபட்டார்.

சுருக்கமாக சொல்வதென்றால் திப்பு வீழ்ந்தபின் வெள்ளையன் வாய்விட்டு சொன்னான்” இனிமேல்தான் இந்தியா நமக்கானது”
இன்றுவரை அவர் கழுத்தில் பாய்ந்த குண்டினை செலுத்தியது வெள்ளையனா? என்ற சந்தேகம் உண்டு.

ஆனால் இந்த வெற்றியில் வெள்ளையன் ஒரு பாடம் படித்திருந்தான். இந்தியாவினை துப்பாக்கி முனையில் ஆள்வது கடினம், ஆனால் இந்து முஸ்லீம் பிரிவினையில் ஆள்வது மகா சுலபம்.

அந்த சிரிரங்கபட்டிண களத்தில் வெள்ளையன் படித்தபாடம்தான் பின்னாளில் 150 வருடம் அவன் இங்கு ஆளவும், இந்த தேசம் இன்று 3 ஆக உடையவும், இன்று முகநூல் வரை அந்த பிரிவினை வளர்ந்து நிற்கவும் காரணம்.

நிச்சயமாக திப்பு மாவீரன், இந்த மண்ணிற்கு கிடைத்தவரம். இன்றும் அவன் பயன்படுத்திய ஏவுகனையின் வடிவம் அமெரிக்காவில் உண்டு. ஏவுகனை உலகின் பிதாமகன் வான் ப்ரவுண் நெற்றியில் அடித்தார்போல் சொன்னார் ” நான் ஒன்றும் கண்டுபிடிப்பாளன் அல்ல, திப்புசுல்தான் எனும் இந்தியனின் கண்டுபிடிபினை மேம்படுத்தினேன்”.

அதனாலதான் அமெரிக்கன் அப்துல்கலாமினை அப்படி சொன்னான், இவர் “இரண்டாம் திப்புசுல்தான்”.

இன்று மனசாட்சியே இல்லாமல் அவரை திட்டி தீர்க்கின்றார்கள், அந்தோ பரிதாபம். இவர்களுக்கும் இறுதியுத்ததில் வெள்ளையருக்கு கதவினை திறந்துவிட்ட அந்த தேசதுரோகிக்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்?

மாவீரன் மருதநாயகம், மாவீரன் திப்புசுல்தான்,சீக்கியர்களின் ரஞ்சித் சிங் இவர்கள் எல்லாம் வெள்ளையரை எதிர்த்த அடையாளம் அல்லவா? இவர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்தியர்கள் இல்லை என்பது நிச்சயம் கண்டிக்கதக்கது.

இங்கு மதத்தின் பெயரால் அட்டகாசம் செய்பவர்களுக்கு, அதனை பிழைப்பாக கொண்டு திரிபவர்களுக்கு எல்லா மதத்தினரையும், எல்லா ஆலயங்களையும் மிக சமமாக கருதி, குறிப்பாக இந்து ஆலய அடையாளங்களை பாதுகாத்த அந்த மாவீரனை பழிக்க ஒரு தகுதியும் இருப்பதாக உண்மையான தேச அபிமானிகள் நினைக்கவே மாட்டார்கள்.

சிலர் சொல்வார்கள் தஞ்சை பகுதி கால்வாய்களை உடைத்தான், இந்து மக்கள் என்பதால் உடைத்தான் என்றெல்லாம் கதையளப்பார்கள், அதன் உண்மை என்ன?

அக்காலத்தில் காவேரியில் வரும் வெள்ளம் தஞ்சை பயிர்களை அழித்தால் அதற்கு மைசூர் சமஸ்தானம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், ஆம் அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கின்றது

திப்புவிற்கு வேலுநாச்சியார், மருதுபாண்டியர், கொங்குமண்டலம் எல்லாம் பெரும் ஆதரவு இருந்தது, தமிழகத்தை திப்புவிடம் இருந்து பிரிக்க வெள்ளையர் அந்த நஷ்ட ஈடு பிரச்சினையினை பெரிதாக்கினர்

தஞ்சைவாசிகள் அதிகபடியான நஷ்ட ஈடு வெள்ளையாரால் கேட்க வைக்கபட்டு பின் அதில் குழப்பங்களும் விளைந்தன, தஞ்சை மராட்டிய மன்னனும் அதற்கு துணை சென்றார்

இந்த சிக்கல்தான், இந்த நஷ்ட ஈடு பிரச்சினைதான் பின் மைசூர் அணை கட்டவும், ஒரு சொட்டு நீர் தஞ்சைக்கு வராமலும் போனதற்கு பிள்ளையார் சுழி

திப்பு தஞ்சை மக்கள் இந்துக்கள் என்பதால் காவேரியில் சர்ச்சை செய்யவில்லை. வெள்ளம் வந்தால் நான் பணம் தரவேண்டுமா என்றுதான் கேட்டுகொண்டிருந்தான்.

பெரும் வீரனாயினும், ஒரு பக்கபலம் இல்லாமல் போரிட்டான் திப்பு. மராட்டியர் உதவிக்கு வரவில்லை, மலையாள மன்னர்களும் உதவிக்கு வரவில்லை, அப்படி ஒற்றுமையாக வந்திருந்தால் அன்றே வெள்ளையன் கதை முடிந்திருக்கும், இந்திய வரலாற்றில் பெரும் தவறு இது.

தூரத்தில் நெப்போலியன் உதவ தயாராக இருந்தும், பக்கத்து நாட்டுகாரர்கள் முகம் திருப்பி வெள்ளையரோடு கைகோர்த்தார்கள் அல்லவா? இங்குதான் இந்தியாவின் தலைவிதி திருத்தி எழுதபட்டது.

அந்த தவறினை செய்துதான் இந்நாடு இப்படி பின் தங்கிவிட்டது, இன்னும் அவன் இஸ்லாம் என்றே சொல்லி அதே தவறினை செய்வீர்களாயின் இந்நாடு இன்னும் 100 வருடம் நிச்சயம் பின்னோக்கி சென்று, ஆப்கன் நிலையினைத்தான் அடையும்.

இவர்கள் சொல்வதனால் எல்லாம் அம்மாவீரனின் புகழ் மங்காது. இந்தியாவின் புலி என வெள்ளையன் எழுதிவைத்த சரித்திரமும். அவன் அடக்க சடங்குகளில் வெள்ளையர் காட்டிய உயர் மரியாதையும் காலத்தின் கல்வெட்டு பக்கங்கள்.

அவன் உருவாக்கிய அந்த ஏவுகனை அவனின் அறிவுதேடலுக்கு பெரும் சாட்சி, அவ்வளவு ஏன் அவர் இறந்த பின் அந்த வாளினை வீசிபார்த்தோர் ஆச்சரியத்தில் உறைந்தனர், அது பல மூலிகை இன்னும் பல உலோகளால் ஆன எடை மிக குறைந்த மகா உறுதியான வாள், அதிலே அவனின் ஆற்றல் தெரிந்தது.
திப்புசுல்தான் மங்கா புகழ்பெற்ற மாபெரும் உச்ச வரலாற்று நட்சத்திரம்,

அந்த வாள் பிரிட்டானியரால் லண்டன் கொண்டுசெல்லபட்டது பின் விஜய் மல்லையா ஏலத்தில் எடுத்து இங்கு கொண்டுவந்தார், மல்லையாவின் ஒரே உருப்படியான காரியம் அதுதான்.

(இனி மல்லையாவினை ஏலம் எடுத்துத்தான் இங்கு கொண்டுவரவேண்டும் என்பது வேறு விஷயம்)

இவர்கள் “வாள் வாள்” என கத்துவதால், அவனின் வாளின் பெருமை கூட குறைந்துவிடாது.

இன்று திப்புவின் பிறந்தநாள், அந்நியருக்கு மிகபெரும் சிம்ம சொப்பணமாய் விளங்கிய அந்த மாவீரனுக்கு, இத்தேசம் வெள்ளையனுக்கு கிடைக்காமல் இருக்க பெரும் எதிர்ப்பினை கொடுத்த அவனுக்கு வீர வணக்கம்

இந்தியா உள்ள அளவும் அந்த மாவீரனான‌ மைசூர் புலியின் பெயர் நிலைத்திருக்கும்.

(இதனை எழுதியதால் இன்று ஆர்.எஸ்.எஸ் வழங்கும் தினப்படி கிடைக்காதாம், அபராதமாக இன்னும் 3 நாட்கள் தரமாட்டார்களாம் சொல்லிவிட்டார்கள்)